இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Monday, June 30, 2008

தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 500 மாணவர்களின் ஜாதி என்ன

தமிழகத்தில் 04.07.2008 முதல் மருத்துவ படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நடக்கவுள்ளது

இதன் பொருட்டு சென்னை கீழ்ப்பாக்கம், 162, பெரியார் சாலையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள கலந்தாய்வு பட்டியலிலிருந்து முதல் 500 மதிப்பெண் பெற்றவர்கள் எந்த வகுப்பு என்று என்று பார்த்தால்

தர வரிசையில் முதல் 500 மாணவர்களில்
  • முற்பட்ட வகுப்பினர் - எப்.சி - 55 மாணவர்கள்
  • பிற்படுத்தப்பட்டவர்கள் - பி.சி - 293 மாணவர்கள்
  • கிருத்தவர்கள் - பி.சி.சி - 29 மாணவர்கள்
  • முஸ்லிம்கள் - பி.சி.எம் - 20 மாணவர்கள்
  • மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - எம்.பி.சி - 70 மாணவர்கள்
  • அட்டவனை வகுப்பினர் - எஸ்.சி - 32 மாணவர்கள்
  • பழங்குடியினர் - எஸ்.டி - 1 மாணவர்கள்
ஆக
  • முற்பட்ட வகுப்பினர் - எப்.சி - 11 %
  • பிற்படுத்தப்பட்டவர்கள் - பி.சி - 58.6 %
  • கிருத்தவர்கள் - பி.சி.சி - 5.8 %
  • முஸ்லிம்கள் - பி.சி.எம் - 4 %
  • மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - எம்.பி.சி - 14 %
  • அட்டவனை வகுப்பினர் - எஸ்.சி - 6.4 %
  • பழங்குடியினர் - எஸ்.டி - 0.2 %
பதிவு சிறிது என்றாலும் மறுமொழிகளில் பல கருத்துக்கள் உள்ளன. படித்து விட்டு உங்கள் கருத்தை கூறுங்களேன்

Wednesday, June 25, 2008

பொன்னியின் செல்வனில் நந்தினி-வீரபாண்டியன் உறவும் பக்கவாட்டு சிந்தனையும்

நான் அரசு பணியில் சேர்ந்த புதிதில் நடந்த மேலாண்மை வகுப்பு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி

ஒரு சிறு சூழ்நிலை : நீங்கள் ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் செல்கிறீர்கள். லேசாக மழை தூறிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது பேரூந்து நிறுத்தத்தில் மூன்று நபர்கள் பேரூந்திற்காக காத்திருக்கிறார்கள்.
  1. உங்கள் உயிர் நண்பன் (அல்லது தோழி) ஒரு வேலைக்காண நேர்முகத்தேர்வு செல்ல வேண்டும்
  2. நீங்கள் கடலை போட நினைத்திருக்கும் / காதலிக்கும் நபர் வீட்டிற்கு செல்ல வேண்டும்
  3. மூச்சு விட சிரமப்படும் உங்களுக்கு அறிமுகமில்லாத முதியவர் ஒருவர் – அவர் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
நீங்கள் உங்கள் இரு சக்கர வாகனத்தில் யாரை ஏற்றி செல்வீர்கள்.

எது முக்கியம்
  1. நட்பா
  2. காதலா
  3. அறிமுகமில்லாத முதியவரின் உயிரா
பலரும் பல விடைகளை கூறி அதற்கான காரணத்தையும் கூறினார்கள்.

நான் கூறிய விடை : இரு சக்கர வாகனத்தை நண்பனிடம் அளித்து அந்த முதியவரை மருத்துவமனையில் சேர்த்த பின் நேர்காணலிற்கு செல்ல கூறிவிட்டு, கடலை போட நினைத்திருக்கும் பெண்ணுடன் சேர்ந்து பொடி நடையாக நடப்பேன்

இதைத்தான் பக்கவாட்டு சிந்தனை என்று அழைக்கிறார்கள்.

இதில் உள்ள நீதி என்னவென்றால் :
  1. ஒரு புதிருக்கு ஒரு விடைதான் இருக்க வேண்டும் என்பதில்லை
  2. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை என்று தோன்றும் இரு விடயங்கள் கூட ஒரே விடையில் வரலாம் - நீங்கள் நேராக யோசிக்காமல் பக்கவாட்டில் யோசித்தால்
சரி, இப்பொழுது விடயத்திற்கு வருவோம்

பதிவர் தமிழ் பிரியன், தனது இது என்னோட இடம். வலைப்பதிவில் கடந்த சில நாட்களாக பொன்னியின் செல்வன் குறித்த சில பார்வைகளை பதிந்து வருகிறார்
இதில் அவரது மூன்றாவது இடுகையில் நான் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தேன்
தனது தந்தை யாரென்று நந்தினிக்கு எப்பொழுது தெரியும். வீரபாண்டியனின் மரணத்தின் பின்னாலா, அல்லது நந்தினி வீரபாண்டியனை முதலில் சந்திக்கும் முன்னரேவா ??
அதற்கு வந்த பதில்
கதைப் போக்கின் படி பார்த்தால்,பழுவேட்டரையரைத் திருமணம் செய்து தஞ்சை அரன்மனைக்கு வந்தபின்பே அவளுக்குத் தெரியவர வாய்ப்புகள் இருக்கின்றன...
அப்படி என்றால், பக்கவாட்டு சிந்தனை படி தனது தந்தையையே (தந்தை என்று தெரியாமல்) நந்தினி காதலித்திருக்க வாய்ப்பு அதிகம் :) :) :)

மேலும் எலக்ட்ரா காம்ப்ளக்ஸ் என்று ஒன்று உள்ளது. !!! எந்த பெண்ணுக்கும் தனது தந்தையை போன்ற ஆணையே ஆழ்மனதில் பிடிக்கும் . எனவே வீரபாண்டியன் தன் தந்தை என்று தெரியாத பட்சத்தில் நந்தினி அவரை காதலித்திருக்க வாய்ப்பு அதிகம். (இது குறித்து ஆல்பா ஆண் என்றெல்லாம் பல கருத்துக்கள் உள்ளன

அது போல் வீரபாண்டியனுக்கும் நந்தினி தன் மகள் என்று தெரியாது. தனது முதல் மனைவி / முன்னாள் காதலி சாயலில் இருக்கும் பெண்ணை ஒரு ஆண் விரும்புவது என்பது இயல்பே. இருவர் படம் பார்த்திருக்கிறீர்களா. அதில் ஏன் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு இரு வேடங்கள் என்றும் மணிரத்னம் என்ன சொல்ல வருகிறார் என்று யோசித்து பார்த்திருக்கிறீர்களா ??

எனவே, இவர் தான் தந்தை என்று மகளுக்கும், இவள் என் மகள் என்று தந்தைக்கும் தெரியாத பட்சத்தில் இருவருக்கும் இடையில் காதல் வருவதென்பது மிகவும் இயல்பான சம்பவம். (தெரிந்தே காதலித்த ஜோடி பற்றி ஆதாரம் காட்டி எழுதினால் விவாதம் மத ரீதியாக திசைமாறிவிட வாய்ப்புள்ளது என்பதால் தவிர்த்திருக்கிறேன்)

10ஆம் நூற்றாண்டில் ஒரு 40 வயது ஆணும் 18 வயது பெண்ணும் காதலிப்பது அரிதல்லவே... அதுவும் அரச குடும்பத்தில் :) :) :)

எனவே நந்தினிக்கும் வீரபாண்டியனுக்கும் உள்ள உறவு
  • தந்தை – மகள் அல்லது காதலன் – காதலி என்று தான் இருந்திருக்க வேண்டும் என்பது இல்லை
  • தந்தை – மகள் மற்றும் காதலன் – காதலி என்று என்று கூட இருக்கலாமே (பக்கவாட்டு சிந்தனை படி)
-
ஒரு உறவு இருப்பதாலேயே அடுத்த உறவு சாத்தியமில்லை என்று நினைக்காமல் பொன்னியின் செல்வனை படித்தால் நான் கூறும் சாத்தியக்கூறு இருப்பது புலப்படும். பொன்னியின் செல்வனை படிக்க அமரர் கல்கியின் எழுத்துக்கள் அனைத்தையும் திரட்டி வைத்துள்ள கீழ்க்கண்ட தளத்திற்கு செல்லுங்கள். (தளம் வடிவமமைத்தவருக்கு கல்கியின் ரசிகர்கள் மற்றும் அனைத்து தமிழர்கள் சார்பாக நன்றி)

http://yogeshmsc.googlepages.com/kalkinovels.html


முழுவதும் படிக்க நேரமில்லாவிட்டால், பக்கவாட்டு சிந்தனையுடன் தமிழ்பிரியனின் இடுகைகளை ஒரு முறை மீண்டும் படிக்கவும். சுட்டி இந்த இடுகையின் நடுவில் உள்ளது

Saturday, June 21, 2008

தசாவதாரம் படத்தில் கலைஞராகவும் பிரதமராகவும் நடித்திருப்பது யார் ??

தசாவதாரம் படத்தில் கலைஞராகவும் பிரதமராகவும் நடித்திருப்பது யார் என்று வலைப்பதிவர்கள் யாருக்காவது தெரியுமா.

புரட்சித்தலைவியின் உண்மை படக்காட்சி உபயோகப்படுத்தப்பட்டிருக்க, அதே போல் கலைஞரும் பிரதமரும் மேடையில் தோன்றும் காட்சிகளா கிடைக்காது ??? எதற்கெல்லாமோ உபயோகப்படுத்தப்பட்ட கணனி கிராபிக்ஸை இதற்கும் உபயோகித்திருக்கலாமே.

சரி, எதற்கு இந்த வெட்டி ஆராய்ச்சி என்கிறீர்களா.

தசாவதாரமா, டஜனவதாரமா என்று ஒரு சிறிய சந்தேகம் தான் :) :) :)

யாரிடம் கேட்டால் சரியாக தெரியும் :) :) :)

Thursday, June 19, 2008

மகாவிஷ்னுவின் பத்து அவதாரங்களும் கமலின் பத்து வேடங்களும் - ஒப்பீடு / ஒற்றுமை / வேற்றுமை

நேற்று இரவு ஒரு திரையரங்கில் தசாவதாரம் பார்க்கலாம் என்று தானியங்கி மூவுருளியில் கிளம்பி திரையரங்கின் பெயரை கூறியதிலிருந்து நான் இறங்கும் வரை மூவுருளி ஓட்டுனர் படத்தை சிலாகித்துக்கொண்டே வந்தார். தான் கமல் ரசிகன் அல்ல என்று வேறு கூறினார். அவர் மூவுருளியில் ஒட்டியிருந்தது வேறு ஒரு நடிகரின் படம். (ஏற்கனவே குறுஞ்செய்திகளில் துவைக்கப்படும் அவர் பெயர் வேண்டாமே)

அதே போல் படம் முடிந்து பகிர்வு மூவுருளியில் திரும்பும் பொழுது உடன் பேசிக்கொண்டிருந்தவர்களின் பேச்சிலிருந்து படம் பார்த்து அவர்கள் மிரண்டு போயிருந்தது தெரிந்தது. அந்த அளவு பொதுமக்களிடம் படம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இது குறித்து இறுதியில் விளக்கியிருக்கிறேன்

படத்தின் கதை மற்றும் பிற விஷயங்கள் பற்றி ஏற்கனவே பலரும் எழுதிவிட்டதால் நான் மறுபடியும் எழுத விரும்பவில்லை.

