இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Sunday, March 29, 2009

முற்பட்ட வகுப்பினருக்கு 68.50 சதவிகித இடப்பங்கீடு வழங்கும் தேர்வு எது தெரியுமா

முற்பட்ட வகுப்பினருக்கு 68.50 சதவிகித இடப்பங்கீடு வழங்கும் தேர்வு எது தெரியுமா ??

அது எப்படி அப்படி வழங்க முடியும் என்று நினைப்பவர்கள் கீழே தரப்பட்டுள்ள விதிகளை பாருங்கள்


மேலும் விபரங்கள் அறிய விரும்புபவர்கள் இந்த சுட்டியை படித்தால் முழு விபரமும் புரியும்

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் அவர்கள் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்பது மாணவர்களின் நம்பிக்கை

உங்கள் கருத்துக்களை கூறலாம். 

இடப்பங்கீட்டினால் “மெரிட்” பாதிக்கப்படுவதாக புலம்பும் அறிவு ஜீவிகள் இது (68.50 சதவித இடப்பங்கீடு) குறித்து என்ன கூறுவார்கள் :) என்று அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்

ஏய்ம்ஸ் குறித்த எனது முந்தைய இடுகையொன்று இங்கு உள்ளது

இடப்பங்கீடு குறித்த எனது பிற இடுகைகள்

Tuesday, March 24, 2009

மாணவனின் உயிரும் கல்லூரி முதல்வரின் நடத்தையும் - இரு சம்பவங்கள்

நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது நடந்த சம்பவம் வேறு ஒரு சோக நிகழ்வால் இன்று திடீரென்று நினைவுக்கு வந்தது

ஒரு நாள் மாலை சுமார் 4 மணியளவில் இரு சக்கர வாகன விபத்தில் அடிபட்ட என் வகுப்பு தோழன் ஒருவன் எங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். மயக்க நிலையில், அவசர வார்டில் சேர்க்கப்பட்டதில் பரபரப்பு.

தலைக்குள் இரத்தக்கட்டு உள்ளதா என்பதை கண்டறிய உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதால் சி.டி.ஸ்கேன் டெக்னீசியனை (தொழிற்நுட்பனர்) அவசரமாக அழைத்ததில் அவர் பதற்றத்தில் சாவியை வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டார்.

மீண்டும் விட்டிற்கு சென்றால் நேரமாகும் என்பதால் என்ன செய்வது என்று அந்த தொழிற்நுட்பனரும் மற்றொரு ஊழியரும் தயங்கிய நிலையில் கொஞ்சம் தெனாவட்டு அதிகம் உள்ள ஒருவர் பூட்டினுள் ஒரு இரும்பு கம்பியை நுழைக்க, அதை விட அதிகம் தெனாவட்டு உள்ளவர் ஒரு ஸ்பெனரால் ஓங்கி போட அந்த பூட்டு உடைந்து விட்டது. ஸ்கேனும் எடுத்தாகி விட்டது. இரத்தக்கட்டு எதுவும் இல்லை என்றாலும் கபால எலும்பு உடைந்திருப்பதும் தெரியவந்து அனைவரும் நொந்து விட்டனர்

அரசு அலுவலகங்களில் முறையான விதிமுறைகளின் படி அல்லாமல் பூட்டை உடைப்பது எனப்து இ.த.சவின் (இந்திய தண்டனை சட்டம் - இந்தியன் பீனல் கோட் - இ.பி.கோ) பல பிரிவுகளின் கீழ் குற்றம் என்பதால் பூட்டை உடைத்த இருவரும் தயங்கி தயங்கி ஒரு 6 மணி வாக்கில் கல்லூரி முதல்வரை பார்த்து “சார் நம்ம ஸ்டூடண்ட் ஆர்.டி.ஏ (ரோட் டிராபிக் ஆக்சிடண்ட் - சாலை விபத்து) ஹெட் இஞ்சரின்னு அட்மிட்டட், (தலைக்காயம் ஏற்பட்டதால் சேர்க்கப்பட்டுள்ளார்) ஸ்கேன் ரூம் பூட்டில் எதோ கோளாறு, கொஞ்சம் வேகமாக திறந்ததில் உடைந்து விட்டது. அது தான் உங்களிடம் சொல்லி.........” என்று இழுக்க, முதல்வரோ “எப்படி ஆச்சு, இப்ப எப்படி இருக்கிறான்” என்று பதற்றத்துடன் கேட்டார்

“பேஸ் ஆப் ஸ்கல் பிராக்சர், அன்கான்சியஸ் தான்” (கபால எலும்பின் அடிப்பாகம் உடைந்துள்ளது, மயக்கத்தில் தான் உள்ளான்) என்று கூறவும். சட்டென்று எழுந்தவர், “சரி வாங்க பார்ப்போம்” என்று கிளம்பி விட்டார். பூட்டை பற்றி மேலும் ஒரு வார்த்தை கூட கேட்க வில்லை. வெளியில் வரும் போதே நிர்வாக அலுவலரை அழைத்து “சிடி ஸ்கேன் ரூம் கீ லாஸ்ட், பெர்மிட்டட் டூ பிரைக் ஓபன் த லாக் இன் பிரண்ட் ஆப் டீன்னு ஒரு ஆர்டர் ரெடி பண்ணி அக்சிடண்ட் வார்ட் கொடுத்து விடுங்கள், ஐ வில் சைன் டூடே இட்செல்ப்” (ஸ்கேன் அறையின் பூட்டிற்கான சாவி தொலைந்து விட்டதால் முதல்வர் முன்னிலையில் பூடடை உடைக்க ஆணை. இன்றே நான் கையொப்பம் இடுகிறேன்) என்று கூறிவிட்டு அவசர பிரிவிற்கு வந்து விட்டார்

வந்து மாணவனை பார்த்து விட்டு, பெற்றோருக்கு தெரிய படுத்தி விட்டீர்களா என்று விசாரித்து விட்டு, விடுதியில் தங்கி படிக்கும் மாணவன் என்று தெரிந்த உடன் அங்கேயே உட்கார்ந்து விட்டார்.

பொதுவாக மருத்துவ கல்லூரி முதல்வர்கள் எந்த ஒரு பிரிவிற்கு வந்தாலும் 5 நிமிடங்களுக்கு மேல் அங்கு இருப்பது அபூர்வம். யாராவது அமைசச்ர் வந்து உள்நோயாளியாக சேர்ந்தாலே வந்து பார்த்து விட்டு உடனடியாக சென்று விடுவார்கள்.

அப்படி இருக்க அவர் உட்கார்ந்ததில் எங்களுக்கு பயம் அதிகரித்து விட்டது. அவர் அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால் சாலை விபத்துக்களில் பாதிக்கப்படும் நூற்றுக்கணக்கான நோயாளிகளை பார்த்திருப்பார். எனவே ஏன் இங்கேயே உட்காருகிறார். நிலைமை மோசமா என்று பயங்கர குழப்பம்.

