நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது நடந்த சம்பவம் வேறு ஒரு சோக நிகழ்வால் இன்று திடீரென்று நினைவுக்கு வந்தது
ஒரு நாள் மாலை சுமார் 4 மணியளவில் இரு சக்கர வாகன விபத்தில் அடிபட்ட என் வகுப்பு தோழன் ஒருவன் எங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். மயக்க நிலையில், அவசர வார்டில் சேர்க்கப்பட்டதில் பரபரப்பு.
தலைக்குள் இரத்தக்கட்டு உள்ளதா என்பதை கண்டறிய உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதால் சி.டி.ஸ்கேன் டெக்னீசியனை (தொழிற்நுட்பனர்) அவசரமாக அழைத்ததில் அவர் பதற்றத்தில் சாவியை வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டார்.
மீண்டும் விட்டிற்கு சென்றால் நேரமாகும் என்பதால் என்ன செய்வது என்று அந்த தொழிற்நுட்பனரும் மற்றொரு ஊழியரும் தயங்கிய நிலையில் கொஞ்சம் தெனாவட்டு அதிகம் உள்ள ஒருவர் பூட்டினுள் ஒரு இரும்பு கம்பியை நுழைக்க, அதை விட அதிகம் தெனாவட்டு உள்ளவர் ஒரு ஸ்பெனரால் ஓங்கி போட அந்த பூட்டு உடைந்து விட்டது. ஸ்கேனும் எடுத்தாகி விட்டது. இரத்தக்கட்டு எதுவும் இல்லை என்றாலும் கபால எலும்பு உடைந்திருப்பதும் தெரியவந்து அனைவரும் நொந்து விட்டனர்

அரசு அலுவலகங்களில் முறையான விதிமுறைகளின் படி அல்லாமல் பூட்டை உடைப்பது எனப்து இ.த.சவின் (இந்திய தண்டனை சட்டம் - இந்தியன் பீனல் கோட் - இ.பி.கோ) பல பிரிவுகளின் கீழ் குற்றம் என்பதால் பூட்டை உடைத்த இருவரும் தயங்கி தயங்கி ஒரு 6 மணி வாக்கில் கல்லூரி முதல்வரை பார்த்து “சார் நம்ம ஸ்டூடண்ட் ஆர்.டி.ஏ (
ரோட் டிராபிக் ஆக்சிடண்ட் - சாலை விபத்து) ஹெட் இஞ்சரின்னு அட்மிட்டட், (
தலைக்காயம் ஏற்பட்டதால் சேர்க்கப்பட்டுள்ளார்) ஸ்கேன் ரூம் பூட்டில் எதோ கோளாறு, கொஞ்சம் வேகமாக திறந்ததில் உடைந்து விட்டது. அது தான் உங்களிடம் சொல்லி.........” என்று இழுக்க, முதல்வரோ “எப்படி ஆச்சு, இப்ப எப்படி இருக்கிறான்” என்று பதற்றத்துடன் கேட்டார்
“பேஸ் ஆப் ஸ்கல் பிராக்சர், அன்கான்சியஸ் தான்” (
கபால எலும்பின் அடிப்பாகம் உடைந்துள்ளது, மயக்கத்தில் தான் உள்ளான்) என்று கூறவும். சட்டென்று எழுந்தவர், “சரி வாங்க பார்ப்போம்” என்று கிளம்பி விட்டார். பூட்டை பற்றி மேலும் ஒரு வார்த்தை கூட கேட்க வில்லை. வெளியில் வரும் போதே நிர்வாக அலுவலரை அழைத்து “சிடி ஸ்கேன் ரூம் கீ லாஸ்ட், பெர்மிட்டட் டூ பிரைக் ஓபன் த லாக் இன் பிரண்ட் ஆப் டீன்னு ஒரு ஆர்டர் ரெடி பண்ணி அக்சிடண்ட் வார்ட் கொடுத்து விடுங்கள், ஐ வில் சைன் டூடே இட்செல்ப்” (
ஸ்கேன் அறையின் பூட்டிற்கான சாவி தொலைந்து விட்டதால் முதல்வர் முன்னிலையில் பூடடை உடைக்க ஆணை. இன்றே நான் கையொப்பம் இடுகிறேன்) என்று கூறிவிட்டு அவசர பிரிவிற்கு வந்து விட்டார்
வந்து மாணவனை பார்த்து விட்டு, பெற்றோருக்கு தெரிய படுத்தி விட்டீர்களா என்று விசாரித்து விட்டு, விடுதியில் தங்கி படிக்கும் மாணவன் என்று தெரிந்த உடன் அங்கேயே உட்கார்ந்து விட்டார்.
