Tuesday, June 30, 2009
'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' போட்டி சிறுகதை - ஒரு சதியின் கதை
நான் அந்த நட்சத்திர ஹோட்டலில் தயிர்சாதத்துடன் ஊறுகாயை கடித்துக்கொண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த போது எனது பள்ளித்தோழன் ஆனந்தன் சில நண்பர்களுடன் அறைக்குள் நுழைந்து ஏதாவது இருக்கை காலியாக உள்ளதா என்று தேடுவதை கண்டு கையசைத்து அழைத்தேன்.
பல ஆண்டுகள் கழித்து சந்தித்தாலும் இருவருமே தத்தமது நண்பர்களுடன் இருந்ததால் அலைபேசி எண்களை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டு அவன் கடலூரிலேயே ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனி நடத்திவருகிறான் என்று தெரிந்து கொண்டதை தவிர அதிகம் பேச முடியவில்லை.
ஆனால் எனது பெருமூச்சிற்கு காரணம் ஊறுகாயின் காரம் மட்டுமல்ல என்பதும் அதற்கு முக்கிய காரணம் என்னுடன் எங்கள் நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக பணிபுரியும் சுந்திரத்தின் லீலைகள் தான் என்பதும் வேறுயாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்
நான் – ராமமூர்த்தி. பி.ஈ. எம்.பி.ஏ
சென்னையில் தலைமை அலுவலகத்தில் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த எனக்கு பொது மேலாளராக பதவி உயர்வு கிடைத்தவுடன் மனம் மற்றும் உடல் முழுவதும் பரவிய சந்தோஷம் அதனுடன் சேர்ந்த இடமாற்றலை கேட்டவுடன் வடிந்து விட்டது. கடலூர் போய் சேர்ந்து சில நாட்கள் ஒப்பேற்றி விட்டு எப்படியாவது அடுத்து பதவி உயர்வின் போது மறுபடி சென்னைகே வந்து விட வேண்டும் என்று தான் முதலில் நினைத்தேன். அதனால் தான் குடும்பத்தினரை சென்னையிலேயே விட்டு விட்டு நான் மட்டும் நிறுவன விருந்தினர் மாளிகையிலேயே தங்கி பணிபுரிய ஆரம்பித்தேன்
வழக்கமாக பொது மேலாளர்கள் தலைமை அலுவலகத்திலிருந்து வந்து சில நாட்களிலிலேயே மறுபடியும் மாற்றலில் சென்னைக்கே போய் விடுவதால் கடலூரில் உற்பத்தி மேலாளர் சுந்தரம் தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா. எனவே என்னை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நானும் யாரையும் கண்டுகொள்ளவில்லை. நானுண்டு எனது வேலையுண்டு என்று யாரிடமும் அதிகம் பேசாமல் பழகாமல் வேலையை பார்த்து கொண்டிருந்தேன் – அந்த அலுவலகத்தின் வாகன ஓட்டுனர் மாடசாமி ஜி.பி.எஃப் கடன் விண்ணப்பத்தை நீட்டும் வரை.
அந்த அலுவலகத்தில் அது வரை கடன் விண்ணப்பங்கள் கடலூரிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து ஒப்புதல் வந்து அதன் பிறகு சம்மந்தப்பட்ட நபர் கடன் பெறுவதற்கு 3 முதல் 4 மாதங்கள் ஆகி கொண்டிருந்தது. நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த பழக்கத்தில், அங்கு இருப்பவர்களிடம் கேட்டுக்கொண்டதில் ஒரே வாரத்தில் கடன் ஒப்புதலாகி வந்து விட்டது. அதன் பிறகு இங்குள்ள பலரும் அவர்களுடைய பிரச்சனைகளுடன் என்னை மொய்க்க ஆரம்பித்து விட்டனர்.
அக்கவுண்டன்ட் சுப்பிரமணியம் வீடு கட்ட அனுமதி கோரி விண்ணப்பம் அனுப்பியிருந்தார். ஆனால் அதற்கு முன்னர் நிலம் வாங்க அலுவலகத்தில் அனுமதி கேட்கவில்லை. அவருக்கு அனுமதி வருவதற்கு பதில் ஏன் நிலம் வாங்க அனுமதி வாங்க வில்லை என்று மெமோ தான் வந்தது. ”நிலம் சொந்த காசில் வாங்கினேன்.அதனால் அனுமதி வாங்கவேண்டும் என்று தோன்றவில்லை. வீடு கட்ட கடன் தேவைப்படுகிறது. கடன் வாங்க அனுமதி தேவைப்படுகிறது” என்ற உண்மை காரணத்தை எழுத்துப்பூர்வமாக கூற முடியாததால் விதியை நொந்து கொண்டு கையை பிசைந்து கொண்டிருந்தார். எனது அறிவுரையின் படி ”நிலம் வாங்க அனுமதி கேட்டு தபால் அனுப்பியிருந்தேன். ஆனால் விதிமுறைகள் தெரியாததால் சாதா தபாலில் அனுப்பியிருந்தேன் மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று ஒரு மன்னிப்பு கடிதம் எழுத அவரது பிரச்சனை தீர்ந்தது.
அதன் பிறகு பதவிஉயர்வு பெற எழுதவேண்டிய தேர்வுகள், அதற்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் போன்ற பல உதவிகளை நான் பிற ஊழியர்களுக்கு செய்து கொடுக்க எனது கடலூர் நட்பு வட்டாரம் பெருகியது. ஊழியர்களின் வீட்டு விசேஷங்கள், அவர்களின் பார்ட்டிகள் எல்லாவற்றிற்கும் அழைப்பு வந்தது. நானும் கலந்து கொள்ள அலுவலகத்தில் மெதுவாக ஒரு ஹீரோவாக மாறிக்கொண்டிருந்தேன்.
அப்படி ஒரு நாள் ஸ்டோர்கீப்பர் தம்பி கல்யாணத்திற்கு சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது “இங்கே எல்லாரும் நல்லா பழகுறீங்க. பேசாம பேமிலியை இங்க மாற்றி இங்கேயே செட்டிலாகிவிடலாமுன்னு நினைக்கிறேன்” என்று கூறவும் அங்கு இருந்தவர்கள் பலரும் சந்தோஷப்பட்டார்கள். நான் அப்படி கூறிய நேரம் சனி பெயர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அதுவரை எந்த பிரச்சனையுமே இல்லாமல் சீராக சென்றுகொண்டிருந்த எனது வாழ்க்கையில் அன்றிலிருந்து சுந்தரம் ரூபத்தில் ஏழரைச்சசனி துவங்கியது.
வாரம் தோறும் தலைமைஅலுவலகத்திற்கு அனுப்பப்படவேண்டிய அறிக்கைகள் வந்து சேரவில்லை என்று மின்னஞ்சல் வந்த பின்னர் விசாரித்தால், சுந்தரம் சார் தான் மாதம் ஒரு முறை அனுப்பினால் போதும் என்று கூறினார் என்று பதில் வந்தது.
இரண்டு வாரம் கழித்து எங்கள் ஆபிஸ் பியூன் மிகவும் தயங்கியபடி “சார் எல்லா வருசமும் தீபாவளிக்கு கம்பெனில இருந்து பட்டாசு பாக்கெட் தருவாங்க. நீங்க ஏன் நிப்பாட்டினீங்க” என்று கேட்கவும் முதலில் தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. அதன் பிறகு தான் என் உத்தரவு படி நிறுத்துவதாக சுந்தரம் அனைவரிடமும் கூறியது தெரியவந்தது. அதன் பிறகு அவசர அவசரமாக அனைவருக்கும் பட்டாசு பெட்டி வாங்கி அளிக்க அலையவேண்டியதாகிவிட்டது
முதலில் ஏதோ கவனக்குறைவு என்று தான் நினைத்தேன். அதன் பிறகு தான் சுந்தரம் மிகவும் ”கவனத்”துடன் எனது பணியில் ”குறைவு” ஏற்படும் படி செயல்படுகிறார் என்பதை கண்டு கொள்ள முடிந்தது
ஒரு நாள் திடீரென்று அனைவரும் அமர்ந்திருக்கும் நேரம் முகம் கழுவ வைத்திருக்கும் பேஸ் வாஷை எடுத்துக்கொண்டு வந்து அனைவரும் முன்னாலும் திறந்து காட்டி, அதை கவிழ்த்தால் தண்ணீர் போல் கொட்டுகிறது. ”என்ன சார் ஆபிசில இவ்வளவு மோசமான ப்ராட்டக்டை வாங்கி ஸ்டாப்ஸுக்கு தர்றீங்க. இது கொஞ்சம் கூட நல்லால்ல” என்ற புகாரை கேட்டதும் எனக்கு தலை சுற்றியது. எங்கள் ரிசப்செனிஸ்ட் தான், ”நான் இப்ப கூட அத யூஸ் பண்ணினேனே. நல்லாத்தானேஇருந்துச்சு. யாராவது விளையாட்டுக்கு அல்லது விபரம் தெரியாமல் தண்ணீர் ஊத்தியிருப்பாங்க” என்று கூற தப்பித்தேன்
அக்கொண்ட்டண்ட் சீனியர் அக்கொண்ட்டன்ட் ஆக பதவி உயர்வு பெற்றதை அடுத்து அனைவருக்கும் நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி அளித்தார். சுந்த்ரம் வந்து பார்ட்டி 3 மணி என்று அன்று காலை என்னிடம் கூறினார். நானும் வெளியே வேறு வேலையாக சென்று விட்டு 3 மணிக்கு ஹோட்டலினுள் நுழைந்தாள் பலரும் சாப்பிட்டு முடித்து ஐஸ்கிரீமில் இருக்கிறார்கள். ஒரு சிலர் தயிர் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில், நானும் நேரடியாக தயிர்சாதத்தை எடுத்து ஊறுகாயுடன் சாப்பிட்ட ஆரம்பித்தேன். என்னை அனைவர் முன்னாலும் அவமதிக்க சுந்தரம் வேண்டுமென்றே நேரத்தை மாற்றி கூறியுள்ளார் என்பது புரிந்தது. மனதிற்குள் இருக்கும் இவ்வளவும் சேர்ந்து தான் என்னை பெருமூச்சு விட வைத்துக்கொண்டிருந்த்து.