ஒரு 7 மணி வாக்கில் கொஞ்சம் தைரியம் உள்ள சிலர் தயங்கி தயங்கி முதல்வரிடம் சென்று “சார் நீங்க இங்கேயே இருக்கீங்களே. காப்பி எதாவது வாங்கி வரவா ” என்று கேட்க அவரும் கேட்டவர்களின் முகத்தை பார்த்து விட்டு “பயப்படாதீங்க, ஹி வில் ரிகவர் (அவன் குணமடைந்து விடுவான்) அவங்க பேரண்ட்ஸ் வரும் வரை ஐ வில் வெய்ட். ஐ அம் த கார்டியன் டில் ஹிஸ் பேரண்ட்ஸ் கம். லெட் மீ இன்பார்ம் ஹிஸ் பேரண்ட்ஸ் மைசெல்ப்” (பெற்றோர் வரும் வரை நான் காத்திருக்கிறேன். விடுதி மாணவன் என்பதால் பெற்றோர் வரும் வரை நான் தானே பொறுப்பு, அவர்கள் வந்தவுடன் அவர்களிடம் கூறிவிட்டு நான் செல்கிறேன்) என்று கூறிய பின்னர் தான் எங்களுக்கு சிறிது ஆறுதல்

அதன் பின் 8 மணி அளவில் பெற்றோர் வந்தபின், அவர்களிடம் ஆறுதல் கூறிவிட்டு தான் கிளம்பினார் முதல்வர் மரு.வி.எஸ்.பாலசுப்பிரமணியன்.(எம்.எஸ்)

மாதா, பிதா, குரு, தெய்வம் !! என்பதின் மேலும் ஒரு பரிமாணத்தை உணர வைத்த நிகழ்வு அது

பின் குறிப்பு 1 :  “உண்மையை சொல், நீதானே பூட்டை உடைத்தது” / “பாரன்சிக்ல டெஸ்ட் பண்ணி பூட்டு உண்மையில் பிரச்சனை இருந்ததா என்று கண்டுபிடிக்கவா” என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் பூட்டை உடைப்பதும் சாவி வைத்து திறக்குமிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்ற 292ஆம் குறளின் கோட்பாட்டின் படி ஆணை போட சொன்னதால் “ஒரு நீண்ட காலம் இழுக்கக்கூடிய” பிரச்சனை ஒரே மணி நேரத்தில் தீர்ந்தது

பின் குறிப்பு 2 : அடிபட்ட மாணவன் 3 வாரம் கழித்து மறுபடியும் இருசக்கர வாகனம் ஓட்ட ஆரம்பித்து விட்டான். அதற்கு அடுத்த நாள் அவனது தாய் எங்களிடம் ஒரு ஸ்கேல்பலை (அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் கத்தி) வாங்கி அந்த வாகனத்தில் இரு டயர்களையும் வெட்டி விட்டார்

இந்த சம்பவம் ஞாபகம் வர காரணமான சோக சம்பவத்தை இனி பார்ப்போம்

கரக்பூரில் இருக்கும் ஐ.ஐ.டியில் 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் ரோகித் குமார்
கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் தலைவலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறான். ஐ.ஐ.டி வளாகத்தினுள்ளேயே இருக்கும் பி.சி.ராய் மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்துள்ளான்.

கடந்த 22ஆம் தேதி தலைவலி அதிகமாகவே மறுபடியில் மருத்துவமனையில் காண்பித்து விட்டு மாணவர் விடுதிக்கு திரும்பும் வழியில் வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்து, வந்து கொண்டிருந்த ரிக்‌ஷாவிலிருந்து கீழே விழுந்து அடிபடுகிறது.

நண்பர்களால் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் போது அங்குள்ள மருத்துவர், நாடித்துடிப்பு குறைவதையும், கண்களின் பாப்பாக்கள் விரிவடைவதையும் பார்த்து விட்டு கொல்கத்தாவிற்கு சென்று நரம்பியல் நிபுணரிடம் காட்டுமாறு கூறுகிறார்.

அங்குள்ள பிணியாளர் ஊர்தியில் மாணவனை ஏற்றி அனுப்ப (வண்டிக்கு பெட்ரோல் போட, மற்றும் சில பாரங்களை நிரப்ப) 3 மணி நேரம் ஆகிறது. அந்த பிணியாளர் ஊர்தி எப்பேற்பட்டது என்பதை http://209.97.214.175/~scholars/wordpress/?p=1024 காணலாம்
இப்படிப்பட்ட பிணியாளர் ஊர்தியில் கிட்டத்தட்ட மயக்க நிலையில் உள்ள மாணவனை இரு மாணவர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் துணையுடன் அனுப்பிய நிலையில், வண்டி கொல்கத்தாவை நோக்கி செல்லும் வழியில் திடீரென ரத்த வாந்தி எடுத்ததால் (கொல்கத்தா செல்லும் வழியில்) மிட்னாப்பூரில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவரோ, ”வரும் போதே மரணம்” (brought dead / dead on arrival.) என்கிறார்.

இந்த செய்தி கரக்பூர் ஐ.ஐ.டியினுள் காட்டுத்தீயை போல் பரவுகிறது. ஏனென்றால் பி.சி.ராய் மருத்துவமனையில் வசதிகள் போதவில்லை என்று உள்சுற்று இதழில் (in house magazine) கட்டுரை எழுதியதற்காக நிர்வாகம் அந்த இதழை 6 மாதம் நிறுத்தி வைத்துள்ளது. (http://preprocess.blogspot.com/2005/10/story-that-shut-down-scholars-avenue.html) இன்றோ வசதி குறைவால் ஒரு மாணவனை இழந்துள்ளார்கள்

இவை எல்லாம் மாணவர்கள் வெளியில் உலவகத்தில் இருந்து பதிவில் ஏற்றியவை. ஏன் ஐ.ஐ.டியினுள் இணைய இணைப்பு கிடையாதா என்று தானே கேட்கிறீர்கள்

இவ்வளவு களேபாரம் நடந்தபின்னரும் ஐ.ஐ.டியின் இயக்குனர் மாணவர்களிடம் பேச முன்வரவில்லை. அதனால் அவரிடம் பேசுவதற்கு பதில் அவர் வீட்டு கண்ணாடியிடமும்
பூந்தொட்டிகளிடமும் (இந்த படங்கள் http://picasaweb.google.com/scholarsavenuekgp/ReactionsInPictures இருந்து பெறப்பட்டவை)
அவரது சீருந்திடமும் பேசிவிட்டார்கள்

இதை விட கொடுமை என்னவென்றால் அங்குள்ள ஒரு துணை இயக்குனர் கூறியதாக பதிவுகளில் எழுதப்படும் வார்த்தைகள். அதை அப்படியே ஆங்கிலத்தில் தந்துள்ளேன்
(Whats the big deal. people die everyday)
என்ன சொல்வது என்று தெரியவில்லை :(

ஆசிரியர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதை தவிர என்ன சொல்வது என்று தெரியவில்லை :(

Sunday, March 22, 2009

தானியங்கி பணம் வழங்கியில் (ATM) நீங்கள் ஏமாற்றப்படலாம் - தடுப்பது எப்படி

எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு தொடர்படவில்லையை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். இதை ஆங்கிலத்தில் ஆக்கியவர் பெயர் தெரியவில்லை. தெரிந்தால் கூறவும். அவருக்கு நன்றிகள் பல. இது காப்புரிமை பெறப்பட்ட படத்தொகுப்பு என்றால் இதை நீக்கி விட தயார்

  • தானியங்கி பணம் வழங்கி - Automated Teller Machine - ATM
  • செலவட்டை - Debit Card
  • கடனட்டை - Credit Card
  • தொடர் படவில்லை / படவில்லைத்தொகுப்பு / வில்லைக்காட்சி - slide show (எந்த தமிழ் பதம் நன்றாக இருக்கிறது என்று அல்லது இதை விட பொருத்தமான தமிழ் பதம் இருந்தால் கூறவும்

இது குறித்து நீங்கள் பிறருக்கு தெரியப்படுத்த அல்லது இந்த படவில்லைதொகுப்பை (ஸ்லைட் ஷோ) திரை முழுவதும் காண http://docs.google.com/Presentation?id=dcztz9kt_4f3xfhfdf என்ற சுட்டியை பயன்படுத்தலாம்

செலவட்டை, கடனட்டை பயன்பாடு குறித்த எனது மற்றொரு இடுகை.

