இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Thursday, July 15, 2010

இஸ்கூலுக்கு போனா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுரதாம் ??

50 வருடங்களுக்கு முன்னர் :
புழுதியும் அனல்காற்றும் போட்டி போட்டுக்கொண்டு முகத்தில் அறையும் அந்த சாலையில் எம்.டி.டி 2727 பதிவு எண்ணைவுடைய அந்த சீருந்து சென்று கொண்டிருந்தது. வழியில் ஒரு தொடர்வண்டி இருப்பு பாதை. தொடர்வண்டி வரும் நேரம் என்பதால் கதவு அடைத்திருந்தது.

எனவே வண்டி நிற்க வேண்டிய சூழல். வண்டியிலிருந்த அவர் இறங்கி காலாற வெளியில் நடக்கிறார். சாலையின் அருகில் ஒரு சிறுவன் மாடு மேய்த்துக்கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார். அரசு பள்ளிக்கூடங்களில் கல்வி இலவசமாயிற்றே. அப்படியும் கூட இவன் ஏன் படிக்கவில்லை. படிக்கும் வயதில் மாடு மேய்க்கிறானே என்று பல எண்ணவோட்டங்கள்.

அவனிடமே கேட்கிறார் “தம்பி, நீ படிக்க வில்லையா, ஏன் மாடு மேய்த்துக்கொண்டிருக்கிறாய்”

சிறுவன் அசரவேயில்லை. பாக்கு வெட்டியிலிருந்து தெறிக்கும் பாக்குதுண்டுகளை போல் அவனிடமிருந்து பதில் வருகிறது “இஸ்கூலுக்கு போனா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுரதாம் ??”

சிறுவனோ ஒரே நொடியில் பதில் கூறிவிட்டான்

அவரிடமோ பல கணங்கள் ஆழ்ந்த மௌனம். அந்த பதிலின் ஆழம் அவரை நேரடியாக தாக்குகிறது. குலக்கல்வி திட்டத்தில் மூடப்பட்ட 6000 பள்ளிகளை அவர் மீண்டும் திறந்தார். அது தவிர மேலும் 12000 பள்ளிகளை புதிதாக திறந்தார். ஆனால் பல பள்ளிகளில் போதிய மாணவர்கள் எண்ணிக்கை இல்லை. அவருக்கு அதுவரை காரணம் புரியவில்லை அனைத்து பள்ளிகளிலும் கல்வி இலவசம் தான். ஆனால் அது மட்டும் ஏழ்மையை எதிர்கொள்ள போதாது என்பதை அப்பொழுது தான் அவர் உணர்கிறார்.

பிறகு சுதாரித்து விட்டு கேட்கிறார் “பள்ளிக்கூடத்தில் சாப்பாடு போட்டால் நீ படிக்க வருவாயா ??”

சென்னை வந்தார். பள்ளிகளில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். பலரும் எதிர்த்தார்கள். ஆனால் அவர் அசரவேயில்லை. விடாப்பிடியாக திட்டத்தை செயல்படுத்தினார்

அந்த சிறுவன் யார் என்று வரலாறு பதிவு செய்து வைக்கவில்லை. ஆனால் அவரின் மனதில் அவன் விதைத்த விதையானது உயிர் கொண்டு வளர்ந்து விருட்சமானது. அந்த விருட்சத்தின் பழங்களிலிருந்து மேலும் பல மரங்கள் வந்தது. அடுத்த ஐம்பது ஆண்டுகளில் ஒரு சோலையே உருவாகிவிட்டது.

இன்று அவரின் 108ஆவது பிறந்தநாள்.



"நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவனை - நாடு பார்த்துண்டா ..

வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்
வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே"




பொறுப்பு துறப்பு : இந்த இடுகையில் உள்ள கர்ண பரம்பரை கதைக்கு சான்று, ஆதாரம், உசாத்துணை எதுவும் என்னிடம் இல்லை. சிறிது தேடிப்பார்த்ததில் இந்த தளத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்தேன் http://en.wikipedia.org/wiki/Mid-day_Meal_Scheme. ஆனால் அங்கும் உசாத்துணைகளோ சான்றுகளோ இல்லை.

Monday, July 12, 2010

தடுப்பூசி தகவல்கள் : தடுப்பூசிகள் ஆபத்தானவையா!!

தடுப்பூசி என்றில்லை. எந்த ஊசியும் ஆபத்து தான்.
-oOo-
  • தடுப்பூசி போடப்படவில்லை என்றால் கடந்த 20 வருடங்களில் 1100000 குழந்தைகள் மரணமடைந்திருப்பார்கள் (இந்த தொகை 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த IMR, BR மற்றும் தற்பொழுதைய IMR, BR மூலம் கணக்கிடப்பட்டுள்ளது)
  • தடுப்பூசியினால் கடந்த 20 வருடங்களில் மரணமடைந்த குழந்தைகள் 4 (இதற்கு முன்னர் 80களில் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாததால் சில மரணங்கள் நடந்திருக்கின்றன)
-oOo-

ஊசி போட்டவுடன் ஒருவர் மரணமடைகிறார் என்றால் என்னென்ன காரணங்கள் இருக்கலாம்
  1. மருந்தில் தவறு
  2. ஊசி போடப்பட்ட முறையில் தவறு
  3. நபரின் தவறு - அது ஊசியுடன் சம்பந்தம் இல்லாத மரணம்
  4. அனாபிலாக்ஸிஸ் / ஹைபர்சென்சிடிவிட்டி
-oOo-

மருந்தில் தவறு
இது குறித்து அனைவருக்கும் தெரியும்.
  • ஒன்று மருந்து கெட்டு போயிருக்க வேண்டும்
  • அல்லது தவறான மருந்தை அந்த புட்டியில் அடைத்திருக்க வேண்டும்
இது முழுக்க முழுக்க மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் தவறு