தாமதமாக வந்ததற்கு அனைவரிடம் மீண்டும் ஒரு முறை வழிந்து சமாளித்து விட்டு வண்டியில் திரும்பி செல்லும் போது பேச்சு வாக்கில் மாடசாமியிடம் ”சுந்தரம் ஏன் திடீரென்று இப்படி நடக்கிறார்” என்று கூறவும் மாடசாமி பவ்யமாக ”நம்ம ஸ்டோர் கீப்பர் வீட்டு கல்யாணத்திற்கு பிறகு தான் உங்களுக்கு பிரச்சனையா” என்று கேட்கவும், நான் நடந்த சம்பவங்களை ரீவைண்டு செய்து பார்த்தேன். சரியாக சரியாக பொருந்தி வந்தது. ஆனால் சுந்தரத்தின் நடவடிக்கைக்கும் ஸ்டோர்கீப்பரின் தம்பி திருமணத்திற்கும் என்ன சம்மந்தம் என்று எனக்கு பிடிபடவில்லை. சரி அதையும் கேட்டுவிட்டேன். “அதெல்லாம் ஒன்னுமில்ல சார். அன்னைக்கு தான் நீங்க இங்கேயே இருக்க நினைப்பதாக சொன்னீங்க. அதான் கேட்டேன்” என்று மாடசாமி கூறியவுடன் தான் ஒரு நிரந்தர பொது மேலாளர் இருந்து விட்டால் உற்பத்தில் மேலாளர் சுந்தரத்தின் ஆல் இன் ஆல் அழகு ராஜா பதவிக்கு மற்றும் (மற்றும் பொறுப்பு பொது மேலாளர்!! பதவிக்கு) ஆப்பு என்பதால் அவர் தன்னை அவமானப்படுத்தி கிளப்ப பார்க்கிறார் என்ற எளிய உண்மை புரிந்தது.
இரண்டு நாட்கள் கழித்து நேரில் சந்தித்து நான் ஏன் ஹோட்டலில் அளவிற்கு அதிகமாக பெருமூச்சி விட்டுக்கொண்டிருந்தேன் அக்கறையாக விசாரித்த ஆனந்தனிடம் இவ்வளவு கதையையும் கூறிவிட்டு ”சரி சொல்லுடா நான் என்ன செய்ய” என்று கேட்டேன்
”இவ்வளவு நடந்தபின்னால சுந்தரம் கூட வேலை பாத்தா அது உனக்கும் நல்லதில்லை, சுந்தரத்திற்கும் நல்லதில்ல, உங்க கம்பெனிக்கும் நல்லதல்ல”
”அப்ப”
”ஒன்னு முதல்ல ப்ளான் பண்ணபடி நீயே டிரண்ஸ்பர் வாங்கிட்டு சென்னை போய்டு. இது ஈசியான வழி. அப்படி இல்லைன்னா கஷ்டமான வழி ஒன்னு இருக்கு. சுந்திரத்தை இங்கிருந்து கிளப்பிட்டு நீ இங்கயே இரு”
”எப்படி கிளப்புறது”
”முள்ளை முள்ளாலத்தான் எடுக்கனும். நீ அவன பத்தி கொஞ்சம் விசாரி. பிறகு பாக்கலாம்”
நானும் மூளையை கசக்கி கொண்டு யோசித்தேன். ஏதாவது சந்தர்ப்பம் வருமா என்று காத்துக்கொண்டிருந்தேன். சுந்தரத்தை, அவரது நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக கவனித்தபோது சுந்தரம் தனது குடும்பத்திற்கும் அலுவலகத்திற்கு இடையில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி வைத்துள்ளார் என்ற விபரம் பிடிபட்டது. என்ன காரணம் என்று புரியவில்லை. மெதுவாக மாடசாமியின் வாயை கிண்டியதில் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண் விற்பனை பிரதிநிதியுடன் சுந்தரம் சற்றே அதிக நேரம் தொலைபேசியில் பேசியதை தொடர்ந்து அவரது மனைவி அந்த பெண்மணியின் வீட்டிற்கு சென்று பெரிய சண்டை போட்டதாகவும் ஒரு முறை ஆண்டு விழாவிற்கு அவர் மனைவியை அழைத்து வந்த சமயம் அவர் விழாவில் எந்த பெண்ணுடன் பேசினாலும் அவரது மனைவி எரித்து விடுவது போல் பார்த்த விபரங்களும் வெளிவந்தது
இந்த நிலையில் அந்த சனி ஞாயிறு ப்ளாக்தண்டர், ஊட்டி என்று இரண்டு நாட்கள் எங்களது அலுவலகத்திலிருந்து அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவது என்று முடிவானது. பேச்சுவாக்கில் அந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் ஆனந்தனின் முகம் மெல்போர்ன் ஸ்டேடியம் பிலாஷ் லைட் போல் பிரகாசமானது
“டேய் எப்படி போறீங்க, வேனா, பஸ்ஸா”
“பஸ்தான்”
“எந்த டிராவல்ஸ்”
“மதி டிராவல்ஸ்தான்”
“எப்ப கிளம்புறீங்க”
“வெள்ளிக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு”
“அந்த டிராவல்ஸ் நம்பர், உங்க ஆபிஸ் நம்பர், சுந்தரம் வீட்டு நம்பர் மூனும் எனக்கு தா”
வெள்ளி மாலை சுமார் 4 மணிக்கு ஆனந்தன் என்னை தேடி வந்து விட்டான்.
“உங்க பிளானில் ஏதாவது சேஞ்ச் இருக்கா, இல்ல அப்படியேத்தானா”
“டேய் என்னடா பண்ன போற. எதாவது ஏடாகூடாம ஆச்சுன்னா சிக்கலாயிடும்”
“ஒண்ணுமில்ல, மூனே மூனு போன்தான்” என்று கூறியபடியே முதலில் செல்போனில் ஒரு எண்ணை அழைத்தான். தூரத்தில் எங்கோ தொலைபேசி மணி அடிக்கும் சத்தம் கேட்டபின் தான் அந்த அழைப்பு எங்கள் அலுவலகத்திற்கு என்பது புரிந்தது “கடலூர் கெமிக்கல்சா,.... நாங்க மதி டிராவல்சிலிருந்து பேசுறோம்,.. உங்க ஊட்டி டூருக்கு பஸ் ரெடி. 5 மணிக்கு வந்துரும்... எங்க வர... ஒகே...... கோயில் பக்கத்தில வரனுமா...... அங்க எல்லாரும் லக்கேஜோடா இருப்பீங்கலா......சரி.... அங்கேயே அனுப்பிறோம்... பை”
அடுத்து ஒரு எண்ணை அழுத்தி “மதி டிராவல்ஸ்சா, ..... நாங்க கடலூர் கெமிக்கல்சிலிருந்து பேசுறோம். இன்னைக்கு சாயங்காலம் ஊட்டி டூ டேஸ் டூருக்கு பஸ் புக்பண்ணியிருந்தோம். பஸ் ரெடியா .... ரைட்.... சாயங்காலம் 5 மணிக்கு பதிலா ஒரு 6 மணிக்கு அனுப்புங்க..... கோயில் பக்கம் எல்லாரும் இருப்பாங்க..... அங்கேயே அனுப்பிடுங்க.... வேற ஒரு பிராப்ளம் இல்லை. ... பை”
அதற்குள் எனக்கு தொழிற்சாலையிலிருந்து ஒரு அவசர அழைப்பு வர நான் உள்ளே சென்று விட்டேன். ஆனந்தன் என்ன பேசினான் என்று தெரியவில்லை
திரும்பி வந்த போது வெற்றிப்புன்னகையுடன் “நீயும் 5 மணிக்கே கோயிலுக்கு போய் வேடிக்கையை பார்” என்று கைகட்டை விரலை உயர்த்தி காட்டி விட்டு சென்று விட்டான்.
மாலை 5 மணிக்கே நாங்கள் அனைவரும் பெட்டி படுக்கையுடன் கோயிலுக்கு அருகில் பேரூந்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தோம். ஏறத்தாழ அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். சுந்தரம் மட்டும் நான் எதிர்பார்த்ததை போலவே தனியாக நின்று கொண்டிருந்தார்.
சுமார் பத்து நிமிடம் கழித்து நாங்கள் நின்ற இடத்திற்கு புயல் வேகத்தில் ஒரு ஸ்கூட்டி வந்தது. அடர்த்தெழு குருதியடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி, வெற்றிவேற்றடக்கைக் கொற்றவை, கானகம் உகந்த காளி, என்ற வர்ணனைக்கு பொருத்தமாக அதிலிருந்து இறங்கிய பெண்ணிற்கு சுமார் 35 வயதிருக்கும். சண்டைக்கு வந்தவள் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. வேறு எதுவும் புரியவில்லை.
நேராக சுந்தரதிடம் சென்று “ஓகோ இது தான் நீங்க எக்சாம் எழுதுர லட்சணமோ”. என்று கத்தி மூச்சுவாங்கும் போது சுந்தரம் ஏதோ தேர்வு எழுதப்போவதாக வீட்டில் கூறி விட்டு சுற்றுலா வந்துவிட்டார் என்பது மட்டும் புரிந்தது.
சுந்தரம் சன்னமான குரலில் “எல்லாரும் பாக்குறாங்க. நா வீட்டுக்கே வந்துடறேன். பிரச்சனை பண்ணாத.” என்று கூறவும் ”நீயெல்லாம் ஒரு மனுசனா. வேலைக்கு வந்தோமா, சம்பாதிச்சோமா, பிள்ள குட்டியை காப்பாத்துனோமான்னும் இல்லாமா ஊரச்சுத்திக்கிட்டு இருக்க” என்று கத்த சுந்திரம் திரு திரு என்று முழிக்கிறார்.
