என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்த தமிழ் பதிவுலக சினிமா ஆவணக்காப்பகம் / நூலகம் பதிவர் முரளிக்கண்ணனுக்கும் பதிவர் அக்னி சிறகும், பதிவர் இளையபல்லவனுக்கும் பதிவர் டோண்டு ராகவன் அவர்களுக்கும் நன்றிகள். போன் வாரமே எழுத ஆரம்பித்தது நட்சத்திர வாரம் வெளியிடலாம் என்பதால் ஒரு தாமத வெளியிடு
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயது என்று சரியாக ஞாபகம் இல்லை. கொஞ்சம் யோசித்து பார்த்தால் சிறு வயதில் பார்த்த படங்கள் சில ஞாபகத்தில் இருக்கின்றன
- ஆத்தூரில் பட்டணத்தில் பூதம். மண் தரையில் அமர்ந்து பார்த்த ஞாபகம்
- தூத்துக்குடியில் விக்ரம் (கூடவே பிரதமர் இந்திரா காந்தி பற்றிய ஆவணப்படமும் பார்த்ததாக ஞாபகம்)
- காரனேஷன் திரையரங்கில் “எங்களையும் வாழ விடுங்கள்” (என்று நினைக்கிறேன். குரங்குகளை வைத்து எடுத்த படம்)
எது முதலில் பார்த்தது என்று ஞாபகம் இல்லை. முரளி கண்ணன் சார் முதலில் வெளிவந்த படம் என்னவென்று சொல்வார் என்று நினைக்கிறேன்
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
ச-ரோ-ஜா
ஆங்கிலம் - இண்டியானா ஜோன்ஸ் (Indiana Jones and the Kingdom of the Crystal Skull )
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,
சில நாட்களுக்கு முன்னர் டிவிடியில்
- ஊரைத்தெரிஞ்சிக்கிட்டேன்
- காசேதான் கடவுளடா
எங்கே,
அறையில் தான்
என்ன உணர்ந்தீர்கள்?
திரைக்கதைக்கு அந்தக்காலத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இக்கால இயக்குனர்கள் ஆங்கில படங்களை மட்டும் பார்க்காமல் பழைய தமிழ் படங்களையும் பார்த்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்பதும் தெரிந்தது
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
- 2002 பிப்ரவரியில் பார்த்த - கண்ணத்தில் முத்தமிட்டால்
- 2003 மே மாதத்தில் பார்த்த - அன்பே சிவம்
- 2003 டிசம்பரில் பார்த்த - இயற்கை
கண்ணத்தில் முத்தமிட்டால்
2002 பிப்ரவரி 14ஆம் தேதி அந்த ப்டம் வெளியிடப்பட்டது என்று நினைக்கிறேன். அப்பொழுது எங்கள் வகுப்பு மருத்துவக்கல்லூரி இளங்கலை (MBBS) படிப்பை முடித்து பதிவு செய்து விட்டு வந்திருந்தோம். எங்களுக்கு அடுத்த வகுப்பு மாண்வர்களுக்கு தேர்வு முடிவு வந்த நேரம் என்று ஒரு பெரிய கும்பலே பயங்கர உற்சாக திருநெல்வேலி பாம்பே திரையரங்கிற்கு சென்றது.அதற்கு முன் 2000ல் வந்த மணிரத்னம் படம் அலைபாயுதே காதல் கதை என்பதும், அப்பொழுது உச்சத்தில் இருந்த சிம்ரனும் மாதவனும் நடித்த படம் என்பதும் பிப்ரவரி 14 ரீலிஸ் என்பதால் கல்லூரி கூட்டத்தின் உற்சாகத்திற்கு குறைவில்லை
படம் ஆரம்பித்த போது இருந்த ஊ ஊ, ஏ, ஓ கூப்பாடுகள் சில நிமிடங்களிலேயே அடங்கி “அடப்பாவி உயிரே போலிருக்கு” என்ற சில கருத்து பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருந்தது.(உயிரே அலையாயுதேவிற்கு முன்னர் 1998ல் வந்த மணிரத்னம் படம்)
மேலும் சில நேரம் கழித்து அரங்கம் முழுவது நிசப்தம்
தூத்துக்குடி மாவட்ட பள்ளிகூடங்களில் இலங்கை தமிழர்கள் படிப்பது வழக்கம். அவர்கள் உபயோகிக்கும் பேனா மற்றும் பிற பொருட்களையும், விடுமுறைக்கும் இலங்கைக்கு விமானத்தில் சென்று வருவதையும் பார்த்த எங்களுக்கு அங்கு இருக்கும் அனைவரும் வசதியானவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது. (உயிரை பணயம் வைத்து தோனியில் வருபவர்களையும், இங்குள்ள முகாம்களின் நிலையும் எனக்கு மாணவ நாட்களின் தெரிந்திருக்க வில்லை)