பொதுவாக மருத்துவ கல்லூரி முதல்வர்கள் எந்த ஒரு பிரிவிற்கு வந்தாலும் 5 நிமிடங்களுக்கு மேல் அங்கு இருப்பது அபூர்வம். யாராவது அமைசச்ர் வந்து உள்நோயாளியாக சேர்ந்தாலே வந்து பார்த்து விட்டு உடனடியாக சென்று விடுவார்கள்.
அப்படி இருக்க அவர் உட்கார்ந்ததில் எங்களுக்கு பயம் அதிகரித்து விட்டது. அவர் அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால் சாலை விபத்துக்களில் பாதிக்கப்படும் நூற்றுக்கணக்கான நோயாளிகளை பார்த்திருப்பார். எனவே ஏன் இங்கேயே உட்காருகிறார். நிலைமை மோசமா என்று பயங்கர குழப்பம்.

ஒரு 7 மணி வாக்கில் கொஞ்சம் தைரியம் உள்ள சிலர் தயங்கி தயங்கி முதல்வரிடம் சென்று “சார் நீங்க இங்கேயே இருக்கீங்களே. காப்பி எதாவது வாங்கி வரவா ” என்று கேட்க அவரும் கேட்டவர்களின் முகத்தை பார்த்து விட்டு “பயப்படாதீங்க, ஹி வில் ரிகவர் (
அவன் குணமடைந்து விடுவான்) அவங்க பேரண்ட்ஸ் வரும் வரை ஐ வில் வெய்ட். ஐ அம் த கார்டியன் டில் ஹிஸ் பேரண்ட்ஸ் கம். லெட் மீ இன்பார்ம் ஹிஸ் பேரண்ட்ஸ் மைசெல்ப்” (
பெற்றோர் வரும் வரை நான் காத்திருக்கிறேன். விடுதி மாணவன் என்பதால் பெற்றோர் வரும் வரை நான் தானே பொறுப்பு, அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் கூறிவிட்டு நான் செல்கிறேன்) என்று கூறிய பின்னர் தான் எங்களுக்கு சிறிது ஆறுதல்
அதன் பின் 8 மணி அளவில் பெற்றோர் வந்தபின், அவர்களிடம் ஆறுதல் கூறிவிட்டு தான் கிளம்பினார்
முதல்வர் மரு.வி.எஸ்.பாலசுப்பிரமணியன்.(எம்.எஸ்)
மாதா, பிதா, குரு, தெய்வம் !! என்பதின் மேலும் ஒரு பரிமாணத்தை உணர வைத்த நிகழ்வு அது
பின் குறிப்பு 1 : “உண்மையை சொல், நீதானே பூட்டை உடைத்தது” / “பாரன்சிக்ல டெஸ்ட் பண்ணி பூட்டு உண்மையில் பிரச்சனை இருந்ததா என்று கண்டுபிடிக்கவா” என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல்
பூட்டை உடைப்பதும் சாவி வைத்து திறக்குமிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்ற 292ஆம் குறளின் கோட்பாட்டின் படி ஆணை போட சொன்னதால் “ஒரு நீண்ட காலம் இழுக்கக்கூடிய” பிரச்சனை ஒரே மணி நேரத்தில் தீர்ந்தது
பின் குறிப்பு 2 : அடிபட்ட மாணவன் 3 வாரம் கழித்து மறுபடியும் இருசக்கர வாகனம் ஓட்ட ஆரம்பித்து விட்டான். அதற்கு அடுத்த நாள் அவனது தாய் எங்களிடம் ஒரு ஸ்கேல்பலை (அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் கத்தி) வாங்கி அந்த வாகனத்தில் இரு டயர்களையும் வெட்டி விட்டார்
இந்த சம்பவம் ஞாபகம் வர காரணமான சோக சம்பவத்தை இனி பார்ப்போம்
கரக்பூரில் இருக்கும் ஐ.ஐ.டியில் 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் ரோகித் குமார்
கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் தலைவலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறான். ஐ.ஐ.டி வளாகத்தினுள்ளேயே இருக்கும் பி.சி.ராய் மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்துள்ளான்.