கடைசி முயற்சியாக “ப்ளீஸ். இது ஆபிஸ்” என்று கூறியதுதான் அவர் செய்த தவறு. ”ஆபிசாம் ஆபிஸ். குடியும் _____யுமா கூத்தடிச்சிட்டிருக்கீங்க. இதுக்கு பேர் ஆபீசா... தூ.... நீங்களாம் வேலைக்கு வந்தீங்களா இல்லை.________ வந்தீங்களா” என்று ஏகவசனத்தில் குரலை ஏற்றவும், அனைவரும் அதிர்ந்து போய் நிற்கவும், சுந்தரம் தலையை குனிந்து கொண்டே மனைவியை அழைத்து சென்று விட்டார்
அதன் பின்னர் பேரூந்து வந்து அனைவரும் ஏறினாலும், அந்த அதிர்ச்சியிலிருந்து அங்கு இருப்பவர்கள் முழுவ்தும் மீள சில மணிநேரம் ஆனது
அதன் பிறகும் அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்களை நேருக்கு நேர் பார்க்க தைரியம் இல்லாத சுந்தரம் மாற்றல் வாங்கிக்கொண்டு சென்று விட்டார்.
பல வாரங்கள் கழித்து ஆனந்தனை தற்செயலாக சந்திக்கும் போது “என்ன சுந்தரம் ஓடிட்டாரா” என்று சிரித்துக்கொண்டே கேட்டான். “என்னடா செய்த” என்ற என் ஆர்வத்திற்கு அவன் அளித்த பதில் “அவங்க வீட்டிற்கு போன் செய்து “நான் சாரோட பியூன் பேசுறேன். சார் எங்களுக்கெல்லாம் பாண்டிச்சேரில ட்ரீட் கொடுக்கிறார். பிரிட்ஜுக்கு பின்னாடி சிக்னெட்சரும் மேன்ஷன் ஹவுசும் இருக்காம். யார் கிட்டயாவது கொடுத்து விட முடியுமா. என்ன வந்து எடுத்துக்க சொன்னார். இங்க வேல டைட்டாயிட்டதால வர முடியலா. எல்லாரும் இங்க ஆபிசில வெயிட் பண்ணுறாங்க. அஞ்சரைக்கு கிளம்பனும். லேடிஸ் வேற வெயிட் பண்ணுறாங்க சீக்கிரம் கொடுத்து விட்டீங்கனா நல்லது,”ன்னு தாண்டா சொன்னேன்
Monday, June 29, 2009
தமிழில் டொமைன் பெற்ற முதல் வலைப்பதிவில் தமிழில் டொமைன் பெறுவது எப்படி என்ற விளக்க குறிப்பு
இந்த வசதியை பெற விரும்பினால் 10 டாலருடன் https://www.dynadot.com என்ற தளத்திற்கு செல்லவும் :) :)
அதிலுள்ள Search for a International Domain Name (IDN) என்ற சுட்டியை சுட்டவும்
அதிலுள்ள www. வெற்றிடத்தில் உங்களுக்கு தேவையான பெயரை எழுதி search பொத்தானை சுட்டவும்
நீங்கள் விரும்பும் டொமைன் பெயர் வேறு யாராலும் பதியப்படாமல் இருந்தால் available என்று வரும். உங்களுக்கு முன்னரே யாராவது பதிவு செய்திருந்தால் taken என்று வரும்
நீங்கள் வாங்க விரும்பும் டொமைனையும் மொழியையும் தேர்ந்தெடுக்கவும்
கிழுள்ள add to cart என்ற விசையை சுட்டவும்
checkout செய்துவிடவும்
மற்றுமொரு முறை ஒரு checkout
அதன் பிறகு உங்களது மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை அளித்து ஒரு கணக்கை ஆரம்பிக்கவேண்டும்
அதன் பிறகு பணம் செலுத்த வேண்டியது தான்
உங்களுக்கு விருப்பமான பெயரில் தமிழிலேயே ஒரு டொமைன் உங்களுக்கே உங்களுக்கு :) :) :)
சந்தேகங்களை மறுமொழியில் கேட்கவும்
இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.
| Opinion |
இந்த வலைபதிவிற்கு நேரடியாக (உலாவி மூலம்) வராமல் செய்தியோடை மூலமாகவும் இடுகைகளை தொடர்ந்து வாசிக்கலாம். செய்தியோடையை பெற இங்கு சுட்டவும்
Tuesday, June 16, 2009
சுகப்பிரசவமும், அறுவை சிகிச்சையும், ஊடக நீதிமன்ற தலையீடும் - ஏன் மருத்துவர்கள் சிசேரியன் செய்கிறார்கள்
இந்த இடுகையின் நோக்கம் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு வக்காலத்து வாங்குவது இல்லை என்பதை புரிந்து கொள்ளவது எளிது தான். இந்த மீள்பதிவின் நோக்கம் சிசேரியன் சதவிதங்கள் அதிகரித்ததற்கு முக்கிய காரணம் மருத்துவர்களின் மேல் செலுத்தப்படும் “அழுத்தங்கள்” என்பதை பதிவு செய்ய
அழுத்தங்கள் என்பது நீதிமன்ற தலையீடு மற்றும் ஊடக தலையீடு, அந்த பகுதி கட்டபஞ்சாயத்து என்று பலவகைப்படும் !!!
இந்த உதாரணம் ஊடக தலையீடு. நீதிமன்ற தலையீட்டிற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றனவே
இன்று புதிதாக எழுதப்பட்டவை அடர்சிகப்பு நிறத்தில் இருக்கின்றன
-oOo-
கேள்விகள் கேட்டது நையாண்டி நைனா
எனது முந்தைய பதிவில் நையாண்டி நைனா என்ற பதிவர் சில கேள்விகளை கேட்டிருந்தார். அனைத்திற்கும் நான் தெளிவான பதில் அளித்திருந்தேன். மேலும் அவரிடம் சில கேள்விகளும் கேட்டிருந்தேன். பதிலும் வரவில்லை
அவர் மேலும் சில கேள்விகளை கேட்கிறார்
மருத்துவர் ஐயா திரு. புருனோ அவர்கள், சொல்கிறார் டெஸ்ட் எடுக்க நீதி மன்றங்கள் வற்புறுத்துகின்றதாம். நீதி மன்றங்கள் அதனிடம் முறை இடப்பட்ட வழக்கு சார்ந்த வகைகளுக்கு மட்டுமே அவ்வாறு வற்புறுத்துகிறது, மற்றைய நேரங்களில் அதன் தலையீடு இருப்பதில்லை,
நைனா, என்னிடம் வரும் 100 நோயாளிகளில் ஒருவர் மட்டும் தான் நீதிமன்றம் போவார். ஆனால் யார் அந்த ஒருவர் என்று எனக்கு தெரியாது. எனவே 100 பேரும் நீதிமன்றம் செல்வார்கள் என்று நினைத்து வைத்தியம் பார்க்கும் நிலைக்கு மருத்துவர்களை தள்ளியது சமுகம் தான்.
உங்களுக்கு வரும் அனைத்து மின்னஞ்சல்களிலும் நச்சு நிரல் இருக்காது. ஆனால் அனைத்து மின்னஞ்சல்களையும் சோதிப்பீர்கள் அல்லவா.
அதே போல் தான் இதுவும்.
அதாவது, ஒரு சாதாரண பொதுஜனம், நம்ம நையாண்டி நைனா போகிறார் என்று வைத்து கொள்ளுங்களேன் அவரிடம் தேவை இல்லாத சில / பல பரிசோதனைகளை பரிந்துறைப்பது ஏன்?
இது மழுப்பலான கேள்வி. தேவையே இல்லாத பரிசோதனை என்று நையாண்டி நைனா என்ன சொல்கிறார். ஒரு உதாரணம் தர முடியுமா.
(சோதனைகள் செய்யாமல் எப்படி நோயை கண்டு பிடிப்பது என்று எதிர் கேள்வி கேட்க தேவை இல்லை. மேலும் அது மருத்துவதிற்கு தேவை அற்றது என்று நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்? மாற்று மருத்துவம் நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டு கேள்வியின் நோக்கத்தை திசை திருப்பும் முகமாக பதிலை நான் விரும்ப வில்லை.)
இது திசை திருப்புவது இல்லை. இது தான் உங்களின் கேள்விக்கு நேரான பதில்.
சோதனைகள் (உதாரணமாக நாக்கை நீட்டச்சொல்லி பார்ப்பது, இரத்த அழுத்தம் எடுப்பது) கூடாது என்று நீங்கள் கூறுவது வித்தியாசமாக உள்ளது.
பலர் கூறியபடி இது உயிர் சம்பந்தமான துறை. இங்கு ஏன் ஸார் உங்கள் நையாண்டி
என் வாழ்வில் எனக்கு நடந்த ஒரு சின்ன அனுபவம். எனக்கு வயது 27 ஆகும் சமயம், அதாவது கடந்த வருடம். எனக்கு கடைவாய் பல்லின் அருகே, வலி வந்தது ஒரு மருத்துவரிடம் சென்றேன் அவர் ஒன்றுமே கேட்காமல், " போய் ஒரு எக்ஸ்ரே எடுத்து வாருங்கள் " என்று சொல்கிறார். நானாக ஒரு வலி நிவாரண மாத்திரை எழுதி வாங்கி உட்கொண்டு, பின்னர் என் வீட்டிற்கு போன் செய்து சொன்னதும் எனது தந்தை கூறுகிறார் " உனக்கு கடைவாய் பல் வளரும் பருவம் அது தான் வளர்கிறது, வேறொன்றும் இல்லை" என் தந்தை கூறிய படியே நடந்தது.
உண்மை என்னவென்றால்
கடைவாய் பல் வளரும் போதும் வலி வரும். தாடை எலும்பில் புற்று நோய் வந்தாலும் வலி வரும்.