தசாவதாரம் படத்தில் வரும் பத்து கதாபாத்திரங்களுக்கும் மகாவிஷ்னுவின் பத்து அவதாரங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று சிந்தித்தால் தொடர்பு இருப்பது போல் தான் தெரிகிறது

மச்ச அவதாரம்? புஷ் ???
கூர்ம அவதாரம் ? நம்பி பட்டாம்பூச்சியின் விளைவுபடி கடலை கடைந்து சிலையுடன் வெளியே வருவதால்
வராக அவதாரம் பூவராகன் பெயரிலேயே வராகம் இருக்கிறது. மேலும் இவர் பூமி பற்றித்தால் அதிகம் பேசுகிறார்
வாமன அவதாரம் கலிப்புல்லா வாமணன் குள்ளம். கமல் மட்டும் அபூர்வ சகோதரர்கள் எடுக்க வில்லை என்றால் இந்த கதாபாத்திரம் குள்ளமாகத்தான் இருந்திருக்கும்
நரசிம்ம அவதாரம் அவதார் சிங் சிங் – சிங்கம்
பரசுராம அவதாரம் ஜப்பானியர் தற்காப்பு கலைகளில் ஒன்றான களரிக்கு பரசுராமர். கராத்தேக்கு ஜப்பானிய கமல்
ராம அவதாரம் கோவிந்த ராமசாமி பெயர் மற்றும் ஹனு என்னும் குரங்கு
பலராம அவதாரம் பலராம நாயுடு பெயர்
கிருஷ்ன அவதாரம் கிருஷ்னவேணி பாட்டி பெயர்
கல்கி அவதாரம் ? ப்ளெட்சர் அழிவு. அனைத்தையும் அனைவரையும் அழிக்கிறார். இறுதியில் தன்னைத்தானே


படத்தில் கதாநாயகன்(கள்), வில்லன், குணசித்திர நடிகர், குணசித்திர நடிகை, நகைச்சுவை நடிகர் என்று கமல் எல்லா வேடங்களிலும் நடித்துவிட்டார்.

பார்ப்பதற்கு எளிது போல் தோன்றினாலும் பல இடங்களில் இரண்டுக்கு மேற்பட்ட கமல் ஒரே காட்சியில் வருகிறார்கள். இதை படம்பிடிப்பதற்குள் முதுகு உடைந்திருக்கும்.

கதாநாயகன் 1 : ரங்கராஜன் நம்பி : அனைவரையும் இக்கதாபாத்திரம் கவர்ந்திருக்கும். ஆனால் இவருக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம என்பது எத்தனை பேருக்கு புரியும் என்பது சந்தேகமே . இவரின் மனைவியும், ஆண்டாளும் ஏன் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதும் கேள்விதான்:) (இந்திரா சௌந்திரராஜன் கதையில் கடைசில் எது நிஜம் என்று முடியுமே. அது போல் தான் :) :) ) இவர் எந்த அவதாரத்துடன் ஒத்து போகிறார் என்று உறுதியாக கூற முடியவில்லை. என்றாலும் கடலை புரட்டும் சுனாமிக்கு “பட்டாம் பூச்சி விளைவின்படி” இவர் காரண கார்த்தா ஆவதால் இவரை கூர்ம அவதாரத்துடன் ஒப்பிடலாம்.

கதாநாயகன் 2 : கோவிந்து ராமசாமி : ஓடுகிறார். ஓடுகிறார், மேலிருந்து கீழே விழுகிறார், மீண்டும் ஓடுகிறார். தொடர்வண்டியில் ஏறுகிறார். மீண்டும் ஒடுகிறார். ஓடுகிறார். கதாநாயகன் ஓடினால் தான் படம் ஓடும் என்பது கில்லியிலிருந்து ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கு. முகத்தில் அதிகம் ஒப்பனை யில்லாததால் (அல்லது ஒப்பனை தெரியாததால்) இவரை பார்க்க முடிகிறது. கமல் தனது பல சொந்த கருத்துக்களை வெளிபடுத்த இக்கதாபாத்திரத்தை உபயோகப்படுத்தி விட்டார். உதாரணம் . ”அப்பா ராமசாமி”, ”கலைஞர்” ”பணத்தின் மொழி - Language of Money" போன்ற அன்பே சிவத்தில் ஆரம்பித்த பொதுவுடமை பிரச்சாரம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் உறுத்தாமல் இக்கதாபாத்திரத்தின் மூலம் தொடர்கிறது.

தப்பித்து போன் குரங்கு மூலம் எய்ட்ஸ் நோய் பரவியிருக்கலாம் என்ற பொருள்பட வரும் வசனத்தை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

கோவிந்து என்பதால் இவரை கிருஷ்ணருடம் ஒப்பிடலாம் என்று தோன்றினாலும், இவரின் முழுப்பெயர் கோவிந்து ராமசாமி என்பதாலும், இவருடன் அனு (அல்லது ஹனுவா ??) என்ற ஒரு குரங்கு (வானரம்) இருப்பதால் இவரை ராமர் எனலாம்

வில்லன் : ப்ளெட்சர் : படம் பார்ப்பதற்கு முன் விமர்சணம் அல்லது பிற தகவல்களை படிக்காவிட்டால் இது கமல் என்று பல காட்சிகள் கடந்த பின் தான் கண்டுபிடித்திருக்க முடியும். விக்ரம், சூரசம்ஹாரம், காக்கி சட்டை ஆகிய படங்களில் கமலிடம் இருந்த அதே சுறுசுறுப்பை, உடல் மொழியை பார்க்க முடிந்தது. ஆனாலும் ஒப்பனை என்று இல்லாமல் ஒரு முகமுடி அணிந்தது போல் தோன்றுவது தான் மகா எரிச்சல். (2 முதல் 3 செமி அளவு ஒப்பனை செய்தால் என்னவாகும்). படத்தை பற்றி பலரும் எதிர்மறையாக விமர்சித்ததற்கு கண்டிப்பாக இந்த ஒப்ப்னை ஒரு காரணம் என்று நினைக்கிறேன். கமலே நடித்ததற்கு பதில் ரஜினி (அல்லது அஜித்) நடித்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கூறுங்களேன். இவரை கல்கி அவதாரத்துடன் ஒப்பிடலாம்

குணசித்திர நடிகர் 1 : பலராம நாயுடு : இந்திய உளவுத்துறை அதிகாரி : பலரையும் கவர்ந்த கதாபாத்திரம். வசனங்கள் அனைத்தும் கூர்மை
தெலுங்கு காரன் நான் தமிழ் பேசுறேன். தஞ்சாவூர்காரன் நீ ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறாய்
மடம் னா - தப்பு நடக்காதா
நகைச்சுவை வசனங்களும் உண்டு
அழகிய சிங்கர் - மடோனாவா
ராவும் ராவும் ராவோட -
பெயரில் பல்ராம் இருப்பதால் ஒப்பீடு சிரமமில்லை. பல விதங்களில் இக்கதாபாத்திரம் திருடா திருடாவில் எஸ்.பி.பி நடித்த கதாபாத்திரத்துடன் ஒத்து போவதாக எனக்கு தோன்றியது

குணசித்திர நடிகர் 2 : வின்செண்ட் பூவராகன் : சமுக போராளி : இவர் பேசுவது நெல்லை / குமரி மாவட்ட தமிழ். ஆனால் கதை நடப்பதோ சிதம்பரம் முதல் சென்னை வரை உள்ள இடங்களில் தான். ஏன் இதை கோட்டை விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை குமரி மாவட்ட போராளி செங்கல்பட்டில் மண் அள்ளுவதை தடுக்க போராடியிருக்கலாமோ ?? அதை போல் அந்த உச்சரிப்பு வேறொரு சமுகத்தின் உச்சரிப்பு (சாமி திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா)

உலக நாயகன் வசனத்தை கமல் தவிர்த்திருக்கலாம்.

அதை தவிர மீதி அனைத்து வசனங்களும் சாட்டையடி. இதுவும் அன்பே சிவத்தின் தொடர்ச்சி போல் தான் தெரிந்தது.

வசனம் தவிர கண்களாலேயே பேசுவதற்கு கமலுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.

பெயரில் வராகம் இருப்பதாலும், மண் சம்மந்தப்பட்டிருப்பதாலும் இவரை வராக அவதாரத்துடன் ஒப்பிடலாம்.

குணசித்திர நடிகர் 3 : அவதார் சிங் : பாடகர் : பெயரில் சிங் வருவதால் இவ்ரை நரசிம்ம அவதாரம் எனலாம். மற்றபடி இக்கதாபாத்திரத்தை கமல் தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால், கமல் சிறப்பாக செய்திருந்தார். ஒப்பனை உறுத்தவில்லை. தொழிலை விட குடும்பம் பெரிது என்று செய்தி சொல்ல கமல் இத்தருணத்தை பயன் படுத்திக்கொண்டார் என்று நினைக்கிறேன்.

குணசித்திர நடிகர் 4 : கலிபுல்லா : உயர மனிதர். கமல் தவிர்த்திருக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம். முகத்தில் ஒப்பனையில்லாமல் வெறும் உயரத்துடன், (மீசையில்லாமல்) தாடி , குல்லாவுடன் வந்திருந்தால் கூட பார்த்திருக்க முடியும். சுமார் 1 இன்சு அளவு ஒப்பனையுடன், பார்க்க “சகிக்கவில்லை” என்பதே உண்மை. கமல் அவர்களே.... இந்த கதாபாத்திரத்தை பொருத்த வரை நீங்கள் ஒப்பனையிடவில்லை, ஒரு முகமூடி அணிந்திருந்தீர்கள். தயவு செய்து இது போன்ற முகமூடி முயற்சிகளை விட்டு விடுங்கள். நீங்கள் அணிந்த முகமுடியினால் நீங்கள் கஷ்டப்பட்டு பேசியது கவனிக்கப்பட்டிருக்காது.

இவரை வாமண அவதாரத்துடன் தொடர்பு படுத்தலாம்.

நான் தற்பொழுது குடியிருந்து வரும் விடுதியின் நிர்வாகி ஒரு பட்டானி முஸ்லிம். அவருடன் பேசும் பொழுது அந்த வித்தியாசமான் சொற்களையும், ஒலியமைப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன். ஏன் இதை (இந்த வகை தமிழை) யாரும் மிமிக்ரியில் முயற்சிக்கவில்லை என்று பல நேரம் யோசித்திருக்கிறேன்.

