பதிவர் முரளிகண்ணனின் கூறியபடி 1992 ஆம் ஆண்டின் படங்கள், தமிழ் திரையுலகைச் சார்ந்த பலரின் அந்தஸ்தை உயர்த்தியவையாகும் . அப்படி உயர்த்தப்பட்ட அந்தஸ்தை தக்க வைத்தவை 1993ல் வெளிவந்த படங்கள்
அமராவதி
பிரம்ம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் 1992ல் அறிமுகமான அஜித்தின் முதல் தமிழ் படம். கதாநாயகி சங்கவி. இயக்கம் செல்வா. இசை பாலபாரதி அதிகம் ஒப்பனையுடன் வரும் இளவட்டங்களை ”அமராவதி அஜித் போல இருக்கே” என்ற பகடி செய்யும் அளவு தமிழர்களுக்கு பரிச்சயமான படம். (அதற்கு முன்னர் தளபதி அரவிந்தசாமி என்று சொன்னார்கள்)
புதியமுகம்
சுரேஷ் மேனன் இயக்கத்தில், சுரேஷ் மேனன் கதாநாயகனாகவும், ரேவதி கதாநாயகியாகவும் நடித்த படம். முகமாற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் மகன் அவரின் பழைய முகத்துடன் பிறந்து அதனால் உண்மை வெளிப்படும் கதை. திரைக்கதை கமல் பாணியில் இருந்ததால் பலருக்கும் புரிந்திருக்காது.
இன்று வரை மனதில் நிற்கும் ஏ.ஆர்.ஆரின் பாடல்கள் படத்திற்கு பலம் என்றாலும் அந்த வருடம் வெளிவந்த பிற சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களுடன் போட்டி போட முடியவில்லை என்பதால் படம் வணிக ரீதியாக தோல்விதான்.
இயக்குனரான ஒளிப்பதிவாளர் வரிசையிலும் கதாநாயகனான இயக்குனர்கள் வரிசையிலும் சுரேஷ் மேனனுக்கு இடம் பெற்றுத்தந்தது இந்த படத்தின் மற்றொரு சாதனை. சுரேஷ் மேனன் – ரேவதி விவாகரத்தை இந்த படம் 10 வருடம் தள்ளிப்போட்டது என்று கூட சொல்வார்கள்.
நேற்று இல்லாத மாற்றம், நேற்று இல்லாத மாற்றம் (சோகம்), கண்ணுக்கு மையழகு, ஜூலை மாதம் வந்தால், என்று இசையும் வரிகளும் பல வருடங்களுக்கு பிறகு (எம்.எஸ்.வி-கண்ணதாசன், இளையராஜா-வைரமுத்து) பின்னி பினைந்து வெளிவந்து ஒலிப்பேழை விற்பனை அமோகமாக நடந்த நேரம் அது. 1992ல் அறிமுகமான சிடிக்களை பரவலாக்கி (சிடில கேட்டா இரண்டு கிடாரும் புல்லாங்குழல் சத்தமும் கூட கேட்குதுடா !! அதான் சிடி வாங்கிட்டேன்) சிடி விற்பனையை அதிகரித்தற்கு காரணம் புதிய முகம், ஜெண்டில்மேன், திருடா திருடா, படங்கள் தான்
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை, கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை, காதல் பொய்யென்று சொன்னேன் உன்னைக்கானும் வரை என்று பின்னி எடுத்த வைர முத்து “விடியும் வரை பெண்ணழகு” என்று எழுதி வாங்கி கட்டிக்கொண்டதும் இந்த படத்தில் தான்
ஜெண்டில்மேன்
இயக்குனர் ஷங்கரின் முதல் படம். தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் சில ஆண்டுகள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் இருந்ததற்கு முக்கிய காரணம் இந்த படம் என்று கூறலாம். ஒரு பாட்டிற்கு கவர்ச்சி நடிகைகள் ஆட்டம் என்ற நிலையை மாற்றி ஒரு பாட்டிற்கு ஆட கதாநாயகி என்ற வழக்கத்தை ஏற்படுத்திய படம். அதன் பிறகு 10 வருடங்களாக (பிதாமகனில் சிம்ரன் ஒரு பாட்டிற்கு ஆடும் வரை) இந்த பழக்கம் தொடர்ந்தது
ரோஜா என்பது விபத்தல்ல என்று ஏ.ஆர்.ரஹ்மான் அழுத்தம் திருத்தமாக நிருபித்தார். ரோஜா, புதியமுகம், ஜெண்டில்மேன் என்று ஏ.ஆர்.ஆர் ஹாட்ரிக் அடித்த சமயம் அது. எந்த டீக்கடை, எந்த கல்யாண வீடு என்றாலும் நேற்று இல்லாத மாற்றமும், சிக்கு புக்கு ரயிலேயும் தான் கேட்டது
தமிழ் சினிமாவில் இரட்டை அர்த்த வசனங்கள் என்ற நிலை மாறி “ஒரே அர்த்த வசனங்கள்” என்ற வழக்கம் ஆரம்பித்ததும் இந்த படத்தில் தான். !!!