குறிப்பு : தமிழ் அறியாத நண்பர்களுக்கு அனுப்ப ஆங்கிலத்தில் இதே வில்லைத்தொகுப்பு இருக்கும் ATM Theft and how to preventசுட்டியை பயன்படுத்தலாம்

Saturday, March 14, 2009

வெண்ணிலா கபடி குழு - சில கருத்துக்கள்

பல படங்கள் திரையரங்குகளில் ஓடுவது போல் சில படங்கள் நம்மை ஓட வைக்கும். நான் அதிகம் திரைப்படங்கள் பார்ப்பதில்லை என்பதால் திரையரங்கை விட்டு ஓடியதும் சில நேரங்களில் தான். முதன் முதலாக 1997ல் ஒரு தமிழ் படம் பார்க்கும் போது தாங்கவே முடியாமல் பாதியில் கிளம்பினோம். அதன் பின்னர் போல் பாதியில் ஓடியது 2005ல் (The Aviator). சென்ற வாரம் ஒரு படத்திற்கு சென்று பாதியிலேயே திரையரங்கை விட்டு கிளம்பி, அந்த கடுப்பில் டிவிட்டரில்
வானமே எல்லை, வேதம் புதிது போன்ற படங்கள் இனி தமிழில் வரும் சாத்தியக்கூறு உள்ளதா. உங்கள் கருத்து.
என்று கேட்டிருந்தேன்
பிரபல பதிவரும், திரைத்துறையோடு தொடர்பில் இருப்பவருமான திரு நாராயணன் அவர்கள் கீழ்கண்டவாறு பதிலளித்திருந்தார்
கண்டிப்பாக வரும். வெண்ணிலா கபடிக்குழு ஒரு சான்று
அவர் ஏன் அப்படி சொன்னார் என்று இன்று படத்தை பார்த்த போது தான் தெரிந்தது

இரண்டு ஒரு வரி கதைகள். (முதல் கதை - படிப்பறிவில்லாத கிராமத்து வாலிபனும் கல்லூரியில் படிக்கும் நகரத்து பெண்ணும் ஒரு திருவிழாவில் காதலிக்கிறார்கள். அவன் மரணமடைந்து விட அவள் அடுத்த முறையும் திருவிழாவிற்கு வந்து அவனை தேடுகிறாள். இரண்டாவது கதை - கிராமத்தில் இருக்கும் ஒரு கபடி குழு ஒரு போட்டியில் வெல்கிறது) தெளிவான நீரோடை போல் திரைக்கதை, இயல்பான வசனங்கள், யதார்த்த காட்சிகள் (அதில் பல கவிதைகளும் உண்டு), அசத்தல் படத்தொகுப்பு, கோட்டிற்கு அருகில் நின்று கபடி பார்க்கும் உணர்வையும் ஏற்படுத்தும் ஒளிப்பதிவு, திருவிழா கூட்டத்திற்கு நடுவில் இருக்கும் உற்சாகத்தை திரையரங்கில் கொண்டு வரும் ஒலிப்பதிவு என்று நீண்ட நாட்கள் கழித்து ஒரு படத்தை ரசித்து படத்துடன் ஒன்றிப்போக முடிந்தது.

படத்தில் நான் பல ரசித்த காட்சிகளில் சில
  • மாரியை அவன் மாமா பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரும் போது வீட்டினுள் நுழைந்ததும் அந்த புத்தக பையை கீழே போடுவான். அதன் பின் அந்த புத்தகப்பை திரையின் ஒரு ஓரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போது அவன் பண்ணை வேலைக்கு அழைத்து செல்லப்படுவான். புத்தகப்பையில் சரஸ்வதி படம்
  • பையன்கள் காலையில் புதருக்குள் அமர்ந்து கொண்டே அரட்டை அடிப்பது. வாலிப வயசு வரை அதே தலைப்பில் தலைப்பில் அரட்டை தொடர்வது !!
  • நாயகனும் நாயகியும் ராட்டினத்தில் சுத்தும் (சுற்றும்) போதை கொலுசையும், “டாலரை”யும் பரிமாறுவது 
  • திருவிழா சமயம் ஊரில் வெள்ளையடித்து ஊர் முழுவதும் பளிச் என்று இருப்பது. (பிற காட்சிகளில் சுவர்கள் யதார்த்த நிறமே)
  • உடல் பருமனான கபடி வீரர் விளையாட வரும் போது வரிசை விளக்கில் (சீரியல் லைட்) யானையைக்காட்டியது
  • அடுத்த அணி வீரர்களின் “ஜெர்சி”யை (சட்டை) பார்த்து ஏங்கும் வீரர்களுக்கு கோச் ஜெர்சி வாங்கி தருவது
  • மிதிவண்டியை வைத்து பேரூந்தை முந்த முயலும் கிராமத்து இளைஞனுன், அவனது சந்தோஷத்திற்காக தானாக தோற்கும் பேரூந்து ஓட்டுனரும்.
  • தாய் சாப்பிட வேண்டுமென்பதற்காக பாதி சாப்பாட்டுடன் வெளியில் செல்லும் மகன்
  • தன் தந்தை மிதிவண்டியை தள்ளி சிரமப்படுவதை பார்த்து (விளையாட போகும் ஆர்வத்திலும்) உதவும் மகன்
  • கதாநாயகி (படத்தில் பெயர் கூறப்படவில்லை என்று நினைக்கிறேன்) அடுத்த வருடம் அந்த தெரு வழியாக செல்லும் போது மாரி கடைசியில் போட்டிருந்த சட்டை அந்த வீட்டில் தொங்குவது
  • 10 மீட்டர் இடைவெளி விட்டு தொடருவும் என்று பேரூந்தின் பின்புற வசனங்கள் மாறி 10 நிமிடம் இடைவெளி விட்டு என்று intermissionஐ அறிவிப்பது
  • விளையாட்டின் மீது அந்த இளைஞர்களுக்கும் அந்த கோச்சிற்கும் உள்ள ஈடுபாட்டை அப்படியே காட்டியது
  • இறுதி ஆட்டத்திற்கு செல்வது உறுதி என்றவுடன் அரையிறுதியில் முக்கிய வீரர்களை ஓய்வு எடுக்க வைக்கும் நடைமுறை
  • அந்த பரோட்டா சாப்பிடும் போட்டியில் 42 என்று கடைக்காரர் கூறியவுடன், முதலிருந்து ஆரம்பிக்கலாம் என்று கூறும் காட்சி (இந்த ஒரு காட்சிக்காவது நீங்கள் படத்தை பார்க்கலாம்)
  • வைகை பாலம், கிழக்கு வெளி வீதி என்று காட்சிகள் சில வினாடிகளே வந்தாலும் மதுரையை சுற்றிபார்த்தது போலிருக்கிறது
  • மாமியாரின் மண்டையில் ஓங்கி ஒரு போடு போடுவது 
  • நமக்கு கூட கைதட்டுகிறார்கள் என்ற அவர்களின் பெருமிதம்
இது தவிர பல விஷயங்களுக்காக இயக்குனரை பாராட்ட வேண்டியுள்ளது
  • கபடியை வைத்து ஒரு முழுநீள படம், ஒரு நிமிடம் கூட போரடிக்காமல் எடுத்த்து.
  • சாக்குடன் ஓடுவது, கையில் நீர் பிடித்து பாட்டிலில் நிறைப்பது போன்ற கிராமத்து விளையாட்டுக்களை பதிந்தது.
  • ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன், அந்த நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று ஆசை காட்டி விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை பாழாக்கும் நடைமுறையை வெளிக்கொண்டுவந்தது
  • அந்த நாயை எப்படித்தான் நடிக்கவைத்தாரோ !!! 
  • நம்மை குத்தும் வசனங்கள் (பஞ்ச் டயலாக்), பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் கூட ரசிக்கும் படி படம் எடுக்க முடியும் என்று காண்பித்தது
  • படம் முழுவதும் கதாநாயகி தாவணியில் வருவது. - அதில் கவர்ச்சியை தவிர்த்து அழகுணர்ச்சியை மட்டும் காண்பித்தது
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. முக்கியமாக அந்த கிளைமாக்ஸ். கண்டிப்பாக தேவையில்லாதது. அடுத்த முறை கதாநாயகி பேரூந்தில் வருவதுடன் படத்தை முடித்திருந்தால் கண்டிப்பாக படம் வணிக ரீதியாக இதை விட அதிகம் வெற்றி பெற்றிருக்கும்.