படத்தில் கமல் அந்த சொற்களையும், மாடுலேஷன்களையும் அருமையாக செய்திருப்பார். ஆனால் அந்த முகமூடி அனைத்தையும் மறைத்து விட்டது.

குணசித்திர நடிகை : கிருஷ்ணவேனி பாட்டி: ப்ளெட்சர், உயர மனிதன், புஷ் போன்ற அளவு மோசமான ஒப்பனை இல்லை யென்றாலும்அவ்வை சண்முகி பார்த்தவர்கள் இந்த பாட்டிக்கு 40 மதிப்பெண்கள் தான் தருவார்கள். இதை விட ஹே ராமில் வரும் தாத்தா நன்றாக இருந்ததாக ஞாபகம். இந்தியனுக்கு ஒப்பனை செய்தவர் என்னவானார் ?? இவருக்கும் ஜப்பானிய கமலுக்கும் ஒப்பனை ஒருவர் என்றால் நம்புவது சிரமம் தான். இவர் கிருஷ்ண அவதாரம் தான் என்று நினைக்கிறேன்.

சண்டை நடிகர் : ஷின்கன் நரஹசி,ஜப்பானியர் : இவரின் ஒப்பனை உறுத்தாது ஒரு ஆச்சரியமே. இவர் ஜப்பானியர் அல்ல என்று நம்புவதே சிரமம் தான். ரஜினியை தொடர்ந்து கமலும் ஜப்பனிய சந்தையை குறிவைக்கிறாரோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. ஜப்பானியர்கள் எப்படி பேசுவார்கள் என்று தெரியவில்லை. அதனால் என்னால் ஒப்பீடு செய்ய முடியவில்லை. ஆனால் அவர்களின் நடையை பல முறை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம். அது ஒரு விதமான shuffling gait (இது போல் goorkha gait, sailor gait எல்லாம் கூட உண்டு) என்பார்கள். இவர் வந்த பெரும்பாலான காட்சிகளில் கராத்தே தான் என்றாலும் ஒரு காட்சியில் (காவல் நிலையம் என்று நினைக்கிறேன்) ஒரு ஜப்பானியரை போல் கமல் நடந்தது அவர் இந்த படத்திற்கு எவ்வளவு உழைத்திருக்கிறார் என்று காட்டுகிறது. (இந்தியன் தாத்தாவும் இது போல் தான் நடப்பார்.)

இறுதியில் வரும் ப்ளெட்சர் - ஜப்பானியர் சண்டை அற்புதம். ஒரே நடிகர் மூன்று வேடங்களில் நடித்து , அந்த மூவரும் சண்டையிடுவது, அதுவும் மூவரும் மூன்று முறைகளில் (ஜப்பானியர் -கராத்தே, ப்ளெட்சர் - தொழில் முறையில், கோவிந்து - சண்டை பற்றி எதுவும் தெரியாமல் சும்மா முரட்டுதனமாக) என்பது எளிதான விஷயம் அல்ல. கமல் இக்கதாபாத்திரத்தில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும்.

இவரை (தற்காப்பு கலையான கராத்தே நிபுனரை) பரசுராமருடன் (தற்காப்பு கலையான களரி) ஒப்பிடலாம். ( இவர் பெயரில் நர என்று வருவதால் நரசிம்மர் என்று சிறு குழப்பம் வரலாம்)

நகைச்சுவை : ஜார்ஜ் புஷ் : இதை விட ஜனாதிபதி புஷ்ஷை கேவலப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. இப்படி ஒரு படம் எடுத்து விட்டு அதை புஷ்ஷிடம் போட்டு காட்டுவதாவது. எனக்கென்னவோ புஷ் படம் பார்க்கிறார் என்ற செய்தியும் சந்தைப்படுத்துதலின் ஒரு அங்கம் என்றே நினைக்கிறேன். மற்றபடி, இங்கும் (உயர மனிதர், ப்ளெட்சரை போல்) ஒப்பனை கைவிட்டுவிட்டது. புஷ்ஷின் வசங்களில் உள்ள “உள்குத்து” புரியாதவர்களுக்கு வெறுப்பு வந்திருக்கும்

அனுஆயுதத்தை உபயோகிக்கலாமா என்று புஷ் கேட்பதும், Na Cl என்றால் என்னவென்று கேட்பதும், ”சிக்கலானது (காம்ளிகேட்டட்) என்றால் விட்டு விடுங்கள்” என்று சொல்வதும் கடைசியில் மேடையில் ஆடுவதும்..... இதை விட புஷ் எதிர்ப்பாளர்களுக்கு வேறு சிறந்த தமிழ் படம் கிடையாது என்பது உறுதி :) :) :)

உங்களுக்கு எப்படியோ தெரியாது. புஷ் பேசும் ஒவ்வொரு வசனமும் எனக்கு செந்தில் கவுண்டமனியிடம் பேசிய வசனங்களை ஞாபகப்படுத்தியது
Na Cl என்றால் என்ன - அண்ணே, மேண்டில்னா என்னன்ணே :) :)
அனுஆயுதத்தை உபயோகிக்கலாமா - பூச்சி மருந்து அடித்தால் மிட்டாயில் உள்ள பூச்சிலாம் செத்துரும்ல
வேறு எதிலும் பொருந்தாததால் இவரை மச்ச அவதாரத்துடன் ஒப்பிட வேண்டியது தான்

ஒரறிவு, ஈரறிவு, மூன்றறிவு... ஆறறிவு என்று வருவதில், மீன், ஆமை, வராகம், சிங்கம், மனிதன், என்று பார்த்தால் மச்சத்திற்கு தான் அறிவு கம்மி என்று நினைக்கிறேன் :) :) :)

மேலே கூறியதற்கு தவிர என்னை கவர்ந்த சில காட்சிகள் (வரிசைப்படுத்த வில்லை) இவை என்னை கவர்ந்ததற்கு எனது தனிப்பட்ட சில பல அனுபவங்கள் காரணமாக இருக்கலாம். எனவே இக்காட்சிகள் அனைவருக்கும் புரிந்திருக்கும் / பிடிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல
  1. வெளிநாட்டினரை வரவேற்கிறேன் என்று மாலை போட்டு கையில் இளநீரை கொடுக்கும் கொடுமை இன்று வரை இங்கு தமிழ்நாட்டில் (முக்கியமாக அரசு அலுவலகங்களில்) நடந்து கொண்டிருக்கிறது) படத்தில் பல்ராம் அமெரிக்க அதிகாரிகளை விமான நிலையத்தில் மாலை போட்டு வரவேற்று இளநீர் தருவது போல் ஒரு முறை ஒரு அரசு மருத்துவமனைக்கு வந்த வெளிநாட்டு நிபுணர்களுக்கு நம் ஆட்கள் மாலை போட்டு இளநீரை வெட்டி தந்ததும் அதன் பின் நடந்த கூத்துக்களும், அந்த அதிகாரிகளுடன் (அலுவல் ரீதியாக) சென்ற நான் (என்ன செய்வது / எப்படி சமாளிப்பது என்று தெரியாமல்) முழித்த முழியும் எளிதில் மறக்க கூடியதில்லை
  2. சுனாமியை பார்த்து பலராம், ஆண்டாள், கோவிந்து எல்லாரும் சும்மா ஓடும் பொழுது, ஜப்பானியர் மட்டும் “சுனாமி” என்று கத்தியபடி ஒடுவார். 2004ம் வருடம் தமிழகத்தில் கமலையும் மேலும் ஒரு ஆயிரம் நபர்களை தவிர வேறு யாருக்கும் சுனாமி என்றால் என்னவென்று தெரிந்திருக்காது. அந்த ஆயிரத்தில் கூட பலர் (என்னைப்போல்) 2003ல் அன்பே சிவம் பார்த்து விட்டு “என்னடா இவர் தனுஷ்கோடி பத்தி புதுசா சொல்லாரே” என்று தேடி படித்தவர்களாகத்தான் இருப்பார்கள்
  3. சிலையை பெயர்த்து எடுத்து அதை வண்டியில் ஏற்றுவதும், பின்னர் படகில் ஏற்றுவதும் நெம்பு கோல் தத்துவத்தின் படி செய்யப்பட்டது. இப்படி தான் பிரமிடுகளையும், நம் ஆலயங்களையும் கட்டி யிருப்பார்கள்
  4. அமெரிக்க அதிபரின் ஓவல் அறையின் தரைவிரிப்பில் அமெரிக்க சின்னம் இருக்கும். இது குறித்து ஒரு ஆங்கில புத்தகத்தில் விரிவாக கூறப்பட்டிருக்கும். அந்த கருடனுக்கும், படத்தின் முதல் பத்து நிமிடங்கள் வரும் கருடனுக்கும் சொல்லாமல் ஒரு தொடர்பை ஏற்படுத்தியது.
  5. முதலில் அசின் தற்கொலை செய்யும் கல், பின் அசின் ஓடும் பொழுது அவர் காலை தடுக்குவது.

படம் குறித்த என் மதிப்பீடு

+
கதை
நடிப்பு (முகம் காட்டும் / முகமூடி அணியாத பாத்திரங்கள் மட்டும்)
ஒளிப்பதிவு
படத்தொகுப்பு
கணினி தொழிற்நுட்பம்


+/-
இசை
திரைக்கதை

-
ஒப்பனை
ஆண்டாள் கதாபாத்திரம்


தசாவதாரம் சமீபங்களில் வந்த கமல் படங்களை விட (மும்பை எக்ஸ்பிரஸ், வேட்டையாடு விளையாடு) “நன்றாக” இருக்கிறதோ இல்லையோ (அது அவரவர் பார்வையை பொருத்தது), ஆனால் பொது மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்றிருப்பது (பொதுமக்கள் திரைப்படம் பார்த்த பின் சொல்லும் கருத்து – ஊடக எதிர்பார்ப்பு அல்ல) கண்கூடாக தெரிகிறது.

இறுதி கருத்து

பல வருடங்களாகவே கமல் தனக்காக சில படங்களை (குணா, ஹே ராம், ஆளவந்தான், அன்பே சிவம்) எடுப்பார். அந்த படங்கள் அவருக்கு மட்டுமே 100 சதம் புரியும். இந்த படங்கள் ஏ செண்டரில் கூட ஒழுங்காக ஒடாது. படத்தின் 80 % புரிவது தமிழ் நாட்டில் ஒரு 10,000 பேர் தாண்டாது. அந்த 10,000 பேருக்கும் ஒருவருக்கு புரிவது மற்றவருக்கு புரியாது. உதாரணமாக எனக்கு அன்பே சிவம் புரிந்தது (பொருளாதாரம் பற்றி சில நூல்கள் படித்திருந்ததால்), ஹேராம் புரிந்தது (வரலாற்றில் இருக்கும் தனிப்பட்ட ஆர்வத்தால் பல நூல்கள் படித்திருந்ததால்), ஆளவந்தான் புரிந்த்து (Agent Host Environment என்ற Epidemiological Triad தெரியும் என்பதால்), பள்ளிப்பருவத்தில் பார்த்த குணா புரியவில்லை , விருமாண்டி புரியவில்லை.