-oOo-


ஊசி போடப்பட்ட முறையில் தவறு
  • விஷங்கள் அனைத்தும் சரியான அளவில் மருந்தே
  • மருந்துக்ள் அனைத்தும் தவறான அளவில் விஷமே
விஷமென்றும் மருந்தென்றும் தனியாக எதுவும் கிடையாது. அளவே முக்கியம் (The original saying is “Poisons are drugs in large doses and drugs are poisons in small doses. The dose is important”. I have modified it as “Poisons are drugs in WRONG doses and drugs are poisons in CORRECT doses”)
  • அளவிற்கு மிஞ்சினால் அமுதும் விஷமாகும்
  • எனவே ஒரு மருந்தை தவறான அளவில் ஊசிமூலம் செலுத்தினால் விஷமாகும். (இது செவிலியரின் கடமை)
  • அதே போல் அளவு சரியாக இருந்தாலும் செலுத்தும் முறை சரியாக இருக்க வேண்டும் (இது குறித்து ஒரு சிறு விளக்கம் இந்த பதிவின் பின்னூட்டத்தில் உள்ளது) (இது செவிலியரின் கடமை)
  • அதை விட முக்கியம் சரியான மருந்தை செலுத்த வேண்டும். (இது செவிலியரின் கடமை)
  • அதே போல் மருந்து காலவாதியாக வில்லை என்று பார்த்து விட்டு தான் செலுத்த வேண்டும். (இது செவிலியரின் கடமை)
  • மருந்து சரியான முறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கவேண்டும் (இது மருந்தாளுனரின் கடமை)
-oOo-


ஊசி போடப்படும் நபரின் இயல்பான மரணம் : 
இந்த காரணம் உங்களில் பலருக்கு வித்தியாசமாக தெரியலாம். சிலருக்கு கோபம் ஏற்படுத்தலாம். ஆனாலும் இது கூட முக்கிய காரணம்.
  • உதாரணமாக தமிழகத்தில் சுமார் 6,00,00,000 நபர்கள் இருக்கிறார்கள்.
  • இதில் வருடந்தோரும் சுமார் 480000 மரணமடைகிறார்கள். (இதில் சுமார் 63250 மரணங்கள் ஒரு வயதிற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகள்)
  • தினமும் 1315 நபர்கள் மரணமடைகிறார்கள். (இதில் சுமார் 173 மரணங்கள் ஒரு வயதிற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகள்)
  • சென்னையில் மட்டும் தினமும் சுமார் 220 பேர் மரணமடைகிறார்கள்.
2006 ஆம் ஆண்டு சிக்கன்குனியா என்ற ஒரு வைரஸ் நோய் தமிழகத்தில் பலரை தாக்கியது. அப்பொழுது சிக்கன்குனியாவினால் மரணம் கிடையாது என்று அனைத்து மருத்துவ புத்தகங்களிலும் தெளிவாக போட்டிருந்த போதும், ஒரு நாளில் இவ்வாறு இயல்பாக மரணமடையும் 1315 பேரும் சிக்குன்குனியாவில் இறந்ததாக வதந்தி பரவியது நினைவிருக்கலாம். 

அதே போல் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வழங்கப்பட்ட நாளிலும் இவ்வாறு இயல்பாக மரணமடையும் நான்கு 80 வயது நபர்களை காட்டி அது மாத்திரையினால் தான் மரணம் என்று பொய் பிரச்சாரம் நடந்தது.

சமீபத்தில் (அதாவது 2008 டிசம்பரில்) போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டதால் குழந்தைகள் மரணம் என்று வதந்தி பரவியது நினைவிருக்கலாம். அது முற்றிலும் வதந்தியே

அப்படியென்றால் இந்த நோயால் இத்தனை பேர் மரணம் என்று வரும் செய்திகள் அனைத்தும் பொய்தானா

இல்லை. அப்படி ஒரேயடியாக ஒதுக்க முடியாது !!

ஆனால் இன்ப்ளுயென்சா H1N1னிலால் மரணம் ஏற்படலாம். நாளது தேதி வரையில் தமிழகத்தில் 8.5 லட்சம் நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7518 பேருக்கு ஆய்வகங்கள் மூலம் பரிசோதனை செய்ததில் 205 பேருக்கும் இன்ப்ளுயென்சா H1N1(பன்றிக்காய்ச்சல்) இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் 148 பேர் குணமடைந்துள்ளனர். 54 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூவர் இறந்திருக்கிறார்கள்

சென்றவருடம் திருவள்ளூரில் தடுப்பூசி போட்டதால் மூன்று குழந்தைகள் இறந்ததாக வந்த செய்தி உண்மையே !!

ஏன் இப்படி இயல்பான மரணங்களுக்கு காரணம் கற்பிக்கப்படுகின்றன
இதற்கு காரணங்கள் பல
  • ஊடகங்கள் : எதையாவது எழுதி பரபரப்பை உண்டாக்கும் சில பத்திரிகைகள். அவைகளை தூக்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சில ஆங்கில செய்மதி தொலைகாட்சி நிறுவனங்கள்.
  • அரசு வழங்கும் உதவித்தொகை : இவ்வாறு பொய் கூறினால் அரசின் உதவித்தொகை கிடைக்கும் என்பதால் தேவையில்லாமல் மரணத்திற்கு சம்பந்தமில்லாத அரசு நிறுவனத்தை இழுக்கிறார்கள். முதலில் சுகாதார துறை மட்டுமே இது போன்ற புரட்டுகளை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் பிற துறைகளும் பாதிக்கப்படுவதை கண்டு நாங்கள் வியந்து போயிருக்கிறோம் (சமீபத்தில் தீ பிடித்ததால் தொலைக்காட்சி வெடித்ததா, தொலைக்காட்சி வெடித்ததால் தீ பிடித்ததா என்று ஐ.ஐ.டி பேராசிரியர்கள் முதல் அனைவரும் ஆராய்ச்சி செய்ததை அறிந்திருப்பீர்கள்)
-oOo-