ஸ்பூனிங், கப்லிங், டிக்கிலோனா என்ற விளையாட்டுகளை தமிழகத்திற்கு ஷங்கர் அறிமுகம் செய்தார். நல்ல வேளை அவை பிரபலம் ஆக வில்லை. (குஷ்பு இட்லி பிரபலமானது போல் அந்த படத்தில் காட்டப்படும் குஷ்பு அப்பளமும் வரவில்லை !!)
வசனம் பாலகுமாரன். “செண்ட்ரல் நினைச்சா தூக்குவோம், செண்ட்ரல் நினைச்சா இறக்குவோம்” என்ற அரசியல் வசனங்களும் “போகிற வ்ழி எப்படி யிருந்தாலும் சேரும் இடம் கோவிலாக இருக்க வேண்டும்” என்ற சமூக வசனங்களும் இணைந்தே இருந்தது.
எனக்கு பிடித்த் வசனம் “அன்னைக்கே சொல்லியிருப்பேன். ஆனால் சொல்லல, ஏன்னா உங்க வயசில இருக்கிறவங்களுக்கு அட்வைசும் பிடிக்காது, அட்வைஸ் சொல்லவங்களையும் பிடிக்காது. இது அட்வைஸ் இல்லை, அக்கறை”
மே 1993ல் நடந்த ஒரு அரசியல் கொலை நடந்த வழிமுறையை ஆகஸ்ட் 15ல் வெளியாகும் படத்தில் புகுத்தியது யாரும் எதிர்பார்க்காதது.
ராஜா சின்ன ரோஜா, அஞ்சலி ஆகிய படங்களில் கிராப்பிக்ஸ் மூலம் பாடல் காட்சிகள் வெளிவந்திருந்தாலும் படங்களில் கிராப்பிக்ஸ் பரவலாக பயன்படுத்தப்பட்டது இந்த படத்திலிருந்து தான். சிக்கு புக்கு ரயிலே, ஒட்டகத்தை கட்டிக்கோ, என் வீட்டு தோட்டத்தில், உசிலம்பட்டி பெண்குட்டி, பார்க்காதே பார்க்காதே போன்ற அனைத்து பாடல்களும் ஹிட்
சில / பல லாஜிக் மீறல்களும் இருந்தன
- 1980களிலேயே மருத்துவக்கல்லூரியின் மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு என்று வந்து விட்டது. ஆனால் நேர்காணல் என்று படத்தில் இருக்கும்
- மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த உடன் ”ஒப்பன் ஹார்ட் சர்ஜரி” பற்றியெல்லாம் வகுப்பு எடுக்க மாட்டார்கள்
திருடா திருடா
அஞ்சலி, தளபதி, ரோஜா என்று தொடர்ந்து மூன்று படங்களின் வெற்றியை அடுத்து மணிரத்னம் இயக்கும் படம் என்பதால் அதிக எதிர்ப்பார்ப்புடன் வந்த படம்.
பாடல்கள் அனைத்தும் முதலிலேயே வெளிவந்து சிக்கு புக்கு ரயிலுக்கு பதில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாலும், ராசாத்தியும் டீக்கடைகளிலும், கார் ஸ்டிரியோக்களிலும் ஒலித்து கொண்டிருந்தன.