ஒரு மருத்துவரிடம் வரும் 1000 நபர்களில் 999 பேருக்கு வலி கடைவாய் பல் வளர்வதால். 1 நபருக்கு வரும் வலி தாடை எலும்பில் புற்று நோயினால். அதே சமயம் ஒருவருக்கு பல் வளர வேண்டிய நேரத்தில் வளர வில்லை என்றால் அவருக்கு புற்றுநொய் அல்லது சில வகை கட்டிகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
நாளை அந்த ஒருவர் நீதிமன்றம் சென்று ”முதலில் வலிக்கும் பொழுதே நான் இந்த மருத்துவரிடம் சென்றேன். அவர் ஆரம்ப நிலையில் என் புற்றுநோயை கண்டுபிடிக்க வில்லை - எனக்கு 5 லட்சம் நஷ்ட ஈடு வேண்டும்” என்று வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றம் “நீ ஊடுகதிர் எடுக்காது குற்றம். எனவே பிணியாளருக்கு 5 லட்சம் நஷ்ட ஈடு அளி” என்று உத்தரவிடுகிறது.
பொதுவாக ஒருவருக்கு கடைவாய் பல் வரும் வயது 17 முதல் 21 வரை.


எனவே 27 வயது நபர் ஒருவர் பல் வலி என்று வந்து அவருக்கு கடைவாய் பல் வளர வில்லை என்றால் பல காரணங்கள் இருக்கலாம். ஒரு காரணம் அவர் குடும்ப (அல்லது உடல்) வாகு. அது மட்டும் காரணம் அல்ல. அது ரிக்கெட்ஸாக இருக்கலாம். அல்ல்து தைராய்டு குறைபாடாக இருக்கலாம், பைரஸ் டிஸ்ப்ளேசியாவாக இருக்கலாம், டவுன்ஸ் ஸிண்ட்ரோமாக இருக்கலாம், மேலும் விபரம் தேவைப்படுவோர் கிழ்க்கண்ட கட்டுரைகளை வாசிக்கலாம்
- Johnsen DC. Prevalence of delayed emergence of permanent teeth as a result of local factors. J Am Dent Assoc 1971;14:100-6.
- Kaban LB, Needleman HL, Hertzberg J. Idiopathic failure of eruption of permanent molar teeth. Oral Surg 1976;42:155-63.
இது போல் நடப்பதால் தான் மருத்துவர்கள் ஆதாரத்தை பதிவு செய்வதற்காக சோதனை செய்கிறார்கள்.
இது குறித்து நான் ஏற்கனவே போன பதிவில் தெளிவாக விளக்கியிருந்தேன்.
உங்களுக்கு தெரியுமா : அரசு மருத்துவமனையில் கூட வெளியில் எடுத்த நுண்ணொளி மற்றும் திசு சோதனையை வைத்து அறுவை சிகிச்சை செய்வதில்லை.இதை போல் என் அண்ணனுக்கும் நடந்தது. ஒரு சாதாரண மனிதருக்கு தெரியும் இந்த விவரம் ஒரு மருத்துவருக்கு தெரியாமல் போனது ஏன்? (இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டுமே.)
அரசு மருத்துவமனையில் மீண்டும் இலவசமாகவே
இரத்த பரிசோதனை
நுண்ணொளி (Ultrasonogram)
திசு பரிசோதனை (Biopsy) செய்வார்கள் என்று தெரியுமா
ஒரு நோயாளி வெளியில் நுண்ணொளி பரிசோதனை செய்திருந்தாலும்
கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் மறுமுறை நுண்ணொளி சோதனை செய்யப்படும். அது போல் வெளியிடங்களில் செய்த திசு சோதனையில் புற்று நோய் என்று இருந்தால் உடனே அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய மாட்டர்கள். மறுபடியும் சோதனை செய்து அரசு நோய் குறியியல் மருத்துவ பேராசிரியர் (Professor of Pathology) அதை புற்று நோய் என்று உறுதி படுத்தினால் தான் அறுவை சிகிச்சை
ஏன்.
அப்படி (அரசு மருத்துவமனையிலேயே மீண்டும் இலவசமாக) செய்வதால் அரசு மருத்துவருக்கு என்ன லாபம்....
வேலை பளு அதிகரித்தாலும் கூட செய்வதற்கு காரணம் நீதிமன்றங்கள் தான்
எப்பொழுது மருத்துவம் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு உட்பட்டதோ அப்பொழுதே இதெல்லாம் ஆரம்பித்து விட்டது
சாதாரண மனிதர் அப்படி சொல்லலாம் .ஏனென்றால் அவர் சாதாரண மனிதர். நீங்கள் அவர் மேல் வழக்கு தொடர மாட்டீர்கள். மருத்துவர் அப்படி சொல்ல முடியாது என்று நீதிமன்றம் கூறுகிறது
புரிகிறதா
ஏன் சார் தெளிவாக விளக்கிய பின்னரும் அதே கேள்வி கேட்கிறீர்கள். புரியவில்லையா, அல்ல புரியாதது போல் நடிக்கிறீர்களா
அது சரி,
அப்படி சாதாரண மனிதருக்கு தெரிகிறது என்றால் நீங்கள் ஏன் மருத்துவரிடம் சென்றீர்கள் :) :) :) அது கூட நையாண்டி தானா
வேண்டும் என்றே இயற்கையாக வரும் பிரசவ வலியினை மட்டுருத்தி, சிசேரியன் செய்ய வற்புறுத்தாமை வேண்டும் என்று நான் கூறினால், நீங்கள் சொல்கிறீர்கள் "அப்படி சுகப்பிரசவம் ஆக சிறிது நேரம் பொறுக்கலாம். ஆனால் அதில் ஆபத்து அதிகம். பிறகு பிரச்சனை வந்தால் நீங்கள் (அதாவது பொது ஜனம்) என்ன கூறுவீர்கள். முதலிலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது என்று தானே"
அப்படி பொதுஜனம் கூறவில்லையா. மருத்துவம் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டது என்று சட்டம் இயற்றினால் பரிசோதனைகள் குறையும். (நீங்கள் இதை ஆதரிக்கிறீர்களா)
சுக பிரசவத்தில் சிக்கலா?????
உங்களின் கேள்வியே தவறு.
சாமி, பிரசவம் என்பது
- சுகப்பிரசவம்
- சிக்கலான பிரசவம்
- அறுவை சிகிச்சை மூலமாக தாயும் சேயும் நலம்
- அறுவை சிகிச்சை செய்யாததால் தாய், சேய், தாயும் சேயும் உடல் குறைவு அல்லது மரணம்
அப்படி என்றால் நம் முன்னோர்கள் 10 - 15 பிள்ளைகள் பெற்றார்களே எப்படி?
முன்னோர்களின் காலத்தில் தமிழகத்தில் ”பிரசவ கால மரண விகிதம் ” (Maternal Mortality Rate) 3 சதவிதமாக இருந்தது. அதாவது 1000 பிரசவங்களில் 30 பேர் மரணித்தார்கள். இன்று தமிழகத்தில் 0.08 சதமாக (அதாவது 1000 பிரசவங்களில் 0.8) பேர் மரணிக்கிறார்கள்.
இது ஆதார பூர்வ தகவல் . வேண்டுமானால் யாரிடமும் கேட்டுக்கொள்ளுங்கள்
இந்தியாவின் சக்கரவர்த்தியே அக்காலத்தில் தனது காதல் மனைவியை பிரசவ கால மரணத்திற்கு பரிகொடுத்தார். தெரியுமா (மன்னர் யார் என்று தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கூறலாம்)
சரி, அந்த இக்கட்டான நிலமையையும் சமாளிக்க தானே மருத்துவ மனை தேடி வருகிறார்கள். சுகமாய் பிரசவம் ஆகவேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சமாளிக்க தானே மருத்துவ மனைகளே ஒழிய, சுக பிரசவம் ஆகும் முன்னரே சிசேரியன் செய்வதற்கு அல்ல.
சாமி, அசம்பாவிதம் நடக்கும் என்று தெரிந்தால் நடக்கும் முன்னரே நடவடிக்கை எடுப்பது தான் புத்திசாலித்தனம். தாய் உயிருக்கு போராடுவது வரை ஏன் விட வேண்டும்
உதாரணமாக நீங்கள் பயணம் கிளம்புகிறீர்கள். ஒரு சக்கரத்தில் காற்று கம்மியாக உள்ளது. கிளம்பும் முன்னரே அதை சரி செய்வீர்களா அல்லது பாதியில் எதாவது பஞ்சர் கடை இருக்கும் என்று கிளம்புவீர்களா.
மற்றபடி, நீங்கள் கூறும் ”இக்கட்டான நிலைமை வரும் (பாதி வழியில் சீருந்து நிற்கும்) என்று தெரிந்தாலும் முதலில் ஒன்றும் (சக்கரத்தை மாற்றுவது அல்லது ஒட்டையை அடைப்பது) செய்யாமல் இக்கட்டான நிலைமை வந்தபின் (வாகனம் பாதியில் நின்றபின்) ”இக்கட்டான நிலமையையும் சமாளிக்க தானே ” _______ (பஞ்சர் கடை) என்ற உங்கள் கூற்றை வேறு யாரும் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை.
மற்ற வலைப்பதிவர்களுக்கு : சுகப்பிரசவம் ஆகாது என்று தெரிந்த பின், தாயும் சேயும் நலமாக இருக்கும் போதே அறுவை செய்ய வேண்டுமா, அல்லது தாயிற்கு வலி எடுத்து இரத்த போக்கு அதிமாகி (ante partum hemorrhage, post partum hemorrhage, rupture uterus) சிசுவிற்கு முச்சு தினறல் (foetal distress) ஏற்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா.