அனாபிலாக்ஸிஸ் / ஹைபர்சென்சிடிவிட்டி
  • இது குறித்து பலர் அறிந்திருக்க மாட்டீர்கள் (ignorance)
  • அது போல் நான் சொல்லும் தகவல்களை நீங்கள் படித்த பின் நம்பாமலும் இருக்க வாய்ப்பு உள்ளது (non acceptance)
  • ஏனென்றால் அனாபிலாக்ஸிஸ் / ஹைபர்சென்சிடிவிட்டி என்பது மூலம் நாம் அனைவரும் மரணத்திற்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதும் உணவு மூலம் / காற்றில் உள்ள மரகந்தம் மூலம் கூட நீங்கள் மரணமடைய வாய்ப்பு உள்ளது என்றால் அதை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது
  • பிற ஊசிகளை விட தடுப்பூசிகள் போடும் போது ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு அதிகம்
கும்பகோனத்தில் ஏற்பட்ட தீவிபத்து முழுக்க முழுக்க மனித தவறினால் ஏற்பட்டது. விதிகளை கடைபிடித்திருந்தால் அதை கண்டிப்பாக தடுத்திருக்க முடியும்

ஆனால் தற்பொழுது “நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகளின் படி சோதிக்கப்பட்ட ஒரு மருந்தை” “அனைத்து விதிகளின் படியும் ஊசிமூலம் செலுத்தினால் கூட” “ஆரோக்கியமாக தோற்றமளிக்கும் ஒருவர்” மரணமடைய வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம் அனாபிலாக்ஸிஸ் அல்லது ஹைபர்சென்சிடிவிட்டி


ஊசிபோட்ட ஒருவர் மரணமடைந்தாலே அது தவறான மருந்தின் மூலம் தான், அல்லது தவறாக ஊசி போட்டதில்தான் என்று தவறான நினைப்பு பரவி வருகிறது.

இதற்கு சில அரைவேற்காடு கட்டுரைகளுடன் / பேட்டிகளுடன் வரும் பத்திரிகைகள் முக்கிய காரணம்.


ஒவ்வாமை / அனாபிலாக்சிஸ் தான் காரனம் என்றால் தடுப்பூசியை நிறுத்த வேண்டியது தானே.


தடுப்பூசியினால் மட்டுமல்ல சாதாரண ஊசி, ஏன் சில வகை காய்கறிகள் கூட ஒவ்வாமை ஏற்படுத்தும். ஒவ்வாமையை முழுவதும் தடுக்க முடியாது.

மனித உடம்பு என்பது கருவியில் உருவாக்கப்படுவதில்லை.
  • உதாரணமாக ஒரு தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்கும்.
  • ஆனால் ஒருவரின் உடல் போல் மற்றொருவரின் உடல் இருக்காது.
  • ஒரே தொழிற்சாலையில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் 20 தொலைக்காட்சி பெட்டிகளில் ஒரு பெட்டி 230 வால்ட் வரை வேலை செய்கிறது 276 வால்டில் வெடிக்கிறது என்றால் மீதி 19 தொலைக்காட்சி பெட்டிகளும் 276வது வால்டில்தான் வெடிக்கும்
  • ஆனால் மனித உடல் அப்படி அல்ல.
    • ஒவ்வொரு நபரின் எடை வேறு.
    • ஒவ்வொரு நபரின் உயரம் வேறு.
    • ஒவ்வொரு நபரின் இரத்த அழுத்தம் வேறு.
    • ஒவ்வொரு நபரின் தோல் நிறம் வேறு.
  • அதே போல் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களும் வேறு
    • உங்களுக்கு பெனிசிலின் ஒவ்வாமை என்றால் அடுத்தவருக்கு செப்ட்ரான் உவ்வாமை. எனக்கு மெட்ரோடினசால் ஒவ்வாமையாக இருக்கலாம்.
  • அதே போல் 99,999 நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு மருந்தை செலுத்தியவுடன் அது ஒத்துக்கொள்ளாமல் 1,00,000வது நபர் மரணமடையலாம்.
ஆக, மனித தவறுகள் துளி கூட இல்லாமல் ஒரு நபரோ பலரோ மரணமடைய வாய்ப்புகள் உள்ளன என்பது கசப்பான செய்திதான். ஆனால் உண்மை கசக்கும் !!

-oOo-

சரி, தடுப்பூசி போடாவிட்டால் குழந்தைகளுக்கு என்னத்தான் நோய் வரப்போகிறது


-oOo-

மேலே நீங்கள் பார்த்த படங்கள் அனைத்தும் தடுப்பூசி பரவலாக போடப்படுவதற்கு முன் இருந்த நிலைமை

-oOo-

தற்பொழுது
  • பெரிய அம்மை (ஸ்மால் பாக்ஸ்) உலகில் அறவே கிடையாது
  • தட்டம்மை (மீசீல்ஸ்) சில குழந்தைகளை பாதித்தாலும் அதனால் யாரும் குருடாவதில்லை
  • போலியோவினால் ஒரு குழந்தை நடக்க முடியாமல் போனது 15 வருடங்களுக்கு முன்னர் தான்
-oOo-
  • தடுப்பூசி போடப்படவில்லை என்றால் கடந்த 20 வருடங்களில் 1100000 குழந்தைகள் மரணமடைந்திருப்பார்கள் (இந்த தொகை 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த IMR, BR மற்றும் தற்பொழுதைய IMR, BR மூலம் கணக்கிடப்பட்டுள்ளது). அது தவிர பிற குழந்தைகள் தான் மேலே இருக்கும் படங்களில் இருப்பது போல் பாதிக்கப்படுபவர்கள்
  • தடுப்பூசியினால் கடந்த 20 வருடங்களில் மரணமடைந்த குழந்தைகள் 4 (இதற்கு முன்னர் 80களில் தடுப்பூசி முறையாக அளிக்கப்படாததால் சில மரணங்கள் நடந்திருக்கின்றன)
-oOo-
முதலில் எழுதியது : 27 ஆகஸ்டு 2009
மீள்பதிவு : 12 சூலை 2010
கேள்விகளை கேட்கலாம் !!