என்னுடம் படம் பார்த்த பலரும் அதே நினைப்புடன் தான் படத்திற்கு வந்திருக்க வேண்டும். அவர்களும் யாரோ கன்னத்தில் ஓங்கி அறைந்த அதிர்ச்சியில் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் கன்னத்தில் அறைசாத்தியது நிஜம்
வழக்கமாக இடைவேளை வந்த உடன் அவசரமாக வெளியில் ஓடி முதலில் பாப்கார்ன் வாங்கும் அவசரத்தில் ஓடுபவர்கள் கூட அரண்டு போய் அமர்ந்திருந்தார்கள்
அந்த ப்டம் குறித்து பல விமர்சணங்கள் இருக்கலாம். உதாரணமாக சுதந்திர போராட்டத்தை கொச்சை படுத்தும் சுஜாதாவின் வசனங்கள்
ஆனால் தமிழகத்தில் ஈழ்ப்பிரச்சனை குறித்த புரிதல் / ஆர்வம் இல்லாதவர்களை கூட அந்த பக்கம் திருப்பிய படம் அது.
பனைமரக்காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்ப்போமா என்ற வரிகளின் பின்னிருக்கும் வலி நீண்ட நாட்களுக்கு மனதை விட்டு அகல் வில்லை
இந்த படத்தின் மற்றொரு பாடலான வெள்ளைப்பூக்கள் மிகச்சிறந்த பாடல். தேசிய விருது பெற்ற பாடல் என்று நினைக்கிறேன். நேர்மறை எண்ணங்களையும் சுபிட்சத்தையும் வேண்டும் வரிகள்
வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் வீழ்கவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்
காற்றின் பேரிசையும் - மழை பாடும் பாடல்களும்
ஓர் மௌனம் ஓர் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனமும் - கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ
எங்கு சிறு குழந்தை - தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் - போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ - அங்கு
கூவாயோ வெள்ளை குயிலே.
பாடல் வரிகள் ஆயில்யன் அவர்களின் பதிவில் இருந்து (அவரது அனுமதியின்றி !!) எடுக்கப்பட்டது. அவருக்கு நன்றி :) :)
மாதவன் சிம்ரன் காதல் காட்சிகள் மிக எதார்த்தமாக இருக்கும். அதிலும் அந்த குழந்தையை தத்து எடுக்கும் காட்சி “டாப் க்ளாஸ்” குழந்தையின் வளர்ப்பு தாத்தா தான் அந்த குழந்தை பிறந்த போது அந்த முகாமில் இருந்த அதிகாரி என்பதை எத்தனை கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.
சமாதானத்தின் விலை அல்லது மதிப்பு என்னவென்று தெரியாதவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்
அன்பே சிவம் : இது குறித்து தனி இடுகை எழுதியிருக்கிறேன் * 12.சினிமா - அன்பே சிவம், அன்பு, கடவுள், பொதுவுடமை, தொழிற்சங்கம் - இங்கு சுட்டினால் அங்கு செல்லலாம்
இயற்கை குறித்து பின்னர் எழுதுகிறேன்
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தங்கர்பச்சன் மன்னிப்பு கேட்டது. நடிகையின் கதை எழுதியவரை கூட விட்டு விட்டு தங்கர்பச்சனை பிடித்துகொண்டது ஏன் ?? பதில் (ஞாநி பாணியில்) உங்களுக்கே உங்களுக்கு)
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
பல
- தசாவதாரத்தில் இறுதியில் ப்ளெட்சர், நரஹசி, கோவிந்த சண்டையிடும் காட்சிகள். இது குறித்து நான் ஏற்கனவே எழுதியது ்இறுதியில் வரும் ப்ளெட்சர் - ஜப்பானியர் சண்டை அற்புதம். ஒரே நடிகர் மூன்று வேடங்களில் நடித்து , அந்த மூவரும் சண்டையிடுவது, அதுவும் மூவரும் மூன்று முறைகளில் (ஜப்பானியர் -கராத்தே, ப்ளெட்சர் - தொழில் முறையில், கோவிந்து - சண்டை பற்றி எதுவும் தெரியாமல் சும்மா முரட்டுதனமாக) என்பது எளிதான விஷயம் அல்ல. கமல் இக்கதாபாத்திரத்தில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும்.