பிறகு ஜனரஞ்சகமான சில படங்களை (அவ்வை சண்முகி, தெனாலி, மைக்கேல் மதன காமராஜன்) எடுப்பார். இது பி மற்றும் சி செண்டர்களுக்காக மற்றும் ஏ செண்டரில் உள்ள அந்த 10,000 தவிர்த்த பிறர்க்காக :)

தசாவதாரத்தில் கமல் சாதித்திருப்பது என்னவென்றால்
  • அவருக்கே உரித்தான பட்டாம் பூச்சி விளைவு, தப்பித்து போன குரங்கிலிருந்து ஏய்ட்ஸ் பரவியதா என்ற விவாதம், பணத்தின் மொழி, புஷ் நக்கல், சைவ - வைணவ சண்டை என்று ஒரு பக்கம் இருக்க
  • மணல் கொள்ளை, சுனாமி, பாடல், துரத்தல், மடம், ஹெலிகாப்டர், ஜப்பானியர் - ப்ளெட்சர் சண்டை, கத்தியை வைத்து கொல்வது, என்று பி மற்றும் சி பிரிவுகளுக்கு வேண்டிய அனைத்து மசாலா சமாசாரங்களையும் இணைத்து விட்டார்.
தமிழ் நாட்டில் திரைப்படம் பார்ப்பவர்களில் 80 சதவிதத்தினருக்கு என்னவெல்லாம் தேவையோ அவையெல்லாம் பட்டாம்பூச்சி விளைவு குறித்து பேசும் அதே படத்தில் இருக்கிறது - பட்டாம் பூச்சி விளைவு என்னவென்று புரியாவிட்டாலும் கூட (அது போல் காட்சிகள் வரும் 15 நிமிடங்களை தவிர்த்து விட்டு) அவர்கள் பலராம் நாயுடுவை ரசிக்கிறார்கள். அதனால் தான் திரைப்படம் முடித்து வரும் பி மற்றும் சி செண்டர் ரசிகர்கள் யாரும் “படம் புரியவில்லை” என்று கூற வில்லை.

ஆனால் கமல் சிரீயஸ் படம் எடுத்தால் சிரீயஸ் படம் மட்டும் தான் எடுப்பார் என்ற (தவறான) எண்ணத்தில் சென்றவர்கள் மட்டுமே முதல் 10 நிமிடங்களில் வந்த காட்சிகளை பார்த்து விட்டு மன நிலையை அதற்கேற்றாப்போல் மாற்றிவிட்டதால் ஒரு படா சீரியஸ் படத்தை (ஹேராம், விருமாண்டி போல்) எதிர்பார்த்து அதன் பின் 3 மணி நேரம் ஓடிய பக்கா மசாலா படத்தை தவற விட்டு விட்டார்கள் என்பது என் கருத்து.
---
தசாவதாரம் : மறு முறை பார்க்க வேண்டிய படம் :)
மேல் உள்ள படத்திற்கும், தசாவதாரம் திரைப்படத்திற்கும் சம்மந்தம் கிடையாது.
--

பிற்சேர்கை 1 : அவதாரங்கள் குறித்த பிற பதிவர்களின் கருத்துக்கள்
http://ottraiandril.com
http://idlyvadai.blogspot.com

மகாவிஷ்னுவின் பத்து அவதாரங்களும் கமலின் பத்து வேடங்களும் - ஒப்பீடு / ஒற்றுமை / வேற்றுமை

தமிழ் மண கருவிப்பட்டையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த இடுகை இங்கு மாற்றப்பட்டுள்ளது.

Monday, June 16, 2008

சூடான இடுகைகள் குறித்து சில்லென்று ஒரு பார்வை

நேற்று நடந்த சென்னைப்பதிவர் – தமிழ்மணம் நிர்வாகிகள் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட பல தலைப்புகளில் ஒன்று சூடான இடுகைகள் பற்றியது.

இது குறித்து எனக்கு தெரிந்த தகவல்களை எழுதுகிறேன்.

வழக்கமான டிஸ்கி : நான் கணினி கைநாட்டு (கம்ப்யூட்டர் இல்லிடரேட்) எனவே நான் கூறுவது தவறாக கூட இருக்கலாம்
-oOo-
ஒரு பதிவர் எழுதும் இடுகை மூன்று விதமாக படிக்கப்படுகிறது
  • நேரடியாக அந்த பதிவின் முகவரியை உலாவியில் உள்ளிடுவதன் மூலம். இதன் மூலம் நாம் html வடிவிலான பக்கங்களை படிக்கிறோம்.
  • செய்தியோடை (RSS Feeds) மூலமாக. ப்லாக்லைன்ஸ் (Bloglines), கூகிள் ரீடர் (Google Reader) ஆகியவற்றின் மூலமாக இப்படி படிக்கலாம்
  • திரட்டிகளின் மூலமாக - தமிழ்மணம், தேன்கூடு, திரட்டி, தமிழ்வெளி போன்றவை திரட்டிகளாகும்
இதில் சூடான இடுகை என்றால் என்ன

தமிழ்மணம் மூலம் - அதாவது தமிழ்மணத்தில் உள்ள பதிவின் (இன்னமும் சரியாக சொல்லவேண்டுமென்றால் இடுகையின்) சுட்டியை சுட்டி படிப்பது குறித்த ஒரு கணக்கே சூடான இடுகை யாகும்

ஒரு இடுகையை எத்தனை பேர் / எத்தனை முறை படிக்கப்பட்டது என்பது அல்ல சூடான இடுகையின் பின்புலம் - ஒரு இடுகையை எத்தனை முறை தமிழ்மண பக்கங்களில் உள்ள சுட்டிகளின் மூலம் படிக்கப்பட்டது என்பதே சூடான இடுகையின் பின்புலம்

மாற்றி சொல்ல வேண்டுமென்றால்

ஒரு இடுகை எப்படி உள்ளது என்பதை சூடான இடுகை கூறுவதில்லை
ஒரு இடுகை மொத்தமாக எத்தனை முறை படிக்கப்பட்டது என்பது சூடான இடுகை கூறுவதில்லை
ஒரு இடுகை தமிழ்மண பக்கங்களிலிருந்து எத்தனை முறை படிக்கப்பட்டது என்பதை மட்டும் தான் சூடான இடுகை தெரிவிக்கிறது
-oOo-
எந்த இடுகை தமிழ்மண பக்கங்களிலிருந்து பல முறை படிக்கப்படிகிறது
  • முகப்பில் உள்ள இடுகைகள்
  • மறுமொழிகள் கீழ் உள்ள இடுகைகள்
  • சூடான இடுகைகள் கீழ் உள்ள இடுகைகள்
  • வாசகர் பரிந்துரை கீழ் உள்ள இடுகைகள்
-oOo-

இப்பொழுது இதில் ஒரு இடுகை அதிகம் மறுமொழிகளை பெற்றால் (அதாவது முகப்பு பக்கத்தில் மறுமொழிகளின் கீழ் உள்ள செங்குத்துவரிசையில் என்னேரமும் இருந்தால்) அவ்விடுகையை படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மறுமொழி அளிக்க நினைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மறுமொழிகள் வந்தால் மீண்டும் அந்த இடுகை அதே செங்குத்துவரிசையில் இருக்கும் --> இவ்வாறான ஒரு ”நேர்மறை பின்னூட்ட விளைவு” நிகழ்கிறது

அதே போல் ஒரு இடுகை சூடான இடுகைகளின் கீழ் வந்தாலும், அதை அதிகம் பேர் படிக்க வாய்ப்புள்ளதால் இங்கும் அதே நேர்மறை பின்னூட்ட விளைவு நிகழ்வதால் அந்த இடுகை தொடர்ந்து சூடான இடுகையிலேயே இருக்கிறது
-oOo-
ஆனால் இவ்வாறாக வருவதற்கு முதலில் அந்த இடுகை முதல் முறை பலரால் படிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு நாளில் எழுதப்படும் சராசரி 400 இடுகைகளில் எந்த இடுகையை படிப்பது என்பதை ஒரு சராசரி வாசகர் முடிவு செய்வது மூன்று காரணிகளினால்
  • தமிழ்மண முகப்பில் தெரியும் தலைப்பு
  • முதல் 20 வார்த்தைகள் - இது அனைத்து இடுகைகளுக்கும் பொருந்தாது
  • பதிவு எழுதியவர் பெயர்
-oOo-

எனவே உங்களின் இடுகையை பலர் படிக்க வேண்டுமென்றால் --> அப்படி படித்து உங்களின் இடுகை சூடான இடுகையில் வர வேண்டுமென்றால் --> அப்படி வந்ததால் மேலும் பலர் படித்து மறுமொழி அளிக்க வேண்டுமென்றால் --> அப்படி அளிப்பதன் மூலம் மறுமொழி செங்குத்து வரிசையில் உங்கள் இடுகை வரவேண்டுமென்றால் --> அப்படி வருவதன் மூலம் மேலும் பலர் படித்து சூடான இடுகையிலேயே உங்கள் இடுகை தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால் செய்ய வேண்டியது என்ன

1. வசீகரிக்கும் தலைப்பு - இதை மட்டுமே பலரும் பிடித்துக்கொண்டு தலைப்பு வைக்க சிரமப்படுவதாக தோன்றுகிறது

2. முதல் 20 வார்த்தைகளில் நீங்கள் சொல்ல வந்த கருத்து என்னவென்று சொல்வது

3. மிக முக்கியமான ஆனால் பலருக்கும் தெரியாத (அல்லது தெரிந்து கொள்ள மறுக்கும்) விஷயம் “இவர் நல்ல எழுத்தாளர்” என்ற பெயரை பிற எழுத்தாளர்களிடம் வாங்குவது

ஒரு உதாரணம்
  • ”தசாவதாரம் பட விமர்சனமும் டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் கூத்தும்” என்ற இடுகையின் சுட்டியை நாம் சுட்ட அந்த தலைப்பை விட அதை எழுதிய வினையூக்கி என்ற பெயர் தான் முக்கியம். அந்த பதிவர் எழுதிய இந்த இடுகையை படிக்கலாம் என்ற எண்ணத்தை அளித்ததில் அவர் இது வரையில் எழுதிய பழைய இடுகைகளும் ஒரு காரணம் தானே
என்பது என் கருத்து

மேலும் ஒரு உதாரணம்
  • விடுபட்டவை 15 ஜூன் 2008 என்ற தலைப்பில் ஒரு இடுகை சூடான இடுகையில் இடம்பிடிப்பதற்கு காரணம் அந்த தலைப்பு அல்ல
  • விடுபட்டவை 15 ஜூன் 2008 என்ற தலைப்பில் ஒரு இடுகை சூடான இடுகையில் இடம்பிடிப்பதற்கு காரணம் அந்த இடுகையில் எழுதப்பட்டிருக்கும் விபரங்கள் அல்ல. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் தானே அந்த இடுகை படிக்கப்படுகிறது
  • விடுபட்டவை 15 ஜூன் 2008 என்ற தலைப்பில் ஒரு இடுகை சூடான இடுகையில் இடம்பிடிப்பதற்கு காரணம் - இது வரை வந்த விடுபட்டவை இடுகைகள் மக்களுக்கு பிடித்துப்போனதே ஆகும்.
தலைப்பு மட்டும் தான் நன்றாக இருக்கும். உள்ளே ஒன்று இருக்காது என்ற எண்ணம் ஒரு பதிவை பற்றி பொதுவில் ஏற்பட்ட பின், அந்த பதிவர் எவ்வளவு “அறை எடுத்து யோசித்து தலைப்பு வைத்தாலும்” யாரும் சீண்ட போவதில்லை.