Monday, June 14, 2010

தமிழகத்தில் உயிரியல், இயற்பியல், வேதியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் யார்

தமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் அதிகம் மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

அந்த பட்டியலில் 13 மாணவர்கள் 200/200 எடுத்துள்ளனர்

எண்
விண்ணப்பம் எண்
பெயர்
சமூகம்
மதிப்பெண்
சமூக வரிசை
1
4749
SURUTHI T
BC
200.00
1
2
6692
ABINAYA B
BC
200.00
2
3
3671
GOWTHAM G R
MBC
200.00
1
4
5353
CHELVAMALAI MUTHUKUMARAN BA
MBC
200.00
2
5
3956
VISHNUPRIYA S
BC
200.00
3
6
4161
DINESH M
BC
200.00
4
7
7414
AMARAN M
BC
200.00
5
8
1543
SHRUTHEE S G
BC
200.00
6
9
4919
DIVYA P
BC
200.00
7
10
10533
PRANESH S
BC
200.00
8
11
6528
SANJAI RAM K P
SC
200.00
1
12
9870
ANUSHA J
BC
200.00
9
13
8609
PARTHASARATHY G
BC
200.00
10

அதாவது
  • 10 பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களும்
  • 2 மிகவும் பிற்படுத்தப்பட்ட சேர்ந்த மாணவர்களும்
  • 1 தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்னும்
முதலிடம் பெற்றுள்ளனர்

முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த யாரும் முதலிடத்தில் இல்லை
  • இருவர் 199.75 எடுத்து அடுத்த இடத்தில் உள்ளார்
அதே போல் முஸ்லிம் சமூகத்திலும் யாரும் 200/200 எடுக்கவில்லை
  • இருவர் 199.75 எடுத்து அடுத்த இடத்தில் உள்ளார்
அதே போல் அருந்ததியர் சமூகத்திலும் யாரும் 200/200 எடுக்கவில்லை
  • ஒரு மாணவர் 199.25 எடுத்துள்ளார். அதாவது 99.625 சதவிதம்

அதே போல் பழங்குடியினர் சமூகத்திலும் யாரும் 200/200 எடுக்கவில்லை
  • ஒரு மாணவி 194.75 எடுத்துள்ளார். அதாவது 97.375 சதவிதம் 

இப்பொழுது இந்த தரவரிசை பட்டியலை மேலும் ஆராய்ந்து முதல் 100 இடங்களில் ஒவ்வொரு சமூகத்திலிருந்து எத்தனை பேர் உள்ளனர் என்றும், முதல் 500 இடங்களில் ஒவ்வொரு சமூகத்திலிருந்து எத்தனை பேர் உள்ளனர் என்றும் , முதல் 1000 இடங்களில் ஒவ்வொரு சமூகத்திலிருந்து எத்தனை பேர் உள்ளனர் என்றும் , முதல் 2000 இடங்களில் ஒவ்வொரு சமூகத்திலிருந்து எத்தனை பேர் உள்ளனர் என்றும் பார்த்தால் கீழ்க்காணும் அட்டவனையை பெற முடிகிறது. (இந்த அட்டவணையில் இருந்த பிழையை சுட்டிக்காட்டிய இந்தியன் அவர்களுக்கு நன்றி. பிழை திருத்தப்பட்டுவிட்டது)



ஆக தமிழகத்தில் இட பங்கீடு கடை பிடிக்கப்படவில்லை என்றாலும் கூட
மருத்துவக்கல்லூரிகளில் (2000 இடங்கள் இருந்தால்) முற்பட்ட வகுப்பினருக்கு 183 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

இட பங்கீடு கடைபிடிக்கப்படும் போது அவர்கள் பெறும் இடங்கள் 93 (19 சதம் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற நீதிமன்ற ஆனையின் படி)

ஆக 2000 இடங்கள் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இடப்பங்கீட்டினால் இடமிழக்கும் முற்பட்ட சமூக மாணவர்களின் எண்ணிக்கை 90 மட்டுமே. மீதி 1817 இடங்களையும் முற்பட்ட வகுப்பு மாணவர்களால் பெற முடியாததற்கு காரணம் இடப்பங்கீடு அல்ல என்பதில் யாருக்காவது சந்தேகம் உள்ளதா

அப்படி என்றால் என்ன காரணம் :
  • தமிழகத்தில் பிற சமூகத்தினரும் 12ஆம் வகுப்பு வரை கல்வி கற்ற முடிவது ஒரு காரணம்
  • அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கூட மாநிலத்தில் முதலிடம் பெறும் வகையில் அரசு பள்ளிகள் இருப்பதும் காரணம்
  • பள்ளியில் செவிக்கு மட்டுமின்றி வயிற்றுக்கும் உணவு சேர்ந்து வழங்கப்படுவதும் காரணம்
  • உணவுடன், புத்தகமும் இலவசமாக அளிக்கப்படுவதும் காரணம்
வேறு காரணங்களை மறுமொழியில் கூறவும் 

Wednesday, June 02, 2010

சனிக்கிழமை 05 ஜூன் 2010 மாலை 5 மணிக்கு மெரினா காந்திசிலை அருகே பதிவர் சந்திப்பு

நிகழும் கொல்லமாண்டு 1185 விக்ருதி வருடம் வைகாசி 22ஆம் நாள், தமிழ் வருடம் திருவள்ளுவர் ஆண்டு 2041 வைகாசி 22ஆம் நாள், ஆங்கில வருடம் கி.பி 2010 சூன் மாதன் 5ஆம் நாள் சனிக்கிழமை சுக்ல பட்சத்து நவமி, கும்பராசியும், பூரட்டாதி நட்சத்திரமும், பிரிதி யோகமும், தைத்துள்ள கரணமும், சுக்கிர ஓரையும் கூடிய சுபதினத்தில், சூரிய உதயாதி நாழிகை 30 முதல் 35க்குள் (மாலை 5:30 முதல் 7:30 வரை) விருச்சிக லக்னத்தில் மெரினா காந்திசிலை அருகில் சிறப்பு விருந்தினர் சிறில் அலெக்ஸ் பதிவர்களை சந்திக்க உள்ளார்

