இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்
Showing newest 10 of 12 posts from May 2009. Show older posts
Showing newest 10 of 12 posts from May 2009. Show older posts

Sunday, May 31, 2009

புத்தகங்களும் நாட்டுடைமையும் - மேலும் சில கருத்துக்கள்

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் அரசின் நிதிநிலை அறிக்கையில் சில தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் சிறு சர்ச்சை ஒன்று எழுந்தது.

இந்த விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாதவர்களும் (அல்லது புரிதல் இருந்தாலும் அரசை திட்ட வேண்டும் / அரசாங்கத்தை குறை கூற வேண்டும் / அரசு நடைமுறைகளின் மேல் சேறிறைக்க வேண்டும் என்ற “அரிப்பு” இருப்பவர்களும்) ஊடகங்களில் இது குறித்து வாய்க்கு வந்ததையெல்லாம் உளறி (கைக்கு வந்ததை எல்லாம் தட்டச்சு செய்து) பல கட்டுரைகள் எழுதியதை பார்த்தோம்.

பதிவுலகில் நடந்தது தான் உச்சக்கட்ட நகைச்சுவை : புத்தகங்களின் நாட்டுடைமையை அரசு சாலை விரிவாக்கத்திற்காக நிலங்களை ஆர்ஜிதம் செய்வதைபோல் நினைத்துக்கொண்டு பதிவு / மறுமொழி எழுதிய கொடுமை கூட நடந்தது.

அப்பொழுது நான் எழுதியது புத்தகங்களும் நாட்டுடைமையும் : பதிவர் லக்கிலூக்கின் புத்தகம் நாட்டுடைமையாக்கப்பட்டால் ?? இங்கு உள்ளது. தற்போதைய செய்தியும், அது குறித்த விவாதமும் இறுதியில் உள்ளன

எனது நாட்டுடைமை குறித்த இடுகையை ஏறகனவே வாசித்திருந்தால் நேரடியாக இறுதிபகுதிக்கு செல்லலாம்

புத்தகம், காப்புரிமை பற்றி சில தகவல்களை பார்ப்போம். உதாரணத்திற்கு பதிவர் லக்கியின்(எழுத்தாளர் யுவகிருஷ்ணா)வின் “சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் ” புத்தகத்தை எடுத்துக்கொள்வோம்


இந்த புத்தகத்தை எழுதியது யார் : யுவகிருஷ்ணா


வெளியிடுவது யார் : கிழக்கு பதிப்பகம்


இதில் லாபம் எப்படி வரும் :
புத்தகம் எழுதும், தட்டச்சு செய்யும், வடிவமைக்கும், அச்சிடும், விளம்பரப்படுத்தும், விநியோகிக்கும் செலவு (தள்ளுபடி தரும் பணம்) போக மீதி இருக்கும் பணம் தான் லாபம்


லாபத்தில் யாருக்கு பங்கு :
இதில் பதிப்பகத்திற்கும் நூலாசிரியருக்கும் பங்கு
இப்பொழுது இந்த புத்தகத்தை கிழக்கு மட்டும் தான் வெளியிடமுடியும். யாருக்காவது இந்த புத்தகத்தை படிக்க வேண்டுமென்றால் கிழக்கில் மட்டும் தான் வாங்கி படிக்க முடியும்.

வேறு பதிப்பகங்கள் வெளியிட முடியாது (அனுமதி இல்லாமல் அச்சிடக்கூட முடியாது)

சரி, நாட்டுடைமை என்றால் என்ன :
நாட்டுடைமை என்றால் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகையை யுவகிருஷ்ணாவிற்கு அளித்து அவரது புத்தகங்களை யார் வேண்டுமென்றாலும் பதிப்பிக்கலாம் என்று ஆணை பிறப்பிப்பது

அப்படி ஆணை பிறப்பித்தபின் என்னவாகும் :
நான் அதே புத்தகத்தை மேப் லித்தோ காகிதத்தில் அச்சிட்டு ஒரு புத்தகம் 300 ரூபாய் என்று விற்கலாம். நீங்கள் அதை தங்க நிற மையில் அச்சிட்டு ஒரு புத்தகம் 1000 ரூபாய் என்று விற்கலாம். அசோகன் சார் அதை ”பாக்கெட் நாவலா”க தரலாம். அப்படி புத்தகத்தை அச்சிடும் யாரும் யுவகிருஷ்ணாவிற்கு பணம் அளிக்க வேண்டாம் !!

இதனால் (அதாவது ”சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகம்” நாட்டுடைமையாக்கப்படுவதால்) எழுத்தாளருக்கு (இந்த உதாரணத்தில் யுவகிருஷ்ணாவிற்கு) லாபமா நஷ்டமா : அது அரசு தரும் பணம் மற்றும் இது வரை அவரது புத்தகம் விற்கும் அளவை பொருத்தது.

உதாரணமாக

அவருக்கு அந்த புத்தக விற்பனையின் மூலம் வருடத்திற்கு 1 லட்சம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இருக்கும் போது அரசு 25 லட்சம் தந்து அந்த புத்தகத்தை நாட்டுடைமையாக்கினால் அவருக்கு லாபமே

ஆனால்


அவருக்கு அந்த புத்தக விற்பனையின் மூலம் வருடத்திற்கு 1 கோடி வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இருக்கும் போது அரசு 25 லட்சம் தந்து அந்த புத்தகத்தை நாட்டுடைமையாக்கினால் அவருக்கு நஷ்டமே
இதனால் (அதாவது ”சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகம்” நாட்டுடைமையாக்கப்படுவதால்) அரசிற்கு வரவா, செலவா : கண்டிப்பாக செலவு தான்
பிறகு ஏன் அரசாங்கம் இப்படி புத்தகங்களை நாட்டுடைமையாக்க வேண்டும் : இரு காரணங்கள்
1. அந்த புத்தகம் நல்ல புத்தகம். அனைவரும் படிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம்
2. எழுத்தாளருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம்


புத்தகம் நாட்டுடைமையாக்க பொதுவாக கடைபிடிக்கப்படும் நடைமுறை என்ன.
புத்தகங்களை நாட்டுடைமையாக்குவதால் அரசிற்கு எந்த வருவாயும் கிடையாது. செலவு மட்டும் தான். எனவே இந்த செலவை செய்வதற்கு அரசு சட்டசபையில் ஒப்புதல் வாங்க வேண்டும்

சட்டசபையில் ஓப்புதல் வாங்காமல் செலவு செய்ய முடியாதா
ஒரு அரசானது நினைத்து போல் செலவு செய்து விட முடியாது. அடுத்த நிதியாண்டில் தமிழக அரசு என்னென்ன செலவு செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்காக வருவாய் எப்படி வரும் என்பது குறித்து தமிழக அரசின் மாண்புமிகு நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை ஒன்றை சட்டசபையில் சமர்பிப்பார். அதை உறுப்பினர் ஏற்றுக்கொண்டபின்னர் 01.04.2009 முதல் 31.03.2010 வரை உள்ள செலவுகள் இதன் அடிப்படையில் தான் நடைபெறும்.

புத்தகம் நாட்டுடைமையாக்க மட்டும் ஏன் இப்படி
புத்தகங்களை நாட்டுடைமையாக்க மட்டும் அல்ல. அரசின் அனைத்து செலவுகளும் அந்த அறிக்கையில் இருக்கும்.
இந்த வருட அறிக்கையில் இருக்கும் சில உதாரணங்கள்
  1. தமிழகத்தில் வரும் நிதியாண்டு முதல் கூட்டுறவுப் பயிர்க்கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் அனைத்து விவசாயிகளுக்கும், இனிமேல் வட்டி கிடையவே கிடையாது. அந்த வட்டித் தொகையை அரசே செலுத்திவிடும். இதற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  2. கோவை மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்ந்து விரிவான அறிக்கை ஒன்றை அளிப்பதற்காக, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் திரு. மோகனகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது. மேலும், நபார்டு வங்கியின் நிதியுதவி பெற்று, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கோத்தயம் கிராமத்தில், சுமார் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் நல்லதங்காள் ஓடைக்குக் குறுக்கே அணை ஒன்று அமைக்கப்படும்
  3. வரும் நிதியாண்டில் மேலும் 2,500 நடுநிலைப் பள்ளிகளுக்குக் கணினிகள் வழங்க ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  4. நமது மாநிலத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்குக் கண்பார்வைப் பரிசோதனை செய்து, பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்குவதற்கான புதிய திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம், ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் வரும் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும்
நிதி அமைச்சர் அறிவித்து விட்டாரே, அப்படியானால் மாணவர்களுக்கு நாளையே கண்ணாடி வழங்கி விடுவார்களா
நிதி அமைச்சர் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த பின் அது குறித்து விவாதம் நடைபெறும். சபை உறுப்பினர்களின் கருத்துகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு அந்த அறிக்கை இறுதி வடிவம் பெறும்.
உதாரணமாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு நிதி ஒதுக்கப்படும் (அதனால் வேறு ஏதாவது திட்டத்திற்கு அளிக்கப்பட்ட நிதி குறையலாம்)


மாணவர்களுக்கு இவ்வளவு கோடி ஒதுக்கப்படுகிறது என்று மட்டும் அனுமதி வாங்கி பின்னர் அந்த பணத்திற்கு கண்ணாடியோ காது கேட்கும் கருவியோ வாங்கினால் என்ன
மக்களாட்சி எனபதன் கோட்பாடே மக்களின் பணம் எப்படி செலவழிக்கப்படுகிறது என்பது குறித்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் முடிவு செய்வது தானே தவிர அதிகாரிகள் முடிவு செய்வது அல்ல என்பதால் தான் இந்த விபரங்கள் நிதி நிலை அறிக்கையில் வருகிறது


நாட்டுடமையாக்குதல் என்பது பட்ஜெட்டுக்குள் வரவே கூடாது. பட்ஜெட்டில் அதற்கென ஒரு தொகையை ஒதுக்கிவிட்டு, நிபுணர் குழுவைக் கொண்டு செயல்படுத்தப்படவேண்டிய ஒரு விஷயம் இது” என்று ஒரு கருத்து உள்ளதே
அப்படி செய்யலாம். ஆனால் அதில் நம்பகத்தன்மை குறைவு. மேலும் அப்படி செய்வது மக்களாட்சியின் அடிப்படைக்கு விரோதமான செயல்

புத்தகங்களை நாட்டுடைமையாக்க 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மட்டும் கூறிவிட்டு எந்த புத்தகங்கள் என்று பின்னர் தீர்மாணிக்க முடியாதா
முடியும். ஆனால் அது தார்மிக ரீதியாக சரியான செயல் அல்ல.
பின்னர் ஏன் அப்படி செய்யாமல் ஆசிரியர்களின் பெயரை நிதிநிலை அறிக்கையில் கூறுகிறார்கள்
யாருடைய புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படுகின்றன (யாருடைய புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படவில்லை !!) என்ற முடிவை அந்த துறையில் உள்ள ஒரு அதிகாரி எடுப்பதற்கு பதிலாக மக்களாம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகள் எடுப்பது தான் மக்களாட்சி என்பதால் அந்த பெயர்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுகின்றன
உதாரணமாக 25 லட்சம் செலவழித்து யுவகிருஷ்ணாவின் புத்தகங்களை நாட்டுடைமையாக்குவதற்கு பதிலாக டேவிட் மெக்கின்சி ஒகில்வியின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று உறுப்பினர்களில் பலரும் கருத்து தெரிவித்தால் யுவகிருஷ்ணாவின் எழுத்துக்களுக்கு பதில் ஒகில்வியின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்கப்படலாம்

சரி, எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பெயரை நேற்று நிதிஅமைசச்ர் அறிவித்தாரே. நான் இன்று இரவு அவரது புத்தகங்கள் இரண்டை அச்சிட்டு நாளை சாந்தி திரையரங்கு முன்னால் விற்கலாமா
நன்றாக் கவனியுங்கள். எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி மட்டும் தான் கோரப்பட்டுள்ளது. இப்பொழுது நிதிஅமைச்சர் என்ன கூறியுள்ளார் என்று மறுபடியும் பாருங்கள்
நலன் பல குவிக்கும் நிதிநிலை அறிக்கையை அவையின் ஒப்புதலுக்காக இந்த அரசு முன்வைக்கிறது.
அப்படி என்றால் சட்ட சபை அனுமதி அளித்த பின்னர் தான் என்னால் அந்த புத்தகங்களை அச்சிட முடியுமா
சட்ட சபை அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் சட்ட சபை அனுமதி அளித்தால் மட்டும் போதாது
பிறகு என்ன வேண்டும்
முதலில் சட்டசபையில் இதற்கான அனுமதியை பெற வேண்டும்
அதன் பிறகு இதற்கான துறையிலிருந்து அந்த ஆசிரியரை தொடர்பு கொள்வார்கள். அல்லது ஆசிரியரின் குடும்பத்தினரை அல்லது வாரிசுகளை
எதற்கு
அவர்களிடமிருந்து அந்த உரிமங்களை முறைப்படி பெற
சட்ட சபையில் அறிவித்த பின்னர் அந்த ஆசிரியரின் வாரிசுகள் மறுக்க முடியுமா
கண்டிப்பாக மறுக்கலாம். சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது “இந்த நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன” என்ற அறிவிப்பு இல்லை. ஏன் சொல்லப்போனால் நேற்று நிதி கூட ஒதுக்கப்படவில்லை
இந்த நூல்களை நாட்டுடைமையாக்க நிதி ஒதுக்க அரசு அனுமதி கோரும் ஒரு செயல் தான் நேற்று நடைபெற்றது