மணிரத்னம் படங்கள் திரையிடப்படும் அரங்குகளில் இரண்டாவது வாரத்திலேயே 50 சதம் இடங்கள் காலியாக இருந்து, அனைத்து பாடல்களும் முடிந்தவுடன் 50 சதம் நிரம்பியிருக்கும் அரங்கிலிருக்கும் 80 சதவித பார்வையாளர்கள் வெளிவரும் போக்கு இந்த படத்தில் ஆரம்பித்து அதன் பிறகு பம்பாய், இருவர், உயிரே வரை தொடர்ந்தது. (அதன் பிறகு இரண்டாம் முறை படம் பார்ப்பவர்களால் மணிரத்னம் படங்கள் முழுவதும் பார்க்கப்பட்டது அலைபாயுதே தான்) திரையரங்கில் மீதியிருப்பவர்கள் யார் என்று பார்த்தால் ஒன்று காதலர்களாக இருப்பார்கள். அல்லது வெளியூர் செல்ல முன்பதிவு செய்து விட்டு சில மணிநேரத்தை செலவழிக்க வந்தவர்களாக இருப்பார்கள்
கதை : வங்கி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் மற்றும் அவர்களை துரத்தும் சி.பி.ஐ அதிகாரி. (தசாவதாரம் பார்க்கும் போது பல்ராம் நாயுடு திரையில் வரும் போது இந்த ப்டத்தில் நடித்த எஸ்.பி.பி ஞாபகம் வந்தது எஸ்.பி.பியின் வெற்றியா, மணிரத்னத்தின் வெற்றியா)
படத்தில் வரும் புத்தம் புது பூமி வேண்டும் என்ற பாடல் வரிகள் மிகவும் அருமையாக ஒரு utopian நிலையை வேண்டும் படி இருக்கும். இரு ஸ்பீக்கர்களை 10 அடி இடைவெளியில் எதிரெதிராக வைத்து நாம் நடுவில் நின்றால் இந்த பாடலில் வரும் பியானோ ஓசை ஒரு காது வழியாக புகுந்து செல்வது போல் தோன்றும். (அந்த விளைவை பெற இயர் போன் வைத்து கேட்டால் போது, இது போல் ஸ்பீக்கரை அடுக்க வேண்டாம் என்ற விஞ்ஞான உண்மை பிறகு தான் தெரிந்தது)
ராசாத்தி என்ற பாடலில் ஒரு இசை கருவி கூட பயன் படுத்தப்பட்டிருக்காது எனபது அதன் சிறப்பு. ஏ.ஆர்.ஆர் கணினியின் மூலம் தான் அசத்துகிறார், அவருக்கு சொந்த சரக்கு கிடையாது, இசையறிவு குறைவு என்ற சில ”வயிற்றெரிச்சல்” ஆட்களின் குற்றச்சாட்டை ஒரு இசைகருவி கூட பயன்படுத்தாமல் ஒரு பாட்டை வழங்கியது மூலம் ஏ.ஆர்.ஆர் சுக்கலாக உடைத்தார்.
இது தவிர சந்திரலேகா, தீ தீ, வீரபாண்டி கோட்டையிலே, கண்ணும் கண்ணும் ஆகிய அனைத்து பாடல்களும் ஹிட்
படத்தின் கதை : ராம் கோபால் வர்மா
படத்தின் வசனம் : சுகாசினி
இந்திய படங்களில் அலேக்கா கிரேன் உபயோகிக்கப்பட்ட முதல் படம் இது (ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்)
மகாநதி
கமல், சுகன்யா, நடித்து வெளிவந்த ப்டம். நகைச்சுவை படம் அல்லத கமல் படம் கூட வெற்றி பெரும் என்று கமலுக்கே நம்பிக்கை அளித்த படம்
நிதி நிறுவனங்களை பற்றி கமல் 1993லேயே இவ்வளவு தெளிவாக கூறியபின்னரும் 1996-1998களில் நிதிநிறுவனங்களை நம்பி திவாலானவர்களை பார்க்கும் போது பரிதாபம் தான் வருகிறது. நிதி நிறுவனங்கள் மற்றூம் குழந்தை பாலியல் தொழிலாளர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக கமலை பாராட்ட வேண்டும். சோனார்கஞ்ச் என்ற இடத்தின் பெயர் தமிழுக்கு அறிமுகமானதும் இந்தப்படத்தில் தான். சோனார்கஞ்ச், சுனாமி என்று கமல் அறிமுகப்படுத்திய வார்த்தைகள் பல இருக்கிறது (முரளிகண்ணன் சார் - உங்களுக்கு ஒரு பதிவிற்கு கரு தயார்)
இளையராஜாவின் இசையில் ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் என்ற பாடல் இன்று வரை பசுமையாக நினைவிலிருக்கிறது
உழைப்பாளி
வழக்கமான ரஜினி படம். (அம்மா செண்டிமெண்ட், ப்ளாஷ்பேக் உட்பட) செம்பருத்தியில் அறிமுகமாகி, சூரியன் மூலம் முதலிடம் பிடித்த நடிகை ரோஜா கதாநாயகி. ரஜினியின் பஞ்ச் வசனங்களும் உண்டு
- நேத்து நான் கூலி, இன்னைக்கு நடிகன்,நாளைக்கு.....