தாங்கள் தங்கள் சுற்றும் சூழ வந்து பதிவர் சந்திப்பை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

இந்த அறிவிப்பின் வாயிலாக உங்கள் வீட்டில் உள்ளவர்கள், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், எதிர் வீட்டில் இருப்பவர்கள், தாத்தா, பாட்டி, பூட்டன், பூட்டி, மாமா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்தி, பெரியம்மா, அக்கா, அண்ணன், மச்சான், மச்சினி, கொளுந்தன், அண்ணி, உங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறவர்கள், உடன் பணியாற்றுபவர்கள், நீங்கள் முன்பு பணி செய்த இடம், நீங்கள் இனி பணி செய்யப்போகும் இடத்தில் பணியாற்றுபவர்கள், ரஜினி, கமல், சச்சின், தோனி, டைகர் வுட்ஸ், அர்னால்ட் சுவாசுநேகர், ஜேம்ஸ் காமரூன் ஆகிய அனைவரையும் அழைக்கிறோம்

Sunday, May 30, 2010

புனைவு : யாரையும் குறிப்பிடுவது அல்ல : ஒரு பாடலின் கதை

இது முழுக்க முழுக்க கற்பனையே !! இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே !! தப்பி தவறி இது போல் யாராவது இருந்தாலோ அல்லது இது யாரையாவது போலிருந்தாலோ அதற்கு “பயணங்கள்” நிர்வாகம் பொறுப்பல்ல

செம்மொழி பாடல் ஏற்படுத்திய அதிர்வில், வெற்றிகரமாக ஒரு வருட கால ஆட்சியின் சாதனையை கொண்டாட வேண்டி சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட பன்மோகன் முடிவு செய்து அது குறித்து கூட்டப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் விவாதம் சூடு பிடிக்கிறது

பன்மோகன்: திரணாப்ஜி, சொல்லுங்க. பாடலுக்கு இசையமைக்க யாரை கூப்பிடலாம்

திரணாப்: எ.எஸ்.சல்மானை கூப்பிடலாம். அவர் தான் இன்னைக்கு பீல்டில் டாப்

பீதாம்பரம் : அவர் ரொம்ப லேட்டாக்குவார்ன்னு சொல்றாங்களே. தவிர அவர் பயங்கர பிசி வேறயாயம். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்டுன்னு பறந்துகிட்டே இருக்கிறார்.

நம்ம ஊருல பீல்ட் அவுட் ஆகி வேலை வெட்டி இல்லாம நிறைய பேர் இருக்குறாங்க, அவங்கள கூப்பிட்டா உடனடியாக டியூன் போட்டு தந்துருவாங்க

பன்மோகன் : சரி, அப்ப இங்க இருக்கிரவங்க கிட்ட டியூன் போட்டு வர சொல்லி எல்லாருக்கும் லெட்டர் அனுப்புங்க

விசில் பிசில் : அப்படியே நாம எல்லாம் கல்வியை வெளிநாட்டுக்கு விக்கிறதுல சாதனை பண்ணிக்கிட்டு இருக்கிறோமே, அதுக்கும் ஒரு பாட்டு போட்டா என்ன

பன்மோகன் : சரி அதுக்கும் சேர்த்து இரண்டு டியூனா போடச்சொல்லுங்க

-oOo-

சில நாட்கள் கழித்து


-oOo-


உதவியாளர் : சார், ஒரு வருட கால ஆட்சி சாதனை பாடலுக்கு டியூன் போட்டுக்கிட்டு இசையமைப்பாளர்கள் எல்லாம் வந்திருக்காங்க. வர சொல்லவா

முதலில் வருபவர் எஸ்.ஏ.பாஜ்குமார்

பன்மோகன் : ஆவோ பாஜ்குமார் ஜி, நமஸ்தே

எஸ்.ஏ.பாஜ்குமார் : வணக்கம் சார்

பந்தோனி : ஒரு வருட சாதனைக்கு என்ன டியூன் போட்டுறிக்கீங்க

எஸ்.ஏ.பாஜ்குமார் : லா லா லா, லல்ல லா லா லா, லா லா லா, லல்ல லா லா லா,

விசில் பிசில் : கல்வியை வெளிநாட்டு பல்கலைகழகங்களுக்கு வித்த சாதனைக்கு

எஸ்.ஏ.பாஜ்குமார் : லா லா லா, லல்ல லா லா லா, லா லா லா, லல்ல லா லா லா,

பன்மோகன் : ஒரே மாதிரில இருக்கு

பீதாம்பரம் : (தலையில் அடித்துக்கொண்டு) தோசை மியூசிக் டைரக்டரை எல்லாம் கூப்பிட்டா இப்படித்தான்

பன்மோகன் : அது என்ன தோசை மியூசிக் டைரக்டர்

பீதாம்பரம் : தோசை சுடும் போது திருப்பி போடுவோம்ல, அத மாதிரி இவர் ஒரே பாட்ட திருப்பி திருப்பி போடுவார். அதனால இவருக்கு நாங்க வைச்ச பேர் பெயர் தோசை மியூசிக் டைரக்டர்