சம்மந்தப்பட்ட குடும்பத்தினரின் அனுமதியை முறைப்படி பெற்ற பின்னரே அந்த குடும்பத்தினருக்கு அரசாங்கம் பணம் அளித்து அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்ற அறிவிப்பு வரும். அதன் பின்னர்தான் நீங்களோ நானோ அந்த புத்தகங்களை அச்சிடலாம்

இது குறித்த அரசின் நிலை
இன்றைய தலைமுறையினரும், எதிர்காலத் தலைமுறையினரும் எந்தவித சிரமமின்றி எளிய முறையில் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கும் திட்டம் தமிழக அரசால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இது அரசின் விருப்புரிமை அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. எந்தவிதக் கட்டாயமும் கிடையாது.
நாட்டுடமையாக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைத்து வரும் 'ராயல்டி' தொகை கிடைக்காமல் போய் வரும் என்பதற்காக ஒப்புதல் தரவில்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்டு விடுவதை அரசு வழக்கமாய் பின்பற்றி வருகிறது.
உதாரணமாக மூதறிஞர் ராஜாஜி, உ.வே.சா., அகிலன், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஆகியோரது நூல்களை நாட்டுடமையாக்கிட கடந்த காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள் நாட்டுடமையாக்கிட ஒப்புதல் தரவில்லை என்பதால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.
எனவே தற்போது நிதிநிலை அறிக்கையில் நாட்டுடைமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலிலே உள்ள சில நூலாசிரியர்களின் மரபுரிமையாளர், அவர்களின் நூல்களை நாட்டுடமையாக்க ஒப்புதல் தரவில்லை என்பதால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை இப்போதும் பொருந்தும்.
ஒரு வேளை சட்டசபையில் ஒரு ஆசிரியரின் புத்தகங்களை நாட்டுடைமையாக்க கடும் எதிர்ப்பு வருகிறது. அப்படியானால் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள மாட்டார்களா
ஒரு வேளை அனைத்து உறுப்பினர்களும் எதிர்க்கும் பட்சத்தில் அந்த ஆசிரியரின் நூல்களை நாட்டுடைமையாக்க சபை அனுமதி வழங்கவில்லை என்றால் ”அவையின் ஒப்புதலுக்காக அரசு முன்வைத்த போது” ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால் அதன் பிறகு அந்த ஆசிரியரின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்க நிதி அனுமதி இல்லை என்பதால் அவரது குடும்பத்தின்ரை தொடர்பு கொள்ள மாட்டார்கள்


குடும்பத்தினரின் அனுமதியை பெற்று அதன் பிறகு சட்டசபையின் ஒப்புதலுக்கு வைத்தால் என்ன
தமிழ் எழுத்தாளர்களில் வெகு சிலரே கோடிஸ்வரர்கள் !!! ஏனைய எழுத்தாளர்களின் நிதி நிலைமை மெச்சும் படி இல்லை.
இப்படி இருக்கும் போது ஒரு எழுத்தாளரின் குடும்பத்தினரிடம் வந்து பணம் தருகிறேன் (அதற்கு அனுமதி தாருங்கள்) என்று கூறிவிட்டு ஏதாவது காரணத்தால் அந்த வருடமோ அல்லது அதன் பின்னரோ நிதி ஒதுக்கீடு இல்லையென்றால் அந்த குடும்பத்தினரின் மனம் எவ்வளவு புண்படும் என்று யோசித்தீர்களா
அதனால் தான் நிதி ஓதுக்கீடு முடிந்த பின்னர் அனுமதி கேட்கிறார்கள். குடும்பத்தினர் அனுமதி அளித்தால் 100 சதம் அவர்களுக்கு பணம் தரலாம் என்ற உத்திரவாதம் இருக்கிறதல்லவா

உங்களுக்கு அடுத்த மாதம் சிறிது பணம் வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வருவது உறுதியில்லை. உங்கள் மகனோ மகளோ ஒரு பொருள் கேட்கிறார்கள்.
நீங்கள் என்ன செய்வீர்கள்
  • 1. பணம் வந்த பின்னர் பணத்துடன் மகனை / மகளை கடைக்கு அழைத்து செல்வீர்களா
  • அல்லது
  • 2. பணம் வருவது உறுதியில்லை என்று தெரிந்தும் மகனை கடைக்கு அழைத்து சென்று காட்டி தேர்ந்தெடுக்க சொல்வீர்களா
அரசு (ஏழ்மையில் இருக்கும் ஒரு எழுத்தாளரின் குடும்பத்திற்கு) என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்

இது குறித்து பதிவர் பத்ரியின் அவர்கள் ஒரு பதிவு (நாட்டுடமை குழப்பம் ) எழுதியுள்ளார். அதில் உள்ள சில கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை. அவை குறித்த என் கருத்துக்கள்
//நேற்று நடந்தது தேவையில்லாத குழப்பம். அரசு, இது எப்போதும் தாங்கள் செய்யும் ஒன்றுதான் என்றும், மரபுரிமை உடையவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தாங்கள் வற்புறுத்தமாட்டோம் என்றும் சொல்வது அபத்தம்.//
மன்னிக்க வேண்டும்
இதில் அபத்தம் எதுவும் இல்லை என்பது என் கருத்து

நேற்று வெளியிடப்பட்டது “இந்த நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன” என்ற அறிவிப்பு இல்லை. ஏன் சொல்லப்போனால் நேற்று நிதி கூட ஒதுக்கப்படவில்லை. இந்த நூல்களை நாட்டுடைமையாக்க நிதி ஒதுக்க அரசு அனுமதி கோரும் ஒரு செயல் தான் நேற்று நடைபெற்றது. இதை அபத்தம் என்று கூறுவது என்னைப்பொருத்த வரையில் ஏற்புடையது அல்ல

சம்மந்தப்பட்ட குடும்பத்தினரின் அனுமதியை முறைப்படி பெற்ற பின்னரே அந்த குடும்பத்தினருக்கு அரசாங்கம் பணம் அளித்து அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்ற அறிவிப்பு வரும்.

இப்படி நிதி ஒதுக்கப்பட்ட பின்னர் தான் அந்த துறையிலிருந்து அந்த ஆசிரியரின் குடும்பத்தினரை / வாரிசுகளை தொடர்பு கொண்டு சம்மதம் கேட்பார்கள். அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் விட்டு விட்டு அடுத்த எழுத்தாளரை தேடிபோய்விடுவார்கள் (இந்த வருடம் அல்லது அடுத்த வருடம்)

உண்மையில் அபத்தம் என்னவென்றால் இப்படி அரசிடமிருந்து தனிப்பட்ட கடிதம் வரும் வரை காத்திருக்காமல் இருவர் நேற்று விளம்பரம் தேடியது தான்.
//இது ஓர் opt-out முறையாக இருக்கக்கூடாது. Opt-in ஆக இருக்கவேண்டும்.//
இது எப்படி opt-out ஆகியது என்று தெரியவில்லை. ஒவ்வொருவரிடமிருந்தும் தனிப்பட்ட அனுமதி வாங்கப்பட்ட பின்னரே ஆணை வெளியிடப்படும். ஆக அரசுடைமை என்பது opt in முறையிலேயே நடக்கிறது.
//3. அரசு ஒருவருடைய நூலை நாட்டுடமையாக்க முடிவெடுத்தால், முதலில் மரபுரிமை உள்ளவர்களை அணுகவேண்டும். பேச்சளவில் அவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்தபின்னரே அவர்களது பெயர்களை வெளிவிட வேண்டும்.//
இந்த நடைமுறை தான் இப்பொழுது கடைபிடிக்கப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்குவதற்கு அனுமதி கோரப்பட்டதை வைத்து ஏதோ புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது போல் ஊடகங்களும் பதிவர்களும் ஏன் எழுதுகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை.

நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கப்படாமல் எப்படி அந்த துறை அதிகாரி அந்த வாரிசு தாரருடன் பேச முடியும். நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு 10 கணினி வாங்க வேண்டுமென்றால் அதற்கான பணம் ஒதுக்கப்படுமுன்னரே கணினி நிறுவனத்துடன் பேச உங்கள் ஊழியருக்கு அனுமதி உண்டா
//நேற்று நடந்தது தேவையில்லாத குழப்பம்.//
உண்மை. ஆனால் குழப்பம் விளைவித்தது அரசல்ல. இருவரின் வாரிசுகளே என்பது தான் நிஜம்.

இப்பொழுது நேற்றைய மாலை மலர் செய்தியை பாருங்கள்
மரபுரிமையாளர்களுக்கு ரூ. 84 லட்சம் பரிவு தொகை: 22 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை; கருணாநிதி உத்தரவு Chennai சனிக்கிழமை, மே 30, 3:18 PM IST மதிப்பீடு இல்லை
சென்னை, மே. 30-
22 தமிழர் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு மரபுரிமை யாளர்களுக்கு ரூ. 84 லட்சம் பரிவு தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணா நிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிறந்த தமிழறிஞர்களின் நூல்கள் அனைவரையும் சென்றடைதல் வேண்டும் எனும் சீரிய நோக்கில் அந்நூல்களை நாட்டுடை மையாக்கி, அவற்றைப் படைத்த தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்களுக்குப் பரிவுத் தொகை வழங்கும் திட்டம் அரசால் செயற்படுத் தப்பட்டு வருகிறது.
2006-இல் இந்த அரசு பொறுப்பேற்றபின் பரிதி மாற்கலைஞர், புலவர் குழந்தை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவ நாதம் முதலான 65 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களின் மரபுரிமையர்களுக்கு 4 கோடியே 86 லட்சம் ரூபாய் பரிவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 2009-2010ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 28 தமிழ்ச்சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையருக்கு பரிவுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வண்ணம்
  1. குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா,
  2. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்,
  3. இராய சொக்கலிங்கனார்,
  4. முனைவர் ச.அகத்திய லிங்கம்,
  5. பாவலர் நாரா.நாச்சியப்பன்,
  6. புலியூர்க்கேசிகன்,
  7. சின்ன அண்ணாமலை,
  8. வடுவூர் துரைசாமி அய்யங்கார்,
  9. பேராசிரியர் மு.இராகவையங்கார்
ஆகிய 9 தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை அரசு டைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிவுத் தொகை வழங்கப்படும் என்றும்,
  1. பேராசிரியர் வையா புரிப்பிள்ளை,
  2. பம்மல் சம்பந்தனார்,
  3. டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார்,
  4. மு.சு.பூரணலிங்கம்பிள்ளை,
  5. தொ.மு.பாஸ்கரத் தொண் டைமான்,
  6. பாலூர் கண்ணப்ப முதலியார்,
  7. வை.மு.கோதை நாயகி,
  8. பூவை எஸ்.ஆறுமுகம்,
  9. என்.வி.கலைமணி,
  10. கவிஞர் முருகுசுந்தரம்,
  11. புலவர் த.கோவேந்தன்,
  12. திருக்குறள்மணி அ.க.நவநீத கிருட்டிணன்
    ஆகிய 12 தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை அரசுடைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா ரூ.3 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்படும் என்றும், முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
    இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் படைப்புகள் அரசுடைமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்ட 28 தமிழ் அறிஞர்களில் எஞ்சிய 7 தமிழ் அறிஞர்களில் கவியரசு கண்ணதாசன், டாக்டர் மு.வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, லட்சுமி ஆகிய 5 தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்குவதற்கு அவர்களுடைய மரபுரிமையர்கள் இசைவு அளிக்கவில்லை.
    ஜெ.ஆர்.ரங்கராஜூ, ஜமதக்னி ஆகிய இருவரின் மரபுரிமையர்களிடம் சான்றாவணம் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    மேலும் சாகித்ய அகாடமி விருது மற்றும் தமிழக அரசின் விருது ஆகியவைகளைப் பெற்றுள்ள சிறந்த தமிழ் எழுத்தாளரான ராஜம்கிருஷ்ணன், உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது வேண்டுகோளை ஏற்று தனி நேர்வாகக் கருதி அவரது படைப்புகளை அரசுடைமையாக்கி மரபுரிமையர் ஒருவருமில்லாத காரணத்தால் அவருக்கு 3 லட்சம் ரூபாய் பரிவுத் தொகை வழங்கிடவும் முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
    இந்த ஆணைகளின் பயனாக மொத்தம் 22 தமிழ் அறிஞர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு மொத்தம் 84 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்படுகிறது.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நிதி ஒதுக்கிவிட்டு அனுமதி பெறாமல் அனுமதி பெற்றபின்னர் நிதி ஒதுக்கீடு செய்தால் ராஜம் கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களுக்கு 2011ல் தான் இந்த பணம் கிடைக்கும் என்ற எளிய உண்மையை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறதா

    அடுத்த முக்கிய விஷயம் : ஜெ.ஆர்.ரங்கராஜூ, ஜமதக்னி ஆகிய இருவரின் மரபுரிமையர்களிடம் சான்றாவணம் பெறவில்லை. அதனால் அவர்களின் படைப்புகள் நாட்டுடைமை ஆவதற்கு ஆணை பிறப்பிக்கப்படவில்லை

    இப்பொழுது உங்களுக்கான கேள்விகள்

    1. தற்பொதைய அரசின் நடைமுறை - நிதி ஒதுக்கீடு செய்து விட்டு அனுமதி கேட்பதில் - என்ன தவறு இருக்கிறது. இது சரியான நடைமுறை தானே
    2. டாக்டர் மு.வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, லட்சுமி ஆகியவர்களின் வாரிசுகள் அனுமதி மறுத்தவிதத்திற்கும், கண்ணதாசன், சுந்தர ராமசாமி ஆகியோரின் வாரிசுகள் அனுமதி மறுத்த விதத்திற்கு வேறுபாடு தெரிகிறதா
    3. தார்மீக ரீதியாக எது (எந்த வாரிசு தாரர் கடைபிடித்த நடைமுறை) சரி என்று நினைக்கிறீர்கள்??
    4. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவுடனேயே (நாட்டுடைமை அறிவிப்பு வருவதற்கு முன்னரே - கடந்த மூன்று மாதங்களில்) யாராவது சாண்டில்யனில் நாவல்களை அச்சிட்டு விற்றனரா
    5. டாக்டர் மு.வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் லட்சுமி ஆகியவர்களின் வாரிசுகள் அனுமதி மறுத்தது போல் செயல்படுவதன் மூலம் (முறையான வழிமுறையில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்ததன் மூலம்) கண்ணதாசன், சுந்தர ராமசாமி ஆகியோரின் வாரிசுகளளுக்கு ஏதாவது நஷ்டம் ஏற்படுமா.
    6. தங்களின் சுயநலத்திற்காக நன்றாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அரசு நடைமுறையை மாற்றினால் அதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றபோதும் இது போல் மலிவு விலை விளம்பரம் தேவைதானா
    7. அடிப்படை விபரங்கள் எதுவும் தெரியாமல் / தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் தவறான கருத்துக்களை பரப்பும் ஊடகங்கள் இனியாவது திருந்துவார்களா
    8. ஊடகங்களில் வரும் செய்தியை ஆராய்ந்து பார்க்காமல் பதிவில் / மறுமொழியில் எழுதும் பதிவர்கள் மாறுவார்களா

    Friday, May 29, 2009

    இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய் - பறவை காய்ச்சல் / பன்றி காய்ச்சல் /

    நேற்று, 28 மே 2009, கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் “இன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்” (Influenza A(H1N1) Pandemic) என்ற தலைப்பில் எனது உரையும் அதன் பின்னர் தொடர்ந்த கலந்துரையாடலும் ஒலிவடிவில் இங்கே கேட்கலாம்.



    Monday, May 25, 2009

    மருத்துவத்துறை தொடர்பாக ரவிசங்கர் அவர்களின் வினாக்களுக்கு விடைகள்

    மாற்றங்களுடன் கூடிய மீள்பதிவு

    இந்த தொடரின் முந்தைய இடுகைகள்
    எனது முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் ரவிசங்கர் அவர்கள் சில வினாக்களை எழுப்பியிருந்தார்.

    1. உங்கள் கணக்குப் படி தமிழகத்தில் போதுமான MBBS மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கே வேலைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அப்படி என்றால் இன்னும் புதிது புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் திறப்பதால் அந்த மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பாதிப்பு உண்டா?
    இல்லை. போதுமான மருத்துவர்கள் இல்லை !!!
    அப்படி பொருள்பட நான் எழுதவில்லை. இன்னும் அதிகம் மருத்துவர்கள் (எம்.பி.பி.எஸ்) வேண்டும்
    அதைவிட அதிகம் சிறப்பு மருத்துவர்கள் வேண்டும்.

    எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு வேலைக்குத் தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் மருத்துவக்கல்லூரிகளில் அதிகம் எம்.பி.பி.எஸ் இருக்கைகள் / இடங்கள் இருப்பதல்ல. அதற்கு காரணம் போதுமான அளவு பட்ட மேற்படிப்பு இடங்கள் இல்லாததால்

    2. மேற்கண்ட காரணத்தால் புதிய கல்லூரிகள் திறப்பைத் தாமதப்படுத்தினால், அது ஓரிரு மதிப்பெண் குறைவினால் மருத்துவப் படிப்பைப் படிக்க இயலாமல் போகும் மாணவர்களுக்கு இழப்பு தானே? ஆர்வமும் நியாயமான தகுதியும் உள்ளவர்கள் படிக்கச் செய்ய வேண்டும் தானே? இல்லை, வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கூடுதல் இடங்களை ஏற்படுத்துவது தவறா? வேலை கிடைக்குமா என்ற கண்ணோட்டத்தை அரசு வேலை, தமிழ்நாட்டுக்குள் வேலை என்பதற்குள் தான் அடக்க வேண்டுமா? பிற மாநில, நாட்டு வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன?
    நான் மேலே கூறியுள்ள பதில் படி, இன்னமும் அதிகம் மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்.

    அதே போல் தற்பொழுது உள்ள மருத்துவக்கல்லூரிகளிலும் பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகப்படுத்தப்படவேண்டும்.

    பிற நாடுகளில் வேலைவாய்ப்பு இருந்தாலுல் நுழைவது சிரமம் என்று கேள்விப்பட்டேன்.

    3. மென்பொருள் துறை வளர்ச்சி, பொறியியில் கல்வி நாட்டம் காரணமாக, ஆகச் சிறந்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் நாட்டம் குறைந்து வருவதாகச் சொல்லப் படும் போக்கு பற்றி?
    உண்மை

    இப்படி ஆகச் சிறந்த மாணவர்கள் விடுத்துச் செல்வதால் பெரிய இழப்பு இல்லை என்று நினைக்கிறீர்களா?
    ஆகச்சிறந்த மாணவர்கள் பொருளாதார காரணங்களினால் விடுத்துச்செல்வதால் இழப்புதான்

    மருத்துவர்களுக்குப் போதிய வேலை வாய்ப்புகள், வசதிகள் வரா நிலையில் வருங்காலத்தில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் சேரா நிலை வரக்கூடுமா?
    நான் இந்த இடுகைத்தொடரின் முதல் பதிவில் கூறியபடி, இந்த நிலை நீடித்தால் முதல் மற்றும் இரண்டாம் பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மூன்றாம் பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை குறையும்.

    அதாவது கடந்த முப்பது வருடங்களாகத்தான் மூன்றாவது பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை மருத்துவக்கல்லூரிகளில் அதிகம் இருக்கிறது. இந்த நிலை மாறி மருத்துவம் என்பது மேட்டுக்குடியினரின் படிப்பு (விமான ஓட்டி படிப்பு போல்) ஆகி விடக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறது

    இல்லை, தமிழ்நாட்டு மாணவர்கள் சேரா நிலையிலும் பிற மாநில மாணவர்களுக்கு அந்த இடங்களை ஒதுக்க இயலுமா?
    தமிழ் நாட்டில் சேருவதற்கு முதல் மற்றும் இரண்டாம் பிரிவு மாணவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள்

    பிற மாநிலங்களில் இன்னும் மருத்துவப் படிப்பு மோகம் இருக்கிறது என்றே நினைக்கிறேன்..இல்லை, இந்தியா எங்கும் மோகம் குறைந்து வருகிறதா?
    பிற மாநிலங்களில் (வட மாநிலங்களில்) மருத்துவப்படிப்பு என்பது இன்னமும் மேட்டுக்குடியினரின் படிப்பாகத்தான் இருக்கிறது.எனவே மோகம் இருக்கிறது. தமிழகத்தில் கூட நடுத்தர வர்க்கத்தினரிடம் தான் மோகம் குறைகிறதே தவிர மேட்டுக்குடியினரின் மோகம் குறையவில்லை

    இந்த வருடம் (2009) நடுத்தர வர்க்கத்தில் இருந்து கூட மருத்துவகல்லூரிக்கு நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் !!

    4. இந்திய அளவில் ஒப்பிடுகையில் தமிழக மருத்துவக் கல்லூரிகளின் தரம் எப்படி இருக்கிறது? இந்தியாவில் மருத்துவப் படிப்புக்குச் சிறந்த இடங்கள் எவை?
    தமிழக மருத்துவக்கல்லூரிகளின் தரம் சிறப்பாகவே இருக்கிறது.

    5. மேற்படிப்பு படித்த மாணவர்கள் தான் பற்றாக்குறை என்றால், ஏன் அந்த படிப்புக்கான இடங்களைக் கூட்டக் கூடாது? திரும்பவும் ஆசிரியர், வளங்கள் போதாமை தான் காரணமா?
    ஆசிரியர் , வளங்கள் என்ற அளவில் நாம் போதுமான அளவு இருந்தாலும், உள்கட்டமைப்பில் சில சின்ன விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. உதாரணமாக நூலகங்களில் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு சஞ்சிகைகள் போன்ற படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள்.

    இதற்கு காரணம் என்ன வென்றால் பட்ட மேற்படிப்பில் 5 இடங்கள் கூடியிருக்கிறது என்பது (புதிதாக மருத்துவக்கல்லூரி அமைப்பது போல்) அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக இல்லாமல் இருப்பதுதான்

    6. MBBS, மேற்படிப்பு படித்த மாணவர்களுக்கு அரசு, தனியார் இடையே ஊதிய விகிதங்கள் எவ்வாறு வேறுபடுகிறது?
    எம்.பி.பி.எஸ் பொறுத்த வரை தனியாரை விட (சுமார் 8,000 முதல் 15,000 வரை) அரசில் அதிகம் சம்பளம்

    ஆனால் மேற்படிப்பு படுத்தால் தமிழக அரசில் வெறும் 2 வருடாந்திர ஊதிய உயர்வு மட்டும் தான் (அதாவது 275 x 2)

    அதற்கு மேல் சிறப்பு படிப்பு படித்தாலும் எந்த ஊதிய உயர்வும் கிடையாது :( :(

    உதாரணமாக

    5 வருட அனுபவம் உள்ள எம்.பி.பி.எஸ் மருத்துவர்

    தனியார் - சுமார் 15,000
    மத்திய அரசு - சுமார் 35000
    மாநில அரசு - சுமார் 22000

    5 வருட அனுபவம் உள்ள எம்.டி மருத்துவர்

    தனியார் - சுமார் 35,000
    மத்திய அரசு - சுமார் 45000
    மாநில அரசு - சுமார் 24000

    5 வருட அனுபவம் உள்ள டி.எம் மருத்துவர்

    தனியார் - சுமார் 1,00,000
    மத்திய அரசு - சுமார் 50000
    மாநில அரசு - சுமார் 24000

    இப்பொழுது தெரிகிறதா, ஏன் தமிழக அரசு பணியில் சேர சிறப்பு மருத்துவர்கள் வருவதில்லை, ஆனால் தேவைக்கு அதிகமாக எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் வருகிறார்கள்

    மிகச் சிறந்த நிபுணருக்கு தனியாரில் கூடுதல் ஊதியம் கிடைக்கலாமாக இருக்கும்.
    பதில் மேலே

    ஆனால், இன்று மேற்படிப்பு முடித்து வரும் ஒருவருக்குத் தனியார், அரசு இடையே வேலைவாய்ப்பு, ஊதிய விகித வேறுபாடு என்ன?
    பதில் மேலே

    தனியார் அளவு இல்லாவிட்டாலும் மத்திய அரசு அளவிற்காவது ஊதியம் உயர்த்தப்படவேண்டும்

    அரசை விடுத்து தனியாரை நாடுவதற்கு ஊதியம் தவிர்த்த பிற காரணங்கள் உளவா?
    கண்டிப்பாக
    01. வரையறுக்கப்பட்ட பணி நேரம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்திற்கு 99 முதல் 123 மணி வரை நேரம் (வேலை இல்லாத நேரம் என்பது வாரத்திற்கு 45 மணி நேரம் மட்டுமே)
    02. தொடர்ந்து 33 மணி நேரம் பணி கிடையாது. (முந்தைய பதிவின் பின்னூட்டத்தை பார்க்கவும்)
    03. ஞாயிறு விடுப்பு உண்டு
    04. கடைநிலை ஊழியர் உங்களின் பெயரை சொல்லி லஞ்சம் வாங்க மாட்டார்
    05. அதை நீங்கள் தட்டி கேட்டால் கொலை மிரட்டல் வராது


    06. உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உங்களை மிரட்ட மாட்டார்கள்
    07. மாற்றல் இருக்காது
    08. அதிகம் வேலை செய்தால் அதிகம் ஊதியம் கிடைக்கும்
    09. நோயாளிக்கு மட்டும் வைத்தியம் பார்த்தால் போதும்
    10. சட்டம் சார் வழக்குகளுக்காக (மெடிக்கோ லீகல் ) நீதிமன்றம் போக வேண்டாம் (எந்த ஊர் நீதிமன்றம் என்றாலும் கை காசை செலவழித்துதான் போக வேண்டும்)
    11. பல்ஸ் போலியோ என்று 2 வாரம் தூக்கத்தை தொலைத்து அலைய வேண்டாம்
    12. உட்காருவதற்கு நல்ல நாற்காலி இருக்கும்.
    13. குடும்ப நல அறுவைசிகிச்சை, வருமுன் காப்போம், காச நோய் தடுப்பு, தொழுநோய் தடுப்பு போன்ற எந்த திட்டமும் கிடையாது
    14. பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம். அதன் பின் அதற்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம்.

    அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்களை கேட்டால் இன்னும் நிறைய சொல்வார்கள்

    7. BDS பல் மருத்துவம் முடித்த தோழிகள் சிலர் 3,000 ரூபாய் சம்பளத்துக்கு எல்லாம் வேலை பார்த்தார்கள் !! (பொறியியல் மாணவர்கள் சிலரும் இந்தச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பதுண்டு) MBBS மாணவர்களை விட இவர்களின் நிலை கவலைக்கிடமோ என்று தோன்றியது.
    கண்டிப்பாக. அதற்கு காரணம் இத்துறை குறித்து இன்னமும் போதிய விழிப்புணர்வு இல்லாததே.

    நேற்று எங்கள் வீட்டில் துணி துவைக்கும் பொறி பழுதடைந்து விட்டது. உத்தரவாதகாலம் (வார்த்தை புரியாவிட்டால் மட்டும் பின்னூட்டத்தில் கேட்கவும்) முடிந்துவிட்டது. வாங்கிய கடைக்கு தொலைபேசியதில் பழுது நீக்கும் பொறியாளர் வந்து சோதித்து விட்டு, பரிசோதனை கட்டணம் 350 ரூபாய் கேட்டார். அதன் பின் வடிகட்டி (பில்டர்) மாற்ற ரூபாய் 550 செலவானது. கணினி பழுது நீக்குபவர்கள் வீட்டிற்கு வந்தால் 250 ரூபாய்க்கு குறைவாக வாங்குவதில்லை. (இதனால் தான் பலரும் கணினியில் பிரச்சனை என்றால் கணினி அறிவு உள்ள நண்பர்களை அழைத்து ஒரு காப்பியுடன் முடித்து விடுவது வேறு விஷயம் :) :) )

    MBBS அல்லா, BDS, physiotherapy படிப்புகள், இவற்றில் தனியார் கல்லூரிகளின் பெருக்கம், அவற்றின் தரம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து உங்கள் பார்வை என்ன?
    உங்கள் இல்லத்தில் யாராவது பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலியக்க மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) வீட்டிற்கு வந்து சிகிச்சை அளித்தால் 350 ரூபாய் கேட்டால் தருவீர்களா ??

    அல்லது பேச்சு குறைபாடு உள்ள குழந்தைக்கு பேச்சு பிறழ்வு சிகிச்சை நிபுனர் (ஸ்பீச் தெரபிஸ்ட்) ஒரு முறை வைத்தியம் பார்க்க 350 வாங்கினால் அடுத்த முறை கூப்பிடுவீர்களா.

    இன்று எங்கள் வீட்டில் 12 ஆம் வகுப்பு முடித்த ஒருவன் இருந்தால் அவன் எந்த துறையை தேர்ந்தெடுப்பான்.


    இந்த தொடரின் அடுத்த இடுகைகள்

    Saturday, May 23, 2009

    இதய நோய் மருந்து தட்டுப்பாடு தமிழகத்தில் இல்லை

    மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை : செய்தி வெளியீடு எண்.237 நாள்.14.5.2009

    பத்திரிக்கை செய்தி

    இதய நோய் உள்ளவர்கள் நாள்தோறும் பயன்படுத்தும் “லெனாக்ஸின்” என்ற மாத்திரைக்கு தமிழ்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக சில நாளேடுகளில் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த மருந்து “டிஜாக்ஸின்” என்ற மூல மருந்துப் பொருளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்தாகும். ஒரு தயாரிப்பாளர் இந்த மருந்தினை “டிக்ஸின்” என்ற பெயரில் விற்பனை செய்கிறார்.

    தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் இந்த “லெனாக்ஸின்” மற்றும் “டிக்ஸின்” மாத்திரைகள் தேவையான அளவு மருந்து தயாரிப்பாளர்களின் மொத்த விற்பனையாளர்களிடம் கையிருப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் அனைத்து மருந்து கிடங்குகளிலும் டிஜாக்ஸின் மாத்திரை போதிய அளவில் கையிருப்பு உள்ளது. இந்த மருந்து, மருத்துவ சேவை கழகத்தின் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    இதய நோய் உள்ளவர்கள் இந்த மருந்து தேவையெனில், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் நடைமுறையில் உள்ள விதிகளுக்குட்பட்டு இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் மருந்துக் கடைகளில் இம்மருந்தினை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இம்மருந்து இருப்பு குறித்து அவ்வப்போது தகவல் பெற விரும்புவோர்கள், மருந்து கட்டுப்பாடு இயக்குநர், சென்னை-6 அலுவலகத்தை தொலைபேசி எண் 044-24321830-ஐ தொடர்பு கொண்டும் அல்லது மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மருந்து தகவல் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை (Drug Information and PharmacoVigilance Center) தொலைபேசி எண் 044-24338421-ஐ தொடர்பு கொண்டும் தகவல்களை பெறலாம்.

    செய்தித் தாள்களில் வெளிவந்துள்ள செய்திகளின்படி, தமிழ்நாட்டில் “லெனாக்ஸின்” மற்றும் “டிக்ஸின்” மருந்துகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் தற்போது இல்லை.

    ஒம்/..
    திரு வி. கே. சுப்புராஜ் இ.ஆ.ப.,
    முதன்மைச் செயலர்,
    மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை.

    Sunday, May 17, 2009

    ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் - 4 - உண்மையான உயர்வு எவ்வளவு

    ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் குறித்த தொடர் பதிவுகளில் இது மூன்றாவது பதிவு. முதல் பதிவை இங்கும் மற்றும் இரண்டாவது பதிவை இங்கும் மற்றும் மூன்றாவது பதிவை (விடுமுறைகள் மாற்றம்) இங்கும் காணலாம்

    என்னவோ அரசு ஊழியர்களின் சம்பளம் பல மடங்கு அதிகரித்து உள்ளது போலவும் இதனால் அரசே திவாலாகும் என்பது போலவும் சில ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள்.

    சரி சம்பளம் எவ்வளவு கூடியுள்ளது என்று தான் பார்ப்போமே

    ஆறாவது ஊதியக்குழுவின் அறிக்கையில் 43 மற்றும் 44ஆம் பக்கங்களில் உள்ள அட்டவனை இது


    தற்பொழுது நடைமுறையில் உள்ளது
    ஆறாவது ஊதிய குழு பரிந்துரை
    சம்பள ஏற்றமுறை
    சம்பள ஏற்றமுறை
    சம்பள பட்டை
    சம்பள பட்டை
    தரச்சம்பளம்
    S-1* 2550-55-2660-60-3200 -1S 4440-7440 1300
    S-2* 2610-60-3150-65-3540 -1S 4440-7440 1400
    S-2A* 2610-60-2910-65-3300-70-4000 -1S 4440-7400 1600
    S-3* 2650-65-3300-70-4000 -1S 4440-7440 1650
    S-4 2750-70-3800-75-4400 PB-1 4860-20200 1800
    S-5 3050-75-3950-80-4590 PB-1 4860-20200 1900
    S-6 3200-85-4900 PB-1 4860-20200 2000
    S-7 4000-100-6000 PB-1 4860-20200 2400
    S-8 4500-125-7000 PB-1 4860-20200 2800
    S-9 5000-150-8000 PB-2 8700-34800 4200
    S-10 5500-175-9000 PB-2 8700-34800 4200
    S-11 6500-200-6900 PB-2 8700-34800 4200
    S-12 6500-200-10500 PB-2 8700-34800 4200
    S-13 7450-225-11500 PB-2 8700-34800 4600
    S-14 7500-250-1200 PB-2 8700-34800 4800
    S-15 8000-275-13500 PB-2 8700-34800 5400
    S- 8000-275-13550 PB-3 15600-39100 5400
    S-16 9000 PB-3 15600-39100 5400
    S-17 9000-275-9550 PB-3 15600-39100 5400
    S-18 10325-325-10975 PB-3 15600-39100 6100
    S-19 10000-325-15200 PB-3 15600-39100 6100
    S-20 10650-325-15850 PB-3 15600-39100 6500
    S-21 12000-375-16500 PB-3 15600-39100 6600
    S-22 12750-375-16500 PB-3 15600-39100 7500
    S-23 12000-375-1800 PB-3 15600-39100 7600
    S-24 14300-400-18300 PB-3 15600-39100 7600
    S-25 15100-400-18300 PB-3 15600-39100 8300
    S-26 16400-450-20000 PB-3 15600-39100 8400
    S-27 16400-450-20900 PB-3 15600-39100 8400
    S-28 14300-450-22400 PB-4 39200-67000 9000
    S-29 18400-500-22400 PB-4 39200-67000 9000
    S-30 22400-525-24500 PB-4 39200-67000 11000
    S-31 22400-600-26000 PB-4 39200-67000 13000
    S-32 24050-650-26000 PB-4 39200-67000 13000
    S-33 26000 (fixed) Apex Scale 80000 (fixed) Nil
    S-34 3000 (fixed) Cab.Sec./Equ. 90000 (fixed) Nil


    மேலே உள்ள அட்டவை உங்கள் உலாவியில் ஒழுங்காக தெரியவில்லை என்றால் நீங்கள் இங்கு காணலாம்



    இப்பொழுது இதிலிருந்து அடிப்படை சம்பளத்தை மட்டும் பார்ப்போம்
    ஊதியக்குழுவின் அறிக்கையின் பக்கம் 54 முதல் 70 வரை விளக்கமாகவே கூறியுள்ளார்கள். அந்த விபரத்தை இந்த அட்டவனையில் பார்க்கலாம்

    அடுத்ததாக ஒருவர் 01.01.206 அன்று பெற்ற சம்பளம் எவ்வளவு என்று இந்த அட்டவனையில் பார்க்கலாம்

    இதில்

    அ - தற்பொழுதுள்ள சம்பள ஏற்ற முறை
    ஆ - தற்பொழுதுள்ள அடிப்படை சம்பளம் (பேசிக் பே)
    இ - தற்பொழுதுள்ள அகவிலைச்சம்பளம் (டியர்னெஸ் பே)
    ஈ - 01.01.2006 தமிழக அரசு ஊழியர் பெற்ற அகவிலைப்படி
    உ - 01.01.2006 அன்று பெற்ற சம்பளம் (வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி போன்றவை நீங்களாக)
    ஊ - ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி அவர் பெறப்போகும் சம்பளம்
    எ - எவ்வளவு அதிகரித்துள்ளது
    ஏ - எத்தனை சதவிகிதம் அதிகரித்துள்ளது

    இதிலிள்ள கடைசி வரிசையை மட்டும் பாருங்கள்

    எத்தனை சதவிகிதம் அதிகரித்து உள்ளது
    S-1* 17.37
    S-2* 18.41
    S-2A* 21.06
    S-3* 21.39
    S-4 24.67
    S-5 21.32
    S-6 21.37
    S-7 20.51
    S-8 21.26
    S-9 27.91
    S-10 25.71
    S-11 22.05
    S-12 22.05
    S-13 21.13
    S-14 21.85
    S-15 22.98
    S- 29.14
    S-16 21.74
    S-17 21.74
    S-18 20.21
    S-19 20.85
    S-20 20.89
    S-21 18.78
    S-22 20.12
    S-23 21.63
    S-24 18.13
    S-25 18.78
    S-26 17.42
    S-27 17.42
    S-28 44.82
    S-29 34.54
    S-30 30.55
    S-31 32.79
    S-32 31.99
    S-33 39.55
    S-34 38.00

    இப்பொழுது எத்தனை பேருக்கு 20 சதவிகிதம் உயர்வு என்றும் எத்தனை பேருக்கு 40 சதவிதம் ஊதிய உயர்வு என்றும் நீங்களே பார்க்கலாம் :) :) :)

    ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்த இந்த இடுகை தொடரின் அடுத்த இடுகைகள்

    Friday, May 15, 2009

    தமிழ் திரைத்துறை - சினிமா - இசையமைப்பாளர்கள், கதாநாயகர்கள் - திருப்புமுனை ஆண்டு 2003

    21ஆம் நூற்றாண்டில் துவக்கத்தில் கோலிவுட் பல பிரச்சனைகளால் சிறிது தடுமாற்றத்துடன் தான் சென்று கொண்டிருந்தது. முக்கியமாக திருட்டு விசிடி மற்றும் கேபிள் தொலைக்காட்சிகளினால் திரையரங்குகள் மூடப்படுவது தினசரி நிகழ்வாக இருந்தது. பல துறைகளிலும் ஒரு தேக்க நிலை இருந்தது.