- சில பேர் சொல்றாங்க நான் இப்படி வருவேன், அப்படி வருவேன்னு. நான் எப்படி வருவேன்னு அந்த ஆண்டவனுக்கு மட்டும் தான் தெரியும்
இளையராஜாவின் இசையில் ஒரு சோளக்குயில், மைனா மைனா, உழைப்பாளி இல்லாத நாடுதான் போன்ற பாடல்களும் உண்டு. பாண்டியனில் ஒரு பாடலுக்கு (பாண்டியனின் ராஜ்ஜியத்தில்) இசையமைத்த கார்த்திக் ராஜா துனை இசையமைப்பாளராக மாறிய படம். ரஜினி சிவன் வேஷத்துடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் நகைச்சுவை காட்சி தொலைக்காட்சிகளின் தினமும் ஒளிபரப்பப்படுகிறது
எஜமான்
தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவுடன் ரஜினி டூயட் பாடிய படம். ஆர்.வி.உதயகுமாரின் மார்க்கெட்டும், நெப்போலியனின் மார்க்கெட்டும், ஐஸ்வர்யாவின் மார்க்கெட்டும் உயர பறந்தது இதில் தான்
இளையராஜாவின் இசையில் ஆலைப்போல் வேலைப்போல், அடி ராக்கு முத்து, நிலவே முகம் காட்டு, ஒரு நாளும் உனை மறவாத போன்ற பாடல்களும், நல்ல திரைக்கதையும் படத்தை வெற்றி பெற வைத்தன. இன்று வரை குழந்தை பிறந்ததை “வானவராயனுக்கும் ரானிக்கும் வாரிசு வந்தாச்சு:” என்ற பாடல் மூலம் குறிப்பது வழக்கமாக இருக்கிறது
ரஜினியை அடிக்கும் காட்சியில் நடித்த ஐஸ்வர்யாவிற்கு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் மூலம் தமிழக ரசிகனின் மனப்பக்குவம் அனைவருக்கும் சந்தேகமற தெரிந்தது இந்த படத்தின் மற்றொரு சாதனை
உழவன்
கதிரும் ரஹ்மானும் இணைந்த முதல் படம். நடிகை ரம்பாவின் (அதாவது டூப்பாக நடிக்காமல் ரம்பாவாக நடித்த) முதல் ப்டம் என்று நினைக்கிறேன். பெண்ணல்ல பெண்ணல்ல என்ற பாடல் பாடல் போட்டிகளில் பாடுபவர்களின் விருப்ப பாடலாக மாறியது. கண்களில் என்ன ஈரமோ பாடல் பல இடங்களில் கோயில் திருவிழாக்களில் ஆன்மிக பாடலாக மாறியது (அதற்கு முன்னர் அம்மா என்றழைக்காத பாடல் கோயில் கொடைகளில் கட்டாயம்). காதல் தேசம், காதலர் தினம் என்ற அபார கூட்டனியின் முதல் படம்
பொன்னுமனி
ஆர்.வி.உதயக்குமார் இயக்கத்தில் கார்த்திக், சௌந்தர்யா நடித்தது. இளையராஜாவின் இசையில் ”நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா” என்ற பாடல் அனைவருக்கும் தெரிந்தது தான்.
வள்ளி
ரஜினியின் கதை. இயக்கம் கே.நடராஜ். குசேலனை விட ந்ல்ல படம். இளையராஜாவின் இசையில் வள்ளி வரப்போறா, என்னுள்ளே கனவுகள் வரும் நேரம் ஆகிய பாடல்கள் பிரபலம்
மறுபடியும்
“இதே மாதிரி நான் பண்ணியிருந்தால் நீங்கள் என்ன செய்வீங்க” என்று பெண்ணியம் பேசிய படம், ஒரு தீக்குச்சியில் ஒளியில் கதாநாயகியின் அறிமுகம் அபார கற்பனை மற்றும் ஒலிப்பதிவு. நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் என்ற் பாடல் வரிகள் அபாரம்.
இப்பொழுது நினைத்து பார்த்தால் வள்ளி, மறுபடியும் இரு படங்களுமே ஒரே செய்தியைத்தான் தருகின்றனவோ ??
கிழக்கு சீமையிலே
அண்ணன் தங்கை பாசம் குறித்து பாசமலருக்கு அடுத்த படம். பாரதிராஜாவும் ஏ.ஆர்.ஆரும் இணைந்த முதல் படம். ரஹ்மானால கிராமப்புற கதைகளுக்கு இசையமைக்க முடியாது என்ற குற்றச்சாட்டு காணமல் போன ப்டம்.
இது தவிர பிரபு, சுகன்யா, சிவரஞ்சினி நடித்த சின்ன மாப்பிள்ளை, மற்றும் ராஜ்கிரனின் அரண்மனைக்கிளி ஆகியவை கூட இந்த வருடம் தான் வெளிவந்தது,
கேள்வி :
இந்த வருடம் வெளிவந்த மற்றொரு சூப்பர் ஹிட் படம் குறித்து நான் எதுவுமே கூறவில்லை. அது என்ன படம்
(க்ளு : அது நக்மா நடித்த சூப்பர் போலிஸ் அல்ல)
அது குறித்து தனி இடுகை எழுதலாம் என்று நினைக்கிறேன்:)