பன்மோகன் : மிக்க நன்றி பாஜ்குமார். தேவைப்பட்டா உங்களை நாங்க கூப்பிடுறோம்

அடுத்து வருகிறார் பாவா

பன்மோகன் : நமஸ்தே பாவாஜி, நல்லாயிருக்கீங்களா

எஸ்.ஏ.பாஜ்குமார் : வணக்கம் சார், நல்லாயிருக்கேன் சார்

பன்மோகன் : டியூன் எல்லாம் போட்டாச்சா


பாவா : போட்டாச்சு சார்

பன்மோகன் : எங்க ஒரு வருட சாதனை பாட்டு டியூனை பாடிக்காட்டுங்க பாப்போம்

பாவா : (கனைத்துக்கொண்டு) ஸ ரி கக கக கா கக ரி க ம, கா கக, ரீ ரிரி, நி ரி ஸ

விசில் பிசில் : இந்த பாட்டை என்கேயோ கேட்ட மாதிரில இருக்கு

பீதாம்பரம் (மனதிற்குள்) : இவர் பாட்டு நிறைய அப்படித்தான் இருக்கும்

அதற்குள் பந்தோனி திடீரென எழுந்து அட்டென்ஷனில் நின்று சல்யூட் அடிக்கிறார்

அனைவரும் அரண்டு போய் : என்ன ஆச்சு

பந்தோனி (அசடு வழிந்தபடியே உட்காருகிறார்) : தேசிய கீதம் டியூனை கேட்ட வுடனே ஏதோ மிலிட்டரி பரேடுன்னு நினைச்சிட்டேன்

பீதாம்பரம் : ஜெராக்ஸ்காரர் வேலையை காட்டிப்புட்டார்

பன்மோகன் : அதென்ன ஜெராக்ஸ்

பீதாம்பரம் : ரஜினி, கமல் தவிர வேறு யார் படத்திற்கு மியூசிக் போட்டாலும் இவர் லகரி, பர்மன், இம்சை ராசா, சல்மான் இவங்க டியூனை ஜெராக்ஸ் எடுத்து , கொஞ்சம் மாத்தி போடுவார். அதனால நாங்க இவருக்கு வச்ச பேர் ஜெராக்ஸ் மியூசிக் டைரக்டர்

திரணாப் : ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு மனுசன கடிக்கிற மாதிரி, இப்ப தாகூர்மடியிலயே கைவச்சிட்டாரைய்யா

விசில் பிசில் : சரி, அடுத்த டியூனை போடுங்க (மனதிற்குள் ; அதுவாது ஒரிஜினலா பாப்போம்)

பாவா : ஸஸரிஸ மா கா ; ஸஸரிஸ பா மா ; ஸஸ ஸா த ப ம க : நீ நீ த ம ப ம

விசில் பிசில் : இந்த பாட்ட கூட எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு

பன்மோகனின் பேரன் ஓடி வந்து : ஐ, இன்னைக்கு யாருக்கு பேர்த்டே, என்ன சாக்லேட் தரப்போறாங்க

அனைவரும் திகைத்து : பேர்த்டே ???

பன்மோகன் (சிறிது சுதாரித்து) : என்ன பேட்டா, க்யா பேர்த்டே

பேரன் (பாவாவை பார்த்து) : அங்கிள் ஹாப்பி பர்த்டே பாட்டு பாடினாருல்ல, அது தான் யாருக்கு பேர்த்டேன்னு கேட்டேன்

பீதாம்பரம் : அடப்பாவி, தாகூரை தாண்டி இந்த பாட்டையும் விட்டு வைக்கலயா

பன்மோகன் : மிக்க நன்றி பாவாஜி. தேவைப்பட்டா உங்களை நாங்க கூப்பிடுறோம்

பன்மோகன் (உதவியாளரிடம்) : அடுத்து யார்

உதவியாளர் : இம்சைராசா சார்

பன்மோகன் : அவரை வரச்சொல்லு

உதவியாளர் : அவர் வரவில்லை. ஏதோ படபாடல் வெளியீட்டு விழாவிற்கு போயிருக்கிறாராம். அவரது சங்கத்தலைவர் வந்திருக்கிறார்

பன்மோகன் (சங்கத்தலைவரிடம்) : டியூனை போட்டு காட்டுங்கள்

சங்கத்தலைவர் : எங்க ஆளு டியூன் போட்டுட்டார். உலகத்திலேயே அது தான் சிறந்த டியூன். ஆனா இப்ப காப்புரிமை பிரச்சனை இருக்கிறதால அத வெளியிட முடியாது

திரணாப் : அப்ப பாட்டுக்கு என்ன பண்ணுறது

சங்கத்தலைவர் : இங்க பாருங்களே. இங்கிலாந்திலிருந்து வெளக்குமாறோ துடைப்போ கடிதம் எழுதியிருக்கிறார். அவர் இந்த் டியூனை கேட்டாராம். ரொம்ப நல்லாயிருக்காம்.

விசில் பிசில் : பாட்ட கேட்டா லெட்டர காட்டுறீங்க. ஒன்னுமே புரியல

சங்கத்தலைவர் : இது போதாத உங்களுக்கு, அவர் பாட்டு போட்டாருன்னு நாங்க நம்புறோம். அவ்வளவுதான்

உளவுத்துறை அதிகாரி ஒருவர் உள்ளே வந்து நிற்கிறார்

பன்மோகன் : எனிதிங் அர்ஜெண்ட். என்ன ஆச்சு,

உளவுத்துறை அதிகாரி : சென்னையில் ஒரு பாடல் வெளியிட்டு விழாவில் இருந்து அவசர செய்தி. யாரோ இம்சைராசாவாம். நீங்க தினமும் அவருக்கு போன் செய்து பேசவில்லை என்று உங்களையும் அமைச்சர் விசில் பிசிலையும் தாறுமாறாக திட்டிக்கொண்டிருக்கிறாம்

பன்மோகன் : நான் எதுக்கு அவருக்கு போன் செய்யனும்

பீதாம்பரம் : அவருக்கிட்ட பாட்டு கேட்டீங்கன்னா, தினமும் அவருக்கு போன் செஞ்சு நீங்க தான் கடவுள், உங்களை விட்டா ஆள் கிடையாது அப்படின்னு சோப்படிக்கணும். இல்லன்ன இப்படி ஏதாவது பாடம் வெளியிட்டு விழாவில் திட்டு வாங்க வேண்டியது தான்