    சென்ற தலைமுறையின் நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் அனைவரும் தங்களின் பழைய கலைப்படைப்புகளை முந்த முடியாத நிலையில் அவர்களது பணித்தடத்தின் இறங்குமுகத்தில் இருந்தனர்.

    இசையமைப்பாளர்கள்
    கிட்ட தட்ட 10 வருடங்களாக இந்தியாவையே கட்டி போட்டிருந்த ரஹ்மான் பாம்பே ட்ரீம்ஸ் நாடகத்திற்கு இசையமைக்க இங்கிலாந்து சென்றதும். அங்கிருந்தே பாபா இசையமைத்ததும் பாபா பாடலை கேட்ட பலரும் இளையராஜாவிற்கு பின்னர் ரஹ்மான். அதற்கு பின்னர் யார் என்று பார்த்துக்கொண்டிருக்கையில் “எனக்கும் ராஜா / ரஹ்மான் அளவு பாடல்கள் மற்றும் பிண்ணனி இசையில்” கலக்கத்தெரியும் என்று நான்கு இசையமைப்பாளர்கள் தங்களின் திறனை வெளிக்காட்டியது 2003ல் தான். (அந்த நான்கு பேரில் மூவரால் அதன் பின்னர் அந்த படங்களை விட சிறந்த படங்கள் அளிக்க முடியவில்லை என்பது வேறு விஷயம்). அதில் ஒருவர் மற்ற மூவரையும் ஒரே பாடலில் மிரட்டி விட்டார். மீதி மூவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் ஒலிபரப்பானது / ஒளிப்பரப்பானதை விட நான்காவது இசையமைப்பாளரின் ஒரே ஒரு பாடல் பண்பலை வானொலியிலும், தொலைகாட்சிகளிலும் அதிகம் முறை வந்தது.

    இந்த வருடம் தான் சன் குழுமம் தனது பண்பலை ஒலிபரப்பை ஆரம்பித்தது. எனவே பாடல்கள் பிரபலம் அடைய மற்றொரு வழி திறந்தது. அதுவும் கூட இசையமைப்பாளர்களுக்கு உதவியாக இருந்திருக்கலாம்

    வித்யாசாகர்
    கானடா ராகத்தில் மட்டும் தான் மெலடி பாடல்களை தருவார் என்று கூறப்பட்ட வித்யாசாகர் தன்னால் திரையிசையின் அனைத்து பரிமாணங்களையும் ஆள முடியும் என்று காட்டிய படம் அன்பே சிவம். இந்த படத்தில் இவரின் பாடல்களும் பிண்ணனி இசையும் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது.

    இளையராஜாவோ ரஹ்மானோ செய்திருந்தால் கூட இவ்வளவு தான் செய்திருக்க முடியும் என்ற வகையில் காட்சியமைப்புகளுக்கு ஏற்ற பிண்ணனி இசையும், அனைத்து வகையான பாடல்களும் என்று ராஜாவும் ரஹ்மானும் தங்களின் படைப்புத்திறனின் உச்சத்தில் இருந்த போது தந்த படங்களுடன் போட்டி போடக்கூடிய வகையில் அன்பே சிவம் படத்தின் இசை இருந்தது.

    தான் ஒரு “ஒரு திரைப்பட மாயை” அல்ல என்பதை இயற்கை மூலம் மறுபடியும் அதே வருடம் நிருபித்தார். அதன் பின்னர் இந்த அளவு முழுமையான இசையை அவர் வேறு எந்த ப்டத்திலும் அளித்ததாக தெரியவில்லை (ரா ரா ஒரே பாடல் மட்டும் விதிவிலக்கு). தமிழ் சினிமாவில் சிறந்த படங்களின் வரிசையில் அன்பே சிவம் மற்றும் இயற்கை இரு படங்களுக்கும் இடம் உண்டு என்பது என் கருத்து

    ஹேரிஸ் ஜெயராஜ் (ஆரிசு செயராசு)

    மின்னலே படத்தில் அறிமுகமாகி “வசீகரா” அனைவராலும் முனுமுனுக்கப்பட்ட பாடலானும் “பாடல் மட்டும் பரவாயில்லை, பிண்ணனி இசை சரியில்லை” என்ற விமர்சணம் இவர் மீது இருந்து கொண்டிருந்தது.

    லேசா லேசாவில் அனைத்து பாடல்களும் அருமை. பிண்ணனி இசையும் அருமை. அதே போல் பாடல்கள் மற்றும் இசைக்காக காக்க காக்க படமும் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு வந்த படங்களில் கூட இவர் பாடல்களுடன் தனது கவனத்தை நிறுத்துவது போல் தான் உள்ளது. (கஜினியின் பிண்ணனி இசை கேட்டிருக்கிறீர்களா – ஒரு மாலை இளவெயில் நேரம் பாடலையும் அந்த படத்தின் பிண்ணனி இசையையும் அமைத்தது ஒரே கலைஞர் என்றால் நம்புவது சிரமம்).

    யுவன் சங்கர் ராஜா
    தனது பதினெட்டாவது வயதில் அரவிந்தனில் ஆரம்பித்த இவரின் இசைப்பயணத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் (ஜோதிகா கதாநாயகியாக நடித்த முதல் படம் - கதாநாயகன் - வேறு யார் - சூர்யா தான் !!), ரிஷி, தீனா,  நந்தா, மௌனம் பேசியதே, துள்ளுவதோ இளமை போன்ற பல படங்களின் பாடல்கள் பேசப்பட்டாலும், பிண்ணனி இசையிலும் இவர் மிரட்ட ஆரம்பித்தது இந்த வருடம் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்திலிருந்து தான்

    தீனா
    2000 முதல் 2002ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் பெறும்பாலனவர்கள் “ஹம்” செய்த பாடல் “கண்ணின் மணி” தான். கல்லூரிகளுக்கு இடையில் நடக்கும் பல மெல்லிசை போட்டிகளில் / பாட்டு போட்டிகளில் கூட அந்த பாடல் அந்த நேரம் பரவலாக இடம்பெற்றது.

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஏற்பட்ட வைரமுத்து ரஹ்மான் ஊடலால் ரஹ்மான் பிற பாடலாசிரியர்களுடன் இணைந்து தெனாலி போன்ற படங்களை அளிக்க ஆரம்பித்த நேரத்தில் மணிரத்னத்தின் கண்ணத்தில் முத்தமிட்டால் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு தீனாவிற்கு வந்ததாக கூறுவார்கள் (திரைகளஞ்சியம் முரளிகண்ணன் இது உண்மையா என்று கூறுவார் என்று எதிர்பார்க்கிறேன்).

    ஆனால் மீண்டும் வைரமுத்துவையும் ரஹ்மானையும் சேர்த்து மணிரத்னம் வேலை வாங்கி ”வெள்ளைப்பூக்களையும்”, “விடை கொடு எங்கள் நாடேயையும்”, “ஒரு தெய்வம் தந்த பூவேயையும்” தந்து விட்டார். தீனா காத்திருக்க வேண்டி வந்தது. அதே நேரம் கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை.

    மிடில் கிளாஸ் மாதவன், கிங் போன்ற படங்களுக்கு இசையமைத்தார்.  “மன்மத ராசா”  என்ற ஒரே பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். ஆனால் அதற்கு பின்னர் அந்த அளவு அவரால் கவனத்தை தக்க வைக்க முடியவில்லை

    நடிகர்கள்

    2002 ஆகஸ்டில் வெளிவந்த பாபா படத்தை அடுத்து (இசையமைப்பாளர்களுக்கு இடத்தை அளித்தது போல் :) !!) கதாநாயகர்களுக்கும் ஒரு வெற்றிடம் இருந்தது.

    விக்ரம்

    எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு பின்னர் ரஜினி – கமல். அடுத்த தலைமுறையில் யார் என்ற கேள்வி வந்த நிலையில், நானே வசூல் ராஜா என்று சாமி படத்திலும், நானே நடிப்பிலும் ராஜா என்று பிதாமகன் படத்திலும் விக்ரம் அசத்தினார்.

    தில் - தூள் என்ற இருபடங்களின் வெற்றிக்கு அடுத்தாக வந்த சாமியின் இமாலய வெற்றியை பார்த்து (அதற்கு முந்திய வருடம் – 2002ல் பாபா வழங்கிய) ரஜினியே மிரண்டது நிஜம். 2003 மே மாதத்தில் தமிழகத்தில் வாலிபர்கள் அந்த படத்தை குறைந்தது மூன்று முறையாவது பார்த்திருப்பார்கள். தில், தூள், சாமி என்று விக்ரம் காட்டில் பெய்த மழை பிதாமகனிலும் தொடர்ந்தது.

    மாதவன்

    ”நகர மேல் தட்டு இளைஞன்” என்ற பிம்பத்திலிருந்து (city guy image) மாதவன் வெளிவர மற்றும் இவருக்கு நடிக்க தெரியும் என்று அனைவரும் அறிய உதவிய அன்பே சிவம் மற்றும் நளதமயந்தி ஆகிய படங்கள் 2003ல் வெளிவந்தவை தான்.

    சூர்யா
    மிடுக்கான காவல்துறை அதிகாரியாக (காக்க காக்க) நடிக்கவும் முடியும், லேகியம் விற்பவனாக (பிதாமகன்)  நடிக்கவும் முடியும் என்று சூர்யா காண்பித்ததும் இந்த வருடம் தான். காக்க காக்க படத்தின் வெற்றியை தொடர்ந்து காவல் துறை அதிகாரிகளை கதாநாயகனாக சித்திரித்து பல படங்களை வந்தது.

    தமிழ் ரசிகர்களின் நல்ல நேரம், பிதாமகனின் வெற்றியை தொடர்ந்து அது போல் படங்கள் வராததால் தப்பித்தார்கள் :)

    தனுஷ்
    முதல் படம் 2002ல் வந்திருந்தாலும் அவரது இரண்டாவது படமான காதல் கொண்டேனும், மூன்றாவது படமான திருடா திருடியும் வெளிவந்தது 2003ல் தான். தில், தூள், சாமி என்று விக்ரம் கலக்கிய கலக்கலுக்கு தனுஷின் “ஹாட்டிரிக்” சற்றும் குறையவில்லை

    2003ல் வெளிவந்த தமிழ் படங்கள் குறித்த பிற விஷயங்களை அடுத்த இடுகையில் பார்ப்போம்

    Wednesday, May 13, 2009

    தமிழ்நாடு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வலைத்தளம், குறுஞ்செய்தி எண் விபரங்கள் 14 மே 2009 Tamil Nadu State Board Plus Two, +2, 12th, HSC Exam Results May 14th 2009

    தமிழ்நாடு அரசின் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை 14 மே 2009 காலை 9 மணி அளவில் வெளியிடப்படும்.

    தேர்வுமுடிவை பள்ளிகளில் தெரிந்து கொள்ளலாம்

    தேர்வு முடிவு வெளியிடப்படும் இணையதளங்கள்

    • www.tnresults.nic.in,
    • www.dge1.tn.nic.in,
    • www.dge2.tn.nic.in,
    • www.dge3.tn.nic.in,
    • www.tngde.in,
    • www.collegesintamilnadu.com,
    • www.classontheweb.com,
    • www.schools9.com,
    • www.chennaivision.com,
    • www.mygaruda.com,
    • www.tnagar.com,
    • www.indiacollegefinder.com,
    • www.chennaionline.com,
    • www.nakkeeran.com,
    • www.getyourscore.in,
    • www.examresults.net,
    • www.webdunia.com,
    • www.jayanews.in,
    • www.findchennai.com.