தாயும் சேயும் நலமாக இருக்கும் போதே அறுவை செய்யதால்
தாய் நலமாக இருப்பதற்கு வாய்ப்பு - 95 %
சேய் நலமாக இருப்பதற்கு வாய்ப்பு - 95 %
பிரசவ வலி ஏற்பட்ட பின் அறுவை செய்யதால்
தாய் நலமாக இருப்பதற்கு வாய்ப்பு - 50 %
சேய் நலமாக இருப்பதற்கு வாய்ப்பு - 25 %
என்றால் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள்
நையாண்டி நைனா தான் இரண்டாவது முடிவு எடுப்பதாக் கூறுகிறார் (இது கூட நையாண்டி தானா)
முதல் முடிவு எடுப்பது மருத்துவர்கள் பணம் சம்பாதிக்க என்று கூறுகிறார். மற்றவ்ர்களின் கருத்தென்ன ?? உங்களுக்கு குழப்பமாக இருக்கிறது என்றால் விஜயசங்கரின் இந்த இடுகையை வாசியுங்கள். மருத்துவர்கள் ஏன் அறுவை சிசிச்சை செய்கிறார்கள் என்பது தெளிவாக புரியும். முதலில் அறுவை சிகிச்சை வேண்டாம் என்றும் தாங்கள் “ரிஸ்க் எடுக்க தயார்” என்றும் கூறுபவர்கள் சுகப்பிரசவத்தில் ஏதாவது சிக்கல் வந்த பின்னர் அதற்கும் மருத்துவர் தான் காரணம், என்று குற்றம்சாட்டி அந்த மருத்துவரின் பெயரை / மருத்துவமனையின் பெயரை தொடர் மின்னஞ்சல்களிலும் முகபுத்தகத்திலும் (facebook) பிறதளங்களிலும் கெடுப்பதாக கூறி மிரட்டி பணம் கேட்கும் (blackmail) கொடுமை நடக்கும் போது நையாண்டி நைனாக்கள் அமைதியாக இருக்கும் மர்மம் என்ன
அந்த மருத்துவமனையில் செயல்பாடுகளை நான் நியாயப்படுத்த முயலவில்லை. ஆனால் அதே நேரம் தேவையில்லாமல் சிசேரியன் செய்கிறார்கள், அந்த மருத்துவமனையில் சுகப்பிரசவமே ஆவதில்லை என்றெல்லாம் அவதூறு பரப்பும் பதிவர்கள்
ஒரு நிமிடம் சிந்தித்து
முதலிலேயே அறுவை சிகிச்சை செய்திருந்தால் உங்கள் குழந்தை பிழைத்திருக்கும், தாமதமாக செய்ததால் தான் குழந்தை இறந்து விட்டது என்ற நிலை உங்களுக்கு வந்தால்
நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள் என்று கூற முடியுமா
அல்லது
சுகப்பிரசவத்தில் சிக்கல் வந்ததால் குழந்தையின் கைசெயல்படாமல் போய்விட்டால் (அறுவை சிகிச்சையில் இந்த பாதிப்பு வந்திருக்காது) என்றால் சுகப்பிரசவம் பார்த்த அந்த மருத்துவமனையை திட்டுவீர்களா அல்லது பாராட்டுவீர்களா
சாலையில் செல்லும் ஒருவரை இரு சக்கர வாகனம் இடித்து விட்டால் (யார் மேல் தவறிருந்தாலும்) நாம் அந்த வாகன ஓட்டியைத்தான் அடிப்போம். அதே போல் இரு சக்கர வாகனமும் நான்கு சக்கர வாகனமும் இடித்து விட்டால் நம்மிடம் அடி வாங்குவது அந்த நான்கு சக்கர வாகன ஓட்டுனரே
அதே போல் இது போல் ஒரு கை ஊனமான குழந்தை ஒரு புறமும், மருத்துவர் மறுபுறமும் நின்றால் கட்டாயம் அந்த மருத்துவர் தான் அடி வாங்குவார். அது தான் இன்று நடக்கிறது - நீதிமன்றங்களிலும், ஊடகங்களிலும், தற்சமயம் ப்ளாக்கரிலும், பேஸ்புக்கிலும், வோர்ட்பிரசிலும், மருத்துவர் தவறு செய்ய வில்லை என்றால் கூட மருத்துவமனையை குற்றம் சாட்டுகிறார்கள்
அதுவும் அந்த குழந்தை இறந்து விட்டால், 40 வாரம் சுமந்து பெற்ற தாயின் மேல் உள்ள பரிதாபமும் சேர்ந்து விடுகிறது
இந்த பெங்களூர் மருத்துவமனை விவகாரத்தில் அந்த தாயிடம் ஏற்கனவே சிசேரியன் செய்ததால் அதன் பிறகு சுகப்பிரசவம் என்பது தாயிற்கும் சேயிற்கும் அதிக அளவு சிக்கல் நிறைந்தது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது
இருந்தாலும் அந்த தாய் சுகப்பிரசவமே தேவை என்று கூறியுள்ளார். இது போல் பலரும் கூறியிருப்பார்கள்
சுகப்பிரசவத்தில் பிரச்சனை இல்லாத 99 பேரும் வீட்டிற்கு சென்று விட்டார்கள். இது போல் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு கூட மறுமுறை சுகப்பிரசவம் முயன்று பார்க்கும் அந்த மருத்துவமனையை பாராட்டி இணையத்தில் ஏதாவது பதிவு இருக்கிறதா என்று தெரியவில்லை :) :)
ஆனால் சிக்கல் என்றவுடன் “எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது தானே” என்று போர்க்கொடி
அதற்கு சிங்கி அடிக்க இணையத்தில் மேலும் சில தற்குறிகள் :( :(
இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் தான் பெரும்பாலன மருத்துவர்கள் ஒரு சிறிய பிரச்சனை இருந்தாலும் அறுவை சிகிச்சை செய்ய விரும்புகிறார்கள்
மருத்துவர்கள் / மருத்துவத்துறையில் மேல் காழ்ப்புணர்வு அல்லது புரிந்து கொள்ளும் தன்மை குறைவு அல்லது அறியாமை ஆகியவற்றுடன் பதிவு மற்றும் மறுமொழி எழுதும் பதிவர்கள் இனியாவது உண்மையை தெரிந்து கொண்டு திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கலாமா
இயற்கையாக வரும் பிரசவ வலி ( பிரசவ வலி வந்தால், பிரசவம் ஆகிவிடும்,
ஆகா,
எப்படி சார் உங்களால் இப்படி எல்லாம் நையாண்டி செய்ய முடிகிறது
பல நிலைகளிலும் பிரசவ வலி வரும், ஆனால் சுகப்பிரசவல் கண்டிப்பாக ஆகாது. உதாரணத்திற்கு 2 மட்டும் த்ருகிறேன்
1. Placenta Praevia
2. CPD
எனவே பிரசவ வலி வந்தால் பிரசவம் ஆகிவிடும் என்ற உங்கள் கூற்று நையாண்டியே தவிர வேறு ஒன்றுமில்லை. அளவிற்கு மீறினால் நையாண்டியும் நஞ்சு தான்
அப்படி ஆகும் பொழுது சில சமயம் குழந்தாயின் நிலை மாறிவிடும், வேறு பல சிக்கல்களும் வரும்) வராமல் மட்டுபடுத்தி சிசேரியன் செய்ய அல்ல.
இது போன்ற நையாண்டி வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை
எத்தனை பேர், மருத்துவரின் தவறுக்கு அவரிடம் வில்லங்கம் செய்கிறார்கள்?
பலர். நாளிதழ்களை படித்தாலே தெரியும். மேலும் பலர் மருத்துவர் தவறு செய்யாவிட்டாலும் கூட அவரிடம் வில்லங்கம் செய்கிறார்கள். [உதாரணம் வேண்டுமா :) :) :) :) ] {இது உள்குத்து அல்ல - வெளிகுத்து :) :) :) } சந்தேகம் இருந்தால் நான் அளித்த சுட்டிகளை பாருங்கள்
அவரவர், அவரவர் விதியினை நொந்து தானே செல்கிறார்கள்.
அப்படி செல்வது மருத்துவர் தான் :( :(
அடுத்து, சோதனை, டெஸ்ட் என்று நான் சொல்வது ஸ்டெத்-சோதனைகளையும், நாக்கை நீட்டி சோதனை செய்வதையும் கூறவில்லை,
இதை நீங்கள் முதலில் தெளிவாக கூறவில்லை
ஆனால் அதையும் நீங்கள் கூறி இருப்பது உங்கள் நகைச்சுவை உணர்வை காட்டினாலும், அதில் உங்கள் மழுப்பல் உணர்வே மேலோங்கி இருப்பதாக தெரிகிறது.
என்ன மழுப்பல். அது தெளிவான பதில் தான். எனது தெளிவான பதில்களையும் நான் எழுப்பிய கேள்விகளையும் ஒரு முறை படியுங்கள். எதாவது சந்தேகம் என்றால் குறிப்பிட்டு கேளுங்கள்.
நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வில்லை. ஏன். பதில் கூறங்கள் ச
மழுப்பல் மழுப்பல் என்று திரும்பத்திரும்ப கூறுவது ஏன்
மேலும் அந்த சோதனைகளை காசில்லாமல் செய்கிறோம் என்ற ஏளனமா? இல்லையே? அந்த சோதனைகளுக்கும் சேர்த்து தானே கட்டணம் வாங்குகிறீர்கள்.
ஆமாம். கண்டிப்பாக காசு வாங்குகிறோம். இதில் என்ன தவறு. மருத்துவர் காசு வாங்குவது தவறு என்ற உங்களில் கூற்று தான் நையாண்டி.
உங்களின் இரண்டாவது வரியே சொல்கிறது, உங்களின் முதல் வரி அர்த்தமற்றது என்று
ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் மருத்துவரின் மருந்துக்களும், வைத்திய முறைகளும் தீர்வை தரவில்லை என்று அடுத்த மருத்துவரை நாடும் பொழுது எடுக்க சொல்லும் டெஸ்டுகளை பற்றி நான் சொன்னால் நீங்கள் வேறு எதையோ பேசி சமாளிக்கிறீர்கள்.
அதுவும் இது போல் தான். நான் சமாளிக்க வில்லை, இது குறித்து தெளிவாக விளக்கியுள்ளேன். உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் குறிப்பிட்ட பதிவில் கேட்கவும்
ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் மருத்துவரின் மருந்துக்களும், வைத்திய முறைகளும் தீர்வை தரவில்லை என்று அரசு மருத்துவமனையை நாடும் பொழுது எடுக்க சொல்லும் டெஸ்டுகளை பற்றி நான் கூறிவிட்டேனே
படித்தீர்களா. ஏன் சார் பதிலை கூட படிக்காமல் நையாண்டி செய்கிறீர்கள்.