திரணாப் : இந்த கொடுமை வேற உண்டா

பீதாம்பரம் : அதனாலத்தான் அவர் இன்னும் அகிரா குரசோவா படத்திற்கு இசையமைக்கவில்லை , எனென்றால் அவர் அகிரா குரசோவாவை அறிமுகப்படுத்தவில்லை

பன்மோகன் (சங்கத்தலைவரிடம்) : மிக்க நன்றி சார். நீங்க போயிட்டு வாங்க

அடுத்து வருகிறார் பாரிஸ் தேவராஜ்

திரணாப் : நீங்க போட்ட டியூனை காட்டுங்க


பாரிஸ் தேவராஜ் : ஓ மகசியோ கிச்சு மிச்சு கியா மியா, வியா, கிலீ மீலி தீத்தி, வீத்தி பீத்தீ

பீதாம்பரம் : என்னயா இது ஆப்பிரிக்க பாட்டு மாதிரி இருக்கு

பன்மோகன் : மிக்க நன்றி பாரிஸ் தேவராஜ். நான் அடுத்த மாதம் நைஜீரியா  பயணம் செல்கிறேன். உங்கள் பாடலை அந்த நாட்டில் பயன் படுத்தும்படி பரிந்துரைக்கிறேன்.

விசில் பிசில் : ஒன்னுமே தேறலயே

உதவியாளர் : சார், இசையமைப்பாளர் எ.எல்.சல்மான் ஹாலிவுட்டிலிருந்து ஒரு கடிதமும் சிடியும் அனுப்பியிருக்கிறார்.

பீதாம்பரம் : சிடியை போடுங்க. எவ்வளவோ பாத்துட்டோம், இதையும் பாத்துடுவோம்

பன்மோகன் : நல்லாத்தான் இருக்கு, சரி இதையை வச்சிருவோம். சரி, நாம கேட்காமலேயே அனுப்பியிருக்கிறாரே, அவருக்கு நன்றி சொல்லிருவோம், போன போடுங்க

பன்மோகன் (தொலைபேசியில்) : நமஸ்தே சல்மான்ஜி, உங்க பாட்டு சூப்பர். எல்லாரும் நீங்க ரொம்ப பிசின்னு சொன்னாங்க. ஆனா நாங்க கேட்காமலேயே அனுப்பிட்டீங்க. ரொம்ப சந்தோஷம்

சல்மான் : நன்றி சார். கொஞ்சம் லேட்டாயிடுச்சு மன்னிசுருங்க. ஆனா உங்க கிட்ட இருந்து டியூன் வேணுமுன்னு லெட்டர் வந்ததே

பன்மோகன் : அப்படியா, நான் உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாமுன்னு சொன்னேனே. எப்ப வந்தது

சல்மான் : 2005ல் நீங்க ஒரு வருசம் ஆட்சி முடிச்சப்ப வந்தது

பன்மோகன் : என்னது, அப்ப கேட்டதுக்கு இப்ப அனுப்புறீங்களா. ஒரு பாட்டுக்கு ஐந்து வருடமா

சல்மான் : ஏன் சார், நீங்க ஒரு மகளிர் மசோதாவை வச்சுக்கிட்டு எவ்வளவு நாளா இருக்கீங்க. நாங்க எதாவது கேட்கிறோமா. சேது சமுத்திர திட்டத்தை 150 வருசமா வச்சுக்கிட்டு தான் இருக்கீங்க. ஒரு பாட்டுக்கு 5 வருசம் ஆனது தப்பா ?

-oOo-

இந்த புனைவில் ஏதாவது பிடிக்கவில்லை என்று காறி துப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள், பொது சுகாதாரம் கருதி, தங்களின் கைக்குட்டையிலோ அல்லது டிஷ்யூ காகிதத்திலோ அல்லது வாஷ்பேசினிலோ துப்ப வேண்டுகிறேன்.

Thursday, May 27, 2010

பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிக்கு வாழ்த்துக்கள்

செய்தி நன்றி தினமலர் : http://url4.eu/3lheF

பிரபலமான பள்ளியில் படித்தால் தான் சாதிக்க முடியும்; அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை கருத்தை, நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்த்தெறிந்து, மாபெரும் சாதனை படைத்துள்ளார். தனியார் பள்ளிகள் மீது, பொதுமக்களுக்கு மோகம் அதிகமாக இருக்கிறது. அந்த பள்ளிகளில் மட்டுமே, குறிப்பாக மிகப்பெரிய பள்ளிகளில் மட்டுமே, தரமான கல்வி வழங்கப்படுகிறது. அந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தால் தான், எதிர்காலம் சிறப்பாக இருக்குமென்ற கருத்து, பொது மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது. இதனால், அவரவர் வசதிகேற்ப தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர். பெரும்பாலான பள்ளிகள் தரமான கல்வியை வழங்கினாலும், மக்களிடமுள்ள மோகத்தை பயன்படுத்தி, காசு பார்க்கும் பள்ளிகள் அதிகம் இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், மாநில அளவிலான ரேங்க்குகளையும், பாட வாரியான ரேங்க்குகளையும், அதிகம் பெற்றவர்கள் கிராமப்புற மாணவர்கள் தான். நகர்ப்புறங்களிலுள்ள மாணவர்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை. பெரிய பள்ளி என்று படையெடுப்பவர்களின் கண்களை திறக்கும் வகையில், சாதிப்பதற்கு பள்ளி முக்கியமல்ல; உழைப்பு தான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார், நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், இவர் 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

பெரிய தனியார் பள்ளிகளிலுள்ள கட்டமைப்பு வசதிகள், உயர்ந்த கல்வித்தரம் கொண்ட ஆசிரியர்கள், பல்வேறு வகையான கற்பிப்பு முறைகள் ஆகியவை மாநகராட்சி பள்ளிகளில் இருக்குமென கூற முடியாது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், ஓரளவுக்கு தான் வசதிகள் இருக்கும். முக்கியமாக, படிப்பில் சுமாரான மாணவர்கள் தான், அரசு பள்ளிகளில் சேர்கின்றனர். இந்த மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகள் அட்மிஷன் கொடுப்பதில்லை. மாறாக, மிக நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அட்மிஷன் கொடுத்து, அவர்கள் சாதனையை, தங்கள் சாதனையாக பள்ளிகள் பறைசாற்றி கொள்கின்றன. இதற்கு மத்தியில், சாதாரண பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும், அதற்கு ஈடுபாடும், முழுமையான உழைப்பும் மட்டுமே தேவை என்பதை எடுத்து காட்டியுள்ளார் ஜாஸ்மின்.