கடந்த 22ஆம் தேதி தலைவலி அதிகமாகவே மறுபடியில் மருத்துவமனையில் காண்பித்து விட்டு மாணவர் விடுதிக்கு திரும்பும் வழியில் வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்து, வந்து கொண்டிருந்த ரிக்ஷாவிலிருந்து கீழே விழுந்து அடிபடுகிறது.
நண்பர்களால் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் போது அங்குள்ள மருத்துவர், நாடித்துடிப்பு குறைவதையும், கண்களின் பாப்பாக்கள் விரிவடைவதையும் பார்த்து விட்டு கொல்கத்தாவிற்கு சென்று நரம்பியல் நிபுணரிடம் காட்டுமாறு கூறுகிறார்.
அங்குள்ள பிணியாளர் ஊர்தியில் மாணவனை ஏற்றி அனுப்ப (வண்டிக்கு பெட்ரோல் போட, மற்றும் சில பாரங்களை நிரப்ப) 3 மணி நேரம் ஆகிறது. அந்த பிணியாளர் ஊர்தி எப்பேற்பட்டது என்பதை http://209.97.214.175/~scholars/wordpress/?p=1024 காணலாம்
இப்படிப்பட்ட பிணியாளர் ஊர்தியில் கிட்டத்தட்ட மயக்க நிலையில் உள்ள மாணவனை இரு மாணவர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் துணையுடன் அனுப்பிய நிலையில், வண்டி கொல்கத்தாவை நோக்கி செல்லும் வழியில் திடீரென ரத்த வாந்தி எடுத்ததால் (கொல்கத்தா செல்லும் வழியில்) மிட்னாப்பூரில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவரோ, ”வரும் போதே மரணம்” (brought dead / dead on arrival.) என்கிறார்.
இந்த செய்தி கரக்பூர் ஐ.ஐ.டியினுள் காட்டுத்தீயை போல் பரவுகிறது. ஏனென்றால் பி.சி.ராய் மருத்துவமனையில் வசதிகள் போதவில்லை என்று உள்சுற்று இதழில் (in house magazine) கட்டுரை எழுதியதற்காக நிர்வாகம் அந்த இதழை 6 மாதம் நிறுத்தி வைத்துள்ளது. (http://preprocess.blogspot.com/2005/10/story-that-shut-down-scholars-avenue.html) இன்றோ வசதி குறைவால் ஒரு மாணவனை இழந்துள்ளார்கள்
இவை எல்லாம் மாணவர்கள் வெளியில் உலவகத்தில் இருந்து பதிவில் ஏற்றியவை. ஏன் ஐ.ஐ.டியினுள் இணைய இணைப்பு கிடையாதா என்று தானே கேட்கிறீர்கள்
இவ்வளவு களேபாரம் நடந்தபின்னரும் ஐ.ஐ.டியின் இயக்குனர் மாணவர்களிடம் பேச முன்வரவில்லை. அதனால் அவரிடம் பேசுவதற்கு பதில் அவர் வீட்டு கண்ணாடியிடமும்
பூந்தொட்டிகளிடமும் (இந்த படங்கள் http://picasaweb.google.com/scholarsavenuekgp/ReactionsInPictures இருந்து பெறப்பட்டவை)
அவரது சீருந்திடமும் பேசிவிட்டார்கள்
இதை விட கொடுமை என்னவென்றால் அங்குள்ள ஒரு துணை இயக்குனர் கூறியதாக பதிவுகளில் எழுதப்படும் வார்த்தைகள். அதை அப்படியே ஆங்கிலத்தில் தந்துள்ளேன்
(Whats the big deal. people die everyday)
என்ன சொல்வது என்று தெரியவில்லை :(
ஆசிரியர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதை தவிர என்ன சொல்வது என்று தெரியவில்லை :(