முத்தாய்ப்பாக

சூடான இடுகை என்பது ஒரு திறம், தரம் (quality) சார்ந்த குறியீடு அல்ல. அது ஒரு எண்ணிக்கை (quantity) சார்ந்த விடயம் என்பது ஒரு வகையில் உண்மையென்றாலும், சூடான இடுகையில் இடம் பிடிக்கும் ஒரு இடுகை அதற்கு முந்தைய இடுகைகளின் தரத்தை வெளிப்படுத்துகிறது என்று கூறுவது தவறில்லை என்பது என் கருத்து. :) :) :)

வழக்கம் போல் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

Sunday, June 15, 2008

சென்னைப்பதிவர் – தமிழ்மணம் நிர்வாகிகள் சந்திப்பு 15-06-2008

இன்று (15-06-2008) சென்னையில், எல்டாம்ஸ் சாலையில் உள்ள பார்வதி சிற்றரங்கத்தில் (தமிழ் மொழிபெயர்ப்பு சரியா) மாலை 5:30 முதல் 8:00 மணி வரை பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது. இது குறித்த பிற பதிவர்களின் குறிப்புகள்
சந்திப்பு குறித்து என் பார்வையில்
  • தமிழ் மண நிர்வாகிகள் அனைத்து கேள்விகளுக்கும் மிகப்பொறுமையாக பதில் கூறினார்கள். சில கேள்விகள் பல முறை எழுப்பப்பட்டாலும் கூட.
  • ”திற மூலம்” போன்ற தமிழ் பதங்களை உறுத்தலில்லாமல் உரையாடலில் உபயோகித்தது மகிழ்ச்சியான செய்தி. கேம்பஸ் நேர்முகத்தில் தேர்வான அடுத்த நாளே ஷேக்ஸ்பியரின் அண்ணன் போல் நினைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் (அதுவும் தவறான இலக்கணத்துடன்) பேசுபவர்களின் மத்தியில் அமெரிக்காவில் வசித்தாலும் தமிழில் பேசியதற்காக ஒரு தனி பாராட்டு
  • என் வேண்டுகோள் 1 : தலைப்பை மாற்றும் வசதி, குறிச்சொற்களை மாற்றும் வசதி ஆகியவை தேவை என்பது என் வேண்டுகோள். எழுத்து பிழைகளுடன் பல குறிப்புகள், தலைப்புகளை தவிர்க்க இது உதவும். அது போல் வேண்டுமென்றே தவறான தலைப்பை அளித்து விட்டு, தட்டச்சு தவறு என்று தப்பிக்க முடியாது :) :) :)
  • என் வேண்டுகோள் 2 : அதே போல், தமிழ் மணத்தில் தேவைப்படும் வசதிகள் குறித்த ஒரு பக்கம் இருந்தால், அவரவருக்கு தேவை என்று தோன்றும் பொழுது அப்பக்கத்தில் ஒரிரு வரிகளை சேர்த்தால் பிறகு அதை தமிழ் மண நிர்வாகிகள் கொண்டு வர முயற்சிக்கலாம். அல்லது நான் கேட்கும் ஒரு வசதிக்கான நிரலை வேறு யாராவது பதிவர் ஏற்கனவே (வேறு எதாவது) தளத்தில் உபயோகித்திருந்தால் அதை கூட அளிக்க உதவும். மேலும் அது குறித்த தமிழ் மண நிர்வாகிகளின் பதில் அல்லது குறிப்பு அருகில் இருந்தால் நலம். உதாரணம்
    • பூங்கா - சனவரி 2009 முதல் வரும்.
    • தமிழ் மணம் வழங்கியின் கடவு சொல் என்ன - நிர்வாக காரணங்களுக்காக தர இயலாது. (உதாரணம் மட்டும் தான் :) :) :) )
    • பதிவர்கள் தங்களின் தலைப்பை மாற்ற வசதி - தொழில் நுட்ப காரணங்களுக்காக தற்சமயம் தர இயலாது. விரைவில் அளிக்க முயல்கிறோம்
    • முகப்பு பக்கம் மெதுவாக ஏற்றப்படுகிறது - வழு சரிசெய்யப்படுகிறது. விரைவில் வழு நீக்கப்படும்.
    • முகப்பு பக்கம் தானாக புதுபிப்பது இல்லை - 20-06-2008 அன்று சரி செய்யப்பட்டது.
  • என் வேண்டுகோள் 3: பதிவர்கள் அளிக்கும் குறிச்சொற்களுடன், தமிழ்மணமும் தனியாக குறிச்சொற்களை அளிக்க வேண்டும். அனைத்து இடுகைகளுக்கும் இல்லை என்றாலும், தசாவதாரம், தேர்தல், 20-20, ஒலிம்பிக்ஸ் போன்ற ந்டப்புகள் நடக்கும் பொழுது தமிழ் மணம் அந்த நிகழ்வுகள் குறித்த பதிவுகளை ஒன்றாக திரட்டி அது குறித்த அனைத்து இடுகைகளுக்கும் ஒரே பக்கம் அளிக்க வேண்டும். உதாரணமாக தசாவதாரம் என்ற இணைப்பை தட்டினால் தசாவதாரம் குறித்த அனைத்து பதிவுகளையும் படிக்க வேண்டும். இதற்கு எளிய வழி, பதிவர்கள் அனைவரும் “தசாவதாரம்” என்ற குறிச்சொல்லை பயன் படுத்துவது தான். ஆனால் இணையம் என்பது கட்டற்றது. யாரையும் கட்டு படுத்த முடியாது. எனவே பதிவர்களை செய்யச்சொல்வதை தவிர திரட்டி குறிச்சொற்கள், பகுப்புகள், துனை பகுப்புகள் செய்தால் நன்றாக இருக்கும். கீழ் தந்தது போல் ஒரு பக்கம் தமிழ்மணத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கூறுங்களேன்
    • அமெரிக்க அதிபர் தேர்தல்
      • முதல் சுற்று
        • குடியரசு கட்சி
        • ஜனநாயக கட்சி
      • இறுதி சுற்று
    • தசாவதாரம்
      • நிகழ்வுகள்
      • படப்பிடிப்பு
      • இசை விமர்சணம்
      • திரைப்பட விமர்சணம்
    • 20-20
    • +2 முடிவுகள்
  • சுட்டியை சுட்டியவுடன் அது குறித்த அனைத்து இடுகைகளும் வந்தால் நல்லது தானே :) :) :)
  • திரட்டி என்பதை “வாசிப்பது” (Reading) என்ற நிலையிலிருந்து “சேகரிப்பது” (Aggregation) என்ற தற்பொதைய நிலையையும் தாண்டி “மேற்கோள் காட்டுவது” (Reference) “வரலாற்றை பதிவு செய்வது” (History Time Line) என்ற நிலைக்கு எடுத்த செல்ல வேண்டும் என்பது என் ஆவல். இதற்கு தனியாக (துறைக்கு சிலர் என்ற வகையில்) தன்னார்வலர்களை சேர்த்துக்கொள்ளலாம்.
  • என் வேண்டுகோள் 4 : தொழில் நுட்ப அணி, நிர்வாக அணி, ஆசிரியர் அணி என்ற தனியாக இருக்க வேண்டும். ஒருவரே ஒன்றுக்கு மேட்பட்ட பொருப்பில் (தற்சமயம்) இருந்தாலும் குறைந்த பட்சம் மின்னஞ்சல் முகவரியாவது வேறாக இருந்தால் தான் பின்னர் வளர்ச்சியடையும் பொழுது ஈடு கொடுக்க முடியும்
  • என் வேண்டுகோள் 5 :இந்த வேண்டுகோள்கள் அனைத்து திரட்டிகளுக்கும் பொருந்தும். (சசி, குழலி, வெங்கடேஷ், ரவி - கேட்கிறதா)
  • என் வேண்டுகோள் 6 : தமிழ்மணத்தின் குறும்பதிப்பு (தமிழ் சொல் சரிதானா) செல்வதற்கான சுட்டி வலது புரம். உள்ளது. இது இடது ஓரம் மேல் இருந்தால் தான், பக்கம் ஏற்றம் செய்ய தாமதமானாலும் சுட்ட முடியும். அல்லது (சுட்டி எங்கிருந்தாலும்) சுட்டி (முழு பக்கமும் உலாவியில் ஏற்றப்படுவதற்கு முன்னதாகவே) முதலில் தெரியும் படி அதை நிரலில் கொண்டு வர வேண்டும். பக்கம் ஏற்றம் ஆக அதிக நேரம் எடுத்தால் முழு பக்கமும் ஏற்றப்படுவதற்கு முன்னதாகவே ஒருவர் குறும்பதிப்பு செல்ல வாய்ப்பு வேண்டும் தானே.