மீண்டும் அதே பரிசோதனைகளை செய்வதால் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவருக்கு பொருளாதார ரீதியாக லாபம் கிடையாது. ஏன் வேலைப்பளு தான் கூட. அப்படி கூட அதிகம் வேலைப்பளுவை தாங்குவது நீதிமன்றத்திற்குத்தான். புரிகிறதா.
ட்ரிப்ஸ், சிரிஞ்சு, ஏன் எழுதி கொடுக்கிறீர்கள் என்று தெளிவில்லாமல் கேட்டது என் தவறு தான்.
அப்பாடா.
நான் சொல்வது தேவைக்கு மீறி, எழுதி கொடுப்பது ஏன்?
நான் சொல்வது தேவைக்கு மீறி கொடுக்கவில்லை.
தேவைப்பட்டது தான் தரப்படுகிறது என்று தான்.
என்ன தேவை, ஏன் தேவை என்று நான் தெளிவாக விளக்கி விட்டேன். ஆனால் உங்களின் குற்றச்சாட்டிற்கு நீங்கள் ஆதாரம் தர வில்லை.
பின்னர் அவர் ஒரு மாத்திரை வில்லை எழுதி கொடுப்பார் அது அங்கே இல்லை எனில் (அப்படி பெரும்பாலும் இருக்காது, ஏன் எனில் அவரே அங்கு ஸ்டாக் உள்ளத்தை தானே எழுதியே தருவார் )அங்கே உள்ளவர் மாற்றி ( மாற்றி கொடுப்பது என்பது வேறு ராசாயன கலவை கொண்டுள்ள மாத்திரை அல்ல, எல்லாம் ஒரே ராசாயனம், திறன், அளவு உள்ள மாத்திரை தான்) கொடுத்தாலும், ஒண்ணும் சொல்ல மாட்டார். ஆனால் நாம் வெளியே சென்று வாங்கி வந்துவிட்டால்? பிரச்சினை தான்? ஒண்ணும் சொல்ல முடியாத பட்சத்தில் இம்சை வேறு ரூபத்தில் வரும்.
இது குறித்தும் நான் தெளிவாக விளக்கி விட்டேன்.
உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் (அதில் பெரும்பாண்மை நையாண்டி கேள்வியாக இருந்தாலும்) தெளிவாக விளக்கிவிட்டேன்.
மேலும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
பின் குறிப்பு
ஒருவரிடம் கேள்வி கேட்க வேண்டுமென்றால் அவர் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டால் தான் நீங்கள் கேட்டது தெரியும்
---
நையாண்டி நைனா பதிலளிக்காமல் மழுப்பிய நான் கேட்ட கேள்விகள்
- அப்படி யென்றால் இதையத்துடிப்பு மானி (Stethoscope) வைத்து ஒரு நோயாளியை வாழ்நாளிலேயே ஒரு முறை தான் சோதிக்க வேண்டுமா ??
- ஒரு நோயாளி மறுமுறை வந்தால் குறைந்த பட்சம் நாக்கை நீட்டச்சொல்லி பார்ப்பது கூட தவறா ??
- இளங்கலை படித்த மருத்துவரும், முதுகலை படித்த மருத்துவரும், சிறப்பு மருத்துவரும் ஒரே கட்டணம் தான் வாங்க வேண்டுமா
- இருபது வருடங்களுக்கு முன்னர் புறநோயாளி பிரிவிலேயே போலியோ என்று கூறலாம். இன்று பரிசோதனை (அதான் டெஸ்ட்) எடுத்து விட்டு தான் கூற வேண்டும் என்பது விதி. இது குறித்து உங்கள் கருத்து என்ன
- மருந்து விற்பது எந்த விதத்தில் தவறு என்று கூற முடியுமா
- நோயாளி இறந்த உடன் மருத்துவமனையை அடிப்பது என்னவாம்.
- சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்தால் அந்த பகுதி தாதாக்களை வைத்து மருத்துவரை மிரட்டுவது குறித்து உங்கள் கருத்து என்ன
- ஒரு மருத்துவமனைக்கு தேவைப்படும் மென்பொருள்,கணனி,மின்சாரம், நீர், வாகனம், பெட்ரோல் போன்றவைகளை அளிப்பவர்களும் சேவை மணப்பாண்மையுடன் செயல்பட வேண்டுமா அல்லது மருத்துவர்கள் மட்டும் செயல்பட்டால் போதுமா
- ஒருமுறை மட்டும் இரத்தில் சர்க்கரை அளவை பார்த்து விட்டு வாழ்நாள் முழுவதும் வைத்தியம் பார்க்க வேண்டும் என்கிறீர்களா
(நீங்கள் நான் கேட்டுவரும் கேள்விகளுக்கு பதிலளித்தாலும், அல்லது பதிலளிக்காமல் நழுவினாலும்) பதிலளிக்க நான் தயார்
இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.
| Opinion |
இந்த வலைபதிவிற்கு நேரடியாக (உலாவி மூலம்) வராமல் செய்தியோடை மூலமாகவும் இடுகைகளை தொடர்ந்து வாசிக்கலாம். செய்தியோடையை பெற இங்கு சுட்டவும்
Friday, June 12, 2009
செல்லிடப்பேசி / அலைபேசியில் பயணங்கள் வலைப்பதிவை வாசிக்கலாம் - Read payanangal.in in your mobile
இதனால் தான் பல தளங்களும் செல்லிடப்பேசிகளுக்கென்றே சிறப்பு தளம் ஒன்றை அமைத்துள்ளார்கள்
உதாரணம்
இது போல் பயணங்கள் வலைப்பதிவையும் அலைபேசியில் வாசிக்க தனித்தளம் ஒன்று http://m.payanangal.in/ தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
பயணங்கள் தளத்தை இணைய வசதி உள்ள அலைபேசியில் வாசிக்க வலைத்தள முகவரி உள்ளிடும் இடத்தில் m.payanangal.in என்று உள்ளிட்டால் போதுமானது
வாசித்து பாருங்கள். பிடித்திருந்தால் / வசதியிருந்தால் உங்கள் தளத்திற்கும் இது போல் எப்படி அமைப்பது என்று விளக்குகிறேன்
இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.
| Opinion |
இந்த வலைபதிவிற்கு நேரடியாக (உலாவி மூலம்) வராமல் செய்தியோடை மூலமாகவும் இடுகைகளை தொடர்ந்து வாசிக்கலாம். செய்தியோடையை பெற இங்கு சுட்டவும்
Thursday, June 04, 2009
தமிழ் வழி மருத்துவக்கல்வி - சில கருத்துக்கள்
- கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம்
- ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம்,
- தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களா
- ரவிசங்கர் அவர்களின் வினாக்களுக்கு விடைகள்
8. தமிழ் வழியத்தில் படித்து வரும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் தடுமாறுகிறார்களா?
கண்டிப்பாக இல்லை. எங்கள் வகுப்பிலிருந்து முதன் முதலில் பட்டமேற்படிப்பு படித்த மாணவர் (அதாவது நாங்கள் முதலில் எழுதிய நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்) தமிழ் வழியில் படித்தவர் தான்.
மருத்துவத்துறையை பொருத்தவரை முதல் மூன்று ஆண்டுகளில் உபயோகிக்கும் 95 சதவித வார்த்தைகள் ஆங்கிலம் அல்ல. அவை கிரெக்கம் அல்லது லத்தீன் !! ஏன் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளில் இருந்தும் (சில ஆப்பிரிக்க மொழிகள் உட்பட) சொற்கள் உள்ளன
எனவே
தமிழ் வழிக்கல்வியில் வந்தவரும் அவைகளை புதிதாக படிக்க வேண்டும்
ஆங்கில வழிக்கல்வியில் வந்தவரும் அவைகளை புதிதாக படிக்க வேண்டும்
உதாரணமாக
தமிழ் - தோளின் முன்புறம் ஒரு கட்டி
ஆங்கிலம் - Swelling in front of Shoulder
Medical - Swelling at anterior aspect of deltoid
இதில் தமிழ் மாணவரும் புதிதாக இரண்டு வார்த்தை கற்க வேண்டும்
ஆங்கில வழி படித்தவரும் புதிதாக இரண்டு வார்த்தை கற்க வேண்டும்
இதை தமிழ் படுத்தினால்
டெல்டாயிடுக்கு அண்டிரியராக ஒரு கட்டி என்று எழுத வேண்டியிருக்கும்
ஐரோப்பிய நாடுகளில் தாய் மொழியில்தான் கற்கிறார்கள். அவர்களுக்கு அவர்களின் தாய் மொழியின் Script அதே ரோமன் ஸ்கிரிப்ட் தான். அவர்களும் fever, stomach, leg, brain, heart போன்ற சொற்களைத்தான் தங்களின் தாய் மொழியில் பயன்படுத்துவார்கள். 98 விழுக்காடு சொற்கள் கலைச்சொற்கள் தான். அதே போல் பிரஞ்சு மொழியில் படித்த ஒருவர் மேற்கொண்டு ஆங்கில மொழி புத்தகத்தை (மருத்துவத்துறையை பொருத்தவரை) ஒரு சிறு அகராதியை வைத்துக்கொண்டே கற்கலாம்.
தமிழ் வழியில் படித்த மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் கண்டிப்பாக தடுமாறுவதில்லை.
இது குறித்து நான் பல ஆங்கில பதிவுகளில் பின்னூட்டங்களில் எழுதியிருந்தேன். ஆங்கிலம் தெரியாததால் தற்கொலை செய்து கொள்ளுதல் அல்லது படிப்பை விட்டு விலகி விடுதல் போன்றவை மருத்துவத்துறையில் அறவே நடப்பது இல்லை.
