மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை : செய்தி வெளியீடு எண்.237 நாள்.14.5.2009
பத்திரிக்கை செய்தி
இதய நோய் உள்ளவர்கள் நாள்தோறும் பயன்படுத்தும் “லெனாக்ஸின்” என்ற மாத்திரைக்கு தமிழ்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக சில நாளேடுகளில் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த மருந்து “டிஜாக்ஸின்” என்ற மூல மருந்துப் பொருளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்தாகும். ஒரு தயாரிப்பாளர் இந்த மருந்தினை “டிக்ஸின்” என்ற பெயரில் விற்பனை செய்கிறார்.
தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் இந்த “லெனாக்ஸின்” மற்றும் “டிக்ஸின்” மாத்திரைகள் தேவையான அளவு மருந்து தயாரிப்பாளர்களின் மொத்த விற்பனையாளர்களிடம் கையிருப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் அனைத்து மருந்து கிடங்குகளிலும் டிஜாக்ஸின் மாத்திரை போதிய அளவில் கையிருப்பு உள்ளது. இந்த மருந்து, மருத்துவ சேவை கழகத்தின் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதய நோய் உள்ளவர்கள் இந்த மருந்து தேவையெனில், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் நடைமுறையில் உள்ள விதிகளுக்குட்பட்டு இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் மருந்துக் கடைகளில் இம்மருந்தினை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இம்மருந்து இருப்பு குறித்து அவ்வப்போது தகவல் பெற விரும்புவோர்கள், மருந்து கட்டுப்பாடு இயக்குநர், சென்னை-6 அலுவலகத்தை தொலைபேசி எண் 044-24321830-ஐ தொடர்பு கொண்டும் அல்லது மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மருந்து தகவல் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை (Drug Information and PharmacoVigilance Center) தொலைபேசி எண் 044-24338421-ஐ தொடர்பு கொண்டும் தகவல்களை பெறலாம்.
செய்தித் தாள்களில் வெளிவந்துள்ள செய்திகளின்படி, தமிழ்நாட்டில் “லெனாக்ஸின்” மற்றும் “டிக்ஸின்” மருந்துகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் தற்போது இல்லை.
ஒம்/..
திரு வி. கே. சுப்புராஜ் இ.ஆ.ப.,
முதன்மைச் செயலர்,
மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை.
0 மறுமொழிகள்:
Post a Comment