விடுபட்டிருக்கும் பதிவரின் பெயர்களை தயவு செய்து மறுமொழியில் கூறவும். கீழ் உள்ள படத்தில் மைக் வைத்திருப்பது தமிழ்சசி மற்றும் அவரருகில் அமர்ந்திருப்பது சொர்ணம் சங்கரபாண்டி








அதன் பின் அரங்கிற்கு வெளியேயும், அதன் பின்னர் அருகில் உள்ள உணவகத்திலும் விவாதங்கள் தொடர்ந்தன. அரங்கினுள்ளே தமிழ் மணம் பற்றி மட்டுமே பொதுவாக பேசப்பட்டது. அரங்கின் வெளியே விவாதிக்கப்பட்ட சில தலைப்புகள்
  • தமிழகத்தில் மறைந்து வரும் குடும்ப மருத்துவர்கள்.
  • மருத்துவர்களின் பற்றாக்குறை இருக்கும் அதே நாட்டில், ஏன் அதே ஊரில் மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பின்மையும் இருக்கும் முரண் ஏன் / எதற்கு / எப்படி
  • காவல் துறையின் ஆர்டர்லிகள்
  • கல்விகூட நடத்துவது குறித்த விதிகள்.
  • தமிழகத்தில் மூடப்படும் பள்ளிகள் / ஆரம்பிக்கப்படும் கல்லூரிகள்
  • இந்தியாவில் முனைவர் பட்டம் ஆராய்ச்சிக்கும் அமெரிக்காவில் முனைவர் பட்டம் ஆராய்ச்சிக்கும் என்ன வித்தியாசம் / எவ்வளவு வித்தியாசம்
  • தமிழக அரசியலும் ஜாதியும்

மொட்டை யுடன் இருப்பது இளவஞ்சி


உண்மைத்தமிழனும் பத்ரியும்

இடமிருந்து வலம் : செல்வம், லக்கிலூக், ஆசிப் மீரான், சுகுனா, பிராகாஷ்

Thursday, June 12, 2008

மழை பெயத போதும் பிசுபிசுக்காத சென்னை பதிவர் சந்திப்பு : 08.06.2008

கடந்த ஞாயிறு 08-06-208 மாலை சென்னை கடற்கரை காந்தி சிலை பின்னும், அருகில் உள்ள மரத்தின் கீழும் சென்னை பதிவர் சந்திப்பு இனிதே நடந்தது

இடையில் பெய்த மழையினால் அருகில் உள்ள மரத்தின் கீழ் அனைவரும் நின்ற நிமிடங்கள் மட்டும் “பதிவர் சந்திப்பு பிசுபிசுத்தது” என்று வேலை நிறுத்தம் குறித்து ஊடகங்கள் எழுதும் பாணியில் வலைப்பதிவில் தலைப்பு வைக்கலாமா என்று தெரியவில்லை. :) :)

நான் 5:45க்கு சென்ற போது, அங்கு பதிவர்கள் முரளிகண்ணன், லக்கி, ”தல” பாலபாரதி ஆகியோர் ஏற்கனவே வழக்கமான் இடத்தில் உட்கார்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் டோண்டு சாரும் வந்தார்.

அதன் பின்னர் மழை பிடித்தது, அனைவரும் அருகில் உள்ள மரத்தின் கீழ் ஒதுங்கியது, பின்னர் பழைய இடத்திற்கே வந்து பேசியது , நீண்ட நேரம் பேசியபின் வழக்கம் போல் தேநீர் அருந்திவிட்டு கிளம்பியது என்று மனதிற்கினிய சந்திப்பு
--
பதிவர் சந்திப்பு குறித்த அதிகார பூர்வ இடுகைகள், அனுபவ இடுகைகள் கேள்வி பதில் இடுகைகள் மற்றும் புகைப்படங்கள் பல இருப்பதால், விவாதிக்கப்பட்ட / பேசப்பட்ட சில விஷயங்களை குறித்த தகவல்களை மட்டும் தரலாம் என்று நினைக்கிறேன்
--
கில்லியில் தமிழ் பதிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தேவை என்று லக்கி கூறினார்
--
தமிழ்மணம் வகைப்படுத்துதல் மேலும் செழுமையடைய வேண்டும் - அதிக பகுப்புகளுடன் - என்று விவாதிக்கப்பட்டது
--
புதிதாக தமிழில் பதிவு எழுதுபவர்களுக்கு ஏற்படும் பகடிவதை (ரேக்கிங்) போன்ற அனுபவமும் அதனால் பலர் பின்னங்கால் பிடரியில் பட (வலைப்பதிவுகளை விட்டே) ஓடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது
--
சூடான இடுகைக்கு தலைப்பு முக்கியமல்ல - உதாரணம் விடுபட்டவை
--
பாஸ்டன் பாலா தனது பதிவிற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை குறித்து கூறினார்.
--
ஸ்டெல்லா புருஸ் இறந்த பின் அந்த செய்தி ஒரு நாளிதழில், ஸ்டெல்லா புருஸ் என்று இல்லாமல் அவரது இயற்பெயரில் வந்தது, ஸ்டெல்லா புருஸ் மரணமும், சுஜாதாவின் மரணமும் ஊடகங்களால் எப்படி பார்க்கப்பட்டது என்ற விவாதம் என்னை பாதித்தது
--
மீதி விபரங்கள் அடுத்த பதிவர் சந்திப்பு முடிந்த பின் மொத்தமாக எழுதுகிறேன்

Monday, June 09, 2008

சென்னையில் மருத்துவர்கள் மீது காவல்துறை தடியடி - பின்னனி பிரச்சனை என்ன ??

சென்னையில் இன்று மாலை மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் குறித்து அறிந்திருப்பீர்கள்.

ஆனால் பிரச்சனை என்னவென்று புரிந்திருக்காது (சாலை மறியலில் அமர்ந்தவர்களில் பலருக்ககே பிரச்சனை என்னவென்று தெரியுமா என்பது வேறு விஷயம்)

தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் படிப்பவர்கள், தனியார் கல்லூரிகளில் படிப்பவர்கள், உருசியாவில் படிப்பவர்கள் என்று சுமார் 2000 பேர் வருடம் தோறும் இளநிலை மருத்துவ படிப்பு (எம்.பி.பி.எஸ்) படித்து வெளியேறுகிறார்கள்

இதில் பட்ட மேற்படிப்பு (எம்.டி அல்லது எம்.எஸ்) படிப்பதற்கான இடங்கள் சுமார் 900. இதில் பாதிக்கு பாதி அனைத்திந்திய தேர்விற்கு அளிக்கப்படுவதால், தமிழக அரசு நடத்தும் பட்ட மேற்படிப்பு நுழைவு தேர்வின் மூலம் நிரப்பப்படும் இடங்கள் சுமார் 450 தான். இது குறித்து எனது பழைய இடுகைகளில் (கட்டாய கிராமப்புற சேவை குறித்த விபரங்கள்) சில தகவல்களை பார்த்திருந்தோம்

இந்த 450 இடங்களில் பாதி இடங்கள் அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு இடப்பங்கீடு மூலம் அளிக்கப்படும். மீதி 225 இடங்கள் பொதுவாக நிரப்பப்படும்

அதாவது

100 இடங்களில்
  • 50 இடங்கள் அனைத்திந்திய நுழைவு தேர்வு
  • 50 இடங்கள் தமிழக நுழைவு தேர்வு - இந்த 50 இடங்களில் 25 இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு மற்றும் 25 பொதுவாக
இப்பொழுது பிரச்சனைக்கு வருவோம்

இந்த வருடம் இப்படி நடந்த தேர்வுக்கான விளக்கக் குறிப்பேட்டில் (தமிழ் சொல் புரியவில்லை என்றால் கூறவும்) சில படிப்புகள் (தமிழக அரசுப்பணியில் அந்த துறைகளில் பற்றாக்குறை மிகவும் அதிகமாக இருப்பதால்) அரசு மருத்துவர்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசு பணியில் இல்லாதவர்களும் அந்த படிப்பு படிக்க வேண்டும் என்றால் அனைத்திந்திய நுழைவு தேர்வு மூலம் படிக்கலாம்.

இவ்வாறு அரசு மருத்துவர்களுக்கு மட்டும் சில படிப்புகள் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு எதிராக 21 மாணவர்கள் நீதிமன்றம் சென்றார்கள்.

அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுதே, முதல் கட்ட கலந்தாய்வு மூலம் இந்த 450 இடங்களில் பெரும்பாண்மை இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு விட்டன.

இன்று இரண்டாவது கட்ட கலந்தாய்வு மூலம் மீதி இடங்கள் நிரப்பப்பட இருந்தது

இன்று மதியம் சென்னை உயர் நீதி மன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பில் வழக்கு தொடர்ந்த 21 நபர்களும், அவர்களின் மதிப்பெண் மற்றும் வகுப்பு அடிப்படையில் அரசு மருத்துவர்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்ட இடங்களை பெறலாம் என்று வந்ததாக தெரிகிறது.

இது அரசு பணியில் இல்லாத (21 பேர் தவிர்த்த) மற்ற அனைவரையும் கடுப்படைய வைத்து விட்டது. யாராவது வழக்கு தொடர்வார்கள். சென்னைக்கு அலைவார்கள். காசு செலவழிப்பார்கள். வக்கீலை பார்ப்பார்கள். நீதிமன்றம் அலைவார்கள். தீர்ப்பு வந்த உடன் நாம் ஜாலியாக (புத்திசாலி தனமாக) அந்த தீர்ப்பின் பலனை அனுபவிக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு பெருத்த அதிர்ச்சியை அளித்ததால் பூந்த மல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் அமர்ந்து விட்டார்கள்




(படங்கள் என் அலைபேசியில் எடுத்தவை)

நான் விளக்கியது புரியவில்லை என்றால் ஒரு சிறு உதாரணம்

சென்னையில் எழும்பூர், கோயம்பேடு, செண்ட்ரல் ஆகிய இடங்களில் வாடகை சீருந்துகளும் வாடகை மூவுருளிகளும் இருக்கின்ற நிலையில், அரசு திடீரென்று எழும்பூரில் சீருந்து மட்டும் இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இதற்கு எதிராக 21 மூவுருளி ஓட்டுனர்கள் மட்டும் உயர்நீதிமன்றம் சென்று அவர்களுக்கு சாதகமான உத்தரவு வந்தால் பாதிக்கப்படும் சீருந்து ஒட்டுனர்கள் பார்த்துக்கொண்டிருக்க, வழக்கு தொடராத மூவுருளி ஓட்டுனர்கள் சாலை மறியல் செய்வதற்கு என்ன பெயர் - ?? அபத்தம் , ?? கொழுப்பு, ?? பொறாமை

இதில் என் கருத்துகள்

1. தீர்ப்பு குறித்து அந்த தீர்ப்பின் முழு விபரத்தையும் படிக்கும் வரை நான் விமர்சிக்க விரும்பவில்லை.

2. ஆனால் இப்படி தீர்ப்பு (வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் பலன்) வருவதை நான் வரவேற்கிறேன். இப்படி நான் சொன்னவுடன் என் மேல் பாய்ந்து குதற தயாராகும் முன், என் தரப்பு வாதம்

இந்த வழக்கால் பலன் பெறுவோர் சுமார் 4000 நபர்கள். இவர்களில் ஒவ்வொருவரும் 250 ரூபாய் அளித்தாலே போதும் வழக்கை உச்ச நீதிமன்றம் வரை நடத்தலாம்.

ஆனால் நம்ம ஆட்கள் தங்களைத்தானே அதி புத்திசாலியாக நினைப்பதன் விளைவு - 4000 நபர்களில் 20 பேர் தான் வழக்கு தொடர்கிறார்கள். அவர்கள் 50,000 ரூபாய் வரை செலவழிக்கிறார்கள். மீதி 3980 பேரும் இந்த 20 பேரின், பணத்தை, உழைப்பை, நேரத்தை, அலைச்சலை, அதனால் வரும் தீர்ப்பை ”முறைகேடாக” அனுபவிக்கிறார்கள் என்பது என் கருத்து.