சில (பொறியியல்) கல்வி நிலையங்களில் நடப்பது போல் ஆங்கிலம் தெரியாததால் மருத்துவத்துறையில் யாரும் தற்கொலை செய்து கொள்வது கிடையாது. அப்படியே ஒன்றிரண்டு தற்கொலைகள் நடந்த போதும், அது காதல் தோல்வியால் தான். படிப்பினால் மன உளைச்சல் என்றால் எனக்கு தெரிந்து 2002ஆம் வருடம் ஒரு மாணவி தனக்கு பட்டமேற்படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்று தான் தற்கொலை செய்ததை தவிர வேறு ஒன்றும் இல்லை
மற்றொரு விஷயம் -- படித்து முடித்த பின் “மென் திறன்” (தமிழ் சொல் புரியவில்லை என்றால் மட்டும் பின்னூட்டத்தில் கேட்கவும்) போன்ற “மாயைகள்” இத்துறையில் இல்லை. வாடிக்கையாளர்களிடம் (பிணியாளர்) பேச வேண்டிய மொழி தமிழ் என்பதாலும், பேச்சு ஆங்கிலத்திற்கு மிகக்குறைவான (கிட்டத்தட்ட பூஜ்யம்) அளவு முக்கியத்துவம் இருப்பதாலும் தான் தமிழ் வழி படித்தவர்கள் இந்த துறையில் எந்த பெரிய பிரச்சனையையும் சந்திப்பதில்லை.
ஒரு படி மேலே போய், தமிழ் வழி படித்தவர்கள் ஆங்கில வழியாக எளிதாக படிக்கக்கூடிய துறை என்னவென்றால் கட்டாயமாக மருத்துவத்துறை என்று கூறலாம் !!
மருத்துவப் படிப்பையும் முழுக்கத் தமிழ் வழியத்தில் கொண்டு வருவதை ஆதரிப்பீர்களா?
இல்லை. அதனால் பலன் கிடையாது. நோயாளிக்கு நாம் கூறுவதும் நமக்கு நோயாளி கூறுவது புரிய வேண்டும் என்பதற்காக தமிழ் வழியில் தான் படிக்க வேண்டும் என்று கிடையாது
அதன் பயன், பாதகம் என்னவாக இருக்கும்?
பயன் ஒன்றும் இல்லை. (எனக்கு தெரிந்த வரை)
பாதகம் நேரவிரையம். எம்.பி.பி.எஸ் படிக்கும் பொழுது நேர விரயம் ஏற்பட வில்லை என்றாலும் எம்.பி.பி.எஸ் படித்து முடித்த பின் மேற்படிப்பு படிக்கும் பொழுது நேரவிரையம் ஏற்படும்
ஆனால்
நோயாளிகளுக்கு அளிக்கும் குறிப்பு சீட்டு, மருந்து பரிந்துரை ஆகியவற்றை கட்டாயம் தமிழில் தான் அளிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
அப்படி கொண்டு வரும் நிலையில் அதற்கு ஆதரவாக இருக்க வேண்டிய புறச் சூழ்நிலைகள் என்ன?
மருத்துவம் என்பது பல அடுக்கு படிக்க வேண்டிய ஒரு துறை.
உதாரணமாக இந்த வருடம் MS Anatomyக்கு தமிழக்த்திலேயே ஒரு மாணவர் மட்டும் தான் சேர்ந்துள்ளார். இப்படி ஒரு மாநிலத்திலேயே ஐந்திற்கும் குறைவானவர்களே படிக்கும் பொழுது ஆங்கிலத்திலேயே படிப்பது தான் மேற்படிப்பு, குறிப்பு எடுப்பது, சர்வதேச சஞ்சிகைகளுக்கு எழுதுவது ஆகியவற்றுக்கு நல்லது. ஐந்து நபர்கள் மட்டும் படிப்பதற்காக 20000 பக்கங்களை தமிழ் படுத்துவது என்பது நேரவிரையம்
ஆனால் நோயாளியுடன் பேசு பொழுது கட்டாயம் தாய் மொழியில் தான் பேச வேண்டும்.
(எடுத்துக்காட்டுக்கு, அரசு வேலையில் முன்னுரிமை, பிற மாநிலங்களில் ஏற்பு..)
இப்படி கொண்டு வருவதற்கான தேவை இருக்கிறதா?
தேவை இல்லை என்பது என் கருத்து
கொண்டு வருவதற்கான தடைகள் யாவை?
தடை என்று பார்த்தால் டெல்டாயிடுக்கு அண்டிரியர் என்று எழுதுவதற்கும் Anterior to Deltoid என்று எழுதுவதற்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக Diabetes Mellitus வேறு. Diabetes Insipidus வேறு.
இந்திய மருத்துவக் கழகத்தின் ஆதரவு இல்லாமலை, தமிழில் பயிற்சி உடைய ஆசிரியர்கள் இல்லாமை, பாடநூல்கள் இல்லாமை..பிற?
மருத்துவ கவுன்சில் ஆதரவு என்பது பெரிய விடயம் கிடையாது. முக்கிய விஷ்யம் என்னவென்றால் இவ்வளவு முயற்சி செய்தால் விளையும் பயன் என்ன என்பது.
நோயாளிக்கு தமிழில் விளக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ படிப்பை தமிழ் படுத்த வேண்டும் என்பது இல்லை
மருத்துவ மேற்படிப்புக்கான தேர்வைத் தமிழில் தான் எழுதுவேன் என்று ஒருவர் தொடர்ந்து போராடி வருவதாகக் கண்டேன்..
எழுதலாம். தப்பில்லை. ஆனால் இதில் என்ன பிரச்சனை . ஏன் அதை தடுக்கிறார்கள் என்று புரியவில்லை. அவரை தமிழில் எழுத விட்டு தமிழ் தெரிந்த மருத்துவ பேராசிரியர்களை வைத்து திருத்த வேண்டியது தான். ஆனால் செய்முறைத்தேர்வில் பிற மாநிலத்திலிருந்து வருபவர்களிடம் எப்படி தமிழில் பேச முடியும் என்பது தான் சிக்கலான விஷயம்.
நோய் குறித்த விரிவான விவரங்களைத் தமிழில் சொன்னாலும் ஆங்கிலத்தில் சொன்னாலும் நோயாளிகளுக்குப் புரியாமல் இருக்காலம்.
கண்டிப்பாக வித்தியாசம் உள்ளது.
next review on Tuesday at room 10 என்பதற்கும்
அடுத்த முறை அறை எண் 10க்கு செவ்வாய்கிழமை வரவும் என்று எழுதுவதற்கும் நிறைய வேறு பாடு உள்ளது. நான் பல வருடங்களாக நோய் குறிப்பு சீட்டில் தமிழில் தான் எழுதிகொடுக்கிறேன். என்னைப் போல் பலரும் இப்படி தான் செய்கிறோம்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அனைத்து மருந்துகளிலும் அட்டையில் மருந்தின் பெயர் தமிழில்தான் இருக்கும்.
ஏனென்றால் கலைச்சொற்கள் பொது மக்களுக்குப் புரியாமல் இருக்கலாம். அதனால், எந்த மொழியில் படிக்கிறோம் என்பது ஒரு பிரச்சினை இல்லை என்று கருதுகிறீர்களா?
பொதுமக்களிடம் கலைச்சொற்களை பயன்படுத்த தேவையில்லை. அப்படி பயன்படு்ததுவது தவறும் கூட. அவர்களிடம் சாதாரண மொழியில் தான் உரையாட வேண்டும்.
You have got thrombosis of Artery of Charcot என்றாலோ
உங்களின் சார்கோட் ஆர்டரி த்ராம்போஸ் ஆகி விட்டது
என்றாலோ கண்டிப்பாக புரியாது - இரண்டாவது தமிழில் இருந்தாலும் கூட. ஏன் ஆங்கிலத்தில் எம்.பில் படித்தவருக்கு கூட முதலில் சொன்னது புரியாது
You have got Stroke and Hemiplegia என்றாலோ
உங்களுக்கு பக்க வாதம் என்றாலோ
கட்டாயம் புரியும்
9. தமிழ்நாட்டில் தமிழ் தெரியாமல் மருத்துவம் பார்ப்பது சாத்தியமா?
இல்லை. எந்த ஊரிலும் அந்த மொழி தெரியாமல் வைத்தியம் பார்ப்பது சாத்தியமில்லை.
சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்தால் தமிழுடன் தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும்
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் தமிழுடன் மலையாளமும் வங்காளியும் தெரிந்திருக்க வேண்டும்
அப்பலோ, சங்கர நேத்ராலயா போன்ற தனியார் மருத்துவமனைகளிலும் கூட தமிழுடன் வங்காளியும் தெரிந்திருக்க வேண்டும்
ஆங்கில அறிவுடைய நோயாளிகளுக்கும் மட்டும் மருத்துவம் பார்க்க வேண்டும். அல்லது, மருத்துவரின் சேவையைப் புறக்கணிக்க இயலாத அளவுக்கு ஏதோ ஒரு துறையில் நிபுணராக இருக்க வேண்டும். வேறு சாத்தியங்கள் ஏதும் தோன்றவில்லை.
நோயாளியிடம் தமிழில் பேசுவதற்கு தமிழ் மொழியில்தான் படிக்க வேண்டும் என்று இல்லை.