    நுழைவு தேர்வு முடிவை குறுஞ்செய்தியில் பெற
    • 54545 என்ற எண்ணிற்கு DTHSC உங்கள்_தேர்வு_எண் அணுப்பவும்
    • 54373 என்ற எண்ணிற்கு HSC உங்கள்_தேர்வு_எண் அணுப்பவும்

    மின்னஞ்சலில் பெற

    Tuesday, May 12, 2009

    தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களா

    இந்த தொடரின் முந்தைய இடுகைகள்
    சில கேள்விகள் சில பதில்கள்

    தமிழகத்தில் எத்தனை மருத்துவர்கள் உள்ளனர்
    சுமார் 60000

    தமிழகத்தில் மொத்தம் எத்தனை அரசு மருத்துவர் பணியிடங்கள் உள்ளன
    சுமார் 13000

    தமிழகத்தில் மொத்தம் எத்தனை அரசு மருத்துவர் பணிபுரிகிறார்கள்
    சுமார் 12000

    எத்தனை நபர்களுக்கு ஒரு மருத்துவர்
    1000 நபர்களுக்கு ஒரு மருத்துவர்

    எத்தனை நபர்களுக்கு ஒரு அரசு மருத்துவர்
    5000 நபர்களுக்கு ஒரு அரசு மருத்துவர்

    தமிழகத்தில் அரசு பணிகளில் மருத்துவர் பற்றாக்குறை உள்ளதா
    ஆம் !!

    200 காலியிடங்களுக்கு 5000 பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அதே நேரம் பற்றாக்குறை என்றும் சொல்கிறீர்கள். எது உண்மை. எது பொய்
    இரண்டுமே உண்மைதான்
    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர் பணியிடங்களில்
    ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு எம்.பி.பி.எஸ் மட்டும் படித்த மருத்துவர்கள் போதும். இதில் எந்த பற்றாக்குறையும் இல்லை. ஆனால் அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவக்கல்லூரிகளிலும் பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவர்கள் தேவை. இதில் தான் பிரச்சனையே

    மீண்டும் கூறுவதென்றால்
    தமிழகத்தில்
    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை
    அரசு மருத்துவமனைகளில் சில சிறப்பு பிரிவுகளில் மட்டுமே (மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மயக்க மருத்துவம்) பற்றாக்குறை உள்ளது
    ஆனால் மருத்துவக்கல்லூரிகளில் தான் அதிக பற்றாக்குறை.

    இதனால் தான்

    எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவர்களின் ஒரு வருட கட்டாய சேவையை விட பட்ட மேற்படிப்பு படித்த சிறப்பு மருத்துவர்களின் 2/3 வருட கட்டாய சேவை நமக்கு தேவைப்படுகிறது.

    மத்திய அரசு சட்டீஸ்கரில் காலராவினால் பலர் மரணமடைவதாகவும் அதற்கு மருத்துவர்கள் பற்றாக்குறையே காரணம் என்று கூறியது பொய்யா
    சட்டீஸ்கரில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களின் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களின் பற்றாக்குறை இல்லை. சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை தான் உள்ளது

    கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லை என்று எதை வைத்து கூறுகிறீர்கள்.
    போர் கமிட்டி (Bhore Committee) அறிக்கையின் படி 30,000 மக்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் அதில் ஒரு மருத்துவரும் தேவை.

    தமிழகத்தின் மக்கள் தொகை 6 கோடி. இதற்கு தேவைப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 6,00,00,000/30,000 = 2000
    தேவைப்படும் மருத்துவர்கள் = 2000

    தமிழ் நாட்டில் பொது சுகாதார துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டும் 1532 (01 மே 2009 கணக்கு). அதில் மருத்துவர் பணியிடங்கள் = சுமார் 3700

    இது தவிர சென்னை போன்ற நகரங்களில் நகர நல்வாழ்வு மையங்கள், “பால் ஆஸ்பத்திரி” போன்றவைகளும், அதில் மருத்துவர்கள் உள்ளனர்.

    எனவே பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் தமிழகம் பிற மாநிலங்களை விட பல மடங்கு முன்னேறி உள்ளது.

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் தமிழகம் பிற மாநிலங்களை விட பல மடங்கு முன்னேறி உள்ளது என்பதற்கு வேறு ஆதாரம் இருக்கிறதா.
    2004 டிசம்பர் 26....... அன்று உலக சுகாதார நிறுவனமும் பிறரும் கூறியது “ சுனாமியால் இறந்தவர்களை விட இனி வரும் தொற்று நோய்களினால் இறப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள்” என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தார்கள்.

    அதன் பின், பத்தாயிரம் சடலங்கள் இருந்த போதும், ஒருவருக்கு கூட காலரா வரவில்லை. சில குழந்தைகளுக்கு சின்னம்மை (chicken Pox) பாதித்ததை தவிர. இந்த அளவிற்கு செயல் பட முடிந்ததற்கு காரணம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையும் அதில் உள்ள அனுபவம் மிக்க மருத்துவர்களும் பிற பணியாளர்களும் தான். (இப்படி பட்ட அனுபவம் மிக்க மருத்துவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு 4 மாதங்களுக்கு ஒரு மருத்துவர் , அடுத்த நான்கு மாதங்களுக்கு வேறொருவர் என்றால் என்ன ஆகும், யாருமே அனுபவங்களை பெற முடியாது). பலருக்கு தெரியாத செய்தி --> அமெரிக்காவில் காத்ரீனா, ரீட்டா என்று பாதித்து அவர்கள் சீரழிந்த போது நாகப்பட்டின சுகாதார துறை அதிகாரியின் உதவி கோரப்பட்டு அவர் அமெரிக்கா சென்று அறிவுரை வழங்கி வந்தது.


    தமிழகத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளனவா
    இல்லை

    பின் எப்படி போதுமான மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். 30,000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்பதற்கு பதில் 1000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்றால் நல்லது தானே. அது என்ன போர் கமிட்டி
    நல்ல கேள்வி. பதில் கீழே

    எங்கள் கிராமத்திற்கு தனியாக மருத்துவமனை கட்டி அதில் ஒரு மருத்துவரை நியமித்தால் என்ன. எங்கள் கிராமத்தில் 2000 நபர்கள் உள்ளனர். என்ன அவசரம் என்றாலும் நாங்கள் அடுத்த ஊருக்கு செல்ல வேண்டி உள்ளது.
    இப்ப நாம் சிறிது கணக்கு பார்ப்போம்
    இரண்டாயிரம் நபர்கள் மட்டும் உள்ள ஒரு கிராமத்திற்கு தனியாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் அங்கு இரு மருத்துவர்கள், ஒரு மருந்தாளுனர், ஒரு உதவி செவிலியர், ஒரு ஆய்வக உதவியாளர் என்று நியமிக்க வேண்டி வரும்

    மருத்துவர்கள், ஆய்வக உதவியாளர் ஆகியவர்கள் தொழில்நுட்ப ஊழியர்கள் (டெக்னிகல் கேடர்). இவர்களுக்கு அவர்கள் திறமை மங்காமல் இருக்க தினம் செய்ய வேண்டிய குறைந்த பட்ச வேலை அளவு உண்டு. அதே போல் வேலையில் அசிரத்தையாக இல்லாமல் இருக்க அதிக பட்ச அளவும் உண்டு
    (Minimal Work load to maintain professional competence and maximal workload to avoid fatigue - இதில் fatigue என்பது உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஆகிய இரண்டையும் குறிக்கும்)

    உதாரணமாக நீங்கள் கினற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஒரு விசைப்பொறி (மோட்டார்) வாங்குகிறீர்கள். அதை ஒரு நாள் 22 மணி நேரம் என்று ஒரு வாரம் ஓட்டினால் என்னவாகும் - சுருள் (காயில்) எரிந்து விடும். இது அனைவரும் அறிந்ததே. அதே போல் ஒரு வருடம் ஓட்டமல் இருந்தால் துருபிடிக்கும்.

    அதே போல் தான் மருத்துவர்களும், ஆய்வக உதவியாளர்களும் .

    அதாவது

    தொடர்ந்து தூங்காமல் 24 மணி நேரம் பேரூந்து ஓட்டிய ஓட்டுனர் பேரூந்து ஓட்டுவது ஆபத்து. 3 வருடம் பேரூந்தே ஓட்டாமல் இருந்தவர் திடிரென மலைப்பகுதியில் ஓட்டுவதும் ஆபத்து

    அதே போல் தான் ஒரு ஆய்வக உதவியாளர் ஒரு நாளைக்கு 1 இரத்த தடவல் (Blood Smear) மட்டுமே சோதிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலும் நோயின் அறிகுறி இல்லாத இரத்த தடவல்களை பார்ப்பவர் ஒரு நோயின் அறிகுறி உள்ள தடவலை தவற விடுவார்.

    அது மாதிரி தான் ஒரு மருத்துவர், ஒரு மருந்தாளுனர், ஒரு செவிலியர், ஒரு நாளைக்கு, ஒரு வாரத்திற்கு, ஒரு மாததிற்கு குறைந்த பட்சம் இவ்வளவு, அதிக பட்சம் இவ்வளவு நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்று கணக்கிட்டு போர் கமிட்டி அளவு நிர்ணயம் செய்துள்ளது.

    அதன் படி தான் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன

    ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம் தேவை என்று பார்த்தோம். முதல் அடுக்கு, இரண்டாம் அடுக்கு, மூன்றால் அடுக்கு என்பவை ஒன்றோடு ஒன்று இனைந்திருக்க வேண்டும். முதல் அடுக்கு மட்டும் வளர்ந்து பிற அடுக்குகள் முன்னேறாமல் இருந்தால் அதனால் பயன் இல்லை.

    உதாரணமாக முதல் அடுக்கை நகர பேரூந்து (அல்லது சிற்றுந்து, தானியங்கி மூவிருளி, உதாரணம் திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு ) என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டாம் அடுக்கு அடுத்த மாவட்டங்களுக்கு செல்லும் பேரூந்து (உதாரணம் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டு - விழுப்புரம்), மூன்றாம் அடுக்கு தொலைதூர பேரூந்து.(உதாரணம் சென்னை - மதுரை)

    இதில் அனைத்துமே முக்கியம்தான்.

    • நகரப்பேரூந்து பற்றாக்குறை என்றால் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அதிகம் கூட்டம் காத்திருக்கும்
    • ஆனால் நகரப்பேரூந்துகள் மட்டும் அதிகரித்து அதற்கு ஈடாக தொலைதூர பேருந்துகள் அதிகரிக்க வில்லை என்றால் அந்த காத்திருப்பு கூட்டம் கிராமத்தில் இருக்காது. அதற்கு பதில் நகரத்தில் இருக்கும்.

    மூன்றும் ஒரு சீராக வளர்வது தான் நலம்.

    தினமும் மண்வெட்டியால் மட்டும் தோண்டிக்கொண்டிருந்த ஒருவரை பொக்லேன் இயந்திரத்தை உபயோகிக்க சொன்னால் என்ன ஆகும்.

    • அல்லது அனைத்து வீடுகளிலும் பொக்லேன் இயந்திரம் இருப்பதால் யாருக்கு என்ன பலன்.
    • நிறைய மண்வெட்டிகள், அதற்கு குறைவாக டிராக்டர், அதற்கும் குறைவாக பொக்லேன் என்று இருந்தால் தானே நடைமுறைக்கு சிறப்பாக இருக்கும்.

    மண்வெட்டிகள் மட்டுமே அதிகரிப்பது (டிராக்டரும் பொக்லேனும் எண்ணிக்கை கூடாமல் ) எப்படி ஒரு ஆரோக்கிய வளர்ச்சி இல்லையோ அதே போல் தான் தொலைதூர பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்காமல் உள்ளுர் பேரூந்துகள் எண்ணிக்கை மட்டும் அதிகரிப்பதால் முழு பலன் கிடையாது.

    (உள்ளூர் பேரூந்து போதிய அளவில் இல்லாமல் தொலைதூர பேரூந்துகள் மட்டும் அதிகரிப்பது உலகமயமாக்கல், தனியார்மயமாக்கலின் விளைவு :) :) அது தான் சில இடங்களில், சில துறைகளில் நடந்து வருகிறது. அதுவும் மிகப்பெரிய தவறு)

    ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு மருத்துவர் நியமிக்கப்படுவதில் பொருளாதாரத்தையும் தாண்டிய சிக்கல்கள் உள்ளது. அனைவரும் சிராய்ப்புக்கு உள்ளூரிலேயே வைத்தியம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் முதுகு தண்டுக்கு சிறப்பு வைத்தியம் பார்க்க எந்த ஊரிலும் மருத்துவர் இருக்க மாட்டார். அதே போல் 3 வருடமாக சிராய்ப்புக்கு மட்டுமே வைத்தியம் பார்க்கும் ஒருவர் திடிரென முதுகு தண்டு அறுவைச்சிகிச்சையோ அல்லது இருதய அறுவை சிகிச்சையோ செய்யதால் பலன் எப்படி இருக்கும்.... முன்று வருடம் மண்வெட்டியை மட்டுமே உபயோகித்த ஒருவர் திடிரென பொக்லேன் உபயோகிப்பது அவருக்கும் நல்லதல்ல, பொக்லேனுக்கும் நல்லதல்ல, நிலத்திற்கும் நல்லதல்ல !!!!.