இதனால் தான் பெரும்பாலான விஷயங்களில் யாரும் வழக்கு தொடர்வதில்லை. இதனால் தான் பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. யாரும் நீதிமன்றத்தில் எதிர்க்காததால் தான் அதிகாரிகள் மட்டத்தில் பல தவறுகள் காலம் காலமாக (பல சமயங்களில் அதிகாரிகளின் அறியாமையால் - சில சமயங்களில் மட்டும் அதிகாரிகளின் மேற்பார்வையில்) நடந்து வருகிறது

இது போல் வழக்கு தொடர்பவர்களுக்கு மட்டும் தான் பலன் என்று சில தீர்ப்புகள் வந்தாலே அனைவரும் வழக்கு தொடர்வார்கள் - வழக்கு தொடர ஆகும் செலவு குறையும் - அதனால் மேலும் பலர் வழக்கு தொடர்வார்கள் - சின்ன தவறு என்றாலும் வழக்கு வரும் என்ற பயம் வரும். சின்ன சின்ன தவறுகள் நடப்பது குறையும் - நல்ல, சீரிய, குறைகளற்ற பல நடைமுறைகள் உருவாகும் :)

3. வழக்கு தொடராமலேயே உயர் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து சாலையில் அமர்வது புத்திசாலித்தனம் அல்ல என்பது என் கருத்து. வழக்கு தொடராதவர்கள் (3980 பேரும்) அவர்களுக்கு தேவையென்றால் வழக்கு தொடரலாம். வழக்கு தொடர்ந்தால் இவர்களும் 20 நபரகள் பெற்ற அதே சாதகமான் தீர்ப்பைத்தானே பெறுவார்கள். அதை விடுத்து சாலையில் அமர்வதால் என்ன நன்மை. தங்களுக்கு (அல்லது தங்கள் தரப்பினருக்கு ) சாதகமான தீர்ப்பு வந்த பின்னும், தாங்கள் வழக்கு தொடராமல் விட்ட தவறிற்கு சாலை மறியல் எப்படி சரியான வழிமுறை

ஒரு கேள்வி

சாலை அமர்ந்த 5 நிமிடங்களுக்கு உள்ளாகவே, அதுவும் முழு சாலையையும் மறைக்காமல் பாதி சாலையை மட்டும் மறைத்த நிலையில் பேச்சு வார்த்தை நடத்தாமலே காவல் துறை தடியடி ந்டத்தியது சரியா

வழக்கம் போல் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

பின் குறிப்பு /முக்கிய குறிப்பு: தமிழகத்தில் பட்ட மேற்படிப்பு இடங்கள் பட்ட படிப்பு இடங்களுக்கு சமமாக உயர்த்தப்படும் வரை (அதாவது மேலும் 1000 பட்ட மேற்படிப்பு (எம்.டி, எம்.எஸ்) இடங்கள் உருவாக்கப்படும் வரை) இந்த பிரச்சனையின் ஆனி வேர் தீராது

நிகழ்நிலை 1 : ஊடகங்களில் இச்செய்தி: செய்தியும் புகைப்படமும் தினமலர் (http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=2459&cls=&ncat=TN)

சென்னை: மருத்துவ மேற்படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க வந்த டாக்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். தொடர்ந்து அங்கு பெரும் ரகளை நடந்ததால், கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டு, இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

சாலைமறியலை கைவிடும்படி டாக்டர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலை கைவிட மறுத்த டாக்டர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதில், 10 டாக்டர்கள் காயம் அடைந்ததனர். இதில், ஆவேசம் அடைந்த ஒரு பிரிவினர் அங்கிருந்து கலைந்து மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்குள் ஓடினர். அங்கு வரவேற்பறை கண்ணாடி கதவுகள் மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கி பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

Thursday, June 05, 2008

♠யெஸ்.பாலபாரதி, ரவிசங்கர், லக்கிலுக், சீனு கருத்துகள் குறித்த என்பார்வை

இந்த இடுகைக்கு உந்துசக்தி, தலைவர் பாலாவின் இடுகையும், அதற்கு வந்த சில பின்னூட்டங்களும்

பாலபாரதி
“இப்ப புரியுதா.. அவங்க குடும்பம் எப்படி வந்திருக்கு.. நம்ம குடும்பம் எப்படி வந்திருக்குன்னு.. இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு சொல்லு?”
ரவிசங்கர்
எந்த சாதியில் பிறந்தவரும், முதல் தலைமுறையாக படிப்பு, நல்ல வேலையில் இருப்பவரும் கூட நிறைய சாதிக்கிறார்கள். எனவே, ஒருவரின் சாதனைக் குறைவுக்கு முன்னோரின் இயலாமையைக் குறை கூறுவது சரியா? சரியான பின்புலம் இல்லாமல் சாதித்த எத்தனையோ பேர் இருக்கிறார்களே? அதுவும் நீங்கள் சுட்டியுள்ள எடுத்துக்காட்டுகளில் உள்ள கவித் திறன், சிந்தனைத் திறன், உலகப் பொது அறிவு, எழுத்து வன்மை எவருக்கும் வரக்கூடியவை தானே? இதற்கு முன்னோர் பின்புலம் அவ்வளவு முக்கியமா?
லக்கிலுக்
பாலாண்ணா சொல்லவந்த பிரச்சினைக்கு நானே சரியான ஒரு உதாரணம். என் தந்தையாருக்கு போதுமான கல்வியறிவு இல்லாததால் எனக்கு தேவையான நேரத்தில் சரியான வழிகாட்டுதலை அவரிடமிருந்து பெற இயலவில்லை. நானே எப்படியோ தட்டு தடுமாறி ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறேன் என்றாலும் கூட என் வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தில் என் தந்தையார் சரியான முறையில் வழிகாட்டியிருந்தால் இவ்வளவு சிரமப்பட்டு மேலே வந்திருக்க வேண்டியிருந்திருக்காது என்று பலநேரங்களின் தோன்றும்.
ரவிசங்கர்
கல்வி, வேலை போன்ற விசயங்களில் உங்கள் வாதப்படி பெரும்பான்மையினர் பாதிக்கப்பட்டிருப்பதை ஒப்புக் கொள்வேன். ஆனால், பாலா சுட்டியுள்ள கவித் திறன், சிந்தனைத் திறன், எழுத்து வன்மை ஆகியவைக்கு பின்புலம் அவ்வளவு முக்கியமா என்று தோன்றுகிறது. தன்னைச் செதுக்கிக் கொள்வதில் ஒவ்வொருவனும் குறிப்பிடத்தக்க முயற்சி செலுத்த வேண்டும். அது இல்லாமல் எவ்வளவு பின்புலம் இருந்தாலும் பயனில்லை. பாலா சுட்டியுள்ள பின்புலம் உள்ள எத்தனையோ பேர் இருக்கிறார்களே. ஆனால், ஒரு சிலர் தானே சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள்???
சீனு
வழிகாட்டுதல் என்பது ஒரு விசிட்டிங் கார்டு போலத்தான். அதுவே காரணம் இல்லை.
இனி என் கருத்து 1

ஒரு வக்கீலின் மகன் வக்கீல் ஆகி மாதம் 20,000 சம்பாதிப்பதற்கும், ஒரு விவசாயியின் மகன் வக்கீல் ஆகி மாதன் 20,000 சம்பாதிப்பதற்கும் குறைந்த பட்ச இடைவேளை 10 வருடங்கள். அதன் பிறகு தான் பின்னவரின் திறமை வெளிவரும். (சினிமாவில் வருவதைப்போல் அல்ல)

--
திறமை என்பது பெட்ரோல் போல்
”பின்புலம்” என்பது வழிகாட்டி, வரைபடம்

பெட்ரோல் இல்லாமல் வெறும் வழிகாட்டி, வரைபடம் மட்டும் இருந்தால் வண்டி ஓடாது என்பது உண்மை

அதே நேரம் 2000 லிட்டர் பெட்ரோல் இருந்தாலும் வழிகாட்டி, வரைபடம் இல்லாமல் வண்டி ஒட்டுபவனை விட வழிகாட்டி, 20 லிட்டர் பெட்ரோலுடன் வரைபடத்துடன் வண்டி ஓட்டுபவன் முன்னர் சென்று விடுவான் என்பது யதார்த்தம்
--
இரண்டாமவன் தனது சொந்த முயற்சியில் ஒரு வரைபடத்தை உருவாக்கும் வரை அவன் தட்டி, தடுமாறி, முட்டி, மோதி பின்னர் தான் செல்ல முடியும்

--
சந்தேகம் இருந்தால்

1. விஜய், சூர்யா, ஜெயம் ரவி, ஜீவா,
2. விக்ரம், அஜித், ரஜினி,
3. மனோஜ் குமார் (பாரதி ராஜா)

என்று வகையாக பிரித்து பாருங்கள் , புரியும்
--
கருத்து 2 : பின்புலம் என்பது பிறப்பு மட்டுமல்ல

உதாரணம் : நட்பு

நாங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைக்கு சேர்ந்த பொழுது சந்தித்த பிரச்சனைகளில் பலவற்றை எங்களுக்கு அடுத்து பணியில் சேர்ந்தவர்கள் சந்திக்க வில்லை - எங்களிடமிருந்து கேட்டுக்கொண்டதால் (? பாடம் கற்றுக்கொண்டதால்.)

வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்கள், அல்ல்து சென்னை, பெங்களூரு வருபவர்கள் ஆகியோரை கேட்டால் இதை உறுதிப்படுத்துவார்கள்

முத்தாய்ப்பாக

ஒருவர் முன்னேற ”பிற்ப்பு” மட்டும் போதாது
ஆனால்
”பிறப்பு” கண்டிப்பாக பங்கு வகிக்கிறது

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

Tuesday, June 03, 2008

தாய் அல்லது தந்தையிடம் இருந்து குழந்தைக்கு வர வாய்ப்பில்லாத ஒரே நோய் என்ன

எனது ஆண்மைக்குறைவும் மலட்டுத்தன்மையும் ஒன்றா ??? என்ற இடுகையில் கையேடு அவர்கள் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்கள்
இப்போது ஒரு நேர்மையான சந்தேகத்தையும் கேட்டுவிடுகிறேன். இதுபோன்ற குறைபாடுகள் மரபுரீதியாக வர வாய்ப்பிருக்கிறதா?
பதில் எளிது
  • ஆண்மைக்குறைவு / Impotence - மரபு ரீதியாக வரலாம்
  • மலட்டுத்தன்மை - தாய் அல்லது தந்தையிடம் இருந்து குழந்தைக்கு !! வர முடியாத ஒரே நோய் மலட்டுத்தன்மை :) :) :) என்று சில காலம் முன்வு வரை பகடி செய்து கொண்டிருந்தோம்
ஆனால்

தற்பொழுது
  • ஒரு பெண் குழந்தை பெறுவதில் பிரச்சனை ஏற்பட்டால் அது போன்ற பிரச்சனைகள் அவளது சகோதரர்களின் பெண்குழந்தைகளுக்கு ஏற்படலாம் என்றும்
  • ஒரு ஆண் தந்தையாவதில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அது போன்ற பிரச்சனைகள் அவளது சகோதரிகளின் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படலாம் என்றும்
கண்டறியப்பட்டுள்ளது. இதை மருத்துவ ரீதியாக “Knight’s move” என்றழைக்கிறார்கள்