மருத்துவ மொழி வேறு. ஆங்கிலம் வேறு. தமிழ் வேறு. மருத்துவ மொழி என்பதை ஆங்கிலம் என்று தவறாக நினைக்க வேண்டாம். உதாரணமாக கீழே தரப்பட்டுள்ளது ஆங்கிலம் தான். எவ்வளவு புரிகிறதா என்று பாருங்கள்
இதை தமிழில் எழுதினாலும் மருத்துவ அறிவு இல்லாத தமிழனுக்கு எவ்வளவு புரியும் என்று பாருங்கள்
Hyperparathyroidism and hypoparathyroidism
The classification of Hyperparathyroidism and hypoparathyroidism
- Primary Hyperparathyroidism
- Due to a disease of Parathyroid
- Ademoma of Parathyroid
- Carcinoma of Parathyroid
- Primary Chief Cell Hyperplasia of Parathyroid
- Secondary Hyperparathyroidism
- o Presents with Mild Hypocalcemia
- o Due to a disease elsewhere producing Hypocalcemia and the Parathyroid compensates
- Chronic Renal Insufficiency
- Vitamin D Deficiency
- Intestinal Malabsorption
- Tertiary Hyperparathyroidism
- Complication of Secondary Hyperparathyroidism
- Hyperfunction persists inspite of removal of the cause
- Probably a hyperplastic nodule has turned into adenoma
- Primary Hypoparathyroidism
- Due to disease of Parathyroid
- Surgery
- Of Thyroid
- Radical neck Dissection
- Auto immune diseases
- Pseudo Hypoparathyroidism
- Tissues fail to respond to Parathyroid hormone though Parathyroid may be normal
- Inherited as Autosomal Dominant
- Signs and symptoms of Hypoparathyroidism
- Short Stature
- Short Metacarpals and Metatarsals
- Flat Nose
- Round Face
- Multiple Exostoses
- Hypercalciuria
- Hypocalcemia
- Hyperphosphatemia
- Pseudo Pseudo Hypoparathyroidism
- Probably an incomplete form of Pseudo Hypoparathyroidism
- Clinical features of Pseudo Hypoparathyroidism, but tissues respond normally
அதே நேரத்தில் நீரழிவு நோய் குறித்து ஒரு சிறு குறிப்பு (துண்டுச்சீட்டு என்று வைத்துக்கொள்வோம்)
Symptoms of Type 2 Diabetes
- Excessive thirst
- Passing of excessive amounts of urine
- Fatigue
- Frequent skin infections e.g. boils
- Itchiness
- If you are over weight – try to lose some weight: Evidence shows that a 10% reduction in body weight can lead to on average a 50% reduction in fasting blood sugar levels.
- Exercise Regularly: with regard to diabetes, regular physical activity aids weight management; improves insulin sensitivity and therefore blood glucose control; aids blood fats control; and improves your overall sense of well-being.
- Eat healthily: maintain and adhere to a healthy diabetic diet.
- Keep a regular eye on your blood sugar levels
இது புரிகிறதா அல்லது கீழே உள்ளது புரிகிறதா என்று பாருங்கள்
நீரழிவு நோயின் அறிகுறிகள்
- அதிக தாகம்
- அடிக்கடிசிறுநீர் கழித்தல்
- அசதி
- அடிக்கடி தோல் கொப்புளங்கள்
- புண்கள் ஆறாமல் இருப்பது
- நீங்கள் அதிக எடையுள்ளவராக இருந்தால் எடையைக்குறைக்கவும்
- ஒழுங்காக, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யவும்
- ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிக்கவும்
- இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும்
ஆனால் இது போன்ற விஷயங்களுக்காக மருத்துவத்தை தமிழில் படிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
இன்று நான் நெதர்லேண்டு வருகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் (அல்லது சீனா செல்கிறேன்) ஒரு 6 மாதம் அந்த மொழியை படித்த பின் என்னால் கண்டிப்பாக அந்த மக்களுடன் உரையாடி அவர்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும். அதற்கு நான் சீன மொழியில் ம்ருத்துவம் படிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
தமிழ்வழியில் பள்ளியில் படித்த பலர் வட மாநிலங்களில் பட்ட மேற்படிப்பு படிக்கும் காலங்களில் அங்குள்ள மக்களுக்கு வைத்தியம் பார்க்க ஹிந்திதான் பேச வேண்டும்.
அதே போல் பள்ளியில் ஹிந்தி வழியில் படித்தவர்கள் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிக்கிறார்கள். பின்னர் அவர்களின் மாநிலங்களுக்கு சென்று வைத்தியம் பார்க்கிறார்கள்.
நோயாளியிடம் தமிழில் பேசுவதற்கு தமிழ் மொழியில்தான் படிக்க வேண்டும் என்று இல்லை.
இன்று
பி.ஈ / பி.டெக் இடங்கள் எத்தனை
எம்.ஈ. / எம்.டெக் இடங்கள் எத்தனை
அதே போல்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் இடங்கள் எத்தனை
எம்.டி / எம்.எஸ் இடங்கள் எத்தனை
என்று பார்த்தால் பி.ஈ முடித்து மேற்படிப்பு படிப்பவர்களை விட எம்.பி.பி.எஸ் முடித்து மேற்படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை (அல்லது சதவிதம்) அதிகம்.
http://www.targetpg.com/exams/tnpg/2008/tnpg_2008_total_vacancies.pdf
இந்த கோப்பில் நீங்கள் இடங்களை பார்க்கலாம். இதில் பல படிப்புகளில் ஒரு இடம் அல்லது இரண்டும் இடங்கள் உள்ளன. சில படிப்புகளில் தமிழகம் முழுவதுமே ஒரு இடம் மட்டும் தான்.
இப்படி ஒரு நபர் படிக்க (அல்லது அடுத்த 20 வருடங்களில் அதிக பட்சம் 50 பேர் படிப்பார்கள்) சுமார் 25000 (25 ஆயிரம்) பக்கங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டிய சிரமங்கள் (சிக்கல் எதுவும் கிடையாது. சிரமம் மட்டும் தான்) எவ்வளவு. இருபது வருடம் கழித்து இந்த 25000 பக்கங்களில் 24000 பக்கங்களை மறுபடி மொழிபெயர்க்க வேண்டும். இந்த துறை அவ்வளவு வேகமாக வளர்கிறது. இவ்வளவு முயற்சியும் அந்த அளவிற்கு பலன் தருமா என்றால் சந்தேகமே.
சரி தமிழ் படுத்தி அவர் தமிழில் படிக்கிறார் என்றால் அதன் பிறகு ஒரு சஞ்சிகையோ, வேறு ஒரு புத்தகமோ படிக்க ஆங்கிலம் தேவை. அம்மாதிரி தருணங்களில் அவர் (தமிழ் வழியில் இளங்கலை படித்த ஒருவர்) மேற்கொண்டு படிக்காமலேயே போவதற்கு வாய்ப்பு உள்ளது.
-oOo-
ரஷ்யாவில் மட்டும் ரஷ்ய மொழியில் படிக்கிறார்கள். ஐரோப்பாவில் மட்டும் ஐரோப்பிய மொழியில் படிக்கிறார்கள். நாம் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் ??
உண்மை என்னவென்றால் அவர்களும் பட்ட மேற்படிப்பு ஆகியவற்றில் மெதுவாக ஆங்கிலத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் படிக்க செல்லும் மாணவர்கள் கட்டாயம் ரஷ்ய மொழி கற்ற வேண்டும். காரணம் பாடங்கள் ரஷ்ய மொழியில் இருக்கும்
ஐரோப்பாவில் கூட அடிப்படை மருத்துவம் அவர்களின் தாய் மொழியில்தான் இருக்கிறது
ஆனால் ஐரோப்பாவில் புத்தாய்வு மாணவராக (பெலோஷிப்) செல்பவர்கள் ஆங்கிலம் தான் உபயோகிக்கிறார்கள். இன்னமும் சில ஆண்டுகளில் ஆங்கில தாக்கம் (இளங்கலையில் கூட) அதிகரிக்கும்.
பல சிறந்த சிகிச்சை முறைகள் இருந்து ரஷ்யர்களின் கண்டுபிடிப்புகள் பரவலாக அறியப்படாமல் இருப்பதற்கும் (பனிப்போரின் பின்னரும்), பல புதிய சிகிச்சை முறைகளை ரஷ்யர்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கும் காரணம் ரஷ்ய மொழி வழி மருத்துவம் தான். சீனா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் இது பொருந்தும். வயிற்று புற்றுநோய் தவிர்த்து பிற துறைகளின் ஜப்பானியர்களை (அதாவது மருத்துவத்துறையில் அவர்களின் கண்டுபிடிப்பு) பற்றி மற்றவர்களுக்கு தெரியாது.
ஐரோப்பிய மொழிகளை பொருத்த வரை ஐரோப்பிய மொழியில் (கிரேக்கம் தவிர்த்து) எழுதப்பட்டிருக்கும் நோய்க்குறிப்பு ஆங்கிலம் தெரிந்தவருக்கு புரியும். (ஒரு சிறு அகராதி போதும்). உதாரணமாக நான் மேலே தந்துள்ள விபரம் ரோமன் எழுத்து வடிவம் உள்ல எந்த ஐரோப்பிய மொழியிலிருந்தாலும் அதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். அதானால் தான் மருத்துவம் 20ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வளர்ந்த அளவிற்கு ரஷ்யாவில் வளர வில்லை
சரி ஏதாவது ஒரு கல்லூரியில் தமிழ் வழியே மருத்துவம் கற்பித்தால் என்னவாகும்
தமிழ் வழியில் படித்தவர் வெளிநாடு செல்லாமல் நம் நாட்டிலேயே இருப்பார். -- இது நல்ல செய்தி
ஆனால் மேற்படிப்பு படிக்காமல் பொது மருத்துவராகத்தான் இருப்பார் -- இது கெட்ட செய்தி. ஏற்கனவே தமிழகத்தின் முக்கிய பிரச்சனை என்னவென்று பார்த்தோம்.
தமிழகத்தில் தமிழ் மொழியில் எம்.பி.பி.எஸ் கற்பிப்பது தமிழுக்கு வளர்ச்சியே :) .... இதில் எந்த சந்தேகமும் இல்லை
ஆனால் அந்த மாணவரின் எதிர்காலத்திற்கு சாதகமா, பாதகமா என்றால் விடை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை :(
அதே போல் ஒட்டு மொத்தமாக இங்கு இத்துறையின் வளர்ச்சிக்கு சாதகமா, பாதகமா என்றால் விடை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை :(
இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.
| Opinion |
இந்த வலைபதிவிற்கு நேரடியாக (உலாவி மூலம்) வராமல் செய்தியோடை மூலமாகவும் இடுகைகளை தொடர்ந்து வாசிக்கலாம். செய்தியோடையை பெற இங்கு சுட்டவும்