இந்த படம் பற்றிய சில விமர்சனங்கள்
(ஏதாவது விடுபட்டிருந்தால் மறுமொழியில் தெரிவிக்கவும்)

தமிழ் திரைப்படங்களின் (நிகழ் கால) தரம் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் கட்டாயம் இந்த படத்தை பார்த்து உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள்

இது போன்ற நல்ல படங்களை எடுத்தாலும் மக்கள் திரையரங்கில் பார்த்து ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையை வருங்கால இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அளிக்க ஒரு முறையாவது திரையரங்கு சென்று இந்த படத்தை பார்க்கவும்

Thursday, March 12, 2009

கல்லூரி நினைவுகள் 3 - அவங்க கொடுத்து வைச்சவுங்க!!

முன்கதை :
பொறுப்பு துறப்பு : சில பல காரணங்களுக்காக கதையின் இந்த பகுதியில் உள்ள ஊரும், பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.

சண்டை போட்ட படோலாவும் தினேஷும் முகத்தை உர் என்று வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். படோலாவின் சட்டையில் இரு பொத்தான்களை காணவில்லை. தினேஷோ கையை உதறிக்கொண்டிருக்கிறான்.

என்னடா ஆச்சு என்று கையை பார்த்தால் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனில் ஜெர்ரியிடம் அடி வாங்கிய டாமின் மண்டை வீங்குமே அது போல் வலது கை மணிக்கட்டு பகுதி புஸ் என்று வீங்கியிருந்தது

யாராவது கையை தொட்டால் வலிக்குது என்று தமிழிலும், இந்தியிலும் மாறி மாறி கத்திக்கொண்டிருந்தான். மறுபடி எங்கள் விரிவுரையாளரிடம் காட்டியபோது “பிராக்சர் போலிருக்கு சார்” என்ற எங்கள் சந்தேகத்தை அவர் உறுதிபடுத்தினார்.

பேரூந்து ஓட்டுனரிடம் சொல்லி, அடுத்து வந்த பொது தொலைபேசி நிலையத்தில் வண்டியை நிறுத்தி, தர்மபுரியில் இருக்கும் அவரது நண்பரை தொடர்பு கொண்டு ஓசூரில் எலும்பு முறிவு நிபுணர் எங்கிருப்பார் என்பதை கேட்டறிந்து செல்வதென்று முடிவானது.

அதற்குள் சுற்றுலா மனநிலை முற்றிலும் மாறி எரிச்சலும், கடுப்புமே அங்கு மேலோங்கியது. தினேஷும் படோலாவும் சண்டை போடுவது முதல் முறை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். விடுதி உணவகத்தில் (மெஸ்), கிரிக்கெட் மைதானத்தில், மிதிவண்டிநிறுத்துமிடத்தில் என்று எந்த இடத்தை வேண்டுமென்றாலும் கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் போர்க்களம் ஆக்கி விடுவார்கள். இங்கும் வந்து இந்த தொல்லையா என்ற கடுப்பு தான் அனைவரிடமும் இருந்தது.

ஓசூர் சென்று அங்கு ஒரு எலும்பு முறிவு மருத்துவமனைக்கு சென்று சேர்வதற்கு முன்னரே அந்த மருத்துவர் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். சுற்றுலா வந்துள்ள கல்லூரி மாணவர்கள் எலும்பு முறிவு மருத்துவரை தேடுகிறார்கள் என்று எங்கள் விரிவுரையாளரின் நண்பர் இவருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இவரும் ஏதோ விபத்து / அல்லது கால் தடுக்கி விழுந்து விட்டார்கள் / பேரூந்தின் மாடியிலிருந்து விழுந்து விட்டார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்திருக்க வேண்டும். “அடி எப்படி பட்டது” (mode of injury) என்று கேட்ட தெரிந்தவுடன் நொந்து போயிருக்க வேண்டும். ஆனால் வெளிக்காட்டவில்லை. “நார்திஸ் ஆர் லைக் திஸ்” (இவங்க இப்படித்தான்) என்று முடித்துக்கொண்டார். அவர் கல்லூரியில் படிக்கும் போது அவருடன் அவர் வகுப்பில் இதே போல் சில நார்தி பசங்கள் படித்திருப்பார்கள் தானே !! அவருக்கு தெரியாதா !!

ஊடுகதிர் சோதனை செய்து (எக்ஸ் ரே) எலும்பு முறிவு தான் என்று உறுதிபடுத்திக்கொள்ள ஆகும் நேரத்தில் பேரூந்தில் இருந்த அனைவரும் இறங்கி மருத்துவமனையில் இருக்கும் அலம்புக் கிண்ணத்தில் (வாஷ் பேசின்) பல் துவக்க ஆரம்பித்து விட்டனர். சிலர் மருத்துவமனையை சுற்றி பார்க்க கிளம்பினோம்

மருத்துவமனையின் வசதிகளையும், கட்டுமானத்தையும் பார்த்து அனைவரும் வியந்து கொண்டிருந்தார்கள்

பெயர் பலகையில் டாக்டர்.ரகு MS Ortho என்றும் அதன் அருகில் டாக்டர்.காயத்ரி MBBS என்றும் இருந்தது. அதே கண்டவுடன் என் வகுப்பு தோழி ஒருவர் “நம்ம சீனியர் காயத்ரி கூட ஓசூரில் இருப்பதாகத்தானே சொன்னாங்க. ஒரு வேளை அவங்கலாக இருக்கலாமா” என்று சந்தேகம் எழுப்ப, சரி நேரடியாகவே கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து விட்டு விட்டோம்