அதாவது சதுரங்க ஆட்டத்தில் குதிரையானது நேராக செல்லாமல் அடுத்த கட்டத்திற்கு செல்வதை போல் மரபு ரீதியாக வரும் சில நோய்கள் தாயிடமிருந்து (நேராக) குழந்தைக்கு வராமல், அந்த பெண்ணின் சகோதரன் வழியாக (சகோதரனுக்கு பாதிப்பில்லாமல்) சகோதரன் மகளுக்கு வரும். சதுரங்க குதிரையானது பழைய கட்டத்திற்கும் புதிய கட்டத்திற்கும் இடைப்பட்ட கட்டங்களின் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் “தாவி” செல்வதை போல், செல்வதால் இந்த பெயர் அளிக்கப்பட்டுள்ளது



மேலே உள்ள படத்தை பார்த்தாலே சதுரங்கள் விளையாடுபவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்

கீழே உள்ள படங்கள் மற்ற வகையான மரபு வழி நோய்கள் குறித்த படங்கள்

1. தந்தை அல்லது தாயிடம் இருந்து குழந்தைக்கு வருவது (நேர் கோட்டில்). தாய் அல்லது தந்தைக்கு நோயின் பாதிப்பு இல்லையென்றால் (சில வகைகளை தவிர்த்து) குழந்தைக்கு வராது

2. தந்தை அல்லது தாயிடம் நோயின் பரிமாணம் தெரியாது. தாத்தா அல்லது பாட்டி பாதிக்கப்பட்டிருப்பார்கள். உறவிற்குள் திருமணம் செய்வதால் இப்படி பட்ட நோய்களின் பாதிப்பு அதிகம் இருக்கும். கீழ் உள்ள படத்தை பாருங்கள்.



பின் குறிப்பு 1 : ஒரு பெண்ணிற்கு ஐந்தாம் இடத்தில் ராகு இருந்தால், அந்த பெண்ணின் அத்தைக்கோ (தந்தையில் சகோதரி) அல்லது அந்த பெண்ணின் மருமகளுக்கோ (சகோதரனின் மகள்) ராகு இருக்கும் வாய்ப்பு 8.33 சதத்திற்கு அதிகமாக நடைமுறையில் இருக்கிறதா என்று யாராவது சோதிடர்கள் தான் கூற வேண்டும் :) :) :)

பின் குறிப்பு 2 : ஒருவருக்கு ஒரு இடத்தில் இருக்கும் கிரகமானது மற்றொருவருக்கு அதே இடத்தில் இருக்கும் வாய்ப்பு 8.33 சதம்.

Monday, June 02, 2008

"குஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்" -- பத்ரி சாரின் பதிவுக்கு ஒரு கருத்து

இன்று தி ஹிந்துவில் நீனா வியாஸ், குஜ்ஜார்களது போராட்டம் பற்றி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து பழங்குடியினர் பட்டியலுக்குச் செல்வதால் குஜ்ஜார்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று விளக்கியுள்ளார்.
Take the figures for quota positions filled in Central government services as on January 1, 2005. While the SC and ST quotas were not completely filled, they were well above the halfway-mark. As for the 27 per cent OBC quota, on average only 4-5 per cent of the slot was filled. This means there is a very large unused OBC quota, which the Gujjars could use to their advantage as they are already in this category. So, how could their demanding a share in the smaller 7.5 per cent quota that has mostly been filled serve their purpose?

The figures collected by the Ministry of Personnel, Public Grievances and Pensions are revealing. As on January 1, 2005, the STs filled 4.3 per cent of a 7.5 per cent quota of jobs in the ‘A’ category’ that includes civil service officers and superintendents of police. The OBCs managed only 4.7 per cent of the 27 per cent quota, clearly establishing that there were many more vacancies here if suitable candidates presented themselves.
இது குறித்து பத்ரி சார் அவர்கள் தனது பதிவிலும் கருத்து தெரிவித்துள்ளார்
மொத்தத்தில் இட ஒதுக்கீட்டைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதிலிருந்து பலன்களை எப்படிப் பெறுவது என்பதை அறிந்துகொள்ளாமல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நான் இதிலிருந்து வேறு படுகிறேன்.

மேலோட்டமாக பார்த்தால் இந்த போராட்டத்தினால் பலன் கிடையாது போல் இருக்கும். அது தான் 22 சதவித இடங்கள் இருக்கே, அதில் கூட காலியாகத்தானே இருக்கிறது. அதில் வராதவர்கள் எப்படி 3.2 சதவித இடத்தில் வருவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் ஒரு விஷயத்தை மறந்து விட்டீர்கள் என்று அர்த்தம்
  • ஓ.பி.சி.யில் க்ரீமி லேயர் உண்டு
  • எஸ்.சி / எஸ்.டியில் க்ரீமி லேயர் கிடையாது
இப்பொழுது மேலே உள்ள புள்ளி விபரத்திற்கு வருவோம். (As on January 1, 2005, the STs filled 4.3 per cent of a 7.5 per cent quota of jobs in the ‘A’ category’ that includes civil service officers and superintendents of police. The OBCs managed only 4.7 per cent of the 27 per cent quota, clearly establishing that there were many more vacancies here if suitable candidates presented themselves.)

அதாவது ஜனவரி 1,2005ல்

மாவட்ட ஆட்சித்தலைவர்கள் / அரசு செயலர்கள் (அதாவது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்) மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் (அதாவது ஐ. பி.எஸ் அதிகாரிகள்) பணியிடங்களில்
  • ஓ.பி.சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 22 சதவித இடங்கள் காலியாக உள்ளன
  • எஸ்.டிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 3.2 சதவித இடங்கள் காலியாக உள்ளன
பொது பிரிவு என்றால் யார்
  • முற்பட்ட வகுப்பினர்
  • குஜ்ஜார் மக்களில் மாத வருமானம் 21,000 உள்ளவர்கள் (ஆசிரியரின் மகன், வங்கி அலுவலரின் மகன்)
ஒ.பி.சி என்றால் யார்
  • குஜ்ஜார் மக்களில் மாத வருமானம் 21,000 கம்மியாக உள்ளவர்கள் (ஏழை விவசாயியின் மகன்)

எஸ்.டி என்றால் யார்
  • மீனா மக்களில் மாத வருமானம் 21,000 உள்ளவர்கள் (ஆசிரியரின் மகன், வங்கி அலுவலரின் மகன்)
  • மீனா மக்களில் மாத வருமானம் 21,000 கம்மியாக உள்ளவர்கள் (ஏழை விவசாயியின் மகன்)
--

இப்பொழுது புரிகிறதா

பிரச்சனை எங்கு என்று
  • குஜ்ஜார் சமுகத்திலிருக்கும் ஒரு பள்ளிக்கூட ஆசிரியரின் மகன் ஐ.ஏ.எஸ் தேர்வை பொது பிரிவில் தான் எழுத முடியும்
ஆனால்
  • மீனா சமுகத்திலிருக்கும் ஒரு பள்ளிக்கூட ஆசிரியரின் மகன் ஐ.ஏ.எஸ் தேர்வை எஸ்.டி பிரிவில் எழுத முடியும்
--

அப்படி யென்றால் ஒ.பி.சி ஒதுக்கீட்டில் பலன் பெறுவோர் - குஜ்ஜார் சமூக மாத வருமானம் 20,000 அல்லது அதற்கு கீழ் உள்ள குடும்பத்திலிருந்து ஒருவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி

ஒரு
  • மீனா சமுக பள்ளிக்கூட ஆசிரியரின் மகன்
  • மீனா சமுக வங்கி அலுவலரின் மகள்
  • மீனா சமுக மாவட்ட ஆட்சியரின் மகன்
  • மீனா சமுக மாவட்ட கண்காணிப்பாளரின் மகள்
ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி

இது தான் பிரச்சனையே

--

எனவே ஒ.பி.சியில் இருக்கும் ஒரு சமுகம் எஸ்.சி / எஸ்.டியாக மாறினால் கண்டிப்பாக லாபம் உண்டு

அதற்காகத்தான் குஜ்ஜார்கள் போராடுகிறார்கள். அவர்கள் போராடும் முறை தவறு. ஆனால் கோரிக்கை முட்டாள்தனமானது அல்ல

ஏனென்றால் இதே மீனா ஒ.பி.சியாக இருந்த போது அவர்களுக்கு கிடைத்த பலனை விட தற்பொழுது அதிக பலன் பெறுகிறார்கள் என்பதை அவர்கள் நேரில் பார்க்கிறார்கள்
--
இந்த பிரச்சனைக்கு மற்றொரு காரணம் அனைத்து வேலைகளுக்கும் ஒரே அளவுள்ள க்ரீமி லேயர் அளவு கோல். இது குறித்து நான் ஏற்கனவே எனது பழைய பதிவொன்றில் கூறியிருந்தேன் ஒரு முறை அதை படித்தால் பிரச்சனையின் மற்றொரு கோனம் புலப்படும்

இதற்கு (க்ரீமி லேயரினால் வரும் பிரச்சனைக்கு) தீர்வு என்ன

எளிய தீர்வு - க்ரீமி லேயர் என்பதை கணக்கில் எடுக்காதது. ஆனால் அது சரியான தீர்வாகது என்பது என் கருத்து

என் கருத்து..

1. ஒவ்வொரு வேலைக்கும் க்ரீமி லேயரின் அளவு கோல் வேறாக இருக்க வேண்டும்

2. ஒ.பி.சி,க்கான 27 சதவித இடங்களில் க்ரீமி லேயர் அல்லாத (பொருளாதாரத்தில் பின் தங்கிய) மாணவர்கள் இல்லையென்றால் (மட்டுமே) பொருளாதாரத்தில் முன்னேறிய ஒ.பி.சியினரால் அந்த 27 சதவித இடங்கள் நிரப்பப்படவேண்டும். பொருளாதாரத்தில் முன்னேறிய ஓ.பி.சி மாணவர்களும் இல்லையென்றால் (மட்டுமே) பொது வகுப்பினரால் நிரப்பப்பட வேண்டும்

இதன் மூலம்

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்கும்

அதே நேரம் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கும் பலன்.

If there are not enough OBCs (with income less than 2.5 lakhs per annum) then the places should be filled by OBCs with income more than 2.5 lakhs and ONLY if there are no OBCs at all it should be filled by general turn என்று ஒரு சட்ட திருத்தம் கொண்டுவந்தால் க்ரீமி லேயரின் முழுப்பலன் கிடைக்கும் என்பது என் கருத்து.

ஒ.பி.சி மேல் அக்கரையினால் க்ரீமி லேயர் நீக்கப்படவேண்டும் என்று கூறியவர்கள் நான் சொன்ன கருத்தை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள்.
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...