மிகவும் ஏழ்மை நிலையில் அபார சாதனை: தந்தை பெருமிதம்: மிகவும் ஏழ்மை நிலையில், மாநில அளவில் சாதனை படைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாநில முதல் ரேங்க் பெற்ற மாணவியின் தந்தை தோவூது கூறினார். சாதனை மாணவியின் தந்தை தோவூது ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தனது மகளின் சாதனை குறித்து தோவூது கூறியதாவது: நான் மோட்டார் சைக்கிளில் ஊர், ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். விற்பனையை பொறுத்துதான் லாபம் ஏதாவது கிடைக்கும். குறைந்தது மாதத்திற்கு ஏழு அல்லது எட்டாயிரம் ரூபாய் கிடைக்கும். இந்த வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்தி வருகிறேன். எனது மகள் மாநில அளவில் முதலாவது ரேங்க் பெற்றார் என்ற தகவல் கிடைத்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

ஒரு தந்தையாக அவளது கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து வந்தேன். ஐந்தாம் வகுப்பு வரை ஜாஸ்மின் வேறு பள்ளியில் படித்தார். 6ம் வகுப்பு முதல் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். ஆரம்பம் முதலே பள்ளியில் நன்கு படித்து முதல் ரேங்க் பெறுவார். தொடர்ந்து நன்கு படித்து, தற்போது மாநில அளவில் முதலாவது ரேங்க்கை பெற்றுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் நடராஜன், ஆசிரிய, ஆசிரியைகள் மிகவும் உறுதுணையாகவும், ஊக்கமும் அளித்தனர். எனவே, தொடர்ந்து இதே பள்ளியிலேயே படிக்க வைப்பேன். வேறு எந்த பள்ளியிலும் சேர்க்க மாட்டேன். எனது மகளின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், அனைத்து ஊக்கத்தையும் அளிப்பேன். இவ்வாறு சாதனை மாணவியின் தந்தை கூறினார்.



-oOo-

வாங்கிய கூலிக்கு அதிகமாகவே மாரடித்த ஆசிரியர் நடராஜன் மற்றும் பிற ஆசிரிய ஆசிரியைகளுக்கு வாழ்த்துக்கள்

-oOo-

அரசு பேருந்தில் பயணம் செய்தேன் - சீட்டில் ஒரு ஆணியை காணவில்லை - அரசில் யாரும் வேலை செய்வதில்லை, பாண்டியன் விரைவு தொடர்வண்டியில் ஒரு காத்தாடி மெதுவாக ஓடியது - தொடர்வண்டியை தனியார்மயமாக்க வேண்டும், அரசு பள்ளியில் மாணவர் தேர்ச்சி குறைவு - ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தண்டம் என்ற ரீதியில் அலுவலக கணினியில், அலுவலக இணைய தொடர்பை வைத்து பதிவு எழுதும் நேர்மை சிகாமணிகள், மற்றும் தான் இதுவரை எழுதிய அனைத்து நிரல்களிலும் ஒரு வழு கூட வராத அளவு மிக நேர்த்தியாக நிரல் எழுதும் திறமை பெற்றதால் அடுத்தவர்கள் செய்யும் லட்சக்கணக்கான வேலைகளில் நேரும் ஓரிரண்டு சிறு தவறுகளை கூட முறைகேடு என்று விமர்சிப்பவர்கள் ஆகியோர் இந்த செய்தியை கண்டுகொள்ளாமல் அல்லது கண்டும் காணாமல் விட்டது அதியமில்லைதான் !!

-oOo-

Sunday, April 18, 2010

பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா போட்டி

தமிழ்நாடு அரசு, 2010 சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூர் நகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும் ஒன்பதாவது இணையத் தமிழ் இணைய மாநாட்டையும் நடத்துகிறது. இதனை ஒட்டித் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பல்தொழில்நுட்பப் பயிலகங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் பங்கேற்பில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தகுந்த தகவல் பக்கங்களை (கட்டுரைகள்) எழுதும் போட்டியை நடத்துகிறது.
தமிழ்நாடு அரசும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து நடத்தும் இப்போட்டியில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், கல்வியியல், இயங்குனர் மருத்துவம் (பிசியோ தெரப்பி), சித்த மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பலதொழில்நுட்பப் பயிலகம் முதலிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு கொள்ளலாம். ஒவ்வொரு துறையிலும் சிறந்த தகவல் பக்கங்களை எழுதுவோருக்குப் மதிப்பு மிகுந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இப்போட்டிக்கு வரும் தகவல் பக்கங்களில் தகுதியானவை தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும். இந்த வலைவாசல் பக்கத்திலுள்ள அனைத்துப் பகுதிகளையும் ஒரு முறை படித்துப் புரிந்து கொண்டு போட்டியில் பங்குபெற வேண்டுகிறோம். இப்போட்டியில் பங்குபெற வந்துள்ள அனைத்து மாணவர்களையும் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக வரவேற்கிறோம்..! பரிசுகளை வெல்ல வாழ்த்துகிறோம்...!!



மேலும் விபரங்களுக்கு

http://ta.wikipedia.org/wiki/Wp:contest
http://tamilint2010.tn.gov.in/
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...