    அப்படி என்றால் இதற்கு என்ன தான் தீர்வு
    இதனால் தான் தற்பொழுது நடமாடும் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு பிணியாளர் ஊர்தியில் (ஆம்புலன்ஸ்) பேரூந்து போக்குவரத்து இல்லாத ஊர்களுக்கு மாதம் ஒரு முறை சென்று சிகிச்சை அளிப்பார்கள்

    மாதம் ஒரு முறை போதுமா ?
    போதாது. ஆனால் முதலில் மாதமொரு முறை ஆரம்பித்து பின்னர் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்ற மாற்றலாம். மேலும்
    • சக்கரை நோய்
    • இரத்த கொதிப்பு
    • பேறுகாலம்
    போன்ற பிணிகளுக்கு இந்த நடமாடும் மருத்துவக்குழு உதவியாக இருக்கும்

    எங்கள் ஊரில் ஒருவரை பாம்பு கடித்து விட்டது / ஒரு சிறுவன் மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டான் / ஒரு தாய்க்கு பிரசவ வலி எடுக்கிறது. நாங்கள் ஒரு மாதம் பொறுத்திருக்க (நடமாடும் குழு வரும் வரை) வேண்டுமா. எங்கள் ஊரில் மருத்துவமனை இருந்தால் நல்லது தானே
    ஒவ்வொரு ஊரிலும் மருத்துவமனை அமைப்பது நடமுறையில் பலன் அளிக்காத விஷ்யம் என்று தெளிவாக அறிந்து கொண்டோம். இது போன்ற அவசர காலங்களில், நீங்கள் 108 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பிணியாளர் ஊர்தி அனுப்பி வைக்கப்படும்

    இது (இத்திட்டம்) தமிழகம் முழுவதும் உள்ளதா
    இல்லை. 15 மாவட்டங்களில் மட்டும் தற்பொழுது உள்ளது. பிற மாவட்டங்களுக்கும் விரைவில் விரிவு படுத்தப்படும்

    பிணியாளர் ஊர்திக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா
    இல்லை இது முற்றிலும் இலவசம். கட்டணம் எதுவும் கிடையாது

    அப்படியென்றால் தமிழகத்தின் தேவை என்ன ??
    தற்பொழுது அவசர தேவை சிறப்பு மருத்துவர்கள். DM மற்றும் MCh படித்தவர்கள்

    நமக்கு தேவை சிறப்பு மருத்துவர்கள். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மட்டும் படித்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்கள் சட்டீஸ்கர் சென்றால் நமக்கு என்ன நஷ்டம்.
    இவர்கள் சட்டீஸ்கர் சென்றால் சிறப்பு மருத்துவர்கள் வானத்திலிருந்தா குதிப்பார்கள் :) :) :) இவர்கள் தான் பட்ட மேற்படிப்பு படித்து சிறப்பு மருத்துவர்கள் ஆக முடியும்.

    புரியவில்லை ?????
    நாம் முந்தைய இடுகையில் ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம் என்று பார்த்தோம்

    தமிழகத்தை பொருத்த வரை அரசின் சுகாதார துறையிலேயே முதலாம் அடுக்கும் இரண்டாம் அடுக்கும் முழுவதும் செயல்படுகிறது. மூன்றாம் அடுக்கில் தான் (சிறப்பு மருத்துவர்கள்) பற்றாக்குறை.

    உதாரணமாக மலேரியா, காச நோய் (டி.பி) போன்ற நோய்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாம்பு கடிக்கு சுமார் 50,000 ரூபாய் வரை உள்ள மருந்துக்கள் இலவசம். நாய்க்கடிக்கு தொப்புளை சுற்றி ஊசி போடுவதிலிருந்து பல மடங்கு முன்னேறி இன்று வெறும் 5 ஊசிதான். சுமார் 3000 மதிப்புள்ள மருந்துக்கள் இலவசமாகவே போடப்படுகின்றன


    குடலிறக்கம் (ஹெர்னியா), விதைவீக்கம், சிசேரியன் போன்ற அறுவை சிகிச்சை செய்வதிலும் பிரச்சனை இல்லை. போதுமான திறமை உள்ளது. திறமை சாலிகள் போதுமான எண்ணிக்கையில் உள்ளனர்.

    ஆனால் இதயத்தில் ஓட்டை என்றாலோ, இல்லை மூளையில் அறுவை சிகிச்சை என்றாலோ, சிறுநீரகம் செயல் இழந்தால் செய்ய வேண்டிய டயாலிசஸ் போன்றவை செய்யதான் நீண்ட காத்திருப்பு வரிசை உள்ளது. இது மாற வேண்டுமென்றால் நாம் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களுக்கு சிறப்பு வைத்தியத்தில் பயிற்சி அளிக்க வேண்டும்

    சட்டீஸ்கர், பீகார், உத்தர பிரதேஷம் போன்ற மாநிலங்களில் முதல் அடுக்கே இன்னமும் ஒழுங்கு முறைக்கு வரவில்லை. உத்தர பிரதேஷத்தில் இன்று வரை போலியோ நோய் தாக்கி வருகிறது.

    நாம் இரண்டாவது மாடியிலிருந்து மூன்றாவது மாடிக்கு செல்ல முயல்கிறோம்.
    பீகார் இன்னமும் முதல் மாடிக்கு வரவில்லை.

    அப்படி ஒரு வேறு பாடு இருக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி கட்டாய திட்டம் நெருடல் தான்.

    அப்படி யென்றால் கட்டாய சேவை வேண்டுமா, வேண்டாமா

    • ஒருவருக்கு குடற்புண் ஆரம்ப நிலையில் இருக்கிறது. அதை மாத்திரையாலேயே குணப்படுத்தலாம்
    • மற்றவருக்கு குடற்புண் முற்றிய நிலையில் குடலில் ஓட்டை விழுந்து விட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

    இப்படி வேறு பாடன நிலையில் இருப்பவர்களுக்கு ஒரே வைத்தியம் செய்வது எப்படி ஒருவருக்கு பலன் தந்து மற்றவரை பாதிக்குமோ, அதே போல் தான் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே போல் எம்.பி.பி.எஸ் படிப்பை நீடிப்பது ஒரு மாநிலத்திற்கு பலம் தந்து மற்றொரு மாநிலத்தை பாதிக்கும்

    எந்த மாநிலத்திற்கு பலன், எந்த மாநிலத்திற்கு பாதிப்பு
    இதற்கான விடையை நீங்கள் கூறுங்களேன் :) :) :) :( :( :(

    இந்த தொடரின் அடுத்த இடுகைகள்

    Sunday, May 10, 2009

    ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம்,

    இந்த தொடரின் முந்தைய இடுகை
    தமிழக அரசு மருத்துவமனைகள் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் வருகின்றன. இதில் பல இயக்குனரகங்கள் (டைரக்டிரேட்) உள்ளன
    1. மருத்துவ கல்வி இயக்குனரகம் - Directorate of Medical Education - DME
    2. மருத்துவ சேவை மற்றும் ஊரக நல இயக்குனரகம் - Directorate of Medical and Rural Health Services - DMRHS - DMS
    3. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குனரகம் - Directorate of Public Health and Preventive Medicine - DPHPM - DPH
    4. மருத்துவ சேவை மற்றும் ஊரக நல இயக்குனரகம் (ஈ.எஸ்.ஐ)- Directorate of Medical and Rural Health Services - DMRHS - DMS(ESI)
    5. மருந்து கட்டுப்பாடு இயக்குனரகம்
    6. மாநில சுகாதார துறை போக்குவரத்து இயக்குனரகம்
    இது தவிர பல இயக்குனரகங்களும் உள்ளன. முக்கியமான மூன்றை மட்டும் பார்ப்போம்
    1. இதில் மருத்துவ கல்வி இயக்குனரகம் என்பது பெரியார் சாலையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. இதன் கீழ் தான் 17 (அடுத்த வருடம் முதல் 19) மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அக்கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகள் இயங்குகின்றன
    2. மருத்துவ சேவை மற்றும் ஊரக நல இயக்குனரகம் தேனாம்பேட்டையில் (டி.எம்.எஸ் பேரூந்து நிறுத்தம்) உள்ளது. இதனடியில் 270 அரசு மருத்துவமனைகளும் 30 பிற மருத்துவ நிறுவனங்களும் இயங்குகின்றன
    3. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குனரகம் தேனாம்பேட்டையில் அதே கட்டிடத்தில் உள்ளது. இதனடியில் 1417 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் சில மருத்துவ பயிற்சி நிறுவனங்களும் இயங்குகின்றன.
    மத்திய அரசின் கட்டாய கிராமப்புற திட்டத்தின் படி 12 மாத கட்டாய பணியில் மருத்துவக்கல்லூரிகளில் 4 மாதமும், அரசு மருத்துவமனைகளில் 4 மாதமும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4 மாதமும் பணி புரிய வேண்டும்.

    இவை இவ்வாறு பிரிக்கப்பட்டிருப்பதற்கு காரணங்கள் பல

    எந்த ஒரு நோயை எடுத்துக்கொண்டாலும் அதற்கு மூன்று அடுக்கு வைத்தியம் அல்லது கவனிப்பு தேவை (three levels of "care")
    1. முதல் அடுக்கு -Primary Care - to Prevent the Disease - நோய் வராமல் தடுக்க. அல்லது ஆரம்ப நிலையில் வைத்தியம் பார்க்க
    2. இரண்டாவது அடுக்கு -Secondary Care - To Treat Disease - வைத்தியம் பார்க்க
    3. மூன்றாவது அடுக்கு -Tertiary Care - To Treat Complications - நோயினால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க
    இதில் முதல் அடுக்கு கவனிப்பை ஆரம்ப சுகாதார நிலையங்களும் (அந்த இயக்குனரகத்தில் பெயரில் ஆரம்ப சுகாதாரம் , தடுப்பு மருத்துவம் இருப்பதை கவனியுங்கள்) இரண்டாம் அடுக்கு கவனிப்பை அரசு மருத்துவமனைகளும், மூன்றாம் அடுக்கு கவனிப்பை மருத்துவக்கல்லூரிகளும் அளித்து வருகின்றன

    உதாரணமாக
    • சுகப்பிரசவம் என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பார்க்கலாம்
    • அறுவை சிகிச்சை என்றால் அரசு மருத்துவமனைகளில் பார்ப்பார்கள்
    • சிறிது சிக்கல் (உயர் இரத்த அழுத்தம், வெட்டு, மஞ்சள்காமாலை, இரட்டை குழந்தைகள், இரத்த போக்கு) என்றால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் பார்க்கலாம்.
    அதே போல்

    கீழே விழுந்ததில்
    • சிராய்ப்பு மட்டும் என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே கட்டுப்போட்டுக்கொள்ளாம்
    • கை, அல்லது கால் எலும்பு முறிந்து விட்டது என்றால் அரசு மருத்துவமனையில் தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும்
    • முதுகெலும்பில் அடி என்றால் மருத்துவக்கல்லூரியில் சிறப்பு மருத்துவப்பிரிவில் சிறப்பு மருத்துவர்கள் வைத்தியம் பார்க்க வேண்டும்.
    சென்னையில் செண்ட்ரல் இரயில் நிலையம் எதிரில் இருக்கும் பிராமாண்ட கட்டிடம் ஜி.எச் (GH) என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் அது மருத்துவக்கல்லூரியுடன் இனைந்தது.