- நியூ - படத்தின் ஒளியமைப்பு
- பாய்ஸ் படத்தில் “எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேண்டும் பாடலில்” கடற்கரை காலை முதல் மாலை வரை எப்படி இருக்கிறது என்று காட்டும் ஒரு காட்சி. மற்றும் அலை அலை பாடல்
- பாரதி - கிராபிக்ஸ் என்று தெரியாமல் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்ட படம்
- அலைபாயுதே பாடல்கள் - முக்கியமாக எவனோ ஒருவன் வாசிக்கிறான் மற்றும் பச்சை நிறமே, காதல் சடுகுடு
- முதல்வன் பட பாடல்கள்
- ஜீன்ஸ் - அதில் இரண்டு நாசர் வரும் காட்சிகளில் பயன் படுத்தப்பட்டிருக்கும் தொழிற்நுட்பம் இரண்டு பிரசாந்த் வரும் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருகும் தொழிற்நுட்பத்தை விட நுட்பமானது என்று பலருக்கு தெரியாது.
- சிறைச்சாலை - ஒலி, ஒளி, கலை, இசை என்று அனைத்துமே
- ஆளவந்தான் - வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இரு “துரத்தும்” காட்சிகள் கூட sync ஆவது
என்று பல இருக்கிறது
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
உண்டு. குமுதம், விகடன், நக்கீரன், தினத்தந்தியில் வரும் சுவடுகள் மற்றும் வாழு வாழ விடு
7.தமிழ்ச்சினிமா இசை?
என்னைக்கவர்ந்த இசையமைப்பாளர்கள் என்றால் எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், மரகதமணி, என்று பெரிய பட்டியலே உள்ளது.
- இந்தி இசையை கேட்ட தமிழர்களை தமிழ் இசை கேட்க வைத்தவர் இளையராஜா
- ஆனால் இந்தி இசை கேட்ட இந்தியர்களை கூட தமிழ் இசை கேட்க வைத்தது ஏ.ஆர்.ரஹ்மான்
- அழகன், வானமே எல்லை போன்ற படங்களில் கலக்கியவர் மரகதமணி
- அன்பேசிவம், இயற்கை என்று கலக்கியவர் வித்யாசாகர்
- லேசா லேசா, காக்க காக்க, சாமி என்று ஹாரிஸ் ஜெயராஜ் படங்கள் என்று பெரிய பட்டியலே இருக்கிறது
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இல்லை. இந்த வருடம் பார்த்த ஆங்கில படங்கள் என்று பார்த்தால் இண்டியானா ஜோன்ஸ், 10000 BC. அதற்கு முன்னர் பார்த்த படங்கள் காட்சில்லா, இண்டிபெண்டென்ஸ் டே, டைடானிக், ஜூராசிக் பார்க, டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென் ஹர், என்று இது வரை பார்த்த ஆங்கில படங்கள் 20 கூட தாண்டாது
பிற இந்திய மொழிகளில் (சப் டைடல்களுடன்) பார்த்த கடைசி படம் - சிபிஐ டைரி குறிப்பு. ஏனோ ஆங்கில புதினங்களை வாசிக்கும் ஆர்வம் படங்களை பார்ப்ப்தில் இல்லை
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சப் டைடில்களுடன் இணையத்தில் பரவும் படங்களில் தரமான படங்களும் இருந்தால் உலகம் முழுவதும் தமிழ் திரைத்துறை பெயர் பெற வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கிறேன்
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கு அவ்வளவு வித்தியாசம் கிடையாது.
தமிழர்களுக்கு பெரிதாக ஒன்றும் ஆகாது. பழைய படங்களை பார்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
அப்பவும் ரஜின் கட்சி ஆரம்பிப்பாரா என்று ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்துவார்கள்
கீழ்க்கண்டவர்கள் இதே கேள்விகளுக்கு தங்கள் மலரும் நினைவுகளை தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
- டாக்டர் ரூத்ரன்
- sureஷ்
- சே.வேங்கடசுப்ரமணியன்.
- ரத்னேஷ்
- பத்ரி
- பிரகாஷ்
- ரவிசங்கர்
- நர்சிம்,
- உண்மைத்தமிழன்,
- சுரேகா,
- புதுகை அப்துல்லா,