அது வரை மருத்துவமனையின் கட்டமைப்பை, வசதிகளை பார்த்து வியப்பு மட்டுமே வந்த பெண்களிடமிருந்து இப்பொழுது (அது அவர்களுக்கு பழக்கமானவரின் மருத்துவமனை என்று அறிந்தவுடன்) சிறிது பெருமூச்சும் வந்தது. “காயத்ரி அக்கா கொடுத்து வைச்சவுங்க, நல்லா செட்டில் ஆகிட்டாங்கள்ள” கொஞ்சம் பொறாமைதான். அது இல்லாத பெண்களும் உண்டா ?? அவரும் ஒரே கல்லூரியில் படித்ததால், ஒரே விடுதியில் தங்கியதால் நல்ல பழக்கம் இருந்திருக்க வேண்டும். சீனியர்களை "அக்கா/மேடம்" என்று பெண்களும், “ஸார்” என்று ஆண்களும் அழைப்பது மருத்துவக்கல்லூரிகளில் உள்ள நடைமுறை)

இதற்குள் ஊடுகதிர் படத்தை பார்த்து எலும்பு முறிவை உறுதிப்படுத்தி மாவு கட்டு போட்டபின் அனைவருக்கும் காபி வந்தது. “இப்படி ஒரு மேட்டருக்கு சண்டை போட்ட இவனுக்கு ஓசி வைத்தியமே டூ மச். இதில் இவ்வளவு பேருக்கும் ஓசி காபி வேறயா” என்று அவர் மனதில் நினைத்திருக்க வேண்டும் !!

காபி குடிக்கும் போது நான் ஆரம்பித்தேன்

நான் : சார், நீங்க எந்த காலேஜ்.
அவர் : ஜிப்மர்

நான் : எந்த பேட்ச்
அவர் : 88 பேட்ச்

நான் : அப்படியா, உங்க Mrs திருநெல்வேலி தானே எந்த பேட்ச்.
அவர் : 92 ஆ, 93ன்னு...ம்ம்ம்ம் 94ஆ இருக்குமோ

என் வகுப்பு தோழி ஒருவர் : 93 பேட்ச்ல காயத்ரின்னு ஒரு சீனியர் உண்டு. அவங்கலா இருக்குமோன்னு ஒரு சந்தேகம்

அவர் : இருங்க கேட்டு சொல்றேன் என்று அவர் அறைக்கு சென்று தொலைபேசியை எடுக்கவும் என்னடா பொண்டாட்டி எந்த பேட்ச் என்று கூட தெரியாமல் ஒருத்தன் இருக்கிறானே என்று நாங்கள் நொந்து போனோம்.

அவர் திரும்பி வந்து புன்னகையுடன் “93 பேட்ச்தானாம்” என்று கூறிவிட்டு “பிராக்டிஸ் பிசியா, அதனால தான் இதெல்லாம் சரியா தெரியல” என்று வேறு கூறினார். அதன் பிறகு எல்லாரும் வேகவேகமாக காபி குடித்து விட்டு வரிசையாக பேரூந்தில் ஏறினோம்

சிறிது நேரம் முன்னர் மருத்துவமனையை “காயத்ரி அக்கா கொடுத்து வைச்சவுங்க” என்று கூறியவரே இப்பொழுது பேரூந்தில் ஏறும் போது கூறினார் “காயத்ரி அக்கா பாவம்ல”

(இந்த கதை) முற்றும்

கல்லூரி நினைவுகள் பிரிதொரு சமயம் தொடரும்

Tuesday, March 10, 2009

ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 4 : சாதாரண பெண்தன்மையுள்ள உடல்வாகு (Simple Constitutional Feminism)

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள்
இந்த கட்டுரை புரியவில்லை என்றால் இரண்டாவது இடுகையையும் மூன்றாவது இடுகையையும் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும். அதன் பின்னரும் புரிவதில் சிரமமிருந்தால் உங்கள் வினாக்களை மறுமொழியில் கேட்கலாம்

இனி ஐந்தாவது இடுகை :ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 4 : சாதாரண பெண்தன்மையுள்ள உடல்வாகு (Simple Constitutional Feminism)


கிழ் உள்ள அட்டவனையில் 4 செங்குத்து வரிசைகள் உள்ளன.முதல் செங்குத்து வரிசையில் கூறுகளையும், இரண்டாவது செங்குத்து வரிசையில் ஒரு ஆணின் இயல்புகளையும், நான்காவது செங்குத்து வரிசையில் ஒரு பெண்ணின் இயல்புகளையும், அளித்துள்ளேன்

மூன்றாவது செங்குத்து வரிசையில், சாதாரண பெண்தன்மையுள்ள உடல்வாகு (Simple Constitutional Feminism) உள்ள ஒரு நபரின் இயல்புகள் எப்படி இருக்கும் என்று இருக்கிறது.




ஆண்


????


பெண்


1.                  மரபணு பால் (Genetic Sex)


அவரின் உயிரணுக்களில் (நிறமி) இருப்பது 22 இணை மரபணுச்சரங்கள் (அதாவது 44 மரபணுச்சரங்கள்) + ஒரு X மற்றும் ஒரு Y மரபணுச்சரம்


44 + XY


 அவரின் உயிரணுக்களில் (நிறமி) இருப்பது 22 இணை மரபணுச்சரங்கள் (அதாவது 44 மரபணுச்சரங்கள்) + இரு X மரபணுச்சரங்கள்


2.                  இனஉறுப்புகள்


விரைகள். இருக்கும். அதே போல் விந்து சிறுகுமிழ், சுக்கிலவகம், விந்துக்குழாய் போன்றவைகளும் இருக்கும். 


வயிற்றினுள் விரைகள், விந்து சிறுகுமிழ், சுக்கிலவகம், விந்துக்குழாய்


சினைப்பைகள். அதே போல் பிற  முட்டைப் பைக்குழாய், கர்ப்பப்பை, பெண் இனச்சேர்க்கை உறுப்பு போன்றவைகளும் இருக்கும்.


3.                  நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர்:


அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் சிறிய அளவில் ஈஸ்ட்ரஜன் இருக்கும்


அதிக அளவில் ஈஸ்ட்ரஜன் மற்றும் சிறிய அளவில் டெஸ்டோஸ்டிரோன்  இருக்கும்


அதிக அளவில் ஈஸ்ட்ரஜன், ப்ரொஜஸ்ட்ரன் போன்றவை மற்றும் சிறிய அளவில் டெஸ்டோஸ்டிரோன்


4.                  உடல் வாகு / பிற உடல் மாற்றங்கள்


ஆண் என்றால் மீசை, தாடி. அது போல் குரலில் வேறுபாடு . இந்த வித்தியாசங்களுக்கு நாளமில்ல சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீரே முக்கிய காரணம் ஆகும். இது போல் ஆண் என்றால் பெண்களை விட அதிக (சக்தியுள்ள) எலும்புகள், தசைகள். சிறிய இடுப்பெலும்பு (ஒரு எலும்பை வைத்து அது ஆணா, பெண்ணா என்று கூறிவிடலாம் - சில விதிவிலக்குகள் உண்டு - அதைத்தானே பார்க்க போகிறோம் !!). அது போல் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் முடி வளரும் இடங்கள், மற்றும் வளரும் விதம் வேறு. மார்பகங்கள் கிடையாது. தோலுக்கு அடியில் கொழுப்பு குறைவு, அதனால் வளைவுகள் இல்லை என்று சில “வெளிப்புற” வித்தியாசங்கள்.


பலமில்லா தசைகள், பெண் போல் மார்பு, மீசை குறைவு, தோலுக்கு அடியில் அதிக கொழுப்பு


பெண் என்றால் நீண்ட தலைமுடி. அது போல் குரலில் வேறுபாடு . தாடி, மீசை கிடையாது. இந்த வித்தியாசங்களுக்கு நாளமில்ல சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீரே முக்கிய காரணம் ஆகும். இது போல் பெண் என்றால் ஆண்களை விட மெல்லிய  (சக்தியுள்ள) எலும்புகள், தசைகள். பெண் என்றால் ஆணை விட பெரிய இடுப்பெலும்பு. (ஒரு எலும்பை வைத்து அது ஆணா, பெண்ணா என்று கூறிவிடலாம் - சில விதிவிலக்குகள் உண்டு - அதைத்தானே பார்க்க போகிறோம் !!). அது போல் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் முடி வளரும் இடங்கள், மற்றும் வளரும் விதம் வேறு. இது தவிர பெண்ணிற்கு மார்பகங்கள், தோலுக்கு அடியில் அதிக கொழுப்பு, அதனால் வளைவுகள் என்று சில “வெளிப்புற” வித்தியாசங்கள்.


5.                  ஆண்குறி


ஆண் அளவு


ஆணை விட சிறிது. (ஈடுபாடு இருந்தால்) செயல்பாடு உண்டு


கிடையாது 


6.                  பெண்குறிமூலம்


கிடையாது


கிடையாது


பெண் அளவு 


7.                  பெண் இனச்சேர்க்கை உறுப்பு


கிடையாது


கிடையாது
பெண் அளவு


8.                  சிறுநீர் கழிப்பது


ஆண் போல்


ஆண் போல்


பெண் போல்


9.                  மாதவிடாய்


கிடையாது


கிடையாது


மாதவிடாய் - உண்டு


10.              குழந்தை பாக்கியம்


உண்டு


உண்டு (பெண்ணை திருமணம் செய்தால்)


உண்டு


11.              உளவியல்:


ஆணாக
சிறிய வயதிலேயே இந்த குறைபாடு வந்துவிட்டால் அவர் உளவியல் ரீதியாக பெண்ணாக இருப்பார். 30 வயதிற்கு மேல் குறைபாடு ஆரம்பித்தது என்றால் ஆனாக இருப்பார். உடலுறவில் ஈடுபடலாம். குழந்தைபாக்கியம் உண்டு
பெண்ணாக

நாம் சென்ற இடுகையில் பார்த்த ஹைபோஸ்பேடியாசிஸ் பிரச்சனை மிகவும் சிக்கலானது அவர் (ஹைபோஸ்பேடியாசிஸினால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் ) ஒரு பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை பிறப்பது அரிது. அது போல் உறவிலும் ஈடுபடுவதில் சிக்கல் இருக்கும். உடல் ரீதியாக பல குறைபாடுகள் இருக்கும்.

ஆனால் இப்பொழுது பார்க்கும் பிரச்சனை (சாதாரண பெண்தன்மையுள்ள உடல்வாகு (Simple Constitutional Feminism)) மிக மிக எளிதாக வைத்தியம் பார்க்கவல்லது. இவர்களுக்கு பிரச்சனை என்னவென்றால் அதிக ஈஸ்டரஜன் மற்றும் குறைவான டெஸ்டோஸ்டிரோன். அதனால் அவர்களின் உடல்வாகும், (உடல்வாகுடன் இணைந்த குரலும், நடையும், பாவனைகளும்) பெண்போல் மாறிவிடும். அதன் பின்னர் அவர்கள் உளவியல் ரீதியாக தங்களை பெண்ணாக உணர ஆரம்பிக்கிறார்கள்.அல்லது வேறு சிலர் முதலில் உளவியல் ரீதியாக தங்களை பெண்ணாக உணர்வார்கள். அதன் பின் அவர்களின் இயக்குநீர் அளவு மாறும்.

இந்த இரண்டும் பெரும்பாலும் ”பிறந்தபின் பெற்ற குறைகளே” இவைகளை Acquired Defects என்றழைக்கிறார்கள். நாம் சென்ற இடுகையில் பார்த்த ஹைபோஸ்பேடியாசிஸ் என்பது பிறக்கும் போது கூடவே உடன் வரும் ஒரு பிரச்சனை - அது போன்றவைகளை Congenital defects என்றழைப்பார்கள்

இயக்குநீர் பிரச்சனைக்கு (ஹார்மோன் பிராப்ளம்) காரணங்கள் என்ன
  1. அதிக உடல் பருமன்
  2. கல்லீரல் பாதிக்கப்படுதல்
  3. மருந்துகள் (டிஜிடாலிஸ், ஏஸ்ட்ராமஸ்டின், ஸ்பைரினோலாக்டோன், மெதில் டோபா, சிமெடிடின் போன்ற மருந்துகள்)
  4. பசும்பாலில் அதிக அளவு ஈஸ்ட்ரஜன் (மாடு அதிக பால் கறக்க வேண்டுமென்பதற்காக சில பால் வியாபாரிகள் தாங்களே மாட்டிற்கு இயக்குநீர்  ஊசி போடுகிறார்கள்)
உளவியல் ரீதியாக இந்த பிரச்சனை ஆரம்பிக்க காரணம் என்ன
  1. வளர்ப்பு முறை - சில இடங்களில் பெண் குழந்தை இல்லை என்பதற்காக ஆண் குழந்தைக்கு ஜடை போட்டு, பொட்டு வைத்து, பெண் உடுப்பு எல்லாம் போட்டு அழகு பார்ப்பதன் பின் ஒரு விபரீதம் ஒளிந்துள்ளது என்பதை பலர் அறிவதில்லை
  2. (குடும்பத்தில் உள்ள) பெண்களுடன் மட்டுமே பழகி (ஆண் நண்பர்களுடன் அதிக பழக்கம் இல்லாமல்) வளர்வதால்
  3. சிறு வயதில் ஆண்கள் மேல் வெறுப்பு. சில இடங்களில் பெண்கள் மீது கூட அதீத வெறுப்பினால் இப்படி ஆகலாம்
வெறும் நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீரை அளிப்பது மூலமே இந்த நோயை (அல்லது நிலையை) சரி செய்து உளவியல் ரீதியாக சிகிச்சை அளித்தால் அந்த நபரை ஒரு முழு ஆணாக மாற்றலாம். எந்த அறுவை சிகிச்சையும் தேவைப்படாத நிலை இது. ஒரு பெண்னை திருமணம் செய்தால் குழந்தைபாக்கியம் இருக்கும். அதே போல் ஆண்மைக்குறைவையும் எளிதாக சரி செய்யலாம்.தாம்பத்திய உறவும் திருப்தியாகவே இருக்கும்.

ஆனால் சமுகத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் இது போன்ற சாதாரணமான நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் குறைபாடு உள்ளவர்கள் கூட (சில ஊசிகள் மற்றும் சில மணி நேர ”அறிவுரை”களால் பூரண குணம் பெறக்கூடியவர்கள் கூட) அறுவை சிகிச்சை செய்து ஆண்குறியை அகற்றி திருநங்கையாகிவிடுகிறார்கள் என்பது சோகமான விஷயம்.

அடுத்த இடுகை: இயக்குநீர் குறைபாடுகள் குறித்து சில தகவல்களும், இந்த இடுகையில் உங்களுக்கு தோன்றும் சந்தேகங்களுக்கு பதிலும் வரும்

இதே போல் ஒரு ஆணின் உடல் திடீரென ஒரு பெண்ணின் உடலைப்போல் சில புற்றுநோயகளில் மாறலாம் - அது (புற்று நோய் என்பதால்) சிறிது சிக்கலான விஷயம். அறுவை சிகிச்சை தேவை. அது குறித்து இனி வரும் இடுகையில் காண்போம்

Monday, March 09, 2009

கல்லூரி நினைவுகள் 2 - யாருடா அந்த பொண்ணு !!

முன்கதை :
கல்லூரி நினைவுகள் 1 - நான்காம் ஆண்டு

நான் இறுதி வரிசைக்கு மூன்று வரிசைகளுக்கு முன் வரிசையில் உட்கார்ந்து அந்த சாளரம் வழியாக வீசும் குளிர்ந்த காற்றை அனுபவித்து கொண்டே (நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பேரூந்து பயணத்தில் வீசும் காற்று எப்படி இருக்கும் என்று அனுபவப்பட்டவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்) வாக்மேனில் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன்.

“ஒரு விதை உயிர் கொண்டது, இரு நெஞ்சில் வேர் கொண்டது” “மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீர் உரையாடும் அதில் கவிதை அரங்கேறும்” போன்ற வைரவரிகளை ரசித்து கொண்டிருந்த போது எனக்கு பின்னால் அந்த சத்தம் கேட்டது

தொப், தொம், “தேரி மா கி.......”

நான் வாக்மேனின் காதுகேள் பொறியை (இயர் போன்) மாட்டியிருந்ததாலோ அல்லது பாடலில் லயித்திருந்ததாலோ சத்தம் வரும் திசையை நோக்கி திரும்ப சிறிது நேரமாகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

திரும்பி பார்த்தால் இரண்டு மாணவர்கள் உருண்டு, புரண்டு, மாறி மாறி அடித்து, உதைத்து, குத்தி, கத்தி ஒரே களேபாரம். இருவரும் தமிழர்கள் இல்லை என்பதி நீங்கள் அவர்கள் பயன்படுத்திய வார்த்தையை வைத்தே கண்டு பிடித்திருப்பீர்கள்

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் மாநில அரசால் நிரப்பப்படுவது கிடையாது. இதில் 15 % இடங்களுக்கான மாணவர்கள் மத்திய அரசால் நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படும் (தற்சமயம் மத்திய அரசின் சி.பி.எஸ்.சி இந்த தேர்வை நடத்துகிறது.)  மீதி 85 % இடங்கள் மட்டுமே மாநில அரசால் (சுகாதார துறையின் கீழ் இடங்கும் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தால்) நிரப்பப்படுகிறது. இந்த 15 சதவிகிதத்தில் பெரும்பாலும் வட இந்திய மாணவர்களே வருவார்கள். தமிழ் நாட்டு மாணவர்கள் மிகவும் குறைவு தான். இதற்கு பல காரணங்கள்
  1. அந்த நுழைவுத்தேர்வு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும்.
  2. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் சூட்சுமங்களை பீகார், மத்திய பிரதேச மற்றும் உத்திரப்பிரதேச காரர்களும் தில்லியின் அதிகார மையங்களும் அறிந்திருப்பது (இதற்கு மேல் வெளிப்படையாக கூற முடியாது. புரிந்து கொள்ளுங்கள்!!!)
மொத்தமாக தமிழகத்தில் சுமார் 1875 இளங்கலை மருத்துவ இடங்கள் இருக்கின்றன. இதில் 1595 மாநில அரசிற்கு. 280 மத்திய அரசிற்கு. (இந்த எண்ணிக்கை சிறிது மாறலாம்) இப்படியாக எங்களுடன் 12 வட இந்தியர்கள் படித்து வந்தார்கள். அவர்களில் இருவர் தான் அன்று பேரூந்தில் அடித்துக்கொண்டது

நானும் அருகிலிருந்த மற்றவர்களும் இருவரையும் விலக்கி, ஒருவனை கடைசிவரிசையில் இடப்புற ஓரத்திலும், அடுத்தவனை கடைசிக்கு முன்வரிசை வலப்புற ஓரத்திலும் அமர வைத்து விட்டு இடத்தில் வந்து உட்காரவும், எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த எங்கள் மருந்தியல் விரிவுரையாளர் கேட்டார் “யாருப்பா இப்படி அடிச்சுகிட்டது”

“சார் தினேஷும், படோலாவும் சார்”

“நார்தி பசங்களா” (வட இந்திய மாணவர்களை குறிக்க மருத்துவக்கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் சொல்)

“ஆமாம் சார்”

அப்படியே திரும்பியவர், வேறு யாராவது வட இந்திய பசங்கள் இருக்கிறார்களா என்று தேடியதில் எனக்கு வலது புறம் அமர்ந்திருந்த விவேக் லால் கண்ணில் பட்டான். (இன்று மரு.விவேக் லால் காச நோய் தடுப்பு திட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் மண்டல ஆலோசகர்)

“கண்னா லால்”

“யெஸ் சார்” என்று பவ்யமாக கூறியபடி மெதுவாக எழுந்தான்.

“யாருடா அந்த பொண்ணு”

“நோ சார், ஐ டோண்ட் திங்க திஸ் பைட் வாஸ் பார் எ கேர்ள் சார்” (இல்லை சார். இந்த சண்டை பொண்ணு மேட்டர் இல்லை என்று நினைக்கிறேன்) என்று திக்கி திணறி சமாளித்தாலும் அவன் திரு திரு என்று முழித்து (எப்படி இவர் சரியாக கண்டுபிடித்தார் என்று) அதிர்ச்சியில் சிலையாக நின்றது இன்று வரை எனக்கு ஞாபகம் இருக்கிறது

“லால் பையா, உன் வயசென்ன... இருபதா, இருபத்தொன்னா.. நீ பொறக்குறதுக்கு முன்னாலயே நான் பசங்கள கூட்டி ஊட்டிக்கும், சிம்லாவுக்கும் போயிருக்கேன். முப்பது வருசமா நான் பசங்க கூட டூர் போறேன் தெரியுமா”

விவேக் ஆச்சரியமும் சிறிது அசடுமாக பேந்த பேந்த முழிக்கிறான்

“ஏண்டா டூர் வந்த இடத்தில் இரண்டு பேரும் எதுக்குடா அடிச்சுவாங்க, வரப்பு தகராறா இல்லை ஈரான் ஈராக் பிரச்சனையா. சொல்லுடா யார்டா அந்த பொண்ணு”

விவேக் முகத்தில் லிட்டர் லிட்டராக வழிசல்

“சரி, திரும்ப போய் சேர்ற வரைக்கும் இரண்டு பேரும் ஒழுங்க இருக்கணும். இல்லை பாதி டூர்னு பாக்காம இங்க இருந்து மூணு டிக்கெட் எடுத்து இரண்டு பேரையும் நானேகூட்டிகிட்டு போய் காலேஜ்ல விட்டுருவேன்.”

சண்டை போட்ட படோலாவும் தினேஷும் உர் என்று முகத்தை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். படோலாவின் சட்டையில் இரு பொத்தான்களை காணவில்லை. தினேஷோ கையை உதறிக்கொண்டிருக்கிறான்.

என்னடா ஆச்சு என்று கையை பார்த்தால் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனில் ஜெர்ரியிடம் அடி வாங்கிய டாமின் மண்டை வீங்குமே அது போல் வலது கை மணிக்கட்டு பகுதி புஸ் என்று வீங்கியிருந்தது

... தொடரும்

பதிவர் குசும்பன் கவனத்திற்கு : வலது ஓரம் நான். எனக்கு அடுத்து வெள்ளைசட்டையுடன் இருப்பது இந்த இடுகையில் நான் குறிப்பிட்ட எங்களுடன் வந்த விரிவுரையாளர். இடது பக்கம் நிற்கும் ராஜ்குமாரும், பிரதீப்பும் என் வகுப்பு தோழர்கள் (இன்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்) இந்த படம் இதே சுற்றுலாவில் எடுக்கப்பட்டது தான் !!

Sunday, March 08, 2009

கல்லூரி நினைவுகள் 1 - நான்காம் ஆண்டு

ஒரு செப்டம்பர் சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் சில்லென்று காற்று வீசிக்கொண்டிருந்த தர்மபுரி-ஓசூர் நெடுஞ்சாலையில் நான்காம் ஆண்டு மாணவர்கள், மாணவிகள், மற்றும் ஆசிரியர்களுடன் அந்த பேரூந்து சீராக சென்று கொண்டிருந்த போது இந்த கதை துவங்குகிறது.

ஆறு வருட மருத்துவ இளங்கலை படிப்பில் நான்காவது ஆண்டின் முதல் ஆறு மாதங்களை “இறுதி ஆண்டிற்கு முந்தைய ஆண்டு” (ப்ரி பைனல் இயர்) என்பார்கள். நான்காம் ஆண்டின் இரண்டாவது 6 மாதங்களும், ஐந்தாம் ஆண்டும் “இறுதி ஆண்டு” (பைனல் இயர்) என்று அழைக்கப்படும்

இந்த ஆறு மாதங்களில் காது மூக்கு தொண்டை மருத்துவம் ஒரு மாதம், கண் மருத்துவம் ஒரு மாதம், சட்டம்சார் மருத்துவம் ஒரு மாதம், சமூக மருத்துவம் (பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவம்) ஒரு மாதம், மனநல மருத்துவம் ஒரு மாதம் மற்றும் தேர்வு விடுமுறை ஒரு மாதம் என்று மருத்துவ இளங்கலை படிக்கும் ஆறு வருடங்களில் குறைந்த அளவு படிக்க வேண்டியது இந்த ஆறு மாதங்களில் தான். அது தவிர பெரும்பாலான கல்லூரிகளில் காது மூக்கு தொண்டை மருத்துவம், கண் மருத்துவம் ஆகிய இரு பிரிவுகளிலும் செய்முறை தேர்வில் தேர்வாவதும் எளிது தான்.

மேலும் கல்லூரியில் சேர்ந்து மூன்று வருடம் முடிந்த நிலையில், மேலும் மூன்று வருடம் படிப்பு பாக்கி இருக்கும் ஒரு இடைப்பட்ட நேரம் இது. (கலைக்கல்லூரிகளில் இளங்கலை இரண்டாவது வருடத்தை போல்)

அது தவிர சட்டம் சார் மருத்துவம் படிக்கும் போது தூப்பாக்கி சுடுவது, தோட்டா எந்த வகை துப்பாக்கி (ரைபிளா, பிஸ்டலா) என்று எப்படி கண்டுபிடிப்பது, எலும்பை வைத்து ஆணா, பெண்ணா என்று கண்டு பிடிப்பது எப்படி போன்ற சுவாரசியமான விஷயங்களை சொல்லி தருவதும் இந்த சமயத்தில் தான்

அதே போல் சமூக மருத்துவ படிப்பின் ஒரு அங்கமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், பால் பதப்படுத்தும் நிலையம், உணவு கலப்பட ஆய்வு கூடங்கள், நகராட்சி மருத்துவ நிலையங்கள், காச நோய் திட்டம், நீர் சுத்திகரிப்பு மற்றும் நீரேற்று நிலையங்கள் என்று பல இடங்களுக்கும் அழைத்து செல்வார்கள். காலை அங்கு சென்ற பின்னர், கல்லூரி வாகன ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் மதியம் பிரியாணி வாங்கி கொடுத்து, எங்கள் காசில் கூடுதல் டீசல் போட்டு, உடன் வரும் ஆசிரியரிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிகூத்தாடி பிற்பகல் அப்படியே வண்டியை குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு, களக்காடு என்று திருப்பி விடுவோம்.

இறுதி ஆண்டின் போது பல பிரிவுகளாக பிரித்து செயல்முறை வகுப்பு நடப்பதால் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்வது கடினம். இறுதி ஆண்டிலும், அதன் பிறகு பயிற்சி மருத்துவராக இருக்கும் போதும் பெரும்பாலும் அந்த பிரிவை சேர்ந்தவர்களே (அந்த பிரிவு பேராசிரியர், ஆசிரியர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என்று) சுற்றுலா செல்வார்கள. இதை “யூனிட் டூர்” என்று கூறுவது உண்டு. எனவே மருத்துவ கல்லூரி வாசத்தில் மொத்த வகுப்பும் ஒன்று சேர்ந்து செல்லும் கடைசி சுற்றுலா என்றால் அது நான்காம் ஆண்டு செல்வது தான்.

எங்கள் நான்காம் ஆண்டு சுற்றுலாவிற்கு நாங்கள் தேர்ந்தெடுத்த இடங்கள் பெங்களூர் - மைசூர் - ஊட்டி. ஒரு நாள் பெங்களூர், இரண்டாம் நாள் மைசூர், இறுதியில் ஊட்டி என்று தீர்மானித்து முதலில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தோம்.

கல்லூரி சுற்றுலா செல்பவர்கள் கிளம்வதற்கென்ற காலம் காலமாக கடை பிடிக்கப்படும் நல்ல நேரமான வெள்ளி இரவு கிளம்பி பேரூந்து புறப்பட்ட உடனே ஆட்டம் ஆட துவங்கி கிட்டத்தட்ட மதுரை வரும் வரை டேப்பில் ஒலித்த அனைத்துப் பாடல்களுக்கும் நடனம் என்ற பெயரில் கையையும் காலையும் அங்கும் இங்கும் ஆட்டி ஒரே ஆட்டம் தான். அப்பொழுது ஹிட் ஆகியிருந்த “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” பாடல் டேப்பில் ஓடிய போது கூட நடனம் ஆடினார்கள் என்றால் உற்சாகம் எந்த அளவு என்று ஊகித்து கொள்ளுங்கள்

ஆடி களைத்து தூங்கி அடுத்த நாள் காலை தர்மபுரி தாண்டி பேரூந்து சென்று கொண்டிருந்தது. முன்வரிசை இருக்கைகளில் மாணவிகள். பின் வரிசைகளின் மாணவர்கள். நான் இறுதி வரிசைக்கு மூன்று வரிசைகளுக்கு முன் வரிசையில் உட்கார்ந்து அந்த சாளரம் வழியாக வீசும் குளிர்ந்த காற்றை அனுபவித்து கொண்டே (நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பேரூந்து பயணத்தில் வீசும் காற்று எப்படி இருக்கும் என்று அனுபவப்பட்டவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்) வாக்மேனில் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன்.

“ஒரு விதை உயிர் கொண்டது, இரு நெஞ்சில் வேர் கொண்டது” “மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீர் உரையாடும் அதில் கவிதை அரங்கேறும்” போன்ற வைரவரிகளை ரசித்து கொண்டிருந்த போது எனக்கு பின்னால் அந்த சத்தம் கேட்டது

தொப், தொம், “தேரி மா கி.......”

.... தொடர்ந்து வாசிக்க

கல்லூரி நினைவுகள் 2 - யாருடா அந்த பொண்ணு !!
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...