அண்ணாகண்ணன் அவர்கள் தனது
பதிவில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்
தேள் என்பது, பாம்பு அளவுக்குக் கொடிய விஷம் உடையது இல்லை. கடித்தவுடன் இறந்துவிடுவார்கள் என்ற நிலை இல்லை. கடித்ததும் உடனே முதலுதவிகள் செய்தால் கடிபட்டவர் பிழைத்துவிட வாய்ப்பு உண்டு. ஆனால், அலட்சியம் என்பது தேளைக் காட்டிலும் கொடியது. அது, இருந்தால் பெருங்கேடு உறுதி.
இதில் முதல் வரியை தவிர மீதி அனைத்து வரிகளிலும் எனக்கு உடன்பாடுதான். உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். தேளானது பாம்பை விட கொடிய விஷமுடையதா?
பாம்பின் விஷம் கொல்லக்குடியதாக இருந்தாலும் அதற்கு ஏற்ற மருந்துகள் நம்மிடம் உள்ளன. பாம்புகள் பலவிதம். ஆனால் விஷம் நான்கு விதம் தான். அரசு (மற்றும் தனியார்) மருத்துவமனைகளில் இருக்கும் மருந்தில் (ASV) இந்த நான்கு வகை விஷத்தையும் முறியடிக்கக் கூடிய மாற்று மருந்து (Antidote) சரியான விகிதத்தில் கலந்து இருக்கும். எனவே பாம்பு கடித்த உடனேயோ அல்லது பாம்பு கடித்து இரண்டு மணி நேரத்திற்குள்ளோ அந்த நபரை அரசு (அல்லது இந்த மருந்து வைத்திருக்கும் தனியார்) மருத்துவமனைக்கு கொண்டு வந்தால்
உறுதியாக (100 சதவிகிதம்) உயிரை காப்பாற்றி விடலாம்.
தற்பொழுது உள்ள மருந்தில் (ASV) நான்கு வகை விஷத்தையும் முறியடிக்கக் கூடிய மாற்று மருந்து (Antidote) உள்ளதால் பாம்பு கடித்த நபரை மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் போதும். பாம்பு தேவையில்லை !!! ஆனாலும் பலர் அந்த பாம்பையும் கொன்று(டு) வருகிறார்கள்
தேள் கடித்தால்தான் மருத்துவருக்கு தலைவலி ஆரம்பம்.
தேள் பல வகை.... அதன் விஷமும் பலவகை.....
இதில் முக்கிய சிக்கல் என்னவென்றால், ஒவ்வொரு விஷத்திற்கும் ஒவ்வொரு மாற்றுமருந்து. அதில் இந்தியாவில் ஒரு சில வகை மருந்துகள்தான் உள்ளன. பல வகை மருந்துகள் உலகில் எங்குமே கிடையாது
மற்றுமொரு தலைவலி, ஒரே தேள் கடியில் பல வகை விஷங்கள் கூட இருக்கலாம்
இதில் ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி
நல்ல செய்தி என்னவென்றால், பெரும்பாலான விஷங்களினால் உயிருக்கு எந்த ஆபத்தும் கிடையாது. Lignocaine என்ற மருந்தை செலுத்தினாலோ அல்லது வெங்காயத்தை அரைத்து பூசினாலோ வலி சரியாகிவிடும்
கெட்ட செய்தி என்னவென்றால், சில வகை விஷங்கள் Myocarditis ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கும். அப்பிடி Myocarditis வந்துவிட்டது என்றால் 99.99 (இந்தியாவில்) சதவிதம் நோயாளியை காப்பாற்ற முடியாது. (வெளி நாட்டில் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 20 சதவிதம் தான்)
எனவே, ஒரு பக்கம் பாம்பு ஒரு பக்கம் தேள் என்று மாட்டிக் கொண்டால், பாம்பு உள்ள பக்கம் வாருங்கள்...... Myocarditis வந்தால் வைத்தியம் (இந்தியாவில்)கிடையாது
கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி. டாக்டர் புரூனோவின் குறிப்புகள், பயனுள்ளவை. 'அரணை கடித்தால் அரை விஷம், தேள் கடித்தால் முக்கால் விஷம், பாம்பு கடித்தால் முழு விஷம்' என்பது போல் ஒரு சொற்றொடரை என் இளவயதில் கேட்டிருக்கிறேன். இன்னொன்று, பாம்பு கடித்து இறந்ததாகத்தான் நிறைய செய்திகள் வருகின்றன. அந்த அடிப்படையில் ஒரு கணிப்பாகத்தான் அப்படி எழுதினேன்.
நான் பதிவு எழுதியதின் நோக்கம், தேள் விஷம் (நாம் நினைத்து கொண்டிருப்பதை விடவும் மிகவும்)கொடியது என்பதை சுட்டி காட்டத்தான். இந்த பதிவை படித்துவிட்டு யாரும் பாம்பிடம் சென்று "மெனக்கெட்டு" கடி வாங்கினால் நான் பொறுப்பல்ல !!!!
மற்றுமொரு விஷயம்.
1. பாம்பு கடி பட்டு ஒருவர் அரசு மருத்துவமனை வந்தால் அது குறித்து போலிசுக்கு தெரிவித்து MLC(Medicl Legal Case) பதியப்படுகிறது. அந்த நோயாளி மரணமடைந்தால் அதுவும் போலிசுக்கு தெரிவிக்கப்பட்டு அதனால் இது குறித்த புள்ளி விபரங்கள்(Statistics) நிறைய உள்ளன.
2. தேள் கடி குறித்த புள்ளி விபரங்கள் முறையாக சேகரிக்கப்படாததால் இது குறித்து விழிப்புணர்வு அதிகம் இல்லை.