    இது போல் அனைத்து நோய்களுக்கும் மூன்றடுக்கு மருத்துவநிலை உண்டு
    அதே போல் எந்த நோயை எடுத்துக்கொண்டாலும்
    • அதிகம் தேவைப்படுவது முதல் அடுக்கு தான்
    • குறைவான சமயமே இரண்டாவது அடுக்கு தேவைப்படும்
    • மிக மிக குறைவான சமயமே மூன்றாவது அடுக்கு தேவைப்படும்
    உங்கள் குடும்பத்தில், நண்பர்கள் குடும்பத்தில், உறவினர்களில்
    கிழே விழுந்ததில் சிராய்ப்பு ஏற்பட்டது எத்தனை தடவை, கை / கால் எலும்பு முறிந்தது எத்தனை தடவை, முதுகெலும்பு முறிந்தது எத்தனை தடவை என்று நினைத்து பார்த்தால் நான் கூறுவது புரியும்

    அதே போல் உங்கள் குடும்பத்தில், நண்பர்கள் குடும்பத்தில், உறவினர்களில்
    சுகப்பிரசவம் எத்தனை முறை நடந்துள்ளது, அறுவைசிகிச்சை எத்தனை முறை, வெட்டு, மஞ்சள்காமாலை, இரட்டை குழந்தைகள், இரத்த போக்க போன்றவை எத்தனை முறை என்று பாருங்கள்

    இதிலிருந்து சில விதிகளை நாம் பார்க்கலாம்

    ஒரு நோய்க்கு
    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேறு சிகிச்சை
    • அரசு மருத்துவமனையில் வேறு சிகிச்சை
    • மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேறு சிகிச்சை
    நான் மேலே கூறிய உதாரணங்களை பார்த்தால் உங்களுக்கு மேலும் சில விதிகள் புலப்படும்
    ஒரு நோய்க்கு
    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க செலவு மிக மிக குறைவு
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அதிகம் செலவாகும்
    • மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மிக மிக அதிகம் செலவாகும்
    அதே போல்
    ஒரு நோய்க்கு
    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்கள் போதும்
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க DCH, DGO, MD (GM) MS (GS) படித்த மருத்துவர்கள் தேவை
    • மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை DM, MCh, போன்ற சிறபபு மருத்துவர்கள் தேவை
    இந்த தொடரின் அடுத்த இடுகைகள்

    Thursday, May 07, 2009

    நியூட்டனின் 3ஆம் விதி - விமர்சனம் அல்ல - சில சந்தேகங்களும் விளக்கங்களும்

    தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து இறக்கி தன் தோளில் சுமந்து செல்லத் துவங்கினான். வழகத்திற்கு மாறாக இன்று பட்டியும் கூட வந்ததால் வேதாளம் குஷியாகி விட்டது நேற்று தான் நியூட்டனின் மூன்றாவது விதி படத்தை திரையரங்கில் தொங்கிய வாறே பார்த்து பயங்கரமாக குழம்பி போய் இருந்தது. குழப்பத்திற்கு தீர்வு வேண்டுமே. எனவே முதலில் பட்டியிடம் சந்தேகங்களை கேட்கலாம் என்று என்னியவாரே
    நியூட்டன் நியூட்டனுங்கிறாங்களே, அது யாரு என்று கேட்கவும், பட்டி விளக்கத்துவங்கினார்.

    ஐசக் நியூட்டன் இங்கிலாந்துகாரர். ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி. புவியீர்ப்பு விசை (அதாவது பூமி புட்ச்சு இழுக்கும் ஃபோர்ஸ் - இது குறித்து மேலும் அறிய இந்த இடுகை செல்லலாம் ), நுண்கணிதம் (கால்குலஸ்), இயக்க விதிகள் (விபரம் இங்கு ) போன்ற பலவற்றை கண்டு பிடித்து உலகிற்கு சொன்னவர்.

    அப்படியா. நானும் படப்பெயர் ஏதோ “நியூட்” ன்னும் ஆரம்பிக்குதேன்னு ஆர்வமா போய் பார்த்தேன். இது தானா சமாச்சாரம். ... புவியீர்ப்பு விசை தெரியும். அது என்ன இயக்க விதிகள்

    பொருளின் இயக்கம் தொடர்பான மூன்று விதிகளை நியூட்டன் உருவாக்கினார். அவை நியூட்டனின் இயக்க விதிகள் எனப்படும். முதல் விதி விசையின் அடிப்படை வரையறையும், இரண்டாவது விதி விசையின் அளவு மற்றும் திசையை பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசையின் தன்மையையும் விளக்குகின்றன (விக்கிபீடியாவிலிருந்து)
    • நியூட்டனின் முதல் இயக்க விதி: இவ்விதியின்படி “வெளிவிசையொன்று செயல்பட்டு மாற்றும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும்." புற விசைகள் இல்லாத நிலையில், பொருள் ஒன்று தன்னிச்சையாகத் தானே தனது நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு நிலைமம்(Inertia) எனப்படும்.
    • நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி: ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்
    • நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி: ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது.
    இந்த மூன்றாவது விதியை கொஞ்சம் விளக்கமாக சொல்லு பட்டி.
    உதாரணமாக ஒருவர் படகில் துடுப்பை வைத்து நீரை பின் தள்ளுகிறார். (இது வினை) அதனால் படகு முன்னால் செல்கிறது (இது எதிர்வினை)


    அப்புறம்
    ஒரு காற்றடைத்த பலூனை அப்படியே விட்டு விட்டால் அது சிறிது தூரம் புஸ் என்று செல்கிறது அல்லவா. இங்கு பலூனில் இருந்து வெளிவரும் காற்று வினை. அதனால் அந்த காற்று வரும் திசைக்கு எதிர் திசையில் பலூன் செல்வது எதிர்வினை

    ஏவுகணை கூட இந்த விதியின் படிதான் பறக்கிறது. அதன் பின்னால் இருந்து வரும் காற்று வினை. அதனால் ஏவுகணை முன்னால் செல்வது எதிர்வினை

    தீபாவளிக்கு நாம் வீட்டில் விடும் தரைச்சக்கரம் சுற்றுவதும் , ராக்கெட் மேலேசெல்வதும் கூட இந்த விதியின்படிதான்


    வேற ஏதாவது
    துப்பாக்கியிலிருந்து தோட்டா சீறுவது கூட இந்த விதிதான்


    அப்படியா
    ஆமாம்


    துப்பாக்கி, தோட்டா பற்றி சொல்லு. இவ்வளவு வந்த பிறகும் நம்ம ராஜா ஏன் இன்னும் வாளை மட்டும் வைத்திருக்கிறார் என்று கேட்கவும் விக்ரமாதித்தியன் முறைத்தான். பட்டி ஒரு படத்தை வரைந்து காட்டி விட்டு தொடர்ந்தார். ஒரு தோட்டா இப்படி தான் இருக்கும் 
    இதில் 1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது தான் தோட்டாகுண்டு. 2 குண்டு பொதியுறை 3. துப்பாக்கி பொடி (கன் பவுடர்) 4. உறையின் பின் பகுதி 5.ப்ரைமர்


    துப்பாக்கி தோட்டாவுல இவ்வளவு இருக்கா இதுல அம்புட்டுமா துப்பாக்கியிலிருந்து வருகிறது
    1. தோட்டா தான் துப்பாக்கியின் முன்னாலிருந்து வரும்.
    2. வெற்று உறை துப்பாக்கியின் பக்கவாட்டிலிருந்து அல்லது மேலிருந்து விழுந்து விடும். சில ஆங்கில படங்களின் தொடர்ந்து சுடும் போது துப்பாக்கியின் மேலிருந்து ஏதோ வந்து கொண்டிருக்குமே. அது இந்த வெற்றுறை தான். இதை குண்டு பொதியுறை; குண்டுப் பொதியுறை; தோட்டா; வெடிச்சுரை; வெடியுறை என்று அழைப்பார்கள்


    துப்பாக்கி பொடி என்னவாகும்
    அது எறிந்து விடும். அது எறியும் போது ஏற்படும் வாயுக்கள் அதிக அழுத்தத்துடன் இருக்கும். அது உறையின் பின்பகுதி வழியாக் வெளியேறமுயல்வதால் (வினை) தோட்டா முன்னால் உந்தப்படுகிறது (எதிர்வினை)


    அது எப்படி எரியும்
    5 - அம்மொனியம் நைட்ரேட், லெட் அசைட், பொட்டாசியம் பெர்குளோரைட் போன்ற பொருட்கள் தோட்டாவின் பின் பகுதியில் இருக்கும். துப்பாக்கியின் கருவி இதில் வந்து அழுத்தியதும், இது பற்றிக்கொள்கிறது. நெருப்பு உருவாகிறது. எனவே துப்பாக்கி பொடி முழுவதும் எரிகிறது. அந்த வாயு பின்னோக்கி வர முயல்கிறது. அப்படி வர முயல்கையில் போது முன்னோக்கி தோட்டாவை தள்ளுகிறது

    இதற்கு பதில் தோட்டாவின் பின்னால் தீவைத்தாலும் கூட முன்னால் இருக்கும் தோட்டா சீறிப்பாய்ந்து செல்லும்


    இது என்ன புது கண்டுபிடிப்பு. ரீல் சுத்துகிறீயா... சும்மா சினிமாவில் யாரோ டூப் விட்டத எல்லாம் சொல்லிக்கிட்டு...
    புது கண்டுபிடிப்பு இல்லை. இது தான் பழைய கண்டுபிடிப்பு. அந்த காலத்து பீரங்கிகளில் என்ன செய்வார்கள் தெரியுமா


    என்ன செய்வார்கள்
    பீரங்கியின் உள்ளே துப்பாக்கி பொடியை நிரப்பி அதன் மேல் ஒரு பெரிய இரும்பு குண்டை வைத்து விட்டு, பின்னால் இருந்து திரியால் பற்ற வைப்பார்கள்

    இதுல அவர் பத்த வைக்கிறது தெரியுதா (படங்கள் : விக்கிபிடியாவிலிருந்து பெறப்பட்டவை)
    அப்படியா. அப்ப நியூட்டனின் 3ஆவது விதி படத்தில் காட்டப்படுவது போல் தோட்டா மூலம் ஒருவரை கொலவதற்கு துப்பாக்கி தேவையில்லை, தீ மட்டும் போதுமா

    போதும்


    நான் எஸ்.ஜே.சூர்யா சும்மா பில்டப் விடுகிறார் என்று நினைத்தேன்
    இல்லை. அது சாத்தியம் தான். படத்தில் தலைப்பும், இறுதிகாட்சியும் மிக மிக பொருத்தம் தான். பலரும் பழி வாங்கும் கதை என்பதால் (மட்டும்) தான் அந்த தலைப்பு என்று நினைக்கிறார்கள். அது ஒரு விதத்தில் சரி என்றாலும் கூட, எந்த கதை என்றால் கூட இது போல் தோட்டா செலுத்தப்படுதை காட்டினாலே படத்தின் தலைப்பு பொருத்தம் தான்


    அது சரி, படம் எப்படி இருக்கிறது என்று மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள்.
    இது குறித்து பிரபல பதிவர்கள் எழுதிய விமர்சனம் தெளிவாக கூறுகிறது
    டைட்டில் கூட அசத்துகிறது என்கிறார்களே
    ஆமா, டைட்டிலில் கிட்டத்தட்ட முழு கதையே இருக்கிறது. போக போக அது விரிகிறது. இப்பொழுதெல்லாம் பலரும் டைட்டிலிலேயே அசத்துகிறார்கள்


    வேற எந்த சமீபத்திய படத்தில் டைட்டிலில் கதைக்கு சம்மந்தமான காட்சி இருக்கு
    யாவரும் நலம் - டைட்டிலில் பிண்ணனியில் தொலைகாட்சி தொழிற்சாலையில் ஒரு தொலைக்காட்சி பெட்டி தயாராவது காட்டப்படும். படத்தில் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறதே


    அட
    அருந்ததி படத்தின் டைட்டிலில் முதுகெலும்பில் இருந்து ஆயுதம் செய்வதை காட்டுகிறார்கள். அதே காட்சிகள் பின்னர் படத்திலும் வருகின்றன. அந்த ஆயுதம் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறதல்லவா


    எல்லாம் சரி, வேகமான திரைக்கதை உட்பட பல சிறப்புகள் இருக்கும் படத்தில், ஏன் இப்படி சுமாரா நடிக்கும் கதாநாயகியை போடனும் என்று கேட்கவும் விடை தெரியாத பட்டி திருட்டு முழி முழிக்கிறார். இது தான் சாக்கு என்று வேதாளம் விக்ரமாதித்தனிடம் இந்த கேள்வியை கேட்கிறது.

    விக்ரமாதித்யனோ “அதெல்லாம் காரணமாத்தான், நீங்க படையப்பா, பாபா எல்லாம் பாத்திங்களா. சூப்பர் ஸ்டாருக்கு நண்பர்களாக வருபவர்களை பார்த்திருக்கிறீர்களா ?” பட்டி யோசித்து பார்த்தலில் அனைவரும் வயசானவர்கள் என்பதை தவிர வேறு எதுவும் அவருக்கு புலப்படவில்லை.

    மன்னர் தொடர்ந்தார் “அப்படி வயசானவங்க சுத்தி நின்னாத்தான் சூப்பர் ஸ்டார் “யூத்”தா தெரிவாரு” ஆஹா ... இதுல இவ்வளவு விஷயம் இருக்கா என்று வேதாளம் வியந்து கொண்டிருக்கும் போதே மன்னர் தொடர்கிறார் சிம்ரன், ஜோதிகா மாதிரி ஆட்கள் கூட நடிச்சா, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு திறன் தெளிவாக வெளிப்பட்டு விடுமே :) :) அதனால தான் இந்த கதாநாயகி :) :) :) :) 
    இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

    தொடர்புடைய தளங்களின் தேட